Sunday, May 09, 2010

நான் உன்னைச் சேர்ந்த செல்வம்


'உங்களுக்கு திருமணமாச்சா?'

' இந்தக் கேள்விக்கு எப்பவுமே நான் இல்லையென்றே பதில் சொல்வேன்'

மன்மதலீலை படத்தில் வரும் இந்த உரையாடல் அப்போ நல்ல பிரபல்யம்.

எனது வியாபார நிலையத்தில் எப்பொழுதும் வியாபாரம் ஓகோ என்று இருக்கும்.
எனது கடைக்கு பொருட்கள் வாங்க வரும் கலா ஒருநாள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டுத் துலைத்துவிட்டாள்.

'உங்களுக்கு திருமணமாச்சா?'

நானும் மன்மதலீலை கமல் பாணியில்,
' இந்தக் கேள்விக்கு எப்பவுமே நான் இல்லையென்றெ பதில் சொல்வேன்'
என்று அவளிடம் சொல்லி வைத்தேன்.

இப்பொழுதெல்லாம் கலா கடைக்கு அடிக்கடி பொருட்கள் வாங்க வருவாள். வரும்போது தனக்கு மட்டுமல்லாமல் அயலவர்களுக்கு நண்பர்களுக்கென்று எல்லோருக்கும் சேர்த்து பொருட்கள் வாங்கிப் போவாள்.
வியாபார நிலையத்தில் கூட்டம் அதிகமானால், தான்தான் நிலையத்தின் உரிமையாளர் போல் வந்திருப்பவர்களுக்கு வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிடுவாள். இதனால் அங்கு வேலை செய்யும் எல்லோருக்கும் அவளைப் பிடித்துப் போயிற்று.

ஒரு திருமணவிழாவிற்குப் போக வேண்டும். எனது மனைவியை மகனை அழைத்துக் கொண்டு கடைக்கு வரச் சொல்லியிருந்தேன். அங்கிருந்து குடும்பமாக திருமண விழாவிற்குப் போவதாக தீர்மானித்திருந்தோம். சொன்ன நேரத்துக்கு மனைவி மகனை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். எனது வேலைகள் முடிந்தபாடில்லை. வங்கியில் அன்று பணம் போடுவதுதான் இறுதி வேலையாக இருந்தது. கடையில் அன்று பார்த்து கூட்டம் அதிகம். ஆகவே நானே பணத்தை வங்கியில் போடுவது எனத் தீர்மானித்து பணத்தை எடுத்துக் கொண்டு வங்கிக்கு ஓடினேன்.

வங்கியிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது போல் இருந்தது. வரிசையில் நின்று ஒருவாறாக பணத்தை கணக்கில் வரவு செய்து கொண்டேன்.
அப்பாடா ஒருவழியாக வேலை முடிந்தது. இனி திருமண விழாவிற்குப் போகலாமென்று நினைத்துக் கொண்டு கடைக்;கு வந்தால், எனது மனைவியின் முகம் மாறியிருந்தது. நேரம் போனதால் வந்த எரிச்சலாக்கும் என நினைத்துக் கொண்டேன்.

'இந்தப் பொம்பிளைகளே இப்பிடித்தான் புருசன் படுற பாடு இவையளுக்கு எங்கே தெரியப் போகிறது?'
மனதுக்குள் சபித்துக் கொண்டேன்.

'வாங்கோ'

அட யாரது எனது நிலையத்துக்குள்ளே என்னையே வரவேற்பது? ஆச்சரியத்துடன் உள்ளே நோட்டம் விட்டால்.. அங்கே கலா.

'அப்ப உங்களுக்கு இன்னும் கலியாணமே ஆகேல்லை...? '

'இந்தக் கேள்விக்கு எப்பவுமே ... ' வந்த வார்த்தை விபரீதத்தை அறிந்து அப்பிடியே நின்று விட்டது.

சிலவினாடி மௌனமாக நிற்க வேண்டிய கட்டம். அப்படியே நின்றேன். என்னைக் கடந்து கலா செல்வது தெரிந்தது.

அன்று பார்த்த கலாவை நான் இதுவரை மீண்டும் சந்திக்கவேயில்லை.


அதுக்குப் பிறகு எப்பிடி எனது மனைவியை சமாதானப் படுத்தினேன் என்று நான் இங்கே எழுத விரும்பவில்லை.

அதன்பிறகு யாரும் கேட்காமலேயே சொல்ல ஆரம்பித்து விட்டேன்.
„எனக்கு கலியாணம் எப்போவா ஆச்சு. மூன்று பிள்ளைகள் இருக்கினம்' என்று