Sunday, April 18, 2010

இது காதலினால்தான்

அவள் என் வாழ்வின் பதின்மத்தில் சந்தித்துக் கொண்டவள். என் உள்ளத்தில் புகுந்து காதல் என்னும் கதவை முதல் முதலாகத் திறந்து மலர் தூவிச் சென்றவள். அவள் பெயர் மேரி (அவள் வாழ்வின் நலம் கருதி, அவளது பெயரை இங்கே சிறியதாக்கி இருக்கிறேன்)

அவள் கிறிஸ்தவம். நான் இந்து. நாங்கள் இருவரும் மதங்களைப் பார்க்கவில்லை. ஆனால் அவள் பகுதியில் இருந்து அதைப் பார்த்தார்கள். அதுவும் அவள் சமயம் சார்ந்த பகுதியில் தாங்கள்தான் எல்லாம் என்றவர்களால் அது பார்க்கப் பட்டது. எனது நண்பர்களாக தேவதாஸ், தேவன், ரஞ்சன், றோய், யூலியன், பொன்ராசா எனப் பலர் கிறிஸ்தவர்களாக இருந்தும், இந்த விடயத்தில் அவர்கள் யாவரும் என்னை விட்டுத் தூரவே நின்று கொண்டார்கள். போர்க்களத்தில் தனித்து விடப்பட்ட அபிமன்யுவாக, காதல் களத்தில் நான் போராட வேண்டியதாக இருந்தது. போரில் அபிமன்யுவுக்கு ஏற்பட்ட முடிவே என் காதலுக்கும் ஏற்பட்டது.

அப்பொழுது பாடசாலை செல்வதற்கு முன்னால், காலையில் வீதியில் நண்பர்களாக ஒன்று கூடிக் கதைத்து விட்டே செல்வோம். அவ்வாறான பொழுதிலேயே, என்னைக் கடந்து போன காரில் இருந்து என்னை யாரோ பார்ப்பது போன்ற பிரமை. யார் என்று அறியுமுன் கார் போய் விட்டது. அடுத்தடுத்த நாட்களும் இது போன்ற நிகழ்வு. நண்பர்களிடம் விசயத்தைச் சொன்னேன். காத்திருந்து பார்த்தோம். அவர்கள்தான் அடையாளம் சொன்னார்கள். குடும்பமாக தலவாக்கொல்லை என்ற இடத்தில் வசித்தவர்கள் இப்பொழுது ஊருக்கு வந்திருக்கிறார்கள், அவள் பெயர் மேரி என்று.

தொடர்ந்து அவளது பார்வை எனக்கு காலையில் கிடைத்துக் கொண்டிருந்தது. அவள் வீடு ஒரு குச்சு ஒழுங்கைக்குள் இருந்தது. ஆதலால் அவள் தனது வீட்டில் இருந்து நடந்து வந்து இராசக்கோன் வீட்டின் உள்ளே நிற்பாள். வாடகைக்கார் வந்ததும் ஏறிப் போவாள். அவள் என்னைப் பார்க்கிறாள், சிரிக்கிறாள் என்ற விடயம் மெதுவாக ஊருக்குள் வெளியே வர, அவளுக்கான பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாகிப் போனது. இதில் அதிகம் தீவிரமாக நின்றவர், தேவதாஸின் அண்ணனான கிறிஸ்தோபர். என்னைக் கண்டால் அவருக்கு ஆகாது. அவருடன் மல்லுக் கட்ட எனக்கு வயது போதாது. ஆகவே அடக்கி வாசிக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். தாயுடன் தேவலாயத்துக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் போகும் போதும், காலயில் பாடசாலைக்குப் போகும் போதும் விழிகளாலும், புன்முறுவல்களாலும் மட்டும் பேசிக் கொண்டோம்.

க.பொ.த. பரீட்சை முடிவு வந்த அன்று மதியம் பாடசாலையில் பரீட்சை முடிவைப் பார்த்து விட்டு அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். நான் மதிய இடைவேளைக்கு கல்லூரியில் இருந்து வந்து கொண்டிருந்தேன். அன்றுதான் அவளுடன் கதைக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. பரீட்சை முடிவைச் சொன்னாள். தொடர்ந்து படிக்க வாய்ப்பு இருக்குமா எனத் தெரியவில்லை என்றாள். ஏதேதோ கதைத்தோம். தூரத்தில் அவளது சிறிய தகப்பன் வேதநாயகம் வந்து கொண்டிருந்தார். மேரி படபடக்கத் தொடங்கினாள். „போ' என்று வழியனுப்பி விட்டு சைக்கிளில் ஏறி, திரும்பி வந்த வழியே போனேன்.

அவள் எதிர்பார்த்ததே நடந்தது. அவள் தொடர்ந்து படிக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இப்பொழுது தேவலாயத்துக்கு அவள் வந்தால்தான் பர்க்க முடியும் என்ற நிலை ஆகிப் போனது. சுற்றிவர தாய், சகோதர சகோதரிகள் உறவுகள் எனப் பலருக்கு நடுவில் ஞாயிறுகளில் சந்திரனாக அவள் வருவாள். அவள் என்னைப் பாக்கிறாளா? சிரிக்கிறாளா? என்று நோட்டம் விட்டுக் கொண்டே அவள் கூட வருபவர்கள் வருவார்கள். ஆனாலும் என்னைக் கண்டவுடன் அவள் முகம் மலர்ந்திருக்கும். ஒரே ஒரு பார்வை மட்டும் வீசி விட்டு போய் விடுவாள்.

ஒருநாள் கிறிஸ்தோபருடன் எனக்கு நேருக்கு நேர் மோத வேண்டியதாகப் போயிற்று. அவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எனது புதிய நண்பர்கள் இருவர் என்னுடன் நின்று கொண்டிருந்தார்கள். இன்று கிறிஸ்தோபரைக் கேட்டு விடுவது என அவரை வழி மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டேன். என்னுடைய புதிய நண்பர்களைப் பார்த்து கிறிஸ்தோபர் கொஞ்சம் பயம் கொண்டிருந்தது எனக்கு விளங்கியது. அவரும் சாதுரியமாக எனது பேச்சுக்குப் பதில் சொல்லிக் கொண்டே மோட்டார் சைக்கிளை எனது வீட்டுப் பக்கம் திருப்பிக் கொண்டு போய் விட்டார். போனவர் எனது மூத்தவர் ராஜாண்ணைக்கு என்னைப் பற்றி போட்டுக் கொடுத்து விட்டார். விளைவு பெரிய தண்டனையாகப் போய் விட்டது.

„நீ இஞ்சை இருந்து படிச்சது போதும். கொழும்புக்குப் போ. அங்கையிருந்து படி.' என்று சொல்லி, பெட்டி படுக்கைகளைக் கட்டி என்னைக் கொழும்புக்கு போகச் சொல்லி விட்டார். என்னால் மறு பேச்சுப் பேசவோ, எனது பக்க நியாயங்களைச் சொல்லவோ முடியாத நிலை. கொழும்புக்குப் பயணமானேன்.

அங்கே படித்துக் கொண்டிருக்கும் போது, ஊரில் இருந்து தேவனின் கடிதம் வந்தது. மேரிக்கும் அவளது முறைப் பையனுக்கும் கலியாணம் முடிந்து விட்டது. அவள் அவளது கணவனுடன் அவனது ஊருக்குப் போய் விட்டாள் என்று. கடித்ததைப் படித்து விட்டு மடித்து வைத்தேன் கூடவே மேரியின் காதலின் பக்கத்தையும் மூடி வைத்தேன்.

சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து எனது வியாபார நிலையத்தில் இருந்தேன். ஏதோ ஒரு காந்த அலை என்னை ஊடுருவுவதை அறிந்து நிமிர்ந்து பார்த்தேன் அதே பார்வை வீச்சுடன் மேரி நின்றிருந்தாள். ஒரு கணம் நான் என்னை மறந்திருந்தேன். சுதாகரித்துக் கொண்டு மீண்டும் பார்த்தேன் அவள் பக்கத்தில் அவள் கணவன். அவனை முதன் முதலாக அன்றுதான் சந்திக்கிறேன். வியாபார நிலையத்தில் தில்லையண்ணனும், அப்புத்துரையண்ணனும் ´பிசி ` ஆக இருந்தார்கள். எனவே மேரியையும் அவள் கணவனையும் கவனிக்க வேண்டியது எனது வேலையாகப் போயிற்று. இருக்கையை விட்டு எழுந்து போய் அவர்களை எதிர் கொண்டேன். அவள் கணவன்தான் கதைத்தான். பிள்ளையின் „பீடிங் பொற்றிலுக்கு நிப்பிள் கிடைக்குமா?' எனக் கேட்டான். அது எங்களிடம் இருக்கவில்லை. „இல்லை' என்றேன். ஏமாற்றத்துடன் இருவரும் போனார்கள். வீதியில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் மேரியை பின்னுக்கு இருத்தி அவன் கணவன் அதை ஓட்டிச் சென்றான்.

அன்று அவள் நினைவு மீண்டும் வந்தது. உனது கணவனை எனக்குக் கொண்டு வந்து காட்டுவதற்கும், உனக்கு பிள்ளை இருக்கிறது என்றும் சொல்வதற்கு வந்தாயா? வளமாகத்தான் இருக்கிறேன் என்னை நினைத்து கவலைப் படாதே என்று சொல்ல வந்தாயா? இல்லை நான் எப்படி இருக்கிறேன் என்று அறிய வந்தாயா? கேள்விகளுடன் அன்றைய பொழுது போய் விட்டது, கூடவே அவளது நினைப்பும்.

மீண்டும் இப்பொழுது அவள் வந்தாள். அதே பார்வை அதே புன்னகையுடன், "நலமாக இருக்கிறாயா?" எனக் கேட்டு புன்முறுவல் பூத்தாள். திடுக்கிட்டுப் போனேன். விழித்துப் பார்த்தால் நேரம் அதிகாலை ஒரு மணி. என் கனவில்தான் அவள் வந்திருந்தாள். அதுவும் முப்பத்தியொரு வருடங்களுக்குப் பிறகு. ஏன்? என்னையே கேட்கிறேன். இவ்வளவு காலமும் என்னுள் நீ உறங்கி இருந்தாயா? அல்லது உனக்கு ஏதேனும் தொல்லைகளா? மனது அடித்துக் கொள்கிறது.

No comments: