Monday, March 24, 2008

நான் யார்? நான் யார்? நீ யார்?

எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் படிப்பு, உணவு மறந்து பார்த்த காலம அது. வருடம் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு எம்.ஜி.ஆர். படங்களே வெளிவந்து கொண்டிருந்த பொழுது, எம்.ஆர். ராதாவின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு 1968ம் வருடம் எம்.ஜி.ரின் எட்டுப் படங்கள் வெளியாகி இருந்தன. ஒரு மாதத்திற்கு ஒரு படம் பார்ப்பதற்கே வீட்டில் அனுமதி இருந்தது. அதனால் அடுத்தடுத்து வந்த எம்.ஜி.ஆர். படங்களைப் பார்க்க முடியாது நான் திக்குமுக்காடிப் போனேன்.

குடியிருந்த கோயில் படம் எனது நகரத்தில் திரையிடப் பட்டிருந்தது. ஆனால் பார்ப்பதற்கான நேரம்தான் சரி வர அமையவில்லை. அந்த மாதத்திற்கான படம் ஒன்று ஏற்கனவே பார்த்தாயிற்று. இனி அடுத்த மாதம்தான் படம் பார்க்க முடியும். அதுவரை தியேட்டரில் இருந்து குடியிருந்த கோயில படத்தை எடுக்கமால் இருக்க வேண்டும். இந்த நிலையில் எனக்கிருந்த ஒரே ஒரு ஆறுதல், இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்தான். அதில் ஒலிபரப்பாகும் குடியிருந்த கோயில் திரை விமர்சனம் மற்றும் திரைப்பாடல்களை கேட்டு, படத்தினைப் பற்றிய கற்பனையில் மூழ்கியிருப்பேன்.

அன்று பண்டிதர் பரந்தாமன் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் எனது அண்ணன் ரி.நித்தியகீர்த்தி (ஏ.ரி.நிதி) எழுதி இயக்கிய மரகத நாட்டு மன்னன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். நாடக ஒத்திகை பார்ப்பதற்கு முன்னர் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்தவேளை வானொலியில் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இருந்து நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற ரி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல் ஒலி பரப்பானது. நான் ஓடிப் போய் வானொலியை கொஞ்சம் சத்தமாக வைத்தேன். பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பண்டிதர் பரந்தாமன் தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டிருந்தார். பாடலை இரசிக்கிறார் என எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பாடல் முடிந்ததும் அவரிடம் இருந்து வந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.


„இந்தப் பாடல் சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு. இதை ஒரு பைத்தியக்காரன்தான் பாடுவான். எம்.ஜி.ஆர். படத்தில் இப்படி ஒரு பாடலா?“ என அவரிம் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்து எனது முகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
அதிர்ஸ்டவசமாக அடுத்த மாதமும் எங்கள் ஊரில் குடியிருந்த கோயில் திரைப் படம் காண்பிக்கப் பட்டுக் கொண்டிருந்ததால் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. படம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து "நான் யார்? நான் யார்? நீ யார்? ..." பாடல் எப்பொழுது வரும் என்ற நினைவே எனக்கு அதிகமாக இருந்தது. பாடலும் வந்தது எனக்குப் பரவசமும் கூடவே வந்தது. வாகன விபத்தில் சிக்கிய எம்.ஜி.ஆர். சித்தம் குழம்பி பாடும் பாடலாக நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.

பைத்தியக்காரத்தனமான பாடல்தான். ஒரு பைத்தியக்காரன் பாடுவதாகத்தான் அந்தப் பாடல் இருக்கிறது என ஓடிப்போய் பண்டிதர் பரந்தாமனிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் சொல்லவில்லை.

இந்த சம்பவத்தை நான் எழுதும் போது சமீபத்தில் வெளிவந்த வம்புச் சண்டை என்ற திரைப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் சத்தியராஜ் மனநிலை குன்றியவராக நடித்திருந்தார். படத்தில் அவர் பாடுவதாக இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார்கள். ஆக பைத்தியக்காரத்தனமாகத் தென்பட்டாலும் சில பாடல்கள் நினைவை விட்டு அகலாதவை.

இந்தப் பாடல் சம்பந்தமாக அதை எழுதிய புலமைப் பித்தன் இப்படிச் சொல்கிறார்.
புலவர் படிப்பு படித்துவிட்டு கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் என்னை சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் எழுதுகிற வாய்ப்பு. யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதிய பாடல்தான் -
நான் யார்? நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவர் யார்- யார்? தாய் யார்? மகன் யார்? தெரியார்; தந்தை என்பார் அவர் யார்- யார்? உறவார்? பகை யார்? உண்மையை உணரார்; உனக்கே நீ யாரோ? வருவார்; இருப்பார்; போவார்; நிலையாய் வாழ்வார் யார் யாரோ?
'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!' என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்கிற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி இது. பட்டினத்தான் கேட்டாலும் இதைத்தான் கேட்பான். பட்டினத்தானும் பைத்தியக்காரனும் ஒன்றுதானே...