Sunday, June 27, 2004

சந்தைக்கு வந்த கிளி

எனது கிராமம் நகரத்திலிருந்து இரண்டு மைல் தள்ளியே இருந்தது.
எனது கிராமத்திலே ஒன்றுக்கு மூன்று கடைகள் இருந்ததால் எங்கள் தேவை அங்கேயே பூர்த்தியாகிவிடும்.

முக்கியமான பொருட்கள் வாங்குவதாயிருந்தால் அல்லது வங்கி, அஞ்சல் அலுவலகம், சினிமா இப்படி ஏதாவதற்குப் போக வேண்டிய தேவை இருந்தால் மட்டுமே நகரத்துக்குப் போவோம்.

மரக்கறி, மீன்வகைகள்கூட கிராமத்திற்கு வந்துவிடும்.

இதில் மீன் கொண்டுவருபவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கே வருவார்கள். அவர்கள் நகரச் சந்தையில் கொள்வனவு செய்து ஒவ்வொரு கிராமங்களாக விற்று வருவார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்கப்படாவிட்டால் மீன்கள் பழுதடைந்து விடும். அதானால் எல்லா வியாபாரிகளும் எப்பொழுதும் ஓட்டமும் நடையுமாகவே இருப்பார்கள்.

இதற்குள் வியாபாரிகளுக்குள் போட்டியிருப்பதால் நான் முந்தி நீ முந்தி என்று ஓடியோடியே வியாபாரம் செய்வார்கள்.

இதில் குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால் எல்லா வியாபாரிகளும் பெண்களாகவே இருப்பார்கள்.

ஓலைப் பெட்டியில் மீன்களை வைத்து மூடியபடியே சுமந்து வருவார்கள். மீன்பெட்டியைக் கீழே வைத்து திறந்தவுடன் எல்லோரும் இன்றைக்கு என்ன மீன் என்று ஆவலாக எட்டிப் பார்ப்பார்கள். அதுவரைக்கும் இன்றைக்கு என்ன மீன் சமைக்கலாம் என்பது அவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸாகவே இருந்திருக்கும். நிட்சயமாக நண்டு, இறால், கணவாய் என்பது இவர்களிடம் இருக்காது. அவைகளை வாங்குவதாயின் சந்தைக்குத்தான் போக வேண்டும்.

சந்தையில் அன்றைக்கு என்ன மீன் வகைகள் மலிவோ அது அவர்கள் பெட்டியில் நிறைந்து இருக்கும். சந்தையிலுள்ள விலையைவிட எப்படியும் இரண்டு மூன்று மடங்கு அதிகமாகவே அவர்கள் விலை சொல்வார்கள். அவர்கள் கூறும் விலைக்கு யாருமே வாங்கமாட்டார்கள். எல்லா அம்மாமார்களும் பேரம் பேசித்தான் வாங்குவார்கள்.

எனது வீட்டுக்கு அருகேயிருக்கும் ஒழுங்கையிலுள்ள அரசமரத்தடிதான் இந்த மினி சந்தை. இல்லத்தரசிகள் அந்த மரத்தடி நிழலில் காத்திருந்து அந்த வழியாகப் போகும் மீன் வியாபாரிகளை மறித்து மீன் வாங்குவார்கள். மரத்தடியில் வாங்குபவர் தொகை குறைவாயிருந்தால் வியாபாரி நிற்கமாட்டார். அவர் அடுத்த கிராமத்திற்குப் போக துரிதம் காட்டுவார்.

நான் பலமுறை அம்மாவுடன் இந்த இடத்திற்குப் போயிருக்கின்றேன். அம்மா பேரம்பேசி மீன் வாங்குவதை ரசித்துப் பார்த்திருக்கிறேன்.

ஒரு சனிக்கிழமை நண்டு வேணும் என்று அம்மாவைக் கேட்டேன். சந்தைக்கு யாரும் போனால் சொல்லிவிடுகிறேன் என்று அம்மா சொன்னா. ஆனால் சந்தைக்குப் யாரும் போவதாகத் தெரியவில்லை. எனவே நானே போய் வாங்கி வருவதாக அம்மாவிடம் சொன்னேன்.
அம்மா சிரித்துக் கொண்டே,
„ என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? உன்னை ஏமாத்தி பழுதானதெல்லாத்தையும் தந்து விடுவாளுகள்.. பிறகு அடுத்த கிழமை பாப்பம் „ என்றா.
ஆனாலும் நான் நம்பிக்கை தெரிவித்ததால், எனது விருப்பத்துக்கு குறுக்கே நிற்க விருப்பமில்லாமல் பணத்தைத் தந்து வழியனுப்பி வைத்தா.

நகரத்து மீன் சந்தை ஈக்களாலும், ஆட்களாலும் நிறைந்தே இருந்தது. ஏலம் கூறுவது, கூவி விற்பது, பேரம் பேசுவது என்று சந்தை சத்தத்தில் மூழ்கியிருந்தது.

கையில் பையுடன் உள்ளே நுழைகிறேன்.

தரையில் அமர்ந்து பெட்டியின் மூடிமேல் மீன்களை பரப்பி வைத்து பெண்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

நண்டு பரப்பி வைத்திருந்த பெட்டியின் முன்னால் போய் நின்றேன்.

"வா... ராசா.. நண்டு வேணுமே.. நல்ல நண்டு.. பொம்பிளை நண்டு .. மலிவா போட்டுத்தாரன்.. எத்தினை வேணும்..?"
வியாபாரியின் கனிவான பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

அன்பான வரவேற்பு. நண்டுப் பெட்டியின் முன்னால் குந்தினேன்.

ஒரு நண்டின் காலைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தேன். பாரமாகத்தானிருந்தது.

" பாத்தியே.. நல்ல சதையிருக்கு.." சொல்லியபடியே என் கையில் இருந்த நண்டை வாங்கி மீண்டும் பெட்டியில் வைத்தார் வியாபாரி.

" என்ன விலை?"

விலையைச் சொன்னார்.

அம்மா பேரம் பேசி வாங்குவது நினைவுக்கு வந்தது.

வியாபாரி சொன்ன விலையை மனதுக்குள் இரண்டால் வகுத்துக் கொண்டேன்.
இப்போ அவர் சொன்ன விலைக்கு பாதி விலை கேட்டேன்.

பெரிதாக இடி விழத் தொடங்கியது.
இடிவிழுந்தால் அர்ச்சுனா.. அர்ச்சுனா.. என்று சொல்லிக் கொண்டு இரண்டு கைகளாலும் காதைப் பொத்த வேண்டும் என்று சொல்வார்கள். இங்கும் காதை இறுகப் பொத்திக் கொண்டு அசிங்கம்.. அசிங்கம் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

வியாபாரியின் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகள் இதுவரை நான் கேட்காத வார்த்தைகள். அத்தனையும் தமிழில்தான்.
தமிழில் இவ்வளவு கெட்ட வார்த்தைகளா?

கேட்டதில் காது வெட்கப் பட்டது. ஆகவே எழுதுவது இயலாது.

"...................... வந்திட்டார் bagஐயும் தூக்கிக் கொண்டு.................."

பேச்சின் அதிர்ச்சியால், குந்தியிருந்த நான் இப்போ பின்னால் கைகளை ஊன்றி கால்களை நீட்டி தரையில் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

சந்தையின் சத்தம் அடங்கியது போல இருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற பிரமை.

கூனிக் குறுகியபடி மெதுவாக எழுந்து, காற்சட்டையில் ஒட்டியிருந்த மண்ணைக் கூடத் தட்ட முடியாதவயனாய் சந்தையை விட்டு வெளியே வந்தேன்.

" என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? ..."
அம்மாவின் வார்த்தைகள் காதில் ஒலித்தன.
ஓங்கி அழவேண்டும் போலிருந்தது. சந்தைக்கு வெளியேயும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவேயிருந்தது. தன்மானம் விடவில்லை அடக்கிக் கொண்டேன்.

பஸ் நிலையத்தில் எனது கிராமம் வழியாகப் போகும் 750 இலக்க பஸ் இற்குப் பின்புறமாக நின்று ஒரு பத்து வயதுச் சிறுவன் கேவிக் கேவி அழுது கொண்டிருந்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

முல்லை

Friday, June 11, 2004

ஆயிரத்தில் ஒருவன்

லண்டன் போயிருந்த போது, நீண்ட வருடங்களின் பின் றஞ்சித்தை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அதுவும் தற்செயலாகத்தான்.

அவன் லண்டனில்தான் வசிக்கின்றான் என்பது எனக்கு முன்னரே தெரியாது. தவிர அவனைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் எனக்கு இல்லாதிருந்ததையும் நான் இங்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.

லண்டனில் தெரிந்தவர் ஒருவர் சொல்லத்தான் அவன் அங்கு இருப்பதை அறிந்து கொண்டேன்.
எதற்கும் இருக்கட்டும் என்று அவனைப் பார்த்து வரலாமென்று அவன் வீட்டுக்குப் போனேன்.

தோழமை மாறாத அதே நட்புடன் வரவேற்றான்

சமீபத்தில் நடந்த ஒரு வாகன விபத்தில் உயிர் பிழைத்து மீண்ட விசயத்தை விலாவாரியாகச் சொன்னான்.

றஞ்சித்தை எனக்கு ஒன்பது வயதில் இருந்தே தெரியும். இருவருக்கும் ஒரே வயதுதான்.

எனது ஊரிலிருந்து 22 மைல் தொலைவில்தான் அவனது ஊர் இருந்தது. அவனது ஊர் படிப்பு வாசம் குறைந்த பகுதியானதால் படிப்பதற்காக சிறு வயசிலேயே எங்கள் ஊருக்கு வந்துவிட்டான். எனது ஊரில் அவனது உறவினர் சிலர் இருந்தபடியால் எங்கள் ஊரில் தங்கிப் படிப்பது அவனுக்கு சிரமமாக இருக்கவில்லை.

இருவரும் ஒரே வகுப்பு.
அவன் கணக்கில் பூனை. நான் புலி.
நான் செய்யும் கணக்குகளை அப்படியே பிரதி எடுத்துக் கொள்வான்.

பாடசாலை முடிந்து மாலையில் என்னுடன்தான் சுற்றுவான். எங்களின் அடுத்த கூட்டு தேவதாஸ். தேவதாஸ் படிப்பது வேறு பாடசாலையானாலும் விளையாட்டு என்றால் எங்களுடன்தான்.
விளையாட ஒன்றும் இல்லையென்றால் மாசிலாமணியண்ணையின் வீட்டு மதிலில் இருந்து கதைத்துக் கொண்டிருப்போம்.
கடை கண்ணிக்குப் போவதற்கு அவர்களுக்கு எங்களது உதவி தேவைப்படும் என்பதால், நாங்கள் மதிலில் இருப்பதை அவரோ அல்லது மணியக்காவோ கண்டு கொள்வதில்லை.
மாசிலாமணியண்ணைக்கு ஒரு தம்பி இருந்தான். எங்களையொத்த வயதுதான் அவனுக்கும்.
அவனது பெயர் ஞாபகமில்லை. அவனை சின்னக்குட்டியென்றே நாங்கள் கூப்பிடுவோம்.
எப்போதாவது தமையனைப் பார்க்க தனது கிராமத்திலிருந்து வருவான். வந்தாலும் ஓரிரு தினம்தான் அங்கு தங்குவான். இம்முறையும் அவன் வந்திருந்தான்.

நாங்கள் மூவரும் மதிலில் இருந்துகொண்டே சமீபத்தில் பார்த்த ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தோம்.

றஞ்சித் ஏறக்குறைய ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். போலவே ஆகியிருந்தான். பனை மட்டையில் வாள் போல் சீவி செதுக்கி இடுப்பில் சொருகியிருந்தான்.

இடுப்பில் கைவைத்த வண்ணம் எம்.ஜி.ஆர். போஸ் கொடுக்கும் காட்சி அந்தப் படத்தின் கட்அவுட் ஆக இருந்தது. றஞ்சித்தும் அடிக்கடி அப்படி போஸ் கொடுப்பான்.
சின்னக்குட்டி எங்களுடன் சேர்ந்து கொள்வதற்காக மதிலில் தாவி ஏறி றஞ்சித்துக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். ஏனோ றஞ்சித் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. சின்னக்குட்டியை மதிலைவிட்டு இறங்கச் சொன்னான். சின்னக்குட்டி மறுத்துவிட்டான். தான் தனது அண்ணன் வீட்டு மதிலில் உட்கார்ந்திருப்பதாகவும், தன்னை இறங்கச் சொல்வதற்கு றஞ்சித்துக்கு உரிமையில்லையென்பது அவனது வாதம். சின்னக்குட்டியின் இந்த வாதம் றஞ்சித்துக்கு கடுப்பேத்திவிட்டது.
ஒரு கட்டத்தில் றஞ்சித் சின்னக்குட்டியை மதிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு தானும் கீழே குதித்து ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். போல் போஸ் கொடுத்துக் கொண்டு நின்றான்.
சின்னக்குட்டிக்கு அவனது தன்மானத்தை இழுத்துவிட்டது போன்ற நிலை. ஓடிப்போய் நிலத்தில் இருந்த ஓரு பனைமட்டைத் துண்டை எடுத்துக் கொண்டான்.

படத்தில் அட்டைக் கத்தியென்றால், இங்கே மட்டைக் கத்தி.
பட்..பட் என்ற சத்தத்துடன் மட்டைகள் மோதிக் கொண்டன.

படத்தில் சண்டை நடக்கும்போது எம்.ஜி.ஆரும் நம்பியாரும் பேசிக் கொள்வார்கள்.

நம்பியார்- மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?

எம்.ஜி.ஆர் - சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்றோடும்.

புழுதிகள் கிளம்பின.

நானும் தேவதாசும் பல்கணியில் அதுதான் மதிலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஒரு கட்டத்தில் சின்னக் குட்டியின் மட்டையை றஞ்சித் கையால் பிடித்துவிட்டான்.

அடுத்து என்ன?

ஆவல் மிகுதியால் நாங்கள் இருவரும் தரையில் நின்றோம்.

சின்னக்குட்டியால் ஓடித் தப்பமுடியாது என்பது தெரிந்தது. ஓடினால் றஞ்சித் துரத்தித் துரத்தி மட்டையால் விளாசுவான் என்பது தெரிந்தது. றஞ்சித்தின் கடைவாயில் புன்சிரிப்பு. வெற்றிக் களிப்பில் கதாநாயகன்.

எதிர்த்துப் போராடுவதே சின்னக்குட்டிக்கு ஒரே வழியாக இருந்தது. றஞ்சித்தின் கையில் இருந்து தனது மட்டையை மீட்பதற்காக தனது பலத்தையெல்லாம் திரட்டி இழுத்தான்.

பயங்கரமான அலறல் சத்தம்.
கையைப் பிடித்தவண்ணம் றஞ்சித் கதறிக் கொண்டிருந்தான். அவனது உள்ளங்கையில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

மட்டையில் கருக்கு இருந்ததை யாருமே கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
அந்த அமளியில் ஓடிய சின்னக்குட்டி பிறகு அந்தப் பக்கம் வரவேயில்லை.

எங்கள் கதாநாயகன் உள்ளங்கையில் போட்ட தையலுடன் உடுப்பு மாத்தவே கஸ்ரப் பட்தெல்லாம் திரைமறைவுச் செய்திகள்.

“ஆக்சிடெண்ட்டிலை இவர் தப்பினதே பெரிய புண்ணியம். காரைப் பாக்கமாட்டீங்கள் அப்பிடி சப்பளிஞ்சு போச்சு. ஏதோ மனுசன் தப்பிட்டுது அது போதும் “
றஞ்சித்தின் மனைவி தேனீரைத் தந்து எனக்குச் சொன்னார்.

“எனக்கடா ஆயுள் கெட்டி. டபுள் ஆயுள்.. இஞ்சைபார் கையை“
தனது உள்ளங்கையை எனக்குக் காட்டினான்.

உண்மை ஆயுள் ரேகைக்குப் பக்கத்தில் அதை மிஞ்சும் வகையில் அதைவிட ஆழமாக பதிந்திருந்தது இன்னும் ஒரு ரேகை.

அட அது சின்னக்குட்டியின் கருக்கு மட்டை இழுத்த வடு.

Thursday, June 10, 2004

திருவிழாண்ணு வந்தால்....

அப்போ எனக்கு பதினைந்து வயது.
வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தத்திற்குப் போயிருந்தேன்.
வழமைபோல் என்னுடன் தொற்றிக் கொள்ளும் கலையரசனும் மகேந்திரனும் வந்திருந்தார்கள்.
நாங்கள் மூவரும் சேர்ந்து கொண்டால் சேட்டைகளுக்கு அளவேயில்லை.

அன்று தீர்த்தத் திருவிழாவிற்கு வந்தது கடவுள் மேல் கொண்ட பக்தியாலல்ல. விளக்கமாகச் சொல்லத் தேவையில்லையென்று நினைக்கிறேன்.

சாமி ஊர்வலமாய்ப் போய் கடலில் தீர்த்தம் ஆடி கோயிலுக்குத் திரும்பி வந்துவிட்டார். கோயில் கிழக்கு வாசலில் சாமிக்குப் பெரிய பூசை நடந்து கொண்டிருந்தது. எங்கள் கண்கள் கலர்கள் தேடி சுழன்று கொண்டிருந்தன.

முட்டி மோதும் சனங்களுக்குள் பட்டுப் பாவாடைகள் சரசரக்க பெற்றோர்களுடன் ஒட்டி நின்ற பாவையர்களில் பச்சையில் ஒருத்தி பளபளத்தாள். எங்களுக்குள் சுரண்டிக் கொண்டோம். மூவரது பார்வையும் ஒருங்கிணைந்து தாக்கியதாலோ என்னவோ பச்சையும் எங்களைக் கண்டுவிட்டது. கண்டதும் வெருண்டு தாயின் பின் ஒளிந்து கொண்டது. எங்களது பார்வைகள் தாயின் பின் ஒளிந்திருந்த தாரகையைத் தேடின.

எப்படியும் மேகத்தை நீங்கி நிலவு தெரியும் எனக் காத்திருந்தோம். நினைப்பு வீணாகவில்லை. நிலவு வெளி வந்தது. நாங்கள் தன்னைப் பார்க்கிறோமா என்று பார்ப்பதுக்கு முதலில் அவள் தலை தெரியும் பிறகு விழி நோக்கும். அண்ணல்கள் நாங்களும் நோக்க தாயின் பெரிய உருப்படிக்குள் அந்த நிலவு மீண்டும் மறையும். இப்படியே கொஞ்ச நேரம் விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருந்தன.

எங்களுக்குள் குதூகலம் குடிகொண்டது. இப்படி ஒரு தடவை அவள் எட்டிப் பாக்கும் போது “பாக்கிறாளடா..பாக்க்கிறாளடா„ என்று என்னை அறியாமல் சத்தமாகச் சொல்லி விட்டேன்.
“எங்கை பாக்கிறாள்? எங்கை பாக்கிறாள்? „
என்று ஒரு குரல் கேட்டது.
அந்தக் குரல் நிச்சயமாக கலையரசனுடையதோ மகேந்திரனுடையதோ இல்லை. ஆனால் எனக்கு நன்றாகப் பரீட்சயமான குரல்தான். குரல் எனக்குப் பின்னால் மேலிருந்து வந்தது போல் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். எனது தமிழ் வாத்தியார் ஏகாம்பர மாஸ்ரர்.

இப்போ நிலவு போய் மேகம் இருட்டிக் கொண்டு வந்தது போல் இருந்தது.
பக்கத்தில் பார்த்தேன் கலையரசனுமில்லை மகேந்திரனுமில்லை. நிலமை அறிஞ்சு இருவரும் ஓடிவிட்டார்கள். எங்கள் மொழியில் சொல்வதானால் மாறிட்டாங்கள்.

ஏகாம்பர மாஸ்ரர் எனது கையைப் பிடித்துக் கொண்டார்.
“தேவன் அந்தப் பச்சைப் பாவாடை போட்டிருக்கிறாள் அதையே சொல்லுறாய்? „ கேட்டது ஏகாம்பர மாஸ்ரர்.
தலையைக் குனிந்து கொண்டு விழியை உயர்த்தினேன் பச்சை என்னை பாவமாகப் பார்ப்பது போலிருந்தது.

“தேவன் என்ன பயப்பிடுறாய்.? உனக்கு வயசு வந்திட்டுது நீ பெட்டைகளைப் பாக்கலாம். பிழையில்லை. அந்த பச்சைக்குப் பக்கத்திலையிருக்கிற மஞ்சளும் அவ்வளவு மோசமில்லை. நீயென்ன சொல்லுறாய்.? „
வார்த்தைகளால் வாத்தியார் கொன்று கொண்டிருந்தார்.

மெதுவாகக் கையை விடுவித்துக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறிக் கொண்டேன்.
வெளியேறும் போது, “நாளையான் கட்டுரைக்கு கடற்கரைத் தீர்த்தத்தைப் பற்றி எழுது என்ன? „
ஏகாம்பர மாஸ்ரரின் வார்த்தைகள் காதில் விழ எனக்கு கலருகள் எதும் கண்ணில் தெரியாமல் இருட்டுக்குள் நடப்பது போலிருந்தது.