Wednesday, June 11, 2008

அம்மா சொன்ன வழி

அங்கொன்று இங்கொன்றாக போராளிகள் தாக்குதல்களைத் தொடங்கிய கால கட்டம் அது. எங்காவது ஒரு தாக்குதல் நடந்தால் உடனடியாக இராணுவம் அந்த இடத்தை சுற்றி வளைக்கும். வீடு வீடாகச் சென்று இளைஞர்களை இழுத்து வந்து வெயிலில் காய வைக்கும். பலரை இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லும். இவ்வாறான இந்தக் கொடுமைகளில் இருந்து தப்புவதற்கு, எங்காவது தாக்குதல் நடந்தால் ஒழுங்கைகள் ஊடாக சைக்கிளில் இளையோர் கூட்டம் அடுத்த நகரங்களை நோக்கி பறந்து விடும்.
இப்படியான ஒரு காலகட்டத்தில் நான் வீட்டில் நின்றிருந்தேன். எனது நகரத்துக்கு அயல் கிராமத்தில் அன்று போராளிகள் வைத்த குண்டு வெடித்து சில இராணுவம் சிதறிப் போயிருந்தது. அதனால் நகரம் முழுதும் இராணுவ நடமாட்டம். வியாபார நிலையங்கள் எல்லாம் பூட்டி இருந்தன. பாடசாலை நடக்கவில்லை. ஆலயங்களில் சாமிகளைத் தனியே விட்டு பூட்டி விட்டு பூசாரிகளும் ஓடி விட்டிருந்தார்கள்.
அன்று எனது அம்மாவுக்கு காய்ச்சல் கண்டு இருந்தது. அது மாலையில் அதிகமாகி விட்டது. கண்டிப்பாக அம்மாவை டொக்டரிடம் கூட்டிக் கொண்டு போக வேண்டிய நிலைமை. காரில் பிராதன வீதியால் போவதென்றால் இராணுவத்தை சந்தித்தாக வேண்டும். உள் ஒழுங்கைகளால் காரில் போனால், அதன் சத்தம் இராணுவத்தை ஒழுங்கைகளுக்கு அழைத்து வந்து விடும். இந்த சிக்கல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் ஒன்றில் ஒழுங்கைகளால் நடந்து போக வேண்டும் அல்லது சைக்கிளில் போக வேண்டும். அம்மாவிடம் நிலைமையை விளக்கிச் சொன்னேன். அவ்வளவு தூரம் நடப்பது சாத்தியம் இல்லை. ஆகவே சைக்கிளில் தன்னை வைத்து ஏற்றிச் செல்லும்படி அம்மா சொன்னார்.
"சைக்கிளில் சரியாக இருப்பீங்களா?" என்று கேட்டேன். முன்னே பின்னே சைக்கிளில் சவாரி செய்யாதவர் அவர். ஆதலினால்தான் அப்படிக் கேட்டேன்.
"ஓம்" "என்றார்.
இந்த நேரத்தில் டொக்டர் முருகானந்தத்தின் தனியார் வைத்தியசாலையில் ஆட்கள் அதிகமாக இருக்க மாட்டார்கள். ஆகவே உடனடியாக அம்மாவை பரிசோதிக்கச் செய்து மருந்து வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
அம்மாவை முன்னுக்கு இருத்தி சைக்கிளை மெதுவாக ஓடத் தொடங்கினேன். ஒழுங்கையில் மழை வெள்ளங்கள் இழுத்து வந்த மணல் அதிகம் இருந்ததால் ஓடும்போது சைக்கிளில் தள்ளாட்டம் தெரிந்தது. ஆனாலும் பயப்படாமல் அம்மா இருந்தார். தன்னை விழுத்த மாட்டேன் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. மெதுவாக விசுவகுல ஒழுங்கையால் பிரதான வீதிக்கு வந்து வீதியின் அருகில் இருக்கும் டொக்டர் முருகானந்தத்தின் வைத்தியசாலையை வந்தடைந்தேன். என்ன ஆச்சரியம் அவரது வைத்திய நிலையம் நோயாளர்களால் நிறைந்திருந்தது. என்னைப் போல் பலர் உள் ஒழுங்கைகளால் வந்து சேர்ந்திருந்திருந்தார்கள் என்பதை அங்கிருந்த சைக்கிள்களைப் பார்த்ததும் புரிந்து கொண்டேன். இதில் இன்னும் ஒரு விபரீதம் நிகழ வாய்ப்பிருந்ததை மனது மெதுவாக சொல்லியது. தற்செயலாக இராணுவ வாகனம் இந்தப் பாதையால் போகும் பொழுது இவ்வளவு சைக்கிள்களைப் பார்த்து விட்டு சும்மா போகாது. ஏதாவது நடந்தால் ஓட முடியாது. அம்மாவை விட்டு விட்டு எப்படி ஓடுவது?
எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ என்ற சிந்தனையுடன் வைத்திய நிலையத்துக்குள் நுளைந்தேன். அங்கே நோயாளர்களை ஒவ்வொருவராக மனோராணி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் என்ன என்பது போல் விழியை உயர்த்தி சாடையால் வினாவினாள். நான் அம்மாவைக் காட்டினேன். வாங்கோ அம்மா என்று அன்பாக அழைத்து வைத்தியரிடம் அனுப்பி வைத்தாள். வைத்தியரும் நாளைக்கு சுகமாகி விடும் என்று அன்பாகப் பேசி ஒரு ஊசியை அம்மாவுக்கு போட்டு விட்டார். இயற்கையில் ஊசி போடுவது என்றால் அம்மாவுக்குப் பயம் ஆனாலும் அன்று எதுவித எதிர்ப்பும் காட்டாமல் போட்டுக் கொண்டார். வெளியே வந்து வைத்தியருக்கான செலவைச் செலுத்தி விட்டுப் பார்த்தால், "நாங்கள் முன்னுக்கு வந்தனாங்கள். எப்பிடி இப்ப வந்த அவையளை நீங்கள் உள்ளை அனுப்பலாம்" என்று மனோராணியுடன் சிலர் வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். அவளும் ஏதோ சமாதானம் சொல்லிக் கொண்டு எங்களைப் பார்த்து புன்னகைத்து விடை கொடுத்தாள்.
சைக்கிளில் அம்மாவை இருத்தி வீடு நோக்கி மெதுவாக ஓடிக் கொண்டருந்தேன். அம்மா மௌனமாக இருந்தார்.
"என்ன பேசாமல் இருக்கிறீங்கள் போட்ட ஊசி நோகுதோ? "
"ஊசி நோகுதோ இல்லையோ நீ அப்பிடிச் செய்திருக்கக் கூடாது." எனக்கு எதைப் பற்றி அம்மா கதைக்கிறார் என்று விளங்கவில்லை. அம்மாவே தொடர்ந்தார். "அவ்வளவு சனம் இருக்கக்கை நீ என்னெண்டு உன்ரை அம்மாவை மட்டும் உடனடியாகக் காட்ட முடிஞ்சுது. "
"அந்தப் பிள்ளையை எனக்குத் தெரியும். "
"உனக்கு அந்தப் பிள்ளையைத் தெரியும் எண்டாப் போலை மற்றையவையளைப் பற்றி நீ சிந்திக்கேல்லை. உன்ரை அலுவல் முடிஞ்சால் சரி. உன்ரை அம்மாவைப் போலை எத்தனை பேர் அங்கை இருந்திருப்பினம். அதுகளுக்கு என்ன அவசரம் இருந்திச்சோ? திரும்ப வரக்கை பாத்தனியே? அந்தப் பிள்ளையை சனங்கள் பேசிக் கொண்டிருக்கிறதை. இனிமேல் பட்டு உனக்குத் தெரிஞ்ச ஆக்களெண்டோ இல்லாட்டில் உன்ரை செல்வாக்கைப் பயன் படுத்தியோ உன்ரை அலுவலைப் பாக்கிறதை நிப்பாட்டிப் போட்டு, சரியான வழியிலை போ. "
அம்மாவின் வார்த்தைகள் எனக்கு ஊசியால் குத்துவது போல இருந்தது. அம்மாவுக்கு காய்ச்சலுக்குப் போட்ட ஊசியை விட அம்மா எனக்குப் போட்ட ஊசி நன்றாக வேலை செய்யத் தொடங்கியது. எத்தனையோ பெரியவர்களை, அரசியல்வாதிகளை, அறிஞர்களை சந்தித்திருக்கிறேன். அனாலும் எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என்று எந்த அலுவல்களையும் இன்றுவரை நான் யாரையும் கொண்டு செய்விப்பதும் இல்லை. செய்வதும் இல்லை, சிபாரிசுகளுக்குப் போனதும் இல்லை.