Sunday, May 13, 2007

வார்த்தை தவறிவிட்டாய்….

அவரை சாந்தன் அண்ணை என்றே அழைப்பேன். ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் அவர் செய்த செயல் ஒன்று ஊரில் பலரை வியக்க வைத்திருந்தது.

சாந்தன் அண்ணை இளமையான காலத்தில் நண்பர்களுடன் கூத்தடித்திருக்கிறார். கும்மாளம் போட்டிருக்கிறார். சுருக்கமாகச் சொல்வதானால், சாதாரண இளைஞனுக்கு உள்ள அத்தனை சுபாவமும் கொண்டிருந்தார். சாந்தன் அண்ணையின் நெருங்கிய நண்பனான பாலா சிங்களப் பகுதி ஒன்றில் அரச உத்தயோகத்தில் இருந்தார். ஒருநாள் ஒரு சிங்களப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தார். அவளை திருமணம் செய்வதாகச் சொல்லியே பாலா ஊருக்கு அழைத்து வந்திருந்தார். ஆனால் நடந்ததோ வேறு. அவளை நண்பர்களுக்கு விருந்து வைத்து விட்டு ஊருக்குத் திருப்பி அனுப்புவதே. அதாவது காரியமானதும் துரத்தி விடுவதே அவரது நோக்கமாக இருந்தது. அன்று தடல் புடலான பார்ட்டி. கருஞ் சாராயம் குடித்து நண்பர்கள் வட்டம் போதை ஏற்றிக் கொண்டிருந்து. சாந்தன் அண்ணையும் அந்த வட்டத்தில் இருந்தார் மதுவுடன் ஐக்கியமாகி இருந்தார். நண்பர்கள் ஒவ்வொருவராக அந்த வீட்டின் மூலையில் இருந்த அறைக்குள் போய் வந்து கொண்டிருந்தனர். அதற்குள்தான் அந்த சிங்களப் பெண் இருந்தாள்.

சாந்தன் அண்ணையின் முறை வந்தது, போதையுடன் அறைக்குள் நுளைந்தார். ஆசையுடன் நுளைந்தவருக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சிங்களப் பெண் இவரது காலைக் கட்டிப் பிடித்துக் கதறத் தொடங்கி விட்டாள். வந்தவர்கள் எல்லோரது காலையும் பிடித்துக் கெஞ்சிப் பார்த்தேன் ஒருவரும் இரங்கவில்லை. நீங்களாவது உதவி செய்யுங்கள் உங்கள் நண்பர் திருமணம் செய்வதாகக் கூட்டி வந்து என்னை சீரழித்து விட்டார். தனக்கு இனி வாழ்வே இல்லை என அழத் தொடங்கி விட்டாள். சாந்தன் அண்ணையின் போதை இறங்கி தனது நண்பன் பாலா செய்த கொடுமை விளங்கியது. அறையை விட்டு வெளியே வந்தார். பாலாவைப் பார்த்து அர்ச்சனை செய்யத் தொடங்கினார். ஆனால் ருசி கண்ட மற்றைய நண்பர்களோ பாலாவின் பக்கமே நின்றார்கள். எதுவுமே தனியாளான தன்னால் முடியாது என்று தெரிந்து கொண்ட சாந்தன் அண்ணை, அந்த அறையின் வாசலை மறைத்த படி நின்று இறுதி அறிவிப்பை அங்கே சொன்னார். இனி யாரும் இவளைத் தொடக் கூடாது. ஏனென்றால் இனி இவள் என்ரை பெண்சாதி. ஓம் நான் இவளைக் கலியாணம் கட்டி இவளுக்கு வாழ்வு குடுக்கப் போறன். நீங்கள் யாருமே சினேகிதன் என்று சொல்லி இனி என்னட்டை வரக் கூடாது.

அதன் பின்னர் ஊரில் உள்ள சிறிய நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு கிடைக்கும் சம்பளத்தில் அவளுடன் சேர்ந்து குடும்பம் நடத்தத் தொடங்கினார். கதைகள் மெல்ல மெல்லக் கசிந்த போது யாருமே சாந்தன் அண்ணையைப் பற்றியோ அந்த சிங்களப் பெண்ணைப் பற்றியோ கேவலமாகக் கதைக்க வில்லை. அவர்களது வாழ்க்கையும் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது, அதுவும் நீண்ட காலத்துக்கு அல்ல. அவர் வேலை செய்த நிறுவனத்தை ஒரு நாள் நட்டம் என்று பூட்டி விட்டார்கள். தெரிந்த தொழில்கள் சில செய்து பார்த்தார். எதுவுமே சரிப்பட்டு வராததால், முகவர் ஒருவரின் உதவியால் சவூதியில் கட்டிட வேலை கிடைத்து இரண்டு வருட ஒப்பந்தத்தில் சவூதிக்குப் பயணமானார்.

எனது நண்பன் ஒருவன் சினிமா தியேட்டர் வைத்திருந்தான். அவனது தியேட்டருக்கு என்றால் நான் இரண்டாவது ஆட்டத்திற்கே சினிமா பார்க்கப் போவதுண்டு. அன்றும் அப்படித்தான் போயிருந்தேன். தியேட்டரில் அதிக மக்களில்லை. இலவச அனுமதி அதுவும் முதல் வகுப்பில், ஆறுதலாக அமர்ந்து படத்தில் லயித்திருந்தேன். சிறிது நேரத்தில் புரிந்து கொண்டேன் எனது இருக்கைக்கு சற்றுத் தள்ளியும் ஒரு சினிமா நடந்து கொண்டிருக்கிறது என்று. இடைவேளை வரை காத்திருந்து விளக்குகள் போட்டதும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தேன். மனது வலித்தது என்பார்களே அதை அன்று உணர்ந்தேன்.

ஒரு பெண்ணின் வாழ்வு சிதையக் கூடாது என்று எவளுக்கு சாந்தன் அண்ணை அன்று வாழ்வு கொடுத்தாரோ அவள் இன்று எங்கள் ஊர் காவல் நிலையத்தில் கடமையாற்றும் ஒரு சிங்களப் பொலிசின் தோளில் சாய்ந்திருந்தாள். இடைவேளைக்கு நண்பன் சோடாவுடன் வந்தான். என்ன இது என்று கேட்டேன். கனகாலம் இது நடக்குது என்று சொன்னான்.

சாந்தன் அண்ணையை நினைத்துப் பார்த்தேன். பாவம் அவர். தான் வாழ்வு கொடுத்தவள் கலங்கக் கூடாது என்றும் தனது மகளும் மகனும் நன்றாக வாழ வேண்டும் என்று சவூதியில் கஸ்ரப் பட்டு வேலை செய்து கொண்டிருப்பார். இவளுக்காக தன்னை வருத்தி தனது வாழ்வை கரைத்துக் கொண்டிருப்பார்.

தியாகங்கள் கூட சிலவேளைகளில சிலருக்கு சரியாகப் புரிவதில்லை.