Wednesday, November 25, 2009

உன்னை நான் சந்தித்தேன்

எங்கள் ஐந்து பேரையும் ஒன்றாக வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அம்மாவுக்கு நீண்டநாள் இருந்தது. அது இறுதிவரை ஏனோ சாத்தியப்படவே இல்லை. 1975ம் ஆண்டு முதல் எங்களில் யாராவது ஒருவர் அம்மாவின் பக்கத்தில் இல்லை.

அம்மாவின் விருப்பம் நிறை வேறியது அம்மாவின் மறைவில் தான். 2009 சித்திரையில்தான் நாங்கள் ஒன்றாக நின்றோம். அம்மாவின் துயரங்கள் ஒவ்வொரு வரது மனதில் இருந்தாலும் அக்கா அம்மாவைப் போல் எங்கள் நால்வரையும் கவனித்துக் கொண் டது மனதை கொஞ்சம் ஆற வைத் தது. கீர்த்தியண்ணன் சொல்லுவார் "அம்மா போனதை நம்ப முடியவில்லை. இன்னும் அவ இங்கே நடமாடுகிறா என்ற எண்ணம்தான் இருக்கு" என்று. அம்மாவின் இறுதிக்காலங்களில் அக்காவுக்கு அடுத்ததாக அவர்தான் அம்மாவுடன் அதிகமாக இருந்தவர். அவர் அதிகம் கவலைப் பட்டது அவரின் பேச்சுக்களில் தெரிந்தது. இயற்கையில் சிறிய விசயத்துக்கே அதிக உணர்ச்சி காட்டுவதில் எங்களில் அவர் முதன்மையானவர்.
இந்த நேரத்தில்தான் அவரது சிறுகதைக்கு பரிசு கிடைத்திருப்பதாக ஈழத்தில் இருந்து தொலைபேசி வந்தது. துயரமான வேளையில் தனக்கு வந்த மகிழ்ச்சியான செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அம்மாவிற்கான கடமைகள் முடிந்தவுடன் கீர்த்தியண்ணன் தனது வேலையின் நிமித்தம் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட வேண்டியிருந்தது. நாங்கள் மூவரும் இன்னும் ஓரிரு வாரங்கள் அக்காவுடன் இருப்பதற்கு முடிவு செய்திருந்தோம். அன்று கீர்த்தியண்ணன் பயணம் செய்யும் நாள். வீட்டில் துயர் விசாரிக்க வருபவர்களை எதிர் கொள்ள அக்காவை வீட்டில் இருக்கும்படி சொல்லிவிட்டு நாங்கள் மூன்று சகோதரர்களும் அவருடன் வெலிங்டன் விமான நிலையத்துக்கு சென்றோம்.

எல்லோருக்கும் இறுக்கமான முகம். போக வந்தவருக்கும் வழி அனுப்ப வந்தவர்களுக்கும் சோகமான சூழ்நிலை. முதலில் மூத்தவர் ராஜாண்ணையை கட்டித் தழுவி விடை பெற்றார். கீர்த்தியண்ணனின் கண்கள் கலங்கி இருந்தது தெரிந்தது. அடுத்ததாக அவரது இளையவன் சீலாண்ணையைக் கட்டித் தழுவினார். "நீ போறதுக்கு முன்னம் அவுஸ்திரேலியா வந்திட்டுத்தானே போறாய். அப்ப நான் உன்னை அங்கை சந்திக்கலாம்" என்றார். அடுத்ததாக என்னை இறுகத் தழுவிக் கொண்டார். "உன்னை நான் இனி எப்ப பார்ப்பேன்" என்ற அவரது வார்த்தைகள் என் காதோரம் ஒலித்தது. "நான் உன்னை வந்து சந்திப்பேன்" உறுதிமொழியை நான் வழங்கினேன் எனது தோள்பட்டையில் ஈரம். அது எனது அண்ணனின் கண்ணீர் எனத் தெரிந்தது. தன்-என் தழுவல்களில் இருந்து விலகி கீர்த்தியண்ணன் விமானநியைலத்துக்குள் நடக்கத் தொடங்கினார். "என்ன இவன் திரும்பி கை ஒண்டும் காட்டாமல் பேசாமல் போறான்" ராஜாண்ணை கேட்டார். எனக்குத் தெரியும் தான் அழுவதை மற்றவர்கள் பார்த்து கலங்கி விடக் கூடாது என்று அவர் எங்களைப் பார்க்கமலே போகிறார் என்று. "கீர்த்தியண்ணன் அழுது கொண்டு போறார் அவர் திரும்பி எங்களைப் பார்க்க மாட்டார்" என்றேன் மூவரும் மேலும் சோகமாக விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.

15.10.2009 அன்று நான் வேலையால் வந்தபோது செய்தி காத்திருந்தது. "கீர்த்தியண்ணனுக்கு சுகமில்லை" என்று. பின்னர் தயங்கித் தயங்கி என் மனைவியிடமிருந்து வந்தது அந்தச் செய்தி. "கீர்த்தியண்ணன் இனி இல்லை" புயலுக்குப் பின் அமைதி என்பார்கள் எங்கள் வாழ்க்கையில் மட்டும் புயலுக்குப் பின் பூகம்பம். அம்மாவின் மறைவையே மறக்க முடியவில்லை. அதற்குள் அண்ணனுமா?

கீர்த்தியண்ணனின் இறுதி வைபவம். நாங்கள் இப்பொழுது நால்வராக நின்றோம். "நான் உன்னை வந்து சந்திப்பேன்" சொன்னபடி நான் சந்திக்க வந்திருந்தேன். "உன்னை நான் இனி எப்ப பார்ப்பேன்" சொன்னவர் என்னைப் பார்க்காமலே கண்களை மூடிப் படுத்திருந்தார்.