Sunday, February 08, 2009

குளத்திலை குளிச்சு சாமி கும்பிடனும்

வீட்டில் ஏதாவது ஒரு புது விடயம் நடை பெறுவதற்கு முன்னால், ஒரு தடவை மண்டலாய் பிள்ளையாரிடம் சென்று வருவது எங்களது குடும்பத்தில்; வழமையாக இருந்தது. எனது தந்தை காலத்தில் மண்டலாய் பிள்ளையார் தரிசனம் வருடந்தோறும் தவறாமல் நடந்து வந்தது. அவரது மறைவுக்குப் பின்னரும் அது தொடர்ந்தது. ஆனால் ஒவ்வொரு வருடமும் என்றில்லாமல் வீட்டில் ஏதாவது விசேசங்கள் நடைபெறும் போது மண்டலாய் பிள்ளையார் தரிசனமும் நடைபெறும்.
அன்றும் அப்படித்தான் எனது அண்ணன் நித்தியகீர்த்தி தனது மேற்படிப்பிற்காக இலண்டன் செல்ல பயணம் ஏற்பாடாகி இருந்தது. அதன் நிமித்தமே அம்மாவின் மண்டலாய் பிள்ளையார் தரிசனத்திற்காக நாங்கள் ஐவரும் அம்மாவுடன் செல்ல வேண்டி இருந்தது. வழமையாக மண்டலாய்க்கான எங்கள் பயணம் காரில்தான் இருக்கும். ஒரு மாற்றத்திற்காக இம்முறை பஸ்ஸில் பயணமாகத் தீPர்மானித்தோம்.மருதங்கேணியைத் தாண்டினால் கடைகள் எதுவும் இல்லை. வனாந்தரமாக இருக்கும். ஒரு குறுகலான பாதையூடாக பஸ் செம்பியன்பற்று வரை செல்லும். அங்கிருந்து கால் நடையாகவே மண்டலாய் செல்ல வேண்டும். இதை எல்லாம் முன்னாலேயே யோசித்து உணவுக்காக தோசை, இடியப்பம் என சிற்றுண்டிகளை காலையில் எழுந்து அம்மாவும், அக்காவும் தயாரித்து விட்டார்கள். வழியில் குடிப்பதற்கு தேனீர் தயாரித்து பிளாஸ்க்கில் ஊற்றி வைத்திருந்தார்கள். எனக்கு சிற்றுண்டிகளை எல்லாம் ஒழுங்காக ஓலைப் பெட்டிகளுக்குள் வைத்து அவற்றை ஒரு காட்போட் பெட்டிக்குள் அடுக்கி கட்டி வைக்கும் வேலை கிடைத்தது. மாற்று உடுப்புகள், ஐயருக்கு கொடுக்க வேண்டிய பொருட்கள் அப்படி இப்படி என்று நாலைந்து பைகள் என பயணத்திற்கான பொதிகளையும் ஒவ்வொருவரும் தூக்கக் கூடிய அளவுக்கு தயார் படுத்தி வைத்தேன்.

விடியலில் பஸ் பிடித்து வெய்யில் வருமுன்னர் செம்பியன் பற்று வந்து சேர்ந்தோம். பஸ்ஸால் இறங்கிய பிறகுதான் விபரீதம் புரிந்தது. மண்டலாய்க்குப் போகும் அந்த வெட்டவெளிப் பாதை மழை வெள்ளத்தால் நிறைந்திருந்தது. வெட்டவெளி நிலம் சமதரையாக இல்லை. எங்கே பள்ளம் எங்கே மேடு என்று தெரியாத அளவு முழங்கால் வரை தண்ணீர் இருந்தது. போதாததற்கு தரை வெள்ளைக் களிமண்ணாக இருந்தது. நடக்கும் பொழுது வழுக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. திகைத்து நின்ற எங்களைப் பார்த்து அம்மா சொன்னார் „தண்ணி ஆழம் இல்லை நடப்பம்' சொன்னது மட்டும் அல்லாமல் தண்ணீரில் இறங்கி அவர் நடக்க ஆரம்பித்தார். கோழிக்குப் பின்னால்தானே குஞ்சுகள். கையில் இருந்த பைகள் பெட்டிகளை தலைக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு நாங்களும் தண்ணீருக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். இருப்பதில் பாரம் குறைந்த பெட்டி கீர்த்தியண்ணனின் கையில் இருந்தது. அதற்குள்தான் சிற்றுண்டிகளை வைத்திருந்தேன். எனக்கு முன்னால் கீர்த்தியண்ணன் நடந்து கொண்டிருந்தார்.

அம்மா அடிக்கடி திரும்பிப் பார்த்தபடி முன்னால் நடந்து கொண்டிருந்தார். கீர்த்தியண்ணனுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த ராஜாண்ணை ஒரு இடத்தில் நின்று நிதானமாகச் சொன்னார். „இந்த இடத்தில கடுமையாக வழுக்குது பாத்து கவனமாக வாங்கோ' அவர் சொல்லி முடித்து இரு அடி முன்னால் வைத்திருப்பார். அவருக்குப் பின்னால் வந்த கீர்த்தியண்ணன் கால் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்து விட்டார். சத்தம் கேட்டு எல்லாரும் நின்று பார்த்தார்கள். தண்ணீருக்குள் விழுந்த கீர்த்தியண்ணனின் கை மட்டும் தண்ணீருக்கு மேல் இருந்தது. அதில் பாதுகாப்பாக சிற்றுண்டிகள் அடங்கிய பெட்டி இருந்தது. நான் ஓடிப்போய் பெட்டியை வாங்கிக் கொண்டேன். ராஜாண்ணை வந்து கீர்த்தியண்ணனைத் தூக்கி விட்டார். „பாத்திங்களே நான் விழுந்தாலும் சாப்பாட்டைக் கை விடேல்லை. இப்ப இதுதான் எங்களுக்கு முக்கியமானது' கீர்தியண்ணன் பெருமையாகச் சொன்னார். சாப்பாடு, தண்ணீருடன் போகாமல் இருந்ததில் எல்லோருக்கும் ஆறுதலாக இருந்தது.

நான் இப்பொழுது அம்மாவுடன் சேர்ந்து நடந்து கொண்டிருந்தேன். அம்மா என்னைப் பார்த்துச் சொன்னார். „கோயிலிலை வந்து விழுந்து கும்பிடச் சொன்னால் செய்ய மாட்டான். இங்கை விழுந்து நாமம் பூசிக் கொண்டு பெரிய பக்திமான் மாதிரி உன்ரை கொண்ணன் வாறான் பார். அவனுக்காகத்தானே வாறம். அங்கை போய்க் குளத்திலை குளிச்சு சாமி குப்பிட்டாலும் சரி. இங்கை குளிச்சு நாமம் பூசினாலும் சரி. பிள்ளையார் ஏற்றுக் கொள்வார்" திரும்பிப் பார்த்தேன் உடல் உடை எல்லாம் ஈரமாக அங்கங்கே வெள்ளைக் களிமண் ஒட்டியபடி ஒரு ஆழ்வார் வடிவத்தில் தண்ணீரில் வழுக்கிறதா எனப்பார்த்து கீர்த்தியண்ணன் அவதானமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.