Monday, December 29, 2008

நாவல் மரத்தில் அவ்வை

"நாகர் கோவிலில் மத்தியானப் பூசைக்கு நாகப்பாம்பு வருமாம். அது வந்ததுக்குப் பிறகுதான் ஐயர் பூசையே ஆரம்பிப்பாராம்"
என்று இரத்தினக்கா கதையைக் கிளப்பிவிட, அம்மாவுக்கு நாகதம்பிரானை தரிசிக்கும் ஆசை வந்து விட்டது.
"போறதெண்டால் சொல்லுங்கோ நானும் வாறன்" என்று இரத்தினக்கா மேலும் சொல்லி வைக்க அம்மாவின் நாகதம்பிரான் தரிசனத்துக்கான தேதி குறிக்கப் பட்டு விட்டது. இரத்தினக்காவுக்கும் தனியே போய் நாகதம்பிரானைத் தரிசிக்க வேண்டிய அலைச்சல் இல்லாமல் பேச்சுத் துணைக்கு அம்மாவையையும் சேர்த்துக் கொள்ள மதியப் பூசை பாம்பு பெரிதும் உதவியது.

என்னையும் அக்காவையும் அழைத்துக் கொண்டு இரத்தினக்காவுடன் நாகர் கோவிலுக்கான அம்மாவின் பயணம் ஆரம்பமானது. இந்தப் பயணத்தில் எனக்கு துளி கூட விருப்பம் இல்லை. எனது நண்பர்களுடனான அன்றாட விளையாட்டுக்கள் இல்லாமல் இவர்களுடன் கோவிலில் போய் சும்மா நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் சாமி கும்பிட்டாப் போலை அங்கை நாகப்பழம் பிடுங்கிச் சாப்பிடலாம் என்ற அம்மாவின் ஆசை வார்த்தைகளில் விழுந்து எனது அந்தப் பயணம் தொடங்கியது.

நாகர் கோவிலில் மத்தியானப் பூசைக்கு கோவிலில் கூட்டம் இல்லை எங்களோடு சேர்ந்து இன்னும் ஓரிரு ஆட்கள்தான் அங்கே நின்றிருந்தார்கள். பூசைக்கு முன்னர் நாகப்பாம்பு வருகிறதா என எல்லா இடமும் பார்த்தாயிற்று. எந்த அரவமும் வரும் அரவமும் தெரியவில்லை. நான் இரத்தினக்காவிடம் கேட்டும் பார்த்தேன். "இவன் என்ன சும்மா சும்மா கரைச்சல் தாரான்" என சலித்துக் கொண்டார். இதனால் அம்மாவும் என்னைக் கடிந்து கொண்டார்.

ஒருவாறு நாகப் பாம்பு இல்லாமல் பூசையை ஐயர் முடித்து திருநீறு தந்து எல்லாம் முடிந்து இருந்த ஓரிருவரும் கோயிலை விட்டுப் போய் விட்டார்கள். ஐயரும் கோவிலில் தரையில் துண்டைப் போட்டு படுத்துக் கொண்டார். நான் அம்மாவை "இனி நாகக் காட்டிற்குப் போய் நாகப்பழம் பறிக்கலாமா?" என்று கேட்கத் தொடங்கினேன். "சரி வா" என்று அம்மா அழைத்துக் கொண்டு சென்றார்.

இரத்தினக்காவின் முகத்தில் வழமைபோல் மகிழ்ச்சியைக் காணவில்லை. நாகக் காட்டிற்குப் போகும் வழியில் "இவனாலைதான் எல்லாம் பிழைச்சுப் போச்சு இவன் விடாமல் அரியண்டம் பிடிச்சதாலைதான் பாம்பே வராமல் போட்டுது" என்று என் மீது குற்றம் சுமத்திக் கொண்டே வந்தார். கடவுள் பக்தியால் அம்மாவும் அதை நம்பியிருப்பார் என்றே நினைத்துக் கொண்டேன். எதுவும் பேசாமல் சேர்ந்து நடந்தேன். "அடுத்தமுறை கோவில் குளம் எண்டு போகக்கை இவனை விட்டிட்டு வாங்கோ" என்று இரத்தினக்கா அம்மாவுக்கு அறிவுரை சொன்னார். அவர் அப்படிச் சொன்னது எனக்கு அப்பாடா என்றிருந்தது.

நாகப்பழ மரங்களைக் கண்டவுடன் ஓடிப்போய் பழங்களைப் பறிக்க எத்தனித்த பொழுது அம்மா எனது கையைப் பிடித்துத் தடுத்தார். "இந்த மரங்களுக்;குக் கீழ் இருக்கும் சருகுகளுக்குள்ளைதான் நாகப் பாம்புகள் இருக்க சாத்தியம் இருக்கு. பொறு. அவசரப்படாதை". தாழ்வானதாக இருந்த ஒரு நாவல் மரத்துக் கிளையில் அம்மா ஏறி அமர்ந்து கொண்டு, வெள்ளை மணலில் கால்களை அழுத்தி ஊஞ்சல் போல் அந்த மரக்கிளையில் ஆடத் தொடங்கி விட்டார். அந்த மரக் கிளையின் ஆட்டத்தில் அதில் இருந்த நன்கு பழுத்த நாகப்பழங்கள் விழத் தொடங்கின. நானும் அக்காவும் அவற்றைப் பொறுக்கி எடுத்து, கொண்டு கையில் வைத்திருந்த பைகளில் சேகரிக்கத் தொடங்கினோம். பழங்களை வெள்ளை மணலில் இருந்து எடுத்து பைகளில் போடும் வேளைகளில் ஒன்றிரண்டை வாயிலும் போட்டுக் கொண்டேன். இதில் அதிகம் பழுத்திருந்த நாகப்பழங்களில் ஒட்டி இருந்த வெள்ளை மணலை காற்சட்டையில் துடைத்தும் போகாததால் அதை வாயால் ஊதி மணலைப் போக்கினேன். இதைப் பார்த்த அம்மா சிரித்தபடி "என்ன பழம் சுடுகுதோ?" என்றார். பழத்தைப் பொறுக்குவதை விட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தேன் தரையில் குமரன் நாவல் மரத்தில் அவ்வை. நான் இரண்டாம் வகுப்பில் படித்த கதை அப்படியே மாறியிருந்தது.

அம்மா என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே நாவல் மரத்துக் கிளையில் அமர்ந்து மேலும் கீழுமாக ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தார்.

Sunday, November 23, 2008

உத்தரவின்றி உள்ளே வா

கடவுள் என்றால் அம்மா கரைந்து உருகிக் கும்பிடுவார். இத்தனைக்கும் அவர் பிள்ளை நான் ஒரு நாத்திகன். அம்மா கேட்டுக் கொண்டால் அவருடன் கோயிலுக்குப் போவேன். கோயிலுக்குள் நுளையாமல் நான் வெளியில் நின்றாலும் சாமியைக் கும்பிட்டு விட்டு வந்து, "நீ கடவுளைக் கும்பிடாட்டிலும் பரவாயில்லை. உனக்கும் சேர்த்து நான் கும்பிட்டு விட்டேன்" என்று சொல்லிச் சிரிப்பார்.

நயினாதீவுக்குப் போய் அம்மனை தரிசிக்கும் எண்ணம் அம்மாவிடம் நீண்ட நாட்களாக இருந்தது. அன்று கொழும்பில் இருந்து கீர்த்தியண்ணன் வேலை விடுமுறையில் வந்திருந்தார். நயினாதீவு அம்மனைக் காண வேண்டும் என்ற தனது எண்ணத்தை அம்மா மெதுவாக வெளிப்படுத்தினார்.


"நயினாதீவு என்ன தூரமே? வேணுமெண்டால் நாளைக்கும் போகலாம்" என்று ராஜாண்ணை சொல்ல அம்மா அதை அப்படியே பிடித்துக் கொண்டார்.
"சரி அப்ப வெளிக்கிடு நாளைக்குப் போவம்" என்று அம்மா சொன்னதை ராஜாண்ணையால் தட்ட முடியவில்லை. அடுத்தநாள் காலையில் நயினாதீவு போக முடிவாயிற்று.


மறுநாள் அதிகாலை நாங்கள் ஐவரும் (அம்மா ராஜாண்ணன், கீர்த்தியண்ணன், அக்கா, நான்) பஸ் எடுத்து யாழ்ப்பாணம் வந்து இறங்கினோம். யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவானுக்கு பஸ்சில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து நயினாதீவுக்கு கப்பல் பயணம். குறிகட்டுவானுக்குப் போகும் பஸ்சைத் தேடிப் பிடித்து அமர்ந்து கொண்டோம். கீர்த்தியண்ணன்தான் பணத்துக்கான பொறுப்பு. பஸ் கட்டணங்களை அவரே செலுத்திக் கொண்டு வந்தார். கொண்டக்டரிடம் கட்டணத்தைச் செலுத்த சில்லறைகள் இல்லாததால், நூறு ரூபாய்த் தாளை அவரிடம் கீர்த்தியண்ணன் நீட்டினார். காலமை வெள்ளன நூறு ரூபாய்த் தாளோடு வந்திட்டார் என கொண்டக்ரர் சலித்துக் கொண்டார். மிகுதியைப் பின்னர் தருவதாகச் சொல்லி கொண்டக்ரர் நகர்ந்தார். நான் அம்மாவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.

"சீலனும் வந்திருந்தால் நிறைவா இருந்திருக்கும்" என்று அம்மா சொன்னா. அப்பொழுது சீலாண்ணன் கொழும்பில் உள்;ள சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவரால் அந்தப் பயணத்தில் பங்கு கொள்ள முடியாமற் போனது கவலை தந்தது.


குறிகட்டுவானில் கப்பலில் ஏறி பாதித் தூரம் வந்திருப்போம். கீர்த்தியண்ணனின் முகம் கவலையில் வாடி இருந்தது. என்ன விடயம் என விசாரித்த போதுதான் தெரிந்தது, குறிகட்டுவானுக்கு பயணித்த பொழுது பஸ் கட்டணத்துக்காக கொண்டக்டரிடம் கொடுத்த நூறு ரூபாயின் மிகுதிப் பணத்தை வாங்க மறந்து விட்டார் என்று. எங்களுக்கும் அந்தப் பணம் போனதில் கவலை இருந்தாலும், கப்பல் பயணத்தில் அதை மெதுவாக மறந்து விட்டோம். ஓரளவு அந்தக் கப்பல் பயணம் ஒரு பயம் கலந்த பயணமாகவே இருந்தது. கப்பலின் மட்டமும், கடல் தண்ணீர் மட்டமும் ஏறக்குறைய ஒரே அளவாகவே இருந்தன. கடல் அலைகளில் மோதி ஆடியாடி கப்பல் நகர, கடல் அலையின் தண்ணீர் கப்பலில் இருந்த பயணிகள் மேலே மோத அச்சம் மிகுந்த பயணமாகவே எனக்குப் பட்டது. நயினாதீவு புத்த விகாரைக்குப் பயணிக்கும் சிங்கள யாத்திரிகர்களும் அன்று கப்பலில் இருந்தார்கள். ஓவ்வொருமுறையும் அலையில் மோதி கப்பல் மோசமாக ஆட்டம் போட "சாது சாது" என அந்த சிங்கள யாத்திரிகர்கள் வாய்விட்டு பலமாகச் சொல்லிக் கொண்டு வந்தது எனக்குப் புதுமையாக இருந்தது.


அம்மாவின் விருப்பப்படி நயினாதீவில் சாமி தரிசனம் முடிந்து மீண்டும் யாழ்ப்பாண நகரத்துக்கு வந்து சேர்ந்தோம். யாழ் நகரில் சிறது நேரம் சுற்றி வந்த பொழுது, "படம் பார்ப்போமா?" என ராஜாண்ணை கேட்டார். அப்பொழுது யாழ் சிறீதர் தியேட்டரில் ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஸ் நடித்த சிறீதரின் உத்தரவின்றி உள்ளே வா திரைப்படம் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் படம் நகைச்சுவைத் திரைப் படமாக இருந்ததால் அதையே பார்ப்போம் எனத் தீர்மானித்து அந்தத் திரைப்படத்தைப் பார்த்தோம். காதலிக்க நேரமில்லை போன்று உத்தரவின்றி உள்ளே வா திரைப் படத்தில் நகைச்சுவை அதிகம் இல்லாவிட்டாலும் படத்தை இரசித்துப் பார்த்தோம்.படம் முடிந்து வெளியே வர நன்றாக இருட்டி விட்டிருந்தது.


இனி ஊருக்குப் போகலாம் எனத் தீர்மானித்து பஸ் நிலையம் வந்து எங்களுக்கான பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டோம். அதுவரை எல்லாவற்றையும் மறந்திருந்த எங்களில், கீர்த்தியண்ணன் மட்டும் சிறிது வாட்டமாக இருந்தார். "காலையில் கொண்டக்ரரிடம் வாங்க மறந்த மிச்சக் காசை நினைச்சிட்டான் போல" என அம்மா எனக்குச் சொன்னார். பஸ் வெளிக்கிடும் நேரத்தை அண்மித்துக் கொண்டிருந்த நேரம், திடீரென கீர்த்தியண்ணன் பஸ்ஸை விட்டு இறங்கி ஓடினார்.

"இவன் எங்கை போறான். பஸ் வெளிக்கிடப் போகுது" என ராஜாண்ணை சலித்துக் கொண்டார்.

"என்னெண்டு போய்ப் பார்" என அம்மா என்னை அனுப்பி வைத்தார். நானும் அவசரமாக இறங்கி கீர்த்தியண்ணனுக்குப் பின்னால் ஓடினேன்.குறிகட்டுவானுக்குப் போகும் பஸ்ஸின் வாசலில் இருந்து, ஒரு காலை பஸ்ஸின் படியிலும் மறு காலை தரையிலும் வைத்துக் கொண்டு பயணிகளுக்கு ரிக்கெற் கொடுத்துக் கொண்டிருந்தார், காலையில் நாங்கள் போன பஸ்ஸில் ரிக்கெற் தந்த அதே கொண்டக்ரர். ரிக்கெற் போட்டுக் கொண்டு நிமிர்ந்த கொண்டெக்ரருக்கு முன்னால் கீர்த்தியண்ணன் நின்றார்.


"எங்கை போகணும்?"

" மிச்சக் காசு"

"மிச்சக் காசோ? ரிக்கெற் எடுத்தனீயே?"

"ஓம் காலமை"

"காலமையோ?"

கீர்த்தியண்ணன் காலைமை எடுத்த ஐந்து ரிக்கெற்றுக்களையும் கொடுத்தார். அவற்றின் பின் பக்கத்தைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் ரிக்கெற்றுக்களை கீர்த்தியண்ணனிடமே திருப்பித் தந்தார்.

"மிச்சக் காசு தரவேண்டியிருந்தால், அதை நான் ரிக்கெற்றுக்குப் பின்னாலை குறிச்சிருப்பன்" மிகச் சாதாரணமாக கொண்டக்டரிடம் இருந்து வார்த்ததைகள் வந்தன.

கீர்த்தியண்ணனின் முகம் கோபத்தில் இருப்பது பஸ் நிலைய வெளிச்சத்தில் துல்லியமாத் தெரிந்தது.

"நீ பிச்சை எண்டு கேட்டிருந்தால் நான் சும்மாவே தந்திருப்பன்"


கீர்த்தியண்ணனின் காரமான வார்த்தைகளில் கொண்டெக்ரர் ஆடிப் போனார். பயணிகள் வேறு இதைக் கவனித்துக் கொண்டிருந்ததால் தனது தன்மானத்தை இழுத்து விட்டு விட்டானே என்று கூனிக் குறுகிப் போன கொண்டெக்ரர் எதுவுமே செய்ய முடியாமல், கணக்குப் பார்த்து மிகுதிப் பணத்தை எண்ணி கீர்த்தியண்ணனின் கையில் வைத்தார். நாங்கள் பயணிக்கப் போகும் பஸ் வெளிக்கிட ஆயத்தமாக இருந்தது. பஸ்ஸின் யன்னல் ஊடகாக கெதியாக வாங்கோ என்ற பாணியில் அக்கா கையை ஆட்டிக் கூப்பிடுவது தெரிந்தது. இருவரும் ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். இருக்கையில் அமரும் போது அம்மா பார்வையால் என்ன என்று வினாவினார்.
"மிச்சக் காசை கொண்டெக்ரரிடம் வாங்கிட்டார்" என்று நான் சொன்னேன்.

"பாத்தியே நான் கடவுளைக் கும்பிட்டதுக்கு பலன் கிடைச்சிருக்கு" என்று அம்மா சொல்லிச் சிரித்தார்.
கீர்த்தியண்ணனைப் பார்த்தேன் பஸ்ஸின் உள்ளே இருந்த மங்கிய வெளிச்சத்திலும் அவர் மகிழ்ச்சியாக இருப்பது நன்றாகத் தெரிந்தது.

Sunday, November 02, 2008

நினைவில் நின்றவள்

அன்று க.பொ.த.ப. (கல்விப் பொதுத் தராதரப் பத்திர) சாதாரணப் பரீட்சை ஆரம்பம். முதல் பாடம் தமிழ். ஏகாம்பர மாஸ்ரர் அழகாகத் தமிழை வகுப்பறையில் சொல்லிக் கொடுத்ததால் செய்யுள், இலக்கணம் எல்லாம் அறிந்து வைத்திருந்தேன். கட்டுரை எதைப் பற்றி வரப் போகின்றது என்ற ஒரு பயம் மட்டும் மனதுக்குள்ளே சிறியளவில் ஒளித்திருந்தது. ஆனாலும் திறமையாக எழுதுவேன் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. காலையில் வீட்டில் இருந்து பரீட்சைக்குப் போகுமுன் „சோதனையை நல்லா எழுது' என்ற அம்மாவின் வாழ்த்துகளும் கிடைத்ததால் தெம்புடனே பரீட்சை மண்டபத்துக்குள் நுளைந்தேன்.
பரீட்சை மண்டபத்தில், தங்கள் வீடுகளுக்கு அருகில் இருந்த கோயில்களின் கடவுள்களின் பெயர்களை சிலர் உரத்துச் சொல்லி பரீட்சையில் சித்தியடைய வைக்கும் படி வேண்டிக் கொண்டிருந்தார்கள். எனது கைக்குக் கிடைத்த பரீட்சை வினாத்தாளைப் பார்த்ததும் எனக்கு மனது முழுதும் குதூகலித்தது. நான் எதிர்பார்த்ததை விட வினாக்கள் சுலபமாக இருந்தன. கட்டுரைக்கு பல விடயங்கள் கேட்டிருந்தார்கள் அதில் „நீர் கண்ட கனவு பற்றி எழுதவும்' என்று ஒன்று எனது கண்ணில் பட்டது. உடனடியாக எனக்கு நினைவுக்கு வந்தது, எனது அண்ணன் நித்தியகீர்த்தி எழுதிய கட்டுரை ஒன்று. ஹாட்லிக் கல்லூரி ஆண்டு மலர் ஒன்றில் நான் கண்ட பயங்கரக் கனவு என்ற தலைப்பில் அவர் அதை எழுதியிருந்தார். வகுப்பறையில் பாடம் நடக்கும் போது தூங்கிய மாணவன் கண்ட கனவு பற்றிய கட்டுரை அது. அந்தக் கட்டுரையை நான் பலமுறை வாசித்திருந்ததால் அது எனக்கு மனப் பாடமாகவே இருந்தது. ஆகவே அந்தக் கட்டுரையை கிளிப்பிள்ளை போல் அப்படியே எனக்குத் தரப்பட்ட தாளில் எழுதத் தொடங்கினேன்.எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிய பின்னர் மனதில் ஒரு திருப்தி ஏற்பட்டது. கட்டுரையை எழுதி முடித்து விட்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என ஒரு தரம் அந்த மண்டபத்தை நோட்டம் விட்டேன். கூப்பிட்ட கடவுள்கள் உதவிக்கு வராததால் சிலர் விழி பிதுங்கி நின்றதைப் புரிந்து கொண்டேன். சிலர் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தனர். பரீட்சை எழுதுவதற்கான நேரம் முடிந்தது என அறிவிக்கப் பட்ட பின்னர் எழுதியவற்றை கொடுத்து விட்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்.
பாடசாலைக்கு என்னுடன் கூட வரும் தணிகாசலத்தை காணவில்லை. அவன் முன்னமே போய் விட்டதாக சக மாணவர்கள் சொன்னார்கள். பரீட்சையில் அவனுக்கு திருப்தி இல்லை என்பது புரிந்தது. வழமையாக இருவரும் சேர்ந்துதான் செல்வோம். இன்று தனியாகப் போக வேண்டி இருந்தது. மற்றவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு அன்று வழமைக்கு மாறாக ஒழுங்கை ஊடாக எனது சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன். சைக்கிளில் நான் அமர்ந்து இருந்து மிதித்ததை விட எழுந்திருந்து மிதித்ததுதான் அதிகம் அந்தளவுக்கு மனம் களிப்பில் இருந்தது. அறுபதுபாகைக் கிணற்றடிக்கு முன்பாக நான் வந்து கொண்டிருந்த ஒழுங்கையில் இடது பக்கமாக ஒரு ஒழுங்கை பிரிந்து செல்கிறது. அது ஒரு ஏற்றமான பகுதி. அதில் சைக்கிள் ஓட முடியாது உருட்டிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அதில் இரண்டாவது வீடு என்னுடன் படிக்கும் சிவராஜாவின் வீடு. நான் வேகமாக சைக்கிளில் வந்த பொழுது சிவராஜாவின் தம்பி அவனுக்கு நாலு வயதிருக்கும் என்று நினைக்கிறேன், அந்த ஏற்றமான பகுதியில் இருந்து ஓடி வந்திருக்கிறான். அலம்பலினால் கட்டப் பட்ட வேலி அவன் வந்த பாதையை மறைத்திருந்தது. நானும் எதிர்பார்க்கவில்லை. சைக்கிளால் தூக்கி எறியப் பட்ட பொழுதுதான் விபரீதம் விளங்கியது. ஒழுங்கை மண்ணில் அதிர்ச்சியில் விழுந்திருந்த அவனை ஓடிப் போய்த் தூக்கினேன் அவனது பிஞ்சுக் கால் வில் போல் வளைந்திருந்தது. பக்கத்தில் இருந்த அமரசிங்கமண்ணன் கடைக்குள் அவனைத் தூக்கிக் கொண்டு ஓடினேன். பரீட்சை முடிந்து சிவராஜா வந்து கொண்டிருந்தான். எனது கையில் அவனது தம்பியைத் தூக்கி வைத்திருப்பதையும் எனது சைக்கிள் ஒழுங்கையில் விழுந்து கிடப்பதையும் கண்டவுடன் அவனுக்கு விபத்து பற்றித் தெரிந்திருக்கும். சிவராஜாவும் அமரசிங்கம் கடைக்குள் ஓடி வந்தான். மெதுவாகக் கூட்டம் கூடத் தொடங்கியது. சிவராஜாவின் தாய் விபரம் அறிந்து தலையில் அடித்துக் கொண்டு ஓடி வந்தார். சிவராஜா என்னை மெதுவாக அழைத்து, „மச்சான் நீ போ மச்சான். இங்கை நிண்டி எண்டால் பிரச்சினையாகிப் போடும். நான் பாக்கிறன். நீ முதலிலை போ' என்றான். அமரசிங்கம் அண்ணனும் அதையே சொன்னார். சிவராஜா விழுந்திருந்த எனது சைக்கிளை எடுத்து கோணலாகிப் போயிருந்த ஹாண்டிலை நிமிர்த்தி என்னிடம் தந்து „மாறு மச்சான் நான் பாக்கிறன்' என்று சொல்லி என்னை வலுக் கட்டாயமாக அனுப்பி வைத்தான்.வீட்டுக்குப் போக மனம் ஒப்பவில்லை. தனியாளாக நிற்பது சிரமமாக இருந்தது. யாராவது பக்கத்தில் நின்று ஆறுதல் தந்தால் நன்றாக இருக்கும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ஒழுங்கையால் வலது பக்கமாகத் திரும்பி ஓராம்கட்டையில் பிரதான வீதியை வந்து சேர்ந்தேன். என்னுடன் படிக்கும் வைத்திலிங்கம், மகேசன் இருவரும் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் சொந்த இடம் நெல்லியடி. அவர்களது சைக்கிள் ஓட்டத்துடன் நானும் இணைந்து கொண்டேன். அன்றைய பரீட்சையைப் பற்றியே கதைத்துக் கொண்டு வந்தார்கள். நானும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே சைக்கிளை ஓடிக் கொண்டிருந்தேன். அடுத்தநாள் நடைபெற இருக்கும் இந்துசமயப் பரீட்சை பற்றிக் கதை வந்த பொழுது. தேவாரம், திருவாசகம், திருவருட்பயன் என்று பலவற்றைப் பற்றிக் கதைத்துக் கொண்டு மூவரும் சைக்கிள் ஓடிக் கொண்டிருந்தோம். கிராமக்கோடு, சாரையடி, மந்திகை, மாலிசந்தி என்ற இடங்களைத் தாண்டும் பொழுது நான் அதைப்பற்றி எண்ணாமல் அவர்களுடன் கதைத்துக் கொண்டு சைக்கிள் ஓடிக் கொண்டிருந்தேன்.
நெல்லியடிச் சந்தி மகேசனும், வைத்திலிங்கமும் பிரிய வேண்டிய இடம். „மச்சான் வீட்டை போய்ப் படிக்கத் தேவை இல்லை சந்தேகம் எல்லாம் தீர்த்துப் போட்டாய். நாளைக்கு வெள்ளன வா ஏதும் தெரியாட்டில் சொல்லித்தா' என்று வைத்திலிங்கம் சொல்லும் போதுதான் மீண்டும் நான் தனியாக நிற்பதை உணர்ந்தேன். இருவரும் எனக்கு நன்றி சொல்லிப் பிரிந்த பொழுது சிவராஜாவின் தம்பியின் விபத்து வந்து மனதை வருத்தியது. மனது மிகவும் சஞ்சலமாக இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு நிமிர்ந்த என் கண்ணில் பட்டது லக்சுமி தியேட்டரில் இருந்த சினிமா விளம்பரப் பலகை. ரவிச்சந்திரன், கே.ஆர். விஜயா, நாகேஸ் நடித்த முக்தா பிலிம்ஸின் நினைவில் நின்றவள் முழுநீழ நகைச்சுவைச் சித்திரம் என்று அதில் போடப்பட்டிருந்தது. சட்டைப் பையில் கை விட்டுப் பார்த்தேன். பரீட்சை முடிய கன்ரீனில் சாப்பிடுவதற்கு அம்மா தந்த பணம் இருந்தது. நாளைக்குப் பரீட்சை. ஆனாலும் எனக்கு ஒரு ஆறுதல் தேவைப்பட்டது. சைக்கிளைக் கொண்டு போய் அதை நிறுத்தும் இடத்தில் பத்து சதம் கட்டணம் கொடுத்து நிறுத்தி விட்டு, ரிக்கெற் வாங்கிக் கொண்டு படம் பார்க்க திரையரங்குக்குள் நுளைந்தேன்.
படம் முடிந்து வெளியே வந்ததும் அம்மாவின் நினைவு வந்தது. என்னை எல்லா இடமும் தேடி இருப்பார். என்னுடன் வரும் தணிகாசலத்துக்குக் கூட நான் எங்கே போனேன் என்று தெரியாது. அம்மாவை தவிக்க விட்டு விட்டேனோ என்ற குற்ற உணர்வு ஒட்டிக் கொண்டது. வேகமாகச் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன்.கிராமக்கோட்டுச் சந்தியில் வலது பக்கம் திரும்பியதும் „தம்பி' என்ற வார்த்தை என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. தாமோதரம் அண்ணையின் தேனீர்க்கடை வாசலில் அண்ணனது நண்பன் துரை கையைக் கட்டியபடி நின்று கொண்டிருந்தார். அவரது பெயர் மரியநேசன். ஆனாலும் அவர் எங்கள் ஊருக்குத் துரை.
„எங்கை போட்டு வாறாய்?' சைக்கிளால் நான் இறங்க என்னுடன் சேர்ந்து அவரும் நடந்தார்.
„படத்துக்கு'
„நாளைக்குச் சோதனை எல்லோ?'
„ம்'
„கொம்மா உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறா. சொல்லிப் போட்டுப் போயிருக்கலாம்தானே? „
நான் பதில் சொல்லவில்லை.
நாங்கள் சென்று கொண்டிருந்த வீதியின் முடக்கைக் கடந்த உடன் அம்மா எங்களது வீட்டின் வாசலில் நிற்பது தெரிந்தது. அம்மாவைத் தாண்டி முதலியாருடைய வாசிகசாலையடியில் சிலர் சைக்கிளுடன் நிற்பதும் தெரிந்தது. என்னைக் கண்டதும் அவர்கள் சைக்கிளில் ஏறி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அதுவரை கேள்விகள் கேட்டுக் கொண்டு வந்த துரையண்ணன் தனது சாரத்தை மடித்துக் கட்டினார்.
„நீ ஒண்டுக்கும் பயப்படாதை நான் இருக்கிறன்' என்றார். பிரச்சனையின் தாக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன். வந்தவர்கள் என்னைச் சுற்றிக் கொண்டார்கள். அதில் ஒருவனைப் பிடித்து துரையண்ணன் சைக்கிளோடு தள்ளிவிட மற்றையவர்கள் சற்று விலகிக் கொண்டார்கள்.
„தனித்தனிய வரப்போறீங்களோ சேர்ந்து வரப் போறீங்களோ?' துரையண்ணனின் கர்ச்சனைக்குப் பயந்து சிறு எலிகளெல்லாம் வெகுண்டோடின.
„வந்தவையளைத் தெரியுமோ?' என்று கேட்டார். ஓம் அறுபதுபாகைக் கிணத்தடிப் பெடியள் என்றேன். துரையண்ணன் தள்ளியதால் விழுந்திருந்தவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைசியாளாக ஓட வெளிக்கிட துரையண்ணன் எட்டி அவனைப் பிடித்தார்.
„பிரச்சனையை இதோடை விட்டிடவேணும். பிறகு ஏதாவது ஆட்டம் காட்டினால் வீடு புகுந்து அடிப்பன். ஏதாவது கதைக்கோணும் எண்டால் பெரியாக்களை வரச் சொல்லு. விளங்கிச்சோ' அவனை எச்சரித்து அனுப்பி விட்டு, „இனிமேல் இப்பிடி ஏதாவது பிரச்சினை எண்டால் என்னட்டை வந்து சொல்லோணும். பிரச்சினைகளை நேரை நிண்டு சமாளிக்கோணும் பயப்படக் கூடாது' என்று அறிவுரை சொன்னபடி என்னை அழைத்து வந்து அம்மாவிடம் ஒப்படைத்தார்.
„எங்கையடா போனனீ? „ அம்மாவின் கேள்வியில் கவலையும் கோபமும் தெளித்தது.
„நாளைக்கு அவனுக்கு சோதணை போய்ப் படிக்கட்டும்' என்று அம்மாவிடம் துரையண்ணன் சொல்ல மெதுவாக நான் வீட்டுக்குள் சென்றேன்.அடுத்தநாள் நான் பரீட்சைக்குச் செல்ல அம்மா யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த சிவாராஜாவின் தம்பியைப் போய்ப் பார்த்து, அவனது தாயாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார். நான் பரீட்சை மண்டபத்தில் சிவராஜாவைக் கண்டு வருத்தம் தெரிவித்தேன். அவன் நட்புடன் சொன்னான். „அது மச்சான் விபத்து. ஆரிலையும் பிழை சொல்லேலாது. நேற்று உன்னை கொஞ்சப் போர் தேடினவையள் என்று அறிஞ்சன் அவையளுக்கும் நான் சொல்லிப் போட்டன். இந்த விசயத்திலை தலையிடக் கூடாதெண்டு. நீ கவலைப்படாதை மச்சான் சோதனையை எழுது' அவனது பேச்சு எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆனாலும் வைத்தியசாலையில் அது விபத்து எனப் பதியப் பட்டதால், பொலிஸ் நிலையத்தில் ஒரு வாக்குமூலம் கொடுக்க வேண்டி இருந்தது. அம்மாவும் துரையண்ணையும், நானும் போனோம். பொலிஸ் நிலையத்தில் எங்களுக்காக இரத்தினமண்ணை காத்திருந்தார். அவரது பெயர் சூசைதாசன். இரத்தினம் என்பது அவரது வீட்டுப் பெயர். இவர் துரையண்ணனின் அண்ணன். அட்வகேட் ஆர்.ஆர். தர்மரத்தினத்தின் அலுவலகலத்தில் வேலை செய்பவர். அதனால் பொலிஸில் எல்லோரiயும் பழக்கம். துரையண்ணன் ஒரு போத்தல் சாராயம் வாங்கி வந்திருந்தார். இன்ஸ்பெக்டரைத் திருப்தி செய்ய எனச் சொன்னார்.
„ஒருநாளும் இந்தப்பக்கம் வராத என்னை வரவைச்சிட்டாய்' என்று அம்மா என்னிடம் நகைச்சுவையாகச் சொன்னார். இரத்தினண்ணனும், துரையண்ணனும் சாராயப் போத்தலுடன் உள்ளே போனார்கள். சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் வெளியில் வந்தார்.
„நீயா அது. இனி சைக்கிளைப் பாத்து ஓட்டு.. என்ன?' தோளில் தட்டி சிரித்துவிட்டு உள்ளே போனார். இரத்தினண்ணனும், துரையண்ணனும் „எல்லாம் சரி நீங்கள் போங்கோ' என்றனர். அம்மாவுடன் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நல்லவேளை அண்ணன் மூவரும் கொழும்பில். பரீட்சை நேரத்தில் சினிமாவுக்குப் போனது அதுவும் வீட்டுக்குச் சொல்லாமல் போனது என இரண்;டு குற்றங்களுக்கும் என்னை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பார்கள் என்று நினைத்தபடி அம்மாவின் கையைப் பிடித்தபடி நடக்கத் தொடங்கினேன்.
பிற்குறிப்பு
இந்த நிகழ்வில் எனக்கு பல விடயங்கள் இன்றும் அடிக்கடி நினைவில் வந்து போகும். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் ஆன பிறகும் என்னால் அன்றைய அந்த விபத்தை மறக்க முடியவில்லை. அந்தச் சிறுவனுக்கு இன்று 44, 45 வயது இருக்கும். மெதுவான வளைவோடு இருக்கும் அந்தக் காலைப் பார்த்து இன்னும் அவன் என்னைத் திட்டிக் கொண்டிருக்கின்றானோ என்ற குற்ற உணர்வு என்னிடம் இருந்து மறையவில்லை.
பிரச்சினைகளை நேரை நிண்டு சமாளிக்கோணும் பயப்படக் கூடாது என்று எனக்கு அறிவுரை சொன்ன துரையண்ணன், பின்னாளில் தனக்கொரு பிரச்சினை வந்த பொழுது கோழையாகிப் போய் பொலிடோல் குடித்து தற்கொலை செய்ததை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை
அந்த வருட பரீட்சையில் திறமைச்சித்தியடைந்திருந்தேன். இது அம்மாவைக் கலங்க வைத்ததற்கு அவருக்கு நான் தந்த பரிசு.

Friday, August 22, 2008

இரத்ததானம்

எனது அண்ணன் குணசீலன் பாடசாலையில் படிக்கும் போது, அங்கிருந்த சாரணர் சேவையிலும் இருந்தார். ஒருநாள் பாடசாலை முடிந்து மாலையில் வீடு வந்த போது தான் இன்று இரத்ததானம் செய்ததாக அம்மாவிடம் கூறினார். தனது பிள்ளை இரத்தம் கொடுத்து விட்டு வந்திருக்கிறானே உடல் தளர்ந்து போவானோ என்ற கவலை எனது அம்மாவிற்கு வந்து விட்டது. கொடுத்த இரத்தம் தானாக உடலில் வந்து விடும் எதுவுமே ஆகாது என்று அண்ணன் எவ்வளவு சொல்லியும் அம்மா சமாதானம் அடையவில்லை. தனது பிள்ளையின் இரத்தம் ஒன்றுதான் அவரின் நினைவாக இருந்தது.
அம்மாவுக்கு மனது பொறுக்கவில்லை. "சாரணர் இயக்கத்தில் வேறுதுவும் செய்யலாம்தானே. எதுக்காக இரத்தத்தைக் குடுத்திட்டு வந்திருக்கிறான்" என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது இரத்ததானம் என்பது பெரிய விடயம். உடல் பருத்தவர்கள்தான் அதைச் செய்யலாம் என்ற நம்பிக்கை இருந்த நேரம். ஆகவே அம்மாவின் மன வேதனைக்கு அர்த்தம் இருந்தது.
அண்ணனுக்கு கவனிப்பு அதிகமானது. பால் முட்டை என்று அம்மா கொடுக்கக் கொடுக்க மகிழ்ச்சியோடு உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். அந்த வயதில் இரத்ததானம் என்ற விடயம் எனக்குப் புதிது. நரம்பை வெட்டி இரத்தம் எடுப்பார்கள் என்றே நம்பிக் கொண்டிருந்தேன். அண்ணனிடம் இதைப் பற்றிக் கேட்ட பொழுது சரியான பதில் தர அவர் விரும்பவில்லை. ஆனால் இரத்ததானம் கொடுத்ததற்கு பத்திரமும் பத்து ரூபா பணமும் தந்ததாகச் சொல்லி அவற்றை பெருமையாகக் காட்டினார்.
அம்மாவின் ஸ்பெசல் கவனிப்பில் அண்ணன் ஒரு சுற்று பெருத்து விட்டார். இதை எல்லாம் கவனித்த எனக்கு பத்து ரூபாவும், அம்மாவின் கவனிப்பும் கண்களின் முன்னே சுழன்றாடத் தொடங்கி விட்டது. எனக்கும் இரத்ததானம் கொடுக்கும் ஆசை மனதில் ஊறி விட்டது.
எனது வகுப்பாசிரியர் சுப்பிரமணிய மாஸ்ரரிடம் ஒருநாள் இரத்தம் கொடுக்கும் எனது எண்ணத்தை வெளிப் படுத்தினேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு "எங்களது பாடசாலையில் அப்படி இரத்ததானம் செய்யும் வழமை இல்லை" என்றார். "பாடசாலையில் இல்லாவிட்டால் வேறு எங்கே நான் இரத்ததானம் செய்யலாம்" என்று அவரிடம் தொடர்ந்து கேட்டபோது, கண்ணாடியைக் கழற்றி மேசை மீது வைத்து விட்டு என்னை கண்களால் ஊடுருவிப் பார்த்தார். எனக்கு விளங்கி விட்டது. எனது உடல்வாகு இரத்ததானம் கொடுக்கும் வகையில் இல்லை என்று. நான் மெலிதாக இருநத்தால் எனக்கு அப்பொழுது நூடில்ஸ் என்ற பட்டப் பெயரும் இருந்தது. ஆகவே சுப்பிரமணியம் மாஸ்ரரின் பார்வையின் அர்த்தம் எனக்கு விளங்கியது.
"இரத்ததானம் குடுக்கிறதுக்கு வயசும் முக்கியம். உன்னட்டை எல்லாம் எடுக்க மாட்டாங்கள். உனக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை. சோளகக் காத்து அடிச்சால் பறந்து போயிடுவாய். போ.. போய் படிக்கிற அலுவலைப் பார்."
சுப்பிரமணிய மாஸ்ரரின் அறிவுரையோடு எனது இரத்ததானம் வழங்கும் எண்ணம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அண்ணனை அம்மா கவனித்து உணவழித்த அந்த பாசமுள்ள காட்சிகள் மட்டும் இன்றும் வந்து போகும்.



Saturday, August 09, 2008

பெரிய மனது


அக்கா அணிந்திருக்கும் சங்கிலியில் தொங்கும் அந்த பிறவுன் நிறமான பென்ரன் அழகானதாயிருக்கும். அந்தப் பென்ரனைச் சுற்றி தங்கத்தால் நுணுக்கமான முறையில் வேலைப்பாடுகள் செய்யப் பட்டிருக்கும். இதயம் போன்ற அமைப்பில் மின்னும் அந்தப் பென்ரனை சிறிய வயதிலேயே நான் ரசித்திருக்கிறேன் என்றால் அது எந்தளவு பெறுமதியானது என்பது விளங்கும்.
சிறிய வயதுதான். அந்த வயதில் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு போவதென்றால் கொள்ளை ஆனந்தம். அந்தக் கால கட்டத்தில் அம்மாவிற்கு இரண்டு நிழல்கள் இருக்கும். வலது பக்கம் நான் இடது பக்கம் எனது அக்கா. அன்றும் அப்படித்தான் எங்களது நிழல்கள் தொடர அம்மா கந்தையாமாமா வீட்டிற்கு வந்திருந்தார்.
எனது தந்தையாரின் மாமன் மகன்தான் கந்தையாமாமா. எனது தந்தையார் எங்களது ஊரில் பெரிய மனிதனாக வலம் வந்தவர் அவரின் மறைவிற்குப் பின்னர் அந்த இடத்தைப் பிடிக்க பெரும் முயற்சி செய்தவர் கந்தையாமாமா. அவர் சிறிய வயதிலேயே ஓய்வூதியத்தை எடுத்து விட்டார். வீட்டின் முன்னால் கதிரையைப் போட்டுக் கொண்டு கிட்லர் மீசையோடு மிடுக்காக உட்காந்திருப்பார். கையில் வேப்பிலைக் கொத்தை எப்பொழுதும் வைத்திருப்பார். காலில் உள்ள எக்ஸிமாவில் ஈக்கள் மொய்க்காத வண்ணம் அந்த வேப்பிலைக் கொத்தால் கலைத்துக் கொண்டிருப்பது அவரது அன்றாடப் பணிகளில் ஒன்று.
ஈட்டில் இருந்த எங்களது காணி ஒன்றை மீட்டெடுக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. எனது தந்தையார் காலமாகிய நேரம். அவரது ஓய்வூதியம் வந்து சேர சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலமை. இந்த நேரத்தில் காணிப் பிரச்சினை. அம்மா கந்தையாமாமாவிடம் சொன்னார், "ஒண்டு இரண்டு மாதத்திலை பென்சன் வந்திடும். இதுவரை தராத காசெல்லாம் சேர்த்து வரும். இந்தக் காணியை இன்னும் இரண்டு மூண்டு மாசத்திலை மீட்கிறம் எண்டு அவையளுக்கு ஒருக்கால் சொல்லி விடுங்கோ "
எனது தந்தையின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்துக் கதைக்கத் தயங்கும் கந்தையாமாமாவிடம் இருந்து உடன் பதில் வந்தது "அதென்னெண்டு.. அதெல்லாம் காசு வந்தாப்போலைதான் தெரியும்.. காசு வருமெண்டதை நம்பி என்னாலை போய்க் கதைக்கேலாது"
அந்த சின்ன வயதிலேயும் அவரது பேச்சு எனக்கு எரிச்சலைத் தந்தது. இரண்டு மாதத் தவணை கேட்பதில் இவருக்கென்ன குறைந்து போய்விடும். இரண்டு மாதத்திலை காசு வராட்டில் காணி போகட்டும். இதில் இவருக்கென்ன கௌரவக் குறைச்சல் என்று நினைத்துக் கொண்டேன். அம்மா எதுவுமே கதைக்கவில்லை. வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். இடமும் வலமும் நிழல்கள் தொடர்ந்தன.
அன்றும் நிழல்கள் இரு பக்கமும் தொடர அம்மா நடந்து கொண்டிருந்தார். இம்முறை நாங்கள் சென்றது எங்களது காணிக்குள். அது வேலி இல்லாத காணியானதால் அதனூடக ஒரு நடை பாதையை அமைத்து விட்டார்கள். சூசையப்பர் கோவிலுக்கு முன்னால் அந்தக் காணி இருந்நது. ஒற்றைப் பனைமரம் ஒன்று அங்கிருந்தது. அம்மா சொன்னார் "போற வாற ஆக்கள் போத்தல்களை எல்லாம் உடைச்சுப் போட்டிருக்கினம் எல்லாத்தையும் பொறுக்கி ஒரு கரையிலை போடுங்கோ" என்று. நானும் அக்காவும் அம்மாவுடன் சேர்ந்து போத்தல் துண்டுகளைப் பொறுக்கி ஒரு கரையில் வைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் கவனித்தேன் அக்காவின் கழுத்தில் தொங்கும் அந்த பிறவுன் நிறமான பென்ரனைக் காணவில்லை. எங்கேயோ தொலைத்து விட்டு பேசாமல் இருக்கிறாளா என்று எனக்குள் எண்ணம் ஓடியது. எங்களுக்குச் சற்றுத் தள்ளி போத்தல் ஓடுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த அம்மாவை நோக்கி மெதுவாக நகர்ந்து. "அக்கா பென்ரனை துலைச்சுப் போட்டாள்" என்று அம்மாவிடம் சத்தம் இல்லாமல் கோள் மூட்டினேன். அம்மா என்னை நிமிர்ந்து பார்க்காமல் சொன்னார் "அதை வித்துத்தான் இந்தக் காணியை மீண்டனான்" அம்மாவைப் பார்த்தேன் கண்கள் கலங்கியிருந்தன. அக்காவின் பக்கம் திரும்பினேன். அவள் ஏதும் நடக்காதது போல் பேசாமல் போத்தல் ஓடுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.கந்தையாமாமா மட்டும் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் எனது அக்காவின் கழுத்தில் தொங்கும் அந்த பிறவுன் நிறமான அழகிய பென்னரன் இன்னும் இருந்திருக்கும் என்று அந்த சின்ன மனது கவலைப் பட்டது.
அந்தக் காணியில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று எனது தந்தையார் விரும்பி இருந்தார். அதனால்தான் அம்மாவும் அந்தக் காணியில் அதிக ஈடுபாடு காட்டியிருந்தார். சூசையப்பர் கோவிலின் நிழல் அந்தக் காணியில் விழுவதாலும் சேமக்காலை அந்தக் கோவிலோடு அண்டியிருப்பதாலும் அந்தக் காணியில் வீடு கட்டி வாழ்வது நல்லதாக இருக்காது என்று ஊரார் சொன்னதால் அங்கு வீடு கட்டும் எண்ணத்தை அம்மா கைவிட்டு விட்டார்.
பின்னாளில் எனது பெரியம்மாவின் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்ட போது எனது அம்மா அந்தக் காணியை விற்று அவர்களுக்குப் பத்தாயிரம் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். அந்த நேரத்தில் பத்தாயிரம் என்பது பெரிய தொகை. அதை அம்மா மகிழ்வோடு கொடுத்திருந்தார். அந்தத் திருமணத்திற்குப் பெரிய மனிதனாக வந்து முதற் பந்தியில் இருந்து உணவருந்தியவர் கந்தையாமாமா.


Saturday, July 26, 2008

கடவுளின் கனி

கருணை என்கின்ற பொழுது கடவுளையும் முந்தி மனதில் நிற்பவள் தாய்தான். தாயைப் பற்றி நினைக்கும் போதே உள்ளம் குழந்தைத் தனத்துக்குத் தானாக வந்து போகிறது.

எனது அம்மாவுக்கு மரங்கள் வளர்ப்பதில் அலாதிப் பிரியம். மணிக்கணக்கில் அல்ல வேண்டுமானால் நாள் முழுவதும் அவற்றை பராமரிப்பதில் நேரத்தை செலவிடுவார். மரங்களின் வளர்ச்சியில் குதூகலிப்பார். அவை பூக்கும் போது பூரித்துப் போவார். அவை காய்த்து கனி தரும் போது களிப்பெய்துவார்.


ஒரு தடவை வீட்டின் மதிற் சுவர் ஓரமாக எனது அம்மா ஒரு கொய்யா மரத்தை நட்டு வைத்தார். அவர் நட்டு வைத்த இடம் பூச் செடிகளுக்காக ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த இடம்.

"பூச்செடிகளின் மத்தியில் இது எதற்கு?" என்று கேட்டேன்.

"அவை பூக்க மட்டும்தான் செய்யும் இது காய்க்கவும் செய்யும்" என்று அவரிடம் இருந்து பதில் வந்தது.

அம்மாவின் செயற்பாடுகள் எதுவானாலும் அதற்கு வீட்டில் மறு பேச்சுக் கிடையாது. ஆகவே கொய்யா மரத்திற்கு வளர வாய்ப்பு இலகுவாகக் கிட்டியது. அம்மாவின் பராமரிப்பில் கொய்யாவுக்கு அதிக மகிழ்ச்சி போலும். வேகமாக வளர்ந்து மதிலை விட உயரமாக நின்றது. வெகு விரைவிலேயே இரண்டு கனிகளை வெளிக் காட்டியது. கொய்யாக் கனிகளைக் காட்டி எனது அம்மா பெருமைப் பட்டுக் கொள்வார். உண்மையிலேயே அவரின் பெருமையில் அர்த்தம் இருந்தது. கனிகள் ஏறக்குறைய ஒரு தேங்காயின் அளவுக்குப் பெருத்து மஞ்சளும், பச்சையும் கலந்து அழகான நிறச் சேர்க்கையுடன் இருந்தன. கொய்யா மரத்தைக் கடந்து செல்லும் போது பழத்தின் வாசனை பறித்துச் சாப்பிடு என்று சொல்லும்.

அம்மாவிடம் சொன்னேன், "அணில் கொறிக்கப் போகுது. இல்லை என்றால் பறவைகள் கொத்தப் போகின்றன" என்று.

"எதுவுமே நடக்காது" என்று உறுதியாகச் சொன்னார்.

"நானாவது சாப்பிடுகிறேன்" என்றேன்.

"பொறு, பழம் இன்னும் பெருக்க வாய்ப்பிருக்கு. உனக்குக் கிடைக்கும். ஆனால் முதல் பழம் கடவுளுக்கு. இரண்டாவதுதான் உனக்கு" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.


ஒருநாள் காலை எனது அம்மா என்னை அவசரமாக அழைத்தார். ஓடிப் போய்ப் பார்த்தால் கொய்யா மரத்தடியில் சோகமாக நின்றார். அவரது சோகத்தைக் கண்டதும் எனது கண்கள் உயர்ந்து நின்ற கொய்யா மரத்தைப் பார்த்தன. அது தனது ஒரு கனியை தொலைத்திருந்தது. மதிலுக்கு மேலால் வளர்ந்திருந்ததால் வீதியால் போகிறவர் யாரோ பறித்து விட்டார்கள் என்பது தெளிவாயிற்று. கடவுளுக்கு நேர்ந்ததை களவாணி கொண்டு போய் விட்டான்.

எனது அம்மா எவ்வளவு கவலை அடைந்திருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது.

"இனியும் பார்த்துக் கொண்டிராமல் அடுத்ததை பறிச்சு கடவுளுக்குக் குடுங்கோ" என்று சொல்லி விட்டு நான் போய் விட்டேன்.

அன்று மாலை வீடு திரும்பிய போது மேசையில் தட்டில் கொய்யாக் கனி வெட்டி வைக்கப் பட்டிருந்தது.

"கடவுளுக்குக் குடுக்கேல்லையா?" என்றேன்

"பேச்சு மாறக் கூடாது. இரண்டாவது கனி உனக்குத்தானே" என்று அம்மாவிடம் இருந்து புன்னகையுடன் பதில் வந்தது.

கடந்த04.04.2008 இல் எனது தாயார் மரணம் அடைந்த செய்தி வர துயரத்துடன் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள நியூசிலாந்து சென்றிருந்தேன். எல்லாம் முடிந்து நியூசிலாந்தில் எனது சகோதரியின் வீட்டுத் தோட்டத்தில் காலைச் சூரியனை மலைகளின் உச்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அக்காவின் மகன் ஜனகன் சொன்னான் "இதில் இருக்கும் மரங்கள் அத்தனையும் அம்மம்மாதான் வளர்த்தார். அந்த அப்பிள் மரமும் அவர் வளர்த்ததுதான்"

வேலி ஓரமாக பூச் செடிகளுக்கு மத்தியில் இருந்த அப்பிள் மரத்தை நெருங்கிப் பார்த்தேன். மரம் ஒன்றும் உயரமாக வளரவில்லை. ஆனால் சிவந்த காய்கள் அதில் அழகாக இருந்தன. அம்மாவின் பிரியத்தில் அவை கனி தந்திருக்க வேண்டும் என்று மனது சொன்னது. அன்று கொய்யா. இன்று அப்பிள்.

எனது அம்மாவுக்கு மரங்கள் வளர்ப்பதில் அலாதிப் பிரியம்.

Saturday, July 19, 2008

சொல்லவேயில்லை


திருக்கேதீஸ்வரத்தில் பாலாவியில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தேன். கூடவே எனது பால்ய நண்பன் தணிகாசலமும் சேர்ந்திருந்தான். வல்லிபுரக் கோவில் குளத்தில் - அதைக் குளம் என்று தான் சொல்வது வழக்கம். உண்மையில் அது ஒரு குட்டை. மழைக்காலத்தில் அதில் தேங்கி நிற்கும் தண்ணீர்தான் எங்களது நீச்சல் தடாகம். இங்குதான் தென்னை ஒல்லி இரண்டினை இளக்கயிற்றால் கட்டி அதன் மேல் படுத்திருந்து நீச்சல் பழகியிருந்தேன். நீச்சல் என்பதை முறையாக யாருமே எனக்குக் கற்றுத் தரவில்லை. நானும் தணிகாசலமும் ஒல்லிகளைக் கட்டிக் கொண்டு நீரில் தாளாமல் இருப்பதற்காக கைகளையும் கால்களையும் வேகமாக அடித்து ஓரளவு நேரம் தண்ணீரில் மூழ்காமல் இருக்கக் கற்றுக் கொண்டோம் என்பதே சரியாக இருக்கும்.

இந்த நீச்சலையே அன்று நானும் தணிகாசலமும் பாலாவியில் அடித்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குச் சற்றுத் தள்ளி எனது அம்மாவும் பாலாவியில் குளித்துக் கொண்டிருந்தார் எனது நீச்சலை அவர் அடிக்கடி பார்ப்பது தெரிந்தது. இத்தனைக்கும் நாங்கள் அதிக ஆழமான இடத்தில் நீச்சல் அடிக்கவில்லை. நெஞ்சளவு தண்ணீரிலேயே நின்று வித்தை காட்டிக் கொண்டிருந்தோம்.

பாலாவியில் சீமெந்தினால் செய்யப் பட்ட பெரிய பெரிய குழாய்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. அவை தண்ணீர் மட்டத்தோடு காட்சி தந்தன. எங்களது நீச்சல் மகிமையைக் கண்ட ஒரு பெரிசு குளித்து விட்டுப் போகும் போது, "தம்பிமாரே அந்தக் குழாய்கள் இருக்கிற பக்கம் போயிடாதையுங்கோ அது ஆழமான பகுதி. அதுவும் அந்தக் குழாய்க்குள்ளை போனீங்களோ அவ்வளவுதான்" என்று எச்சரித்து விட்டுப் போனது. அந்தப் பக்கமே போவதில்லை என்ற தீர்மானத்தை உடனே நிறைவேற்றினோம்.

நாங்கள் கவனமாகத்தான் இருந்தோம் ஆனால் எனது அம்மா அந்தக் குழாய்களை நோக்கி நகர்வது தெரிந்தது. எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. பாதி நீந்தியும் தண்ணீருக்குள் நடந்தும் அம்மாவை நெருங்கினேன். அம்மா மகிழ்ச்சியாக தண்ணீருக்குள் நின்றார். ஊரில் மழை பெய்தால் மழையில் நனைவதும் அதில் குளிப்பதும் அம்மாவிற்கு மகிழ்ச்சியான விடயம். ஆகவே பாலாவியில் அவர் மகிழ்ச்சியாக நின்றதில் அதிசயம் இல்லை. நான் அம்மாவிடம் சொன்னேன் "அந்தக் குழாய் இருக்கிற பக்கம் போகாதையுங்கோ ஆழமாம்." அம்மா எனது பேச்சை அசட்டை செய்வது தெரிந்தது. மழையில் குளிப்பது போல் இல்லை பாலாவி ஆற்றில் குளிப்பது என்று மீண்டும் எச்சரித்தேன். அம்மாவுக்கு நீச்சல் தெரியாது ஏதாவது விபரீதம் நடந்தால் கரைக்கு இழுத்து வர எங்களுக்கும் சரிவர நீச்சல் தெரியாது. ஆனாலும் அம்மா மெதுவாக தண்ணீரில் நகர்ந்து கொண்டிருந்தார். "அம்மா" என்று கூப்பிட்டேன். "உனக்குப் பயம் என்றால் நில். எனக்குப் பயம் இல்லை" என்று அம்மாவிடம் இருந்து பதில் வந்தது. இப்பொழுது அம்மா என்னை விட்டு சற்று தண்ணீருக்குள் முன்னுக்குப் போய்விட்டார். அவர் இருக்கும் இடத்திற்குப் போக தண்ணீரில் தாண்டு விடுவேனோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனாலும் மெதுவாக அம்மாவை நோக்கி நகர்ந்தேன். நான் அம்மாவை நெருங்கிய போது அம்மா தண்ணீரில் இருந்து மேலே வந்தார். அழகாக வட்டம் அடித்து நீந்தத் தொடங்கி விட்டார். "வா ஏலுமெண்டால் வந்து பிடி" என்று சொல்லியவாறு அழகாக நீந்திக் கொண்டிருந்தார்.

எனது அம்மாவுக்கு இவ்வளவு அழகாக நீந்தத் தெரியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தண்ணீரில் நீச்சல் என்ற பெயரில் தத்தளிக்கும் எனது நீச்சலை நினைக்கும் போது எனக்கு வெட்கமாக இருந்தது. அம்மாவின் நீச்சலை இரசித்த படி தணிகாசலம் இருக்கும் இடத்தை நீந்தாமல் நடந்து வந்து சேர்ந்தேன்.

"உன்ரை அம்மா வடிவா நீந்துறா. அவவுக்கு நீச்சல் தெரியும் எண்டு நீ எனக்கு சொல்லவேயில்லை" என்று தணிகாசலம் கேட்டான்.
அம்மா எனக்கும் சொல்லவேயில்லை என்ற விடயத்தை நான் அவனுக்குச் சொல்லவேயில்லை.

Sunday, June 22, 2008

அம்மன் அருள்

அம்மாவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஆகவே சாமிகள் பேரில் ஆசாமிகள் அருள்வாக்கு சொல்லும் போது அப்படியே நம்பி விடுவார்.

எங்கள் ஊருக்கு அயலில் குசவெட்டி என்ற ஊர் இருக்கிறது. மட் பானைகள் செய்பவர்கள் இங்கு அதிகம். அதற்கேற்ற செம்பாட்டு மண்ணும் அங்கிருக்கிறது. இங்கிருக்கும் ஒருவர் உழைப்பதற்கு சுலபமான வழியாகக் கண்டு பிடித்ததுதான் அம்மன் கோவில்.

இவரது தொழில் மட்பானை செய்வதாக இருந்தாலும் இவருக்கு அடிக்கடி அம்மன் அருள் வருவதால் அந்தத் தொழிலை விட்டுவிட்டு வீட்டோடு கோவில் அமைத்து வெள்ளிக் கிழமைகளில் அருள்வாக்கு சொல்லத் தொடங்கி விட்டார். இதில் ஆச்சரியம் என்ன என்றால் வெள்ளிக்கிழமைகளில் மாலை ஆறு மணிக்கு சரியாக அம்மன் இவரிடம் வந்து விடும். அருள் வந்தவுடன் இவர் யார் மேலே தண்ணீர் தெளிக்கிறாரோ அவரை அல்லது அவரது குடும்பத்தை அழைத்து அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை தானே சொல்லி அதற்கான பரிகாரத்தையும் கூறிவிடுவார். அவர்களது பாதுகாப்புக்கு அம்மன் இருப்பதாகச் சொல்லி வீட்டில் வைப்பதற்கு பாவட்டம் இலைகளையும் கொடுத்து விடுவார். சிலருக்கு நோய் தீர மருந்தாக மண்ணை தண்ணீரில் குழைத்து உருட்டி சிறுசிறு உருண்டைகளாக உட்கொள்ளவும் கொடுத்து விடுவார். அருள்வாக்கு கேட்டவர்களும், நோய்க்கு மருந்து பெற்றவர்களும் பக்தியில் உருகி அம்மனுக்கு என்று காணிக்கைகளை செலுத்தி மகிழ்ச்சி அடைவார்கள்.

அம்மன் அருள் வருபவருக்கு சிறி என்று ஒரு மகன் இருந்தார். ஆள் கொஞ்சம் தண்ணீர் சாமி. பார்த்தார் எங்கள் ஆசாமி, இவரை எப்படிப் பயன் படுத்தலாம் என்று. இறுதியாக வழி ஒன்று கண்டு பிடித்து விட்டார். தனது மகனுக்கு காத்தவராயன் அருள் வந்து விடுகிறது என்று பக்தர்களுக்குச் சொல்லி வைத்து விட்டார். காத்தவராயன் என்ற சிறி மாலையில் கள்ளைக் குடித்து விட்டு வந்து தானும் அருள் வாக்கு என்று புலம்பும். பக்தர் கூட்டமும் அதை நம்பும். காத்தவராயனுக்கு என்று கள்ளும் கொண்டு வந்து பக்தர் கூட்டம் படைத்து தனது பக்தியைக் காட்டி நிற்கும். காத்தவராயனும் அதைக் குடித்துக் குடித்து ஏவறை விட்டபடியே அருள் சொல்லி வந்தவரை ஏய்க்கும்.

இந்த இடத்திற்கு 1962 மாசி மாதம் 21ம் திகதி, எனது தந்தை மரணிப்பதற்கு முதல் நாள் வரவேண்டியிருந்தது. அன்று அம்மன் சொன்ன வாக்குகள் உண்மையாக இருந்ததால் அம்மாவிற்கு சாமி மேல் அதீத நம்பிக்கை வந்து விட்டது. ஆதனால் ஒவ்வொரு வெள்ளியும் அம்மா எங்களையும் அழைத்துக் கொண்டு இந்தக் கோயிலுக்கு வந்து விடுவார்.

எனது காலில் ஒரு தடி ஒன்று குத்தியதால் ஏற்பட்ட காயத்திற்கு அம்மா என்னை இங்கேதான் அழைத்து வந்தார். மருந்தாக பாவட்டம் இலையும் மண் உருண்டையும் தான் கிடைத்தது. பேசாமல் வைத்தியசாலைக்குப் போயிருந்திருக்கலாம். ஆனால் அம்மாவின் அம்மன் மீதான நம்பிக்கை அதைத் தடுத்து விட்டது. காயம் பெருத்ததே தவிர மாறவில்லை. ஆனாலும் அம்மாவின் நம்பிக்கையோ மாறவில்லை.

அன்றும் பூசைக்கு முன்னர் அம்மன் பூசாரியின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தேன். அம்மா வந்திருந்த பக்தர் கூட்டத்துக்குள் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் கவனித்தேன். பக்தர்கள் கூட்டத்துக்குள் இருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களில் பூசாரியின் ஆட்களும் கலந்து இருந்தார்கள். அவர்கள் பக்தர்கள் போல் மற்றவர்களுடன் கலந்திருந்து அவர்கள் பிரச்சினைகளைக் கேட்டு விட்டு வந்து பூசாரியிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தார்கள். திண்ணையில் இருந்த என்னை அவர்கள் கவனிக்கவில்லை. அல்லது சட்டடை செய்யவில்லை. அவர்கள் சிவப்பு நிற சாறி கட்டி வந்தவருக்கு உள்ள பிரச்சினை இது, பச்சை நிற சாறி கட்டி வந்தவருக்கான பிரச்சினை இது என ஒவ்வொன்றாக அருள் வருவதற்கு முன்னர் அம்மன் பூசாரிக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். அன்றைய பூசையில் திண்ணையில் நான் கேட்ட விடயம் சம்பந்தமானவர்களை மட்டும் அம்மன் அழைத்து பரிகாரம் சொல்லிக் கொண்டிருந்தது.

அம்மாவிற்கு இவர்களது தில்லு முல்லுகளை விளக்கும் பக்குவம், வயது எனக்கு அப்போது இருக்கவில்லை. ஆனாலும் எனது காலிற்கான சிகிச்சை வைத்தியசாலையில் தரப்பட்டு அது குணமானதின் பின்னர் அம்மாவில் இவர்கள் பற்றிய அபிப்பிராயம் குறைந்து மறைந்து போனதை என்னால் காண முடிந்தது.

பின் நாளில் அம்மாவுடனான தொலைபேசி உரையாடல்களில் அம்மா முதலில் கேட்பது "எப்பிடி சுகமாயிருக்கிறாயா?" என்று. நான் "ஓம்" என்று பதில் தந்தவுடன் அவரிடம் இருந்து வருவது இதுதான். "எனக்குத் தெரியும் நீ சுகமாய் இருப்பாய் எண்டு. நான்தானே ஒவ்வொரு வெள்ளியும் இஞ்சை இருக்கிற கோயிலுக்குப் போய், என்ரை பிள்ளைகள் நல்லா இருக்கோணும் எண்டு கடவுளை வேண்டி அர்ச்சனை செய்யிறனான். "

அம்மாவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம்.

Friday, June 20, 2008

குறும்பு


புலவர்கள் குறும்புகள் என்ற ஒரு புத்தகத்தை முன்பு ஒரு தடவை வாசித்து இருக்கிறேன். இன்று எனது நினைவுக்கு வந்த ஒரு புலவரின் குறும்பு இதோ.


ஒரு புலவன் நோயின் தாக்கத்தினால் படுக்கையில் விழுந்து மரணத்திற்கான நாழிகையை எண்ணிக் கொண்டிருக்கிறான். அந்தப் புலவனால் உணவையோ நீரையோ உட் கொள்ள முடியாத நிலை. அவனது பேத்தி அவன் அருகில் இருந்து அந்தப் புலவனுக்கான பணிவிடைகள் செய்து கொண்டிருக்கிறாள். அவள் ஒரு துணியை பாலினில் தோய்த்து அந்தப் புலவனின் வாயில் ஒவ்வொரு துளிகளாக விட்டுக் கொண்டிருக்கிறாள். பால் வாய்க்குள் விழுந்ததும் புலவனின் முகம் மாறிவிடுகிறது. இதை அவதானித்த அவனது பேத்தி, "தாத்தா பால் கசக்கிறதா? " எனக் கேட்டாள்.

புலவனிடம் இருந்து பதில் உடனேயே வந்தது "பாலும் கசக்கவில்லை துணியும் கசக்கவில்லை"

பேத்தி அப்பொழுதுதான் துணியைப் பார்த்தாள் அது அழுக்காக இருந்தது. மரணத்தின் இறுதி நேரத்தில் கூட குறும்பு அந்தப் புலவனை விட்டுப் போகவில்லை.


சமீபத்தில் மறைந்த எனது தாயார் தனது இறுதி நேரத்தினை நெருங்கிக் கொண்டு இருக்கும் போது எனது அக்காதான் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அக்காவுக்கு சிறிய இடைவேளை தேவைப்பட்ட பொழுது எனது அண்ணனின் மகள் காயத்திரியை அம்மாவைக் கவனித்துக் கொள்ளும்படி சொல்லிச் சென்று விட்டாள்.

அம்மா ஒரு தேனீர் பிரியை. அவருக்கு ஏதாவது குடிக்க வேண்டும் போல் இருந்திருக்கிறது. இதை அவதானித்த காயத்திரி "அப்பம்மா tea போட்டுத் தரட்டா" என்று கேட்டிருக்கிறாள்.




அம்மாவிடம் இருந்து உடனடியாகப் பதில் வந்தது "நீயோ? tea போடப் போறியோ..? ஐயையோ எனக்கு வேண்டாம்"

உயிர் விட்டுப் போகும் வேளையில் கூட சிலரை குறும்புகள் விட்டுப் போகாது

Wednesday, June 11, 2008

அம்மா சொன்ன வழி

அங்கொன்று இங்கொன்றாக போராளிகள் தாக்குதல்களைத் தொடங்கிய கால கட்டம் அது. எங்காவது ஒரு தாக்குதல் நடந்தால் உடனடியாக இராணுவம் அந்த இடத்தை சுற்றி வளைக்கும். வீடு வீடாகச் சென்று இளைஞர்களை இழுத்து வந்து வெயிலில் காய வைக்கும். பலரை இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லும். இவ்வாறான இந்தக் கொடுமைகளில் இருந்து தப்புவதற்கு, எங்காவது தாக்குதல் நடந்தால் ஒழுங்கைகள் ஊடாக சைக்கிளில் இளையோர் கூட்டம் அடுத்த நகரங்களை நோக்கி பறந்து விடும்.
இப்படியான ஒரு காலகட்டத்தில் நான் வீட்டில் நின்றிருந்தேன். எனது நகரத்துக்கு அயல் கிராமத்தில் அன்று போராளிகள் வைத்த குண்டு வெடித்து சில இராணுவம் சிதறிப் போயிருந்தது. அதனால் நகரம் முழுதும் இராணுவ நடமாட்டம். வியாபார நிலையங்கள் எல்லாம் பூட்டி இருந்தன. பாடசாலை நடக்கவில்லை. ஆலயங்களில் சாமிகளைத் தனியே விட்டு பூட்டி விட்டு பூசாரிகளும் ஓடி விட்டிருந்தார்கள்.
அன்று எனது அம்மாவுக்கு காய்ச்சல் கண்டு இருந்தது. அது மாலையில் அதிகமாகி விட்டது. கண்டிப்பாக அம்மாவை டொக்டரிடம் கூட்டிக் கொண்டு போக வேண்டிய நிலைமை. காரில் பிராதன வீதியால் போவதென்றால் இராணுவத்தை சந்தித்தாக வேண்டும். உள் ஒழுங்கைகளால் காரில் போனால், அதன் சத்தம் இராணுவத்தை ஒழுங்கைகளுக்கு அழைத்து வந்து விடும். இந்த சிக்கல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் ஒன்றில் ஒழுங்கைகளால் நடந்து போக வேண்டும் அல்லது சைக்கிளில் போக வேண்டும். அம்மாவிடம் நிலைமையை விளக்கிச் சொன்னேன். அவ்வளவு தூரம் நடப்பது சாத்தியம் இல்லை. ஆகவே சைக்கிளில் தன்னை வைத்து ஏற்றிச் செல்லும்படி அம்மா சொன்னார்.
"சைக்கிளில் சரியாக இருப்பீங்களா?" என்று கேட்டேன். முன்னே பின்னே சைக்கிளில் சவாரி செய்யாதவர் அவர். ஆதலினால்தான் அப்படிக் கேட்டேன்.
"ஓம்" "என்றார்.
இந்த நேரத்தில் டொக்டர் முருகானந்தத்தின் தனியார் வைத்தியசாலையில் ஆட்கள் அதிகமாக இருக்க மாட்டார்கள். ஆகவே உடனடியாக அம்மாவை பரிசோதிக்கச் செய்து மருந்து வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
அம்மாவை முன்னுக்கு இருத்தி சைக்கிளை மெதுவாக ஓடத் தொடங்கினேன். ஒழுங்கையில் மழை வெள்ளங்கள் இழுத்து வந்த மணல் அதிகம் இருந்ததால் ஓடும்போது சைக்கிளில் தள்ளாட்டம் தெரிந்தது. ஆனாலும் பயப்படாமல் அம்மா இருந்தார். தன்னை விழுத்த மாட்டேன் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. மெதுவாக விசுவகுல ஒழுங்கையால் பிரதான வீதிக்கு வந்து வீதியின் அருகில் இருக்கும் டொக்டர் முருகானந்தத்தின் வைத்தியசாலையை வந்தடைந்தேன். என்ன ஆச்சரியம் அவரது வைத்திய நிலையம் நோயாளர்களால் நிறைந்திருந்தது. என்னைப் போல் பலர் உள் ஒழுங்கைகளால் வந்து சேர்ந்திருந்திருந்தார்கள் என்பதை அங்கிருந்த சைக்கிள்களைப் பார்த்ததும் புரிந்து கொண்டேன். இதில் இன்னும் ஒரு விபரீதம் நிகழ வாய்ப்பிருந்ததை மனது மெதுவாக சொல்லியது. தற்செயலாக இராணுவ வாகனம் இந்தப் பாதையால் போகும் பொழுது இவ்வளவு சைக்கிள்களைப் பார்த்து விட்டு சும்மா போகாது. ஏதாவது நடந்தால் ஓட முடியாது. அம்மாவை விட்டு விட்டு எப்படி ஓடுவது?
எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ என்ற சிந்தனையுடன் வைத்திய நிலையத்துக்குள் நுளைந்தேன். அங்கே நோயாளர்களை ஒவ்வொருவராக மனோராணி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் என்ன என்பது போல் விழியை உயர்த்தி சாடையால் வினாவினாள். நான் அம்மாவைக் காட்டினேன். வாங்கோ அம்மா என்று அன்பாக அழைத்து வைத்தியரிடம் அனுப்பி வைத்தாள். வைத்தியரும் நாளைக்கு சுகமாகி விடும் என்று அன்பாகப் பேசி ஒரு ஊசியை அம்மாவுக்கு போட்டு விட்டார். இயற்கையில் ஊசி போடுவது என்றால் அம்மாவுக்குப் பயம் ஆனாலும் அன்று எதுவித எதிர்ப்பும் காட்டாமல் போட்டுக் கொண்டார். வெளியே வந்து வைத்தியருக்கான செலவைச் செலுத்தி விட்டுப் பார்த்தால், "நாங்கள் முன்னுக்கு வந்தனாங்கள். எப்பிடி இப்ப வந்த அவையளை நீங்கள் உள்ளை அனுப்பலாம்" என்று மனோராணியுடன் சிலர் வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். அவளும் ஏதோ சமாதானம் சொல்லிக் கொண்டு எங்களைப் பார்த்து புன்னகைத்து விடை கொடுத்தாள்.
சைக்கிளில் அம்மாவை இருத்தி வீடு நோக்கி மெதுவாக ஓடிக் கொண்டருந்தேன். அம்மா மௌனமாக இருந்தார்.
"என்ன பேசாமல் இருக்கிறீங்கள் போட்ட ஊசி நோகுதோ? "
"ஊசி நோகுதோ இல்லையோ நீ அப்பிடிச் செய்திருக்கக் கூடாது." எனக்கு எதைப் பற்றி அம்மா கதைக்கிறார் என்று விளங்கவில்லை. அம்மாவே தொடர்ந்தார். "அவ்வளவு சனம் இருக்கக்கை நீ என்னெண்டு உன்ரை அம்மாவை மட்டும் உடனடியாகக் காட்ட முடிஞ்சுது. "
"அந்தப் பிள்ளையை எனக்குத் தெரியும். "
"உனக்கு அந்தப் பிள்ளையைத் தெரியும் எண்டாப் போலை மற்றையவையளைப் பற்றி நீ சிந்திக்கேல்லை. உன்ரை அலுவல் முடிஞ்சால் சரி. உன்ரை அம்மாவைப் போலை எத்தனை பேர் அங்கை இருந்திருப்பினம். அதுகளுக்கு என்ன அவசரம் இருந்திச்சோ? திரும்ப வரக்கை பாத்தனியே? அந்தப் பிள்ளையை சனங்கள் பேசிக் கொண்டிருக்கிறதை. இனிமேல் பட்டு உனக்குத் தெரிஞ்ச ஆக்களெண்டோ இல்லாட்டில் உன்ரை செல்வாக்கைப் பயன் படுத்தியோ உன்ரை அலுவலைப் பாக்கிறதை நிப்பாட்டிப் போட்டு, சரியான வழியிலை போ. "
அம்மாவின் வார்த்தைகள் எனக்கு ஊசியால் குத்துவது போல இருந்தது. அம்மாவுக்கு காய்ச்சலுக்குப் போட்ட ஊசியை விட அம்மா எனக்குப் போட்ட ஊசி நன்றாக வேலை செய்யத் தொடங்கியது. எத்தனையோ பெரியவர்களை, அரசியல்வாதிகளை, அறிஞர்களை சந்தித்திருக்கிறேன். அனாலும் எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என்று எந்த அலுவல்களையும் இன்றுவரை நான் யாரையும் கொண்டு செய்விப்பதும் இல்லை. செய்வதும் இல்லை, சிபாரிசுகளுக்குப் போனதும் இல்லை.

Monday, June 02, 2008

மணிப்புறா


பக்கத்து வீட்டு நக்கீரன் வளர்க்கும் புறாக்களைப் பார்க்க எனக்கும் புறா வளர்க்கும் எண்ணம் மெதுவாக வந்து தொற்றிக் கொண்டது. அழகான மரச் சட்டங்களால் நக்கீரன் புறா கூடு அமைத்திருந்தான். புறாக்கள் கூட்டை விட்டு வெளியே வருவதும், பறப்பதும், அவை உலா வருவதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

அம்மாவிடம் நானும் புறா வளர்க்கப் போகிறேன் என்று ஒருநாள் கேட்டு வைத்தேன். கேட்டவுடனேயே அங்கிருந்து மறுப்பு வந்தது. எனது ஆசையை உடனுக்குடன் நிறை வேற்றி வைக்கும் அவர் அன்று மறுத்தது என்னை மிகுந்த சோகத்தில் தள்ளியது. ஆனாலும் நானும் விடாமல் அவரை நச்சரித்துக் கொண்டிருந்தேன். அம்மா அசைந்து கொடுக்கவே இல்லை. ஆனாலும் என் ஆசை மட்டும் போகவே இல்லை.

படித்த வாலிபர்களுக்கு தொழில் வாய்ப்புத் தருவதற்காக விசுவமடுப் பகுதியில் மூன்று ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்வதற்கு அரசாங்கம் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தது. எனது ஊரைச் சேர்ந்த சோமு என்பவருக்கும் அங்கு நிலம் கிடைத்திருந்தது. சோமண்ணனுடன் ஒருநாள் கதைக்கும் போது எனது புறா வளர்க்கும் ஆசையை சொல்லி வைத்தேன்.

ஒரு மாலை நேரம் ஒரு சோடி மணிப்பறாக்களுடன் சோமண்ணை என்னிடம் வந்தார். எனக்காக அவர் விசுவமடுவில் இருந்து அந்த சோடி மணிப்புறாவை கொண்டு வந்திருந்தார். பார்க்க மிகுந்த அழகாக இருந்தது. நக்கீரன் கூட வந்து ஆச்சரியமாகப் பார்த்துப் போனான். பழக்கம் இல்லாததால் அவற்றை கூண்டுக்குள் வளர்க்கும் படியும், இல்லாவிட்டால் பறந்து போய் விடும் என்றும் சோமண்ணை எச்சரித்திருந்ததால் நான் அவற்றுக்கென கம்பிகளால் செய்த ஒரு கூண்டை வாங்கி அதற்குள் அவற்றை வளர்க்கத் தொடங்கினேன்.

ஒருநாள் பாடசாலை முடிந்து வந்து பார்த்தால் கூண்டு திறந்திருந்தது. மணிப்புறாக்கள் அங்கு இல்லை. நான் கூண்டை பூட்டி விட்டுத்தான் பாடசாலை போனேனா? என்ற சந்தேகம் வந்து விட்டது. பூனை பிடித்து தின்றிருக்குமா? என்ற பயமும் ஏற்பட்டது. அழுகையும், பயமும் சேர அப்படியே தரையில் அமர்ந்து விட்டேன்.

எனது தோளில் குளிர்மையான கை தொட, நிமிர்ந்து பார்த்தேன். தேனீருடன் அம்மா நின்றிருந்தார். எனது அருகில் அமர்ந்து, „உயிர்களை வதைக்கிறது, அவற்றை கூண்டுக்குள்ளை அடைக்கிறது எல்லாம் பாவம். புறவைகள் சுதந்திரமானவை அவைகளைக் கூண்டுக்குள்ளை அடைச்சு பறக்க விடமால் செய்ய நாங்கள் யார்? உனக்கிருக்கிற அண்ணன் அக்கா சொந்த பந்தம் அதுகளுக்கும் இருக்கும் தானே. உன்னைப் பிடிச்சு கூண்டுக்குள்ளை போட்டால் உனக்கு எவ்வளவு கஸ்ரமாக இருக்கும். அதுபோலத்தான் அதுகளுக்கும். கூண்டுக்குள்ளை மணிப்புறா வளர்க்கிறது உனக்கு ஆசையாக இருக்கும். ஆனால் அதுகளுக்கு வேதனையாக இருக்கும். நான்தான் அவைகளை பறக்க விட்டனான்.“ எனது தலையைக் கோதிவிட்டு அம்மா எழுந்து போய் விட்டார்.
அந்த நேரத்தில் எனக்கிருந்த சோகத்தில் அதிகமாக நான் யோசிக்கவில்லை. ஆனாலும் உயிர்களிடத்தில் எனது தாய்க்கு இருந்த பிரியம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இன்றுவரை வீட்டில் எந்தக் கூண்டும் இல்லை. சொல்லிக் கொள்ள செல்லப் பிராணிகள் கூட இல்லை

Tuesday, May 27, 2008

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்...

எனது சிறு வயதில் எனது தந்தை காலமாகி விட்டதால், எனக்கு எல்லாமாக எனது தாயே இருந்தார். அப்பொழுதெல்லாம் எனது தாயார் நிற்கும் இடத்திற்கு பின்னால் சற்று எட்டிப் பார்த்தால் நான் நிற்பது தெரியும். எனது அம்மா போகும் இடம் எல்லாம் அவரது சேலையின் நுனியைப் பிடித்தபடி நான் போய்க் கொண்டிருப்பேன்.


ஒருநாள் பக்கத்து வீட்டு இரத்தினக்கா எனது அம்மாவைக் கூப்பிட்டுச் சொன்னார். " இவன் என்ன எப்ப பாத்தூலும் உங்கடை சாறியைப் பிடிச்சுக் கொண்டு திரியிறான். நாளைக்கு உங்களுக்கு ஏதும் ஆச்சுது எண்டால் என்ன செய்யப் போறான்? இப்பிடித்தான் தாயும் இல்லாமல் தகப்பனும் இல்லாமல் அங்கை ஒரு பிள்ளை பெரிய கஸ்ரப் படுறான்.. " என்று யாருடையதோ கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு வேண்டியவர்கள் யாரேனும் ஏதாவது சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் குணம் அம்மாவிடம் இருந்தது. அன்றும் அது அப்படியே ஆயிற்று.


இரவு படுக்கும் போது எனது முன்தலையைக் கோதி விட்டு என்னை நித்திரையாக்கும் எனது தாய் எனதருகில் படுக்கவில்லை. அன்று அம்மா என்னை விட்டுப் போகாமல் இருக்கும் வண்ணம் அம்மாவின் சேலை நுனியைப் பிடித்துக் கொண்டு அம்மாவைப் பார்த்த வண்ணம் தூங்கிப் போனேன். விடிந்து பார்த்த பொழுது அம்மாவின் சேலை நுனி என் கையில் இருந்தது. அம்மா படுக்கையில் இல்லை. சேலையை மட்டும் என்னிடம் தந்து விட்டு வேறொரு சேலையைக் கட்டிக் கொண்டு அவர் எழுந்து போய் விட்டிருந்தார். எனது தலையைக் கோதி என்னை நித்திரையாக்கும் அவரது பணி முற்றுப் பட்டுப் போயிருந்தது பின்னாளில் விளங்கியது.


சமீபத்தில் எனது தாயார் காலமான போது நியூசிலாந்து சென்று அவரது இறுதிக் கிரிகைகளில் பங்கு பற்றினேன். எல்லாம் முடிந்து அக்காவின் வீட்டில் இருந்த போது அக்கா சொன்னாள் "உனக்கு அம்மாவின் நினைவாக ஏதும் வேணும் எண்டால், அம்மாவின்ரை அறைக்குள்ளை இருக்கு எடுத்துக் கொள்". என்று.


நான் புறப்படும் போது நினைவாக அம்மாவின் அறைக்குள் சென்று அம்மாவின் பொருட்களை அலசத் தொடங்கினேன். அக்கா அம்மாவின் நகைகள், பொருட்கள் என என்னென்னவோ எடுத்துக் காட்டினாள். எனது மனம் ஒரு சேலை மீது நிலை கொண்டிருந்தது. அந்த சேலையை அம்மா தனது 85வது பிறந்த நாளில் அணிந்திருந்தார். கத்தரிப்பூ நிறமுமில்லாமல், மண் நிறமும் இல்லாமல் இரண்டும் கலந்த ஒரு அழகிய நிறச் சேர்க்கையில் அந்த சேலை இருந்தது. எனக்கு இது மட்டும் போதும் என்று அந்த சேலையை எடுத்துக் கொண்டேன்.


வெலிங்டனில் இருந்து ஓக்லன்ட் உள் ஊர் விமான நிலையத்தில் வந்து இறங்கினேன். அங்கிருந்து சர்வதேச விமான நிலையத்திற்குப் போவதற்கு ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கு பஸ் சேவை இருந்தது. நான் அங்கு போய்ச் சேர்ந்த போது பஸ் போய் விட்டிருந்தது. இன்னும் இருபது நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் அல்லது நடந்து போக வேண்டும். தனியாக அங்கு காத்திருக்க மனது இசையவில்லை. நடக்க ஆரம்பித்தேன்.

தோளில் தொங்கும் பையில் அம்மாவின் சேலை இருந்தது. அன்று நான் சிறுவனாக இருந்த போது தனக்கு ஏதும் நடந்து விட்டால் தனித்து வாழப் பழகிக் கொள் என்று என்னிடம் தனது சேலையைத் தந்து விட்டு எட்டிப் போன அம்மா நினைவில் வந்தார். இன்று மட்டும் என்ன தனது சேலையைத் தந்து விட்டு என்னை விட்டுப் போயிருந்தார். நினைத்த போதே கண்களில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது. உள் ஊர் விமான நிலையத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தவர்கள் என்னை ஒரு விதமாகப் பார்ப்பது தெரிந்தது. நான் எதையும் சட்டை செய்யவில்லை. எனது தோளில் இருந்து தொங்கிய அம்மாவின் சேலை இருந்த பையை கைகளால் பற்றியபடி நடந்து கொண்டிருந்தேன்.

Friday, April 04, 2008

ஏனம்மா?

அண்ணன் தொலைபேசியில் சொன்னார். அம்மாவுக்கு உடம்புக்கு சிறிது இயலாமல் இருப்பதால் வைத்தியசாலையில் அனுமதித்திருப்பதாக. கூடவே வைத்தியசாலை தொலைபேசி இலக்கத்தையும் தந்தார்.

நான் தொலைபேசியில் அழைத்தபோது அம்மாவுடன் அக்கா கூட இருந்தாள். பெரிதாக ஒன்றும் இல்லை கவலைப் படாதே என்று நம்பிக்கை தந்தாள்.

„அம்மா பக்கத்திலேயே இருக்கின்றா? கதைக்கலாமா?“ என்றேன்.

அக்கா „அம்மாவிடம் தொலைபேசியைக் கொடுக்கிறேன“; என்றாள்.

„அம்மா“ என்றேன் எனது அடுத்த வார்த்தைகள் வருமுன் படுக்கையில் இருந்து சுவாசத்துக்காகப் போராடும் என்; தாயிடம் இருந்து கேள்வி வந்தது.

„எப்பிடி இருக்கிறாய்? சுகமாக இருக்கிறாயா?“

சாவின் பிடியில் இருந்தாலும் மகனின் நலம் விசாரிக்கும் தாய்மை அது.

„நீங்கள் எப்பிடி இருக்கிறீங்களம்மா?“

„போக வேண்டிய காலம் வந்திட்டுது எண்டு நினைக்கிறன்.“ அம்மா என்னுடன் கதைக்கும் போது நகைச்சுவை உணர்வு கலந்து கதைப்பார்;. அன்றும் அது இருக்கக் கண்டேன்.

„நான் வந்து உங்களைப் பார்க்கும் வரை நீங்கள் போக மாட்டீங்கள்“ வழக்கம் போல் நானும் நகைச்சுவையாகச் சொன்னேன்.

„சரியான கஸ்ரமாக இருக்குதடா“ ஒரு நாளும் அம்மா இப்படி என்னிடம் சொன்னதில்லை. கேட்ட உடன் மனது கனத்தது. அம்மா மனதளவில் மிகவும் தைரியமானவள். ஆனாலும் அன்று அவரது பேச்சில் அதைக் காணவில்லை.

அக்காவிடம் கேட்டேன். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை யோசிக்காதே என்றாள்.

அடுத்தநாள் வேலை இடத்திற்கு அக்காவிடம் இருந்து தொலைபேசி வந்தது. அது சோகத்தையும் சேர்த்து சுமந்து வந்தது.

அம்மா தனது இறுதிப் பயணத்தை மெதுவாகத் தொடங்கி விட்டார். ஆகவே அவரைத் தொந்தரவு செய்யாமல் மருத்துவத்தை நிறுத்துகிறோம் என வைத்தியர்கள் அறிவித்து விட்டார்களாம்.

நான் இப்பொழுது நியூசிலாந்துக்குப் பயணமாகிறேன். என் வாழ்க்கையில் எல்லாமாக நின்றவள் இல்லாமல் பொன செய்தி கேட்டு இடிந்து போய் போகிறேன். அவளது இறுதிப் பயணத்தில் இளைய மகனாய் நின்று செய்ய வேண்டிய கடமையைச் செய்யப் போகிறேன்.

கடவுள் எல்லா இடமும் இருநது பணி செய்ய முடியாமல் தாயைப் படைத்தான் என்பார்கள். எங்கள் தாய் கடவுளாகவே இருந்து எங்களை பார்த்திருக்கிறாள். அவளை இறுதியாகச் சந்திக்க நாளை நான் நியூசிலாந்துக்குப் போகிறேன். நான் வந்து பார்க்கும் வரை ஏன் காத்திருக்க வில்லை என்று சத்தம் போட்டு கேட்கப் போகிறேன்.

Monday, March 24, 2008

நான் யார்? நான் யார்? நீ யார்?

எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் படிப்பு, உணவு மறந்து பார்த்த காலம அது. வருடம் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு எம்.ஜி.ஆர். படங்களே வெளிவந்து கொண்டிருந்த பொழுது, எம்.ஆர். ராதாவின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு 1968ம் வருடம் எம்.ஜி.ரின் எட்டுப் படங்கள் வெளியாகி இருந்தன. ஒரு மாதத்திற்கு ஒரு படம் பார்ப்பதற்கே வீட்டில் அனுமதி இருந்தது. அதனால் அடுத்தடுத்து வந்த எம்.ஜி.ஆர். படங்களைப் பார்க்க முடியாது நான் திக்குமுக்காடிப் போனேன்.

குடியிருந்த கோயில் படம் எனது நகரத்தில் திரையிடப் பட்டிருந்தது. ஆனால் பார்ப்பதற்கான நேரம்தான் சரி வர அமையவில்லை. அந்த மாதத்திற்கான படம் ஒன்று ஏற்கனவே பார்த்தாயிற்று. இனி அடுத்த மாதம்தான் படம் பார்க்க முடியும். அதுவரை தியேட்டரில் இருந்து குடியிருந்த கோயில படத்தை எடுக்கமால் இருக்க வேண்டும். இந்த நிலையில் எனக்கிருந்த ஒரே ஒரு ஆறுதல், இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்தான். அதில் ஒலிபரப்பாகும் குடியிருந்த கோயில் திரை விமர்சனம் மற்றும் திரைப்பாடல்களை கேட்டு, படத்தினைப் பற்றிய கற்பனையில் மூழ்கியிருப்பேன்.

அன்று பண்டிதர் பரந்தாமன் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் எனது அண்ணன் ரி.நித்தியகீர்த்தி (ஏ.ரி.நிதி) எழுதி இயக்கிய மரகத நாட்டு மன்னன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். நாடக ஒத்திகை பார்ப்பதற்கு முன்னர் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்தவேளை வானொலியில் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இருந்து நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற ரி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல் ஒலி பரப்பானது. நான் ஓடிப் போய் வானொலியை கொஞ்சம் சத்தமாக வைத்தேன். பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பண்டிதர் பரந்தாமன் தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டிருந்தார். பாடலை இரசிக்கிறார் என எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பாடல் முடிந்ததும் அவரிடம் இருந்து வந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.


„இந்தப் பாடல் சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு. இதை ஒரு பைத்தியக்காரன்தான் பாடுவான். எம்.ஜி.ஆர். படத்தில் இப்படி ஒரு பாடலா?“ என அவரிம் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்து எனது முகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
அதிர்ஸ்டவசமாக அடுத்த மாதமும் எங்கள் ஊரில் குடியிருந்த கோயில் திரைப் படம் காண்பிக்கப் பட்டுக் கொண்டிருந்ததால் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. படம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து "நான் யார்? நான் யார்? நீ யார்? ..." பாடல் எப்பொழுது வரும் என்ற நினைவே எனக்கு அதிகமாக இருந்தது. பாடலும் வந்தது எனக்குப் பரவசமும் கூடவே வந்தது. வாகன விபத்தில் சிக்கிய எம்.ஜி.ஆர். சித்தம் குழம்பி பாடும் பாடலாக நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.

பைத்தியக்காரத்தனமான பாடல்தான். ஒரு பைத்தியக்காரன் பாடுவதாகத்தான் அந்தப் பாடல் இருக்கிறது என ஓடிப்போய் பண்டிதர் பரந்தாமனிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் சொல்லவில்லை.

இந்த சம்பவத்தை நான் எழுதும் போது சமீபத்தில் வெளிவந்த வம்புச் சண்டை என்ற திரைப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் சத்தியராஜ் மனநிலை குன்றியவராக நடித்திருந்தார். படத்தில் அவர் பாடுவதாக இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார்கள். ஆக பைத்தியக்காரத்தனமாகத் தென்பட்டாலும் சில பாடல்கள் நினைவை விட்டு அகலாதவை.

இந்தப் பாடல் சம்பந்தமாக அதை எழுதிய புலமைப் பித்தன் இப்படிச் சொல்கிறார்.
புலவர் படிப்பு படித்துவிட்டு கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் என்னை சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் எழுதுகிற வாய்ப்பு. யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதிய பாடல்தான் -
நான் யார்? நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவர் யார்- யார்? தாய் யார்? மகன் யார்? தெரியார்; தந்தை என்பார் அவர் யார்- யார்? உறவார்? பகை யார்? உண்மையை உணரார்; உனக்கே நீ யாரோ? வருவார்; இருப்பார்; போவார்; நிலையாய் வாழ்வார் யார் யாரோ?
'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!' என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்கிற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி இது. பட்டினத்தான் கேட்டாலும் இதைத்தான் கேட்பான். பட்டினத்தானும் பைத்தியக்காரனும் ஒன்றுதானே...

Monday, March 10, 2008

நாலுறூள்

ங்கில எழுத்துக்களைத் தொடுத்து அழகாக எழுதிப் பழகுவதற்கு நாலுறூள் அப்பியாசப் புத்தகம் அன்றைய காலத்தில் பாடசாலையில் கட்டாயமாக இருந்தது. ஆனால் எப்பொழுதும் வியாபார நிலையங்களில் இதற்குத் தட்டுப்பாடாகவே இருந்து வந்தது.

எனது விற்பனை நிலையத்தில் அந்தக் குறை வராமல் பார்த்துக் கொண்டேன். எனது நிறுவனத்தில் கோடு போடுவதற்கான இயந்திரம் ஒன்று இருந்ததால் இது என்னால் முடிந்தது. ஆனாலும் அது ஒன்றும் இலகுவான வேலையல்ல. நீண்ட நேரங்களை எடுத்து விடும். பொறுமைகளைப் பெரிதாகச் சோதித்து விடும்.

நாலுறூள் அப்பியாசப் புத்தகத்தில் நடுவில் இரு கோடுகள் நீலத்திலும், அதன் மேல் கீழ்ப் பகுதியில் இரு கோடுகள் சிவப்பிலும் இருந்தன. அன்றைய வசதியின் பிரகாரம் இந்தக் கோடுகளைப் போடுவதற்கு நீலக் கோடுகளுக்காக ஒரு தடவையும் சிவப்புக் கோடுகளுக்காக ஒரு தடவையும் என தாள்களை இரண்டு தடவைகள் இயந்திரத்தில் போடவேண்டி வரும். இதில் வேலை அதிகம் என்றாலும், இரு தடவைகள் தாள்களை ஓட விடும் போது மைகள் சிந்தி விட்டால் சேதாரமும் ஏற்படும். இந்தக் காரணங்களால்தான் அப்பியாசப் புத்தகங்கள் தயாரிப்பவர்கள் நாலுறூள் அப்பியாசப் புத்தகத்தைப் பற்றி அதிகம் கவனம் எடுக்கவில்லை.

ஆனாலும் மொத்த வியாபாரத்தைத் தவிர்த்து எனது நகரத்தில் உள்ள பாடசாலைகளுக்குத் தேவையான அளவு மட்டுமே தயாரித்து விற்பது எனத் தீர்மானித்து நாலுறூள் அப்பியாசப் புத்தகத்தை அளவாகத் தயாரித்துக் கொண்டிருந்தோம். அவற்றை வியாபார நிலையத்தில் மட்டுப் படுத்தப் பட்ட வகையிலேயே ஒருவருக்கு ஒன்று, இரண்டு என விற்பனை செய்து கொண்டிருந்தோம். மொத்த வியாபாரம் என்பது நாலுறூள் அப்பியாசப் புத்தகத்தில் இல்லை என விற்பனை நிலையத்தில் எல்லோருக்கும் அறியத் தரப் பட்டிருந்தது.

அன்று நான் விற்பனை நிலையத்தில்தான் இருந்தேன். விற்பனை சூடு பிடித்திருந்தது.

"ஒரு கொப்பிக்கு மேல் தர ஏலாது.. "என தில்லையண்ணா ஒரு சிறுமிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இது வழக்கமாக நாலுறூள் அப்பியாசப் புத்தகம் வாங்குபவர்களுடன் நடக்கும் ஒரு விசயம். அத்தோடு தில்லையண்ணா மிகவும் பக்குவமாகக் கதைத்து வியாபாரம் செய்பவர். எனவே நான் அதில் அக்கறை காட்டவில்லை. அந்தச் சிறுமி சலிப்புடன் செல்வதை அவதானித்து விட்டு எனது வேலையில் கவனம் செலுத்தினேன். மீண்டும் அதே சிறுமி.

தில்லையண்ணா சற்று இறுக்கமாகச் சொன்னார்.
"ஆரெண்டாலும் தரேலாது. ஒராளுக்கு ஒரு கொப்பிதான்."

சிறுமி கோபமாத் திரும்பிச் சென்றாள். அவளுக்காக காத்திருந்த கார் அவளையும் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்றது.

"என்ன தில்லையண்ணா என்ன விசயம்?" பிரச்சினை ஒன்று உருவாகப் போகிறது என்ற அச்சத்துடன் கேட்டேன்.

"நாலுறூள் கொப்பி நூற்றைம்பது வேணுமாம். ஆளுக்கு ஒண்டுதான் தருவம் எண்டு சொன்னனான்." என்றார் தில்லையண்ணன்.

"தம்பி வந்திட்டுப் போனது ஜட்ஜின்ரை மகள். தாய்க்காரி இங்கிலிஸ் ரீச்சரா இருக்கிறா. ஒருவேளை வகுப்பிலை எல்லா பிள்ளைகளுக்கும் சேர்த்து வாங்கிறதுக்கு வந்திருக்கலாம்." என்று அப்புத்துரையண்ணை காதுக்குள் மெதுவாகச் சொன்னார்.

"காருக்குள்ளை ஆர் இருந்தவை? " அச்சத்துடன் கேட்டேன்.

"ஜட்சும் பெண்சாதியும்" சாதாரணமாகச் சொன்னார் தில்லையண்ணா.

"அண்ணை கேட்டது ஆரெண்டு தெரிஞ்சு கொண்டே இல்லை எண்டனீங்கள்?"
சற்று எரிச்சல் எனக்கு ஏறியிருந்தது.

"ஆராயிருந்தால் என்ன தம்பி? ஆளுக்கு ஒரு கொப்பிதான் எண்டால் ஜட்ஜ் என்ன புரொக்றர் என்ன? எல்லாம் ஒண்டுதான். " பேச்சு மாறாத தில்லையண்ணை சொல்லச் சொல்ல எனக்குத் தலையைச் சுற்றியது.

பாடசாலைப் பொருட்களின் விலை இதுதான் என்று நிர்ணயிக்கப்பட்டு, அதன் விலையில் இருந்து ஒரு சதமேனும் கூட்டி விற்றால் பெரும் அபராதம் கட்ட வேண்டும் என்ற இறுக்கமான சட்டம் இருந்த நேரமது. மேலும் விற்பனை நிலையத்தில் ஒரு பொருளை வைத்துக் கொண்டு இல்லை என்பது அதனிலும் மேலான குற்றம். அதுவும் நீதிபதியே வந்து பார்த்துப் போன விடயம். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த போது, மூளை அறிவித்தது. இருக்கிற கொப்பிகளை அப்புறப் படுத்தி விடு என்று.

தில்லையண்ணாவிற்குச் சொன்னால் சரி வராது. போய்யே பேசாத மனிதர் அவர். வியாபாரம் என்றாலும் நேர்மை முக்கியம் அவருக்கு. எனவே அப்புத்துரையண்ணையிடம் சொன்னேன். "இருக்கிற நாலுறூள் கொப்பிகளை எடுத்துக் கொண்டு போய் என்னுடைய காருக்குள் வைத்து விடுங்கள்." என்று. "வீட்டுக்குப் போய் அண்ணனிடம் நடந்த விசயத்தைச் சொல்லி விடு" என்று மகாலிங்கத்திடம் சொன்னேன். அப்பொழுது எனது அண்ணன் எனது நகரத்தில் ஒரு சட்டத்தரணியாக இருந்தார்.

நிலைமை அறிந்து மகாலிங்கம் உடனடியாக வீட்டுக்கு ஓடினான். அப்புத்துரை அண்ணன் நாலுறூள் கொப்பிகளை கார்ட்போர்ட் பெட்டிகளுக்குள் வைத்துக் கட்டி மற்றவர்கள் அறியாமல் வெளியே நின்ற எனது வாகனங்களுக்குள் கொண்டு போய் வைத்துக் கொண்டிருந்தார். கடைசிப் பெட்டியை அவர் கொண்டு போய் வைத்து விட்டு வியாபார நிலையத்துக்குள் நுளையவும் பொலிஸ் ஜீப் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

"யாரடா இங்கே முதலாளி?"

நான் எதிர்பார்த்ததுதான். அப்பொழுது மாணிக்கராஜா என்பவர்தான் எங்கள் நகரத்தில் இரண்டாவது பொலிஸ் அதிகாரியாக இருந்தார். அதிகாரத்தை அதிகமாகவே காட்டுபவர். கொஞ்சமாக அவருடன் வாக்கு வாதம் செய்தால் போதும் பொறுமை காட்டாமல் கை கால்களால் பதில் சொல்லக் கூடியவர். மரியாதையை அவரிடமிருந்து எதிர்பார்ப்பது முட்டாள் தனம். நகரத்து ரவுடிகளை சட்டைக் கொலரில் பிடித்து இழுத்துச் செல்வதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவரது பெயரைக் கேட்டாலே சற்று உதறல் எடுக்கும். அப்படியானவர் எனது விற்பனை நிலையத்துக்கு முன்னால், அதுவும் உதவிக்கு நான்கு சிங்களப் பொலிசாருடன். அவர் சந்திக்க வேண்டிய ஆளாக வேறு நான் இருக்கிறேன்.

பாடசாலை முடிந்து விற்பனை களை கட்டியிருந்த நேரம். மாணிக்கராஜாவின் குரலைக் கேட்டவுடன் மெதுவாக வாடிக்கையாளர்கள் விலகிப் போகத் தொடங்கினார்கள்.

"என்னய்யா விசயம்?" அன்பாக அவரிடம் கேட்டது அப்புத்துரையண்ணன்.

"ஜட்ஜின்ரை மகளுக்கே கொப்பி இல்லை எண்டு சொன்னீங்களாம். என்ன துணிவடா உங்களுக்கு..? "

"இல்லை எண்டு சொல்லேல்லை. ஒண்டு தல்லாம் எண்டுதான் சொன்னனான்." தில்லையண்ணன் தனது நியாயத்தை நிலை நாட்ட வந்தார்.

"பொறுங்கோ அண்ணன்.. நான் கதைக்கிறன்... " அவசரப் பட்டு அவரைத் தடுத்தேன். அவர் வாய் தடுமாறி ஏதாவது சொல்லப் போக உதையை நான் எல்லவோ வாங்க வேண்டி வரும்.

"இஞ்சை பாருங்கோ.. கொப்பி ஒண்டுதான் இருந்தது. அதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். மற்றும்படி வைச்சுக் கொண்டு நாங்கள் இல்லை எண்டு சொல்லேல்லை. "

சிறிது நேர அமைதி.

"எங்கையாவது கொப்பிகளை மாத்திட்டியோ?" சின்னதாக ஒரு நக்கல் அவரிடம் இருந்து வெளி வந்தது.

முன் எச்சரிக்கையாக அவரை விட்டு நாலடி தள்ளியே நின்றேன்.

"அப்பிடி ஒரு அவசியம் எங்களுக்கு இல்லை. ஏனெண்டால் நாங்களே கொப்பி செய்யிறனாங்கள். அவருக்குத் தேவை எண்டால் சொல்லுங்கோ, இண்டைக்குச் செய்து போட்டு நாளைக்கு குடுக்கிறம். "

"அதென்னடா நாளைக்கு.. கடைக்குள்ளை கொப்பி இருந்துதெண்டால்..." சொல்லிக் கொண்டே கடைக்குள் நுளைய முற்பட்டார்.

"ஐயா.. கொப்பி இல்லை ஐயா. " அப்புத்துரை அண்ணன் தைரியமாகச் சொன்னார்.

தில்லையண்ணன் குளப்பமாகப் பார்த்தார். வியாபாரம் மும்மரமாக நடந்து கொண்டிருக்கையில் அப்புத்துரை அண்ணன் எல்லாவற்றையும் அப்புறப் படுத்திய விடயம் தில்லையண்ணனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

உள்ளே நுளைய முற்பட்ட மாணிக்கராஜா சற்றுத் தயக்கம் காட்டினார். இது எனக்கு சாதகமான ஒரு அறிகுறியைத் தந்தது.

"இஞ்சை பாருங்கோ இப்ப வியாபாரம் நடக்கிற நேரம். தேவையில்லாமல் குளப்பத்தை ஏற்படுத்தாதையுங்கோ. கடைக்குள்ளை நுளையிறது எண்டால் அனுமதியோடை வாங்கோ."

சிவந்த அவரது முகம் இன்னும் சூடேறி கொதிப்பது தெரிந்தது. ஏதோ நடக்கிறது என்று அறிந்து வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் வேறு கூடியிருந்தது. எனது வாய் உளறிக் கொட்டியதற்கு இப்பொழுது என்ன நடக்கப் போகிறது என்ற பயம் எனக்குள் இருந்து வியர்வையாக வெளியே கொட்டிக் கொண்டிருந்தது.

ஒரு தடவை தனது பார்வையை சுற்றி நோட்டம் விட்டவர், என்ன காரணமோ தெரியவில்லை. "பொறு வாறன். அரை மணித்தியாலத்துக்குள்ளை வாறன். ஒரு இடமும் போகக் கூடாது. கடையிலையிலேயே நிக்கோணும். இண்டோடை உன்ரை கடைக்கு சீல் வைக்கிறன்" எள்று உறுமி விட்டு ஜீப்பில் ஏறிப் போனார்.

சிறிது நேரத்தில் அண்ணனும், எனது அக்காவின் கணவரும் வந்தார்கள். அக்காவின் கணவரும் ஒரு சட்டத்தரணிதான். அவர் இலண்டனில் சொலிசிற்றேர்ஸ் முடித்து விட்டு ஊருக்கு வந்திருந்தார். இருவரிடமும் விசயத்தைச் சொன்னேன். ஆனால் மாணிக்கராஜாவின் குணாதிசயங்களை மட்டும் அவர்களிடம் மறைத்து விட்டேன். இருவரும் என்னிடம் தகவல்களைப் பெற்றுக் கொண்டு காவல் நிலையத்துக்கு மாணிக்கராஜாவைச் சந்திக்கச் சென்றார்கள்.

அரை மணித்தியாலங்கள் கடந்திருக்கும். மீண்டும் மாணிக்கராஜா கடைக்கு முன்னால் வந்து நின்றார்.

அப்புத்துரையண்ணன் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்.
" தம்பி உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். "

அரை மணித்தியாலத்துக்குள் வருகிறேன் என்று சொல்லிப் போனவர் சொன்னபடி அரை மணித்தியாலத்துக்குள் வந்து நிற்கிறார். போனவர்கள் சொதப்பி விட்டார்களோ இல்லை இவரை அவர்கள் சந்திக்கவே இல்லையோ என்ற குழப்பத்துடன் எழுந்து முன்னுக்குப் போனேன்.

"என்னடா நீ..? இதுக்குப் போய் லோயர்ஸை அனுப்பியிருக்கிறாய். அவங்கள் என்னவோ வியாபாரம் நட்டம். பெயர் கெட்டுப் போச்சுது, மான நட்டம் எண்டு கனக்க கதைக்கிறாங்கள். ஜட்ஜ் சொன்னவர் எண்ட படியால் வந்து கேட்டன். கேக்காட்டில் பிழை எல்லோ? அவர் நாளைக்கு போய்க் விசாரிச்சனியோ எண்டு கேட்டால் என்ன சொல்லுறது? சரி இந்தப் பிரச்சினையை இதோடை விடு. நான் சமாளிக்கிறன். நீயும் ஆக்களைப் பாத்து வியாபாரம் செய்யப் பழகிக் கொள் லோயர்சுக்கும் சொல்லிவிடு, பிரச்சினை எல்லாம் முடிஞ்சுதெண்டு." சொல்லி விட்டு தோளில் தட்டி நட்பு பாராட்டி விட்டுச் சென்றார்.

அடுத்த நாள் காலையிலேயே அப்புத்துரை அண்ணனுக்கு பாடசாலைக்கு 150 நாலுறூள் கொப்பிகளைக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டிய முக்கியமான வேலை ஒன்று இருந்தது.