Thursday, May 20, 2004

மணியக்கா

"மச்சான் இவன் மணி சொல்லுறான்டா... "

இந்த வார்த்தைகளுக்கு எங்களிடம் அன்று வேறு பொருளிருந்தது. அதற்குக் காரணமே மணியக்காதான். ஊரில் எல்லோரும் அவவை மணி என்றுதான் அழைப்பார்கள். நாங்கள் சிறியவர்களானதால் மணியக்கா என்று கூப்பிடுவோம். இந்த மணியக்கா இருக்கிறாவே, அவ வாயைத் திறந்தால் பொய்களாகவே உதிரும். அதனால்தான் நாங்கள் மச்சான் இவன் பொய் சொல்லுறான்டா... என்று சொல்வதற்குப் பதிலாக, பொய்க்கு அடைமொழியாக மணியென்று வைத்து, மச்சான் இவன் மணி சொல்லுறான்டா... என்று சொல்லுவோம்.
மணி என்ற இந்த மணியக்காவை இப்பொழுதும் தோசை சாப்பிடும் போது நான் நினைத்துக் கொள்வேன்.

அப்போ எனக்கு அதிக வயதில்லை. ஒன்பது பத்து வயதுதானிருக்கும்.
மணியக்காவும் அவர் கணவர் மாசிலாமணியும் எங்கள் ஊருக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்கள். மாசிலாமணியண்ணை ஒரு கில்மன் கார் வைத்திருந்தார். காலையிலும் மாலையிலும் பாடசாலைக்கு பிள்ளைகளை காரில் கொண்டு சென்று கூட்டிவருவது அவரது தொழிலாக இருந்தது. இடைப்பட்ட நேரங்களில் வாடகைக்கு அவரது கார் வரும். எங்களது கிராமத்தில் வாடகைக்கான காராக அவரது கார் மட்டுமே இருந்தது. ஆகவே அவர்களது வருமானம் நன்றாகவே இருந்தது.
சில வேளைகளில் இரவு இரண்டாம் காட்சி சினிமாவிற்கு அவரது கார் வாடகைக்குப் போனால் , வீட்டில் மணியக்காவிற்குத் துணையாக நான்தான் அழைக்கப்படுவேன். காரணம் அவர்களுடைய வீட்டுக்கு அடுத்தது எங்களது வீடு.
ஒருநாள் மாசிலாமணியண்ணையின் கார் இரண்டாம் காட்சி சினிமாவிற்கு வாடகைக்குப் போய் விட்டது. மணியக்கா என்னைத் துணைக்கு வந்து இருக்கும்படிக் கேட்டுக் கொண்டா. நான் அவவீட்டிற்குப் போன நேரம் மணியக்கா நல்லெண்ணைத் தோசை, முட்டைத் தோசை, நெய்த் தோசை என விதம் விதமான தோசைகளாகச் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தா. என்னையும் சாப்பிடும்படிக் கேட்டா ஆனால் எனக்குப் பசியில்லாததால் மறுத்துவிட்டேன்.

அன்று இரவு சிறிது நேரம் படித்துவிட்டு நித்திரையாகிவிட்டேன். இடையில் நித்திரை குழம்பிவிட்டது. மாசிலாமணியண்ணையும் மணியக்காவும் சமையலறையில் கதைக்கும் சத்தம் கேட்டது. தண்ணீர் குடிக்க வேண்டும் போல் தோன்றியதால் எழுந்து சமையல் அறைப் பக்கம் போனேன்.
மாசிலாமணியண்ணையின் குரலில் கடுமை தெரிந்தது.

"உமக்கெல்லோ சொன்னனான். என்னைப் பாத்துக் கொண்டிருக்க வேண்டாம். நேரத்துக்குச் சாப்பிடுமெண்டு. நான் போற இடத்திலை எங்கையாவது ஒரு தேத்தண்ணிக் கடையிலை ரண்டு வடையச் சாப்பிட்டிட்டு ஒரு பிளேன் ரீயைக் குடிச்சிட்டு இருப்பன்.
நீர் அப்பா விசர் வேலை பாத்துக் கொண்டிருக்கிறீர். சமைச்சு வைச்சிட்டு என்னத்துக்குப் பாத்துக் கொண்டிருக்கிறீர்? நேரத்துக்குச் சாப்பிடுறதுதானே? அது...அந்த.. புருசன் சாப்பிட்டாப்போலைதான் பெண்சாதி சாப்படோணுமெண்டிறதெல்லாம் இஞ்சை வேண்டாம். நேரத்துக்குச் சாப்பிடும் விளங்கிச்சோ.. சமைச்சுப் போட்டு தான் சாப்பிடாமல் புருசனைப் பாத்துக் கொண்டிருக்கிறாவாம் அவ..
எனக்கு வாற கோவத்துக்கு... "

"என்ன இன்னுமொண்டு நெய் விட்டு முறகலாச் சுடட்டே..?"

இந்தக் கட்டத்தில் நான் சமையலறைக்குள் நுளைந்தேன். மாசிலாமணியண்ணை என்னைக் கண்டவுடன் ,

"என்ன தேவன் நித்திரை வரேல்லையே..? தோசை சாப்பிடன்.. வா.. தண்ணியெடுத்து வாயைக் கொப்புளிச்சிட்டு வா தோசை சாப்படலாம். "என்றார்.

எனக்கு அந்த நேரம் சாப்பிட வேண்டும் போல் தோன்றவில்லை. வேண்டாமென்று சொல்லிவிட்டு தண்ணீர் எடுத்துக் குடித்தேன்.
மாசிலாமணியண்ணை என்னைப் பார்த்துச் சொன்னார்.

"தேவன் பாத்தியே மணியக்காவை. தோசைக்கு மாவைக் கரைச்சு வைச்சிட்டு தோசையைச் சுட்டுச் சாப்பிடாமல் நான் வருமட்டும் பாத்துக் கொண்டிருக்கிறாவாம்.. நான் சாமத்திலை வருவன் . ஏதாவது பெரிய ஓட்டம் வந்தால் அடுத்தநாள்தான் வருவன். அப்ப நான் வருமட்டும் சாப்பிடாமலிருக்கிறதே? இவவை என்ன செய்யலாம் சொல்லு. "

நான் திரும்பி மணியக்காவைப் பார்த்தேன். அவவின் தலை ஓரளவு குனிந்திருந்தது. விழிமட்டும் மேலெழுந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. வாய்க்குள் வைத்த தோசையில் பாதி வெளியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
அவவின் பார்வை,
டேய்... நான் ஏற்கனவே சாப்பிட்டதை இப்ப சொன்னியோ... பிறகு என்னட்டை உதை வேண்டுவாய்..
என்று சொல்வதைப் போல் இருந்தது.
கண்ணைக் கசக்கிப் போட்டு மீண்டும் அவவை பார்த்தேன்.

டேய் ... நான் ஏற்கனவே சாப்பிட்டதைச் சொல்லாதையடா.. மனுசன் ஏமாந்து போடும். பாவம்.
என்று அவவின் பார்வை கெஞ்சுவது போல் இருந்தது.
நான் எதுவுமே பேசவில்லை . தண்ணியைக் குடித்துவிட்டு சமையலறையில் இருந்து வெளியே வந்தேன்.

"தேவனுக்கு நல்ல நித்திரைக் கலக்கம் போலை... போய் படுக்கட்டும்.."
மாசிலாமணியண்ணை சொல்வது காதில் விழுந்தது.
மணியக்காவின் பதிபக்தியை மெச்சியபடியே அந்த சாமத்திலும் மாசிலாமணியண்ணை தோசை சுட்டுக் கொண்டிருந்தார்.

அடுத்தநாள் எங்கள் வட்டத்துக்குள் நான் சொல்லக் கொண்டேன்.
"டேய்.. நேற்று ராத்திரி மணியக்கா பெரிய்ய்ய்யயய மணி சொன்னவவடா"

இன்றுகூட எனது கோப்பையில் சுடச்சுட தோசை வந்து விழும்போதெல்லாம் மணியக்கா நினைவில் வந்து போவா.

முல்லை

Tuesday, May 18, 2004

குட்டு

இன்றும்கூட தொலைபேசியில் அண்ணனின் குரலைக் கேட்கும் போது , அந்த நினைவு வந்து போகும்.

அந்த சம்பவம் எனக்கு பதினைந்து வயது இருக்கும்போது நடந்தது. நாற்பது வருடங்களின் பின்னரும் இன்னமும் அந்த சம்பவம் பசுமையாக இருக்கிறது.

அன்று நானும் எனது அண்ணனும் ஒரு உறவினரது வீட்டிற்குப் போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். நேரம் இரவு பத்துமணியைத் தாண்டியிருக்கும்.
எனது அண்ணனுக்கு என்னைவிட ஐந்து வயதுகள்தான் அதிகம். தோற்றத்தில் நல்ல உயரமாகவும், பருமனாகவும் இருப்பார்.
அன்று அவரது காலில் ஏதோ காயம் ஏற்பட்டதால் அவரால் சைக்கிள் ஓட முடியவில்லை. உறவினர் வீட்டில் இருந்து திரும்பும்போது நான்தான் சைக்கிளை ஓட்டிவந்தேன். எனது கால்களுக்கு சைக்கிள் பெடல்கள் எட்டாததால் நான் இருபக்கமும் வளைந்து வளைந்து பெடல்களை மிதிக்க வேண்டியிருந்தது. அது எனக்கு சிரமமாக இருந்தாலும் எனது அண்ணனை முன்னால் வைத்து சைக்கிள் ஓடும்போது எனக்கு ஏகப்பட்ட குசியாக இருந்தது.
உறவினர் வீடும் எங்களது வீடும் ஒன்றரை கிலோமீற்றர் து}ரமேயிருக்கும். பிரதான பாதையூடாகவே நாங்கள் வந்து கொண்டிருந்தோம். வாகனங்கள் ஏதும் வந்தால் எனது அண்ணன் முன்னெச்சரிக்கை தந்து பாதையின் ஓரமாக சைக்கிளை ஓட்டு என்பார்.
ஓரு தடவை அவர் சொன்னார், “முன்னுக்கு வாறது ஜீப் போலை இருக்கு. லைற் மேலையிருக்கு.. „
எனக்கும் பார்க்கும் போது அப்படித்தான் இருந்தது.
“பொலிசாயிருக்கும்... கையை எடு.. நான் இறங்குறன்.. „ அண்ணன் பொலீஸ் என்றதும் எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அதனால் கையையும் காண்டிலில் இருந்து எடுக்கும் எண்ணமும் வரவில்லை.
ஆனால் எனது அண்ணன் எனது கையை காண்டிலில் இருந்து எடுத்துவிட்டு சைக்கிளில் இருந்து இறங்கிவிட்டான். ஆனால் அது நேரம் கடந்துவிட்டது. பொலிஸ் ஜீப் எங்களுக்கு முன்னால் நின்றது. நானும் சைக்கிளில் இருந்து உடனேயே இறங்கிவிட்டேன்.
“ஏய் கிட்ட வா.. „
பொலிஸ் இன்ஸ்பெகடர் ஜீப்பில் இருந்தபடியே கூப்பிட்டான்.
அண்ணன்தான் கிட்டே போனார். நான் போகவில்லை. பொலீஸ் அடிக்கும் என்று பயம்.
“டேய்.. நீ..மல்லன்மாதிரியிருக்கிறது... அந்தப்பொடியனை சைக்கிள் ஓடச் சொல்லுறது..? „
டபிள் போனால், லைற் இல்லாமல் போனால் சைக்கிள் காற்றை எடுத்துவிட்டு நடந்து போகச் சொல்லுவார்கள். இது அன்றைய பொலீஸாரின் எழுதாத சட்டம். கொஞ்சம் ஏடாகூடமான பொலிஸாயிருந்தால் அடிகூட விழும்.
இப்பொழுது எங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்ற பயத்துடன் நான் சற்று எட்டவே நின்று கொண்டேன்.
அண்ணன் தனது காலில் உள்ள காயத்தைக் காட்டி சம்பவத்துக்கான நிலையை விளங்கப்படுத்தினான். போலிஸ் இன்ஸ்பெக்டர் அண்ணனுடைய கதையைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லையோ அல்லது காதில் வாங்கிக் கொள்ளாதமாதிரியோ தெரியவில்லை என்னை நோக்கி வந்தான். அப்படியே சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடிவிடலாமோ என்று ஒரு யோசனை. ஆனால் இன்ஸ்பெக்டihப் பாத்தவுடன் எனக்கு காலிருப்பதே மறந்துவிட்டது.

“நீ தனியவே ஓடுறதுக்கு இது பெரிய சைக்கிள். நீ இன்னுமொரு ஆளை வைச்சு ஓடுறது...? இந்தா இதிலையிருக்கிற கல்லிலை ஏறிநில். „

இன்ஸ்பெக்டரின் தோற்றம் மட்டுமல்ல குரலும் பயத்தைத் தந்தது. வேறுவழி..? பேசாமல் அவன் சொன்னமாதிரியே பாதையின் ஓரத்தில் இருந்த அந்த பெரிய கல்லின் மேல் ஏறி நின்று கொண்டேன்.
அந்தக் காட்சியை கே.பி. சுந்தராம்பாள் பார்த்திருந்தால் பழநியப்பா ஞானப்பழநியப்பா பாடலை இன்னுமொருதடவை பாடியிருப்பார்.

இப்பொழுது எனது அண்ணன் எனதருகே அழைத்து வரப்பட்டு எனக்கு நேரேதிரே நிறுத்தப்பட்டார்.

“டபிள் போறது குத்தம்தானே... அதுக்கு... நீ செஞ்ச குத்தத்துக்கு இவன் உனக்கு பத்துக் குட்டு குட்டுவான். உன்னை... சின்னப் பொடியன் உன்னை... சைக்கிள் ஓடச்சொல்லிட்டு இந்த எருமை முன்னாலை இருந்ததுக்கு நீ இவனுக்கு பத்துக் குட்டு குட்டுறாய். சரி குட்டு. „
என்னைப் பார்த்து இன்ஸ்பெக்டர் இப்படிச் சொன்னவுடன் எனக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. எனக்கு எதிரில் நிற்பது எனது அண்ணன். அவர் எனக்குக் குட்டுவது சரி. நான் இளையவன் எப்படி அவருக்குக் குட்டுவது?

முதல்தடவையாக நான் எனது வாயைத் திறந்தேன்.
“சேர் அவர் என்ரை அண்ணன். „

“சட்டத்துக்கு முன்னாலை அண்ணன் தம்பி எல்லாம் பாக்கிறதில்லை. நீ அவனுக்கு இப்ப பத்துக் குட்டு குட்டுறது. „
இன்ஸ்பெக்டர் குரலால் பயமுறுத்தினான்.

குட்டாமல் விட்டால் இன்ஸ்பெக்டரிட்டை உதை வாங்கணும். குட்டினால் வீட்டை போய் அண்ணனிட்டை உதை வாங்கணும்.

அண்ணன் நிலமையைப் புரிந்து கொண்டு தனக்குக் குட்டும்படி ஜாடை காட்டினான்.
வீட்டிலை பிரச்சினை வந்தால் அம்மா நீதான் காப்பாத்தோணும் அம்மாவை மனதில் நினைத்துக் கொண்டு எனது முதல் குட்டை மெதுவாக மிகமிக மெதுவாக வைத்தேன்.

“அடேங் என்ன செய்யிறது? தலையைத் தடவுறது? குட்டோணும்.. குட்டத் தெரியாது...? குட்டுறது எப்பிடிண்ணு காட்டட்டா„
இன்ஸ்பெக்டர் நெருங்கி வந்தான்.
அண்ணனின் முகத்தைப் பார்த்தேன் அமைதியாக இருந்தார். எனக்கும் வேறு வழி தெரியவில்லை. எனது இரண்டாவது குட்டு வேகமாக.. பலமாக இறங்கியது. இப்பொழுது அண்ணன் முகம் இறுகியிருந்தது. இன்ஸ்பெக்டர் கிறுக்கன் நெருங்கி நிற்கிறான். ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நான். கண்ணை மூடிக்கொண்டேன். எனது மற்றைய குட்டுக்குள் தொடர்ந்து இறங்கி முடிந்தன.
இனி அண்ணன் எனக்குக் குட்டவேண்டிய நேரம். எல்லா கோபத்தையும் சேர்த்து அண்ணனின் குட்டு இறுக்கமாக இருக்கப் போகிறதென்று நினைத்துக் கொண்டேன்.

“சரி... நீ சின்னப் பெடியன்... உனக்கு அவன் குட்டத் தேவையில்லை. நீ இனி டபிள் ஓடக்கூடாது விளங்கிச்சோ..? இப்பிடியே சைக்கிளை எடுத்துக் கொண்டு திரும்பிப் பாக்காமல் வீட்டுக்கு ஓடோணும். ஓடு.. „
என்னைப் பார்த்து இன்ஸ்பெக்டர் சொன்னவுடன் நான் விட்டால் போதும் என்ற நிலையில் இருந்ததால் உடனேயே சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடிவந்து விட்டேன். பாவம் அண்ணன் நடந்து வீட்டுக்குப் போகும்படியான தண்டனை அவருக்கு.
வீட்டுக்கு வந்தவுடன் எனது அம்மாவுக்கு விசயத்தைச் சொல்லிவிட்டு நான் அண்ணன் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஒளித்துக் கொண்டேன். பின்னர் வீடு வந்து அண்ணன் அம்மாவின் சமாதானத்தைக்கூடக் கேட்காமல் என்னை எல்லா இடமும் தேடியும் நான் கிடைக்கவில்லை. அடுத்தநாள் சமாதானமாகிய அண்ணன் என்னைப் பார்த்துக் கேட்டார்

“அவன் இறுக்கிக் குட்டச் கொன்னால் இப்பிடியே குட்டுறது? எனக்கு இன்னும் தலை விண்விண் என்று வலிக்குது. „

இன்றும்கூட தொலைபேசியில் அண்ணனின் குரலைக் கேட்கும் போது , அந்த நினைவு வந்து போகும்.

முல்லை