Sunday, April 25, 2010

செலவு பத்தணா



பெரியம்மாவின் மகளான லலியக்காவின் திருமணத்துக்கு ராஜாண்ணை தன்னிடம் சேமிப்பில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்து விட்டார். இப்பொழுது கையிருப்பு அவரிடம் இல்லை. ஆனாலும் அவரது வியாபாரம் ஏதோ ஓடிக் கொண்டிருந்தது.

ராஜாண்ணை, ஒருநாள் ஏதோ நினைத்து விட்டு, வீட்டின் பின் பகுதியில் ஒரு கோழிப் பண்ணை போட்டால் என்ன என்று கேட்டார். அவர் கேட்டார் என்றால், அது உடனே அமுலாக்கப் பட்டு விடும். கோழிப் பண்ணையும் அவர் விருப்பப் படியே ஏற்பாடானது. எனது அறிவுக்கு ஏற்றபடி கோழிக் கூடுகளை இரண்டு அடுக்குகளில் தயார் படுத்தி, கீழ், மேல் தட்டுகளில் உமி பரப்பி கோழிகளை, அம்மாவும், அக்காவும், நானுமாக சேர்ந்து குடியேற்றினோம்.

கோழிகள் வளர்ந்து முட்டைகள் போட்டு, கோழிப் பண்ணை ஓகோ என்று போய்க் கொண்டிருந்தது. எனக்குத்தான் அதிகளவு அவற்றைப் பராமரிக்க முடியாமல் போயிற்று. காரணம் எனது வயது அப்படி. படிப்பு முடிந்தால் நண்பர்களுடன் ஊர் சுற்ற வேண்டும் என்ற நினைப்பு. பிறகு எப்படி பண்ணையைப் பராமரிக்க, அம்மா, அக்காவிற்கு உதவி செய்ய நேரம் இருக்கிறது? இதனால் அவர்கள் இருவருக்கும் வீட்டு வேலைகளோடு இந்த வேலையும் சேர்ந்து கொண்டது. ஆனாலும் இருவரும் ஏதும் சொல்லவில்லை.

க.பொ
.த. பரீட்சையில் நான் சித்தி அடைந்த போது வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ராஜாண்ணை ஒரு படி மேலே போய் கோழிகளுக்கு குளுக்கோஸ் கலந்து தண்ணீர் கொடுத்தார். எனது மேற்படிப்பு ஆரம்பமாகத் தொடங்கிய போது, கோழிப் பண்ணையை அம்மாவும், அக்காவும் பார்த்துக் கொள்வது சிரமமானது என ராஜாண்ணை கணக்குப் போட்டுக் கொண்டார். அப்பொழுது வியாபாரத்தில் அவர் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து விட்டதால், கோழிப் பண்ணையை கைவிட்டு விடலாம் என்ற நிலைக்கு வந்தார்.

பண்ணையில் இருந்த கோழிகளை அப்படியே வாங்கிக் கொள்வதாக காளை என்கிற கதிர்காமலிங்கம் முன்வந்தார். கொள்வனவுக்கான பணத்தை தவணை முறையில் தருவதாக அவர் சொல்லி, கோழிகளை அட்டைப் பெட்டிகளில் வைத்து அள்ளிக் கொண்டு போனார். அம்மா கேட்டார், 'கோழிகளைக் கொண்டு போறான். காசு தருவானா?' என்று. அம்மாவின் சந்தேகம் எனக்கும் இருந்தது. ஆனாலும் பண்ணையைக் கைவிடுவது நல்லது என்ற எண்ணமே அப்பொழுது எங்களுக்குள் மேலோங்கி இருந்ததால் பணத்தைப் பின்னாடி வாங்கிக் கொள்ளலாம் என்ற சிறிய நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையும் பின்னாளில் பொய்த்துப் போனது. தவணை முறையில் பணம் தருவதாகச் சொன்ன கதிர்காமலிங்கம் பணத்துக்கு தவணை சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர பணம் வந்த பாடில்லை. ஊரில் சொன்னார்கள் „காளை வீட்டிலை இப்ப ஒவ்வொரு நாளும் கோழிக் கறி' என்று. அம்மாவிடம் இந்த விசயத்தைச் சொன்னேன். அம்மா சிரித்துக் கொண்டே சொன்னார், 'கோழிப் பண்ணையால் நட்டம் என்று எழுதி வை'