Saturday, June 12, 2010

விழியே கதை எழுது

யேர்மனிக்கு வந்த ஆரம்ப காலங்களில் இங்கிருந்த மருந்துக் கடைகளைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். அதற்கான படிப்பு, பயிற்சி பெற்று மிக நேர்த்தியாக கடமை ஆற்றுகிறார்கள். மருந்துகளை விற்பது மட்டுமல்லாது அதை உபயோகிக்கும் முறைகளையும் அழகாக சொல்லித் தருகிறார்கள். இந்த நிலை நாட்டில் எனது ஊரில் அன்று தலை கீழாக இருந்தது.

மற்றவர்க்கு புரியாத முறையில் தங்களது மேதாவித் தனத்தைக் காட்டுவதற்கோ அல்லது அதுதான் நடை முறையோ தெரியாது சொல்லி வைத்தது போல் எல்லா வைத்திய நிபுணர்களும் மருந்துகளை சீட்டில் கிறுக்கித் தருவார்கள். அதை மருந்துக் கடைகளில் கொடுக்கும் போது முதல் கடைசி எழுத்துக்களை வைத்து இதுதான் மருந்து என அவர்கள் ஆராய்ந்து, தீர்மானித்து இறுதியாக மருந்துகளைத் தரும் போது அச்சத்துடன் வேண்டிய நாட்களை நினைத்துப் பார்த்திருக்கிறேன். அந்த எண்ண ஓட்டத்தில் எனது நினைவுகளில் வந்து போனது இரண்டு கடைகள். ஒன்று கந்தசாமி (இவர் ரெலோ இயக்கத் தலைவரான சிறி சபாரத்தினத்தின் தமையன்) அவர்களின் சிறிமுருகன் மெடிக்கல் ஸ்ரோர்ஸ். இங்கு ஆரம்பகாலத்தில் தமிழ் மருந்துகளே விற்பனை செய்தார்கள். போராட்ட சூழலில் இந்தக் கடை, அங்கு கடமையாற்றிய தேவராஜாவிடம் கை மாறியதன் பின்னர் ஆங்கில மருந்துகளையும் சேர்த்துக் கொண்டார்கள்.

மற்றைய கடை அன்னை மெடிக்கல் ஸ்ரோர்ஸ். அதன் உரிமையாளர் மார்டின் சூசைதாசன். ஆனால் ரத்தினம் என்று சொன்னால்தான் அவரை எல்லோருக்கும் தெரியும். எனது அண்ணனின் கூட்டாளிகளில் ஒருவர். எனது வியாபார நிலையத்திற்கு சமீபமாகவே அவரது மருந்துக் கடை இருந்தது. அரசியல்வாதியும், சட்டத்தரணியும் ஆகிய ஆர்.ஆர். தர்மரத்தினம் அவர்களுடன் கூட்டாக அந்த மருந்துக் கடையை அவர் நிர்வகித்து வந்தார்.

னது வியாபார நிலையத்தை திறந்து உடனடியாக வியாபாரத்தை ஆரம்பிக்க முடியாது. எனது வியாபார நிலையத்தில் கடமை ஆற்றும் தில்லையண்ணனும், அப்புத்துரை அண்ணனும் நிலையத்தை திறந்து சாமிகளுக்கு தண்ணி காட்டி, காதில் பூ வைத்து மூச்சு விடாத முடியாதபடி புகை போட்டு.... அதன் பின்னரே அன்றைய வியாபாரம் ஆரம்பிக்க உத்தரவு தருவார்கள். ஆனால் அன்னை மெடிக்கல் ஸ்ரோர்ஸ் அதற்காக அதிகம் அலட்டுவதில்லை. திறந்த உடன் வியாபாரம் ஆரம்பிக்கும் நிலை அங்கிருந்தது. எனது நிலையத்தில் இவர்கள் செய்யும் காலைப் பூசையைப் பார்த்து ரத்தினம் அண்ணன் அடிக்கடி கேலி செய்வதுண்டு.

அன்றும் அப்படித்தான் நிலையத்தின் பூசை முடியும் வரை நிலையத்திற்கு வெளியில் நின்றிருந்தேன். அன்னை மெடிக்கல் ஸ்ரோர்ஸில் ரத்தினம் அண்ணனும் இன்னொருவரும் சடுகுடு விளையாடுவது போல் இருந்தது. காலையில் இப்படி ஒரு விளையாட்டா என எனக்கு வியப்பாக இருந்தது. ஆச்சரியத்திலும் எனது வியாபார நிலையத்தில் இருந்து வந்த சாம்பிராணிப் புகையிலும் மூழ்கியிருந்த எனக்கு ரத்தினம் அண்ணன் என்னைப் பார்த்து உரக்கச் சொல்வது கேட்டது. "தம்பி தில்லையம்பலத்தை அனுப்பி கடையைப் பார்க்கச் சொல்லு" சொல்லியபடியே ரத்தினம் அண்ணன் ஓடிக்கொண்டிருந்தார். பின்னால் அந்த இன்னொருவரும் ஓடிக் கொண்டிருந்தார். ஏதோ விபரீதம் என்பதை புரிந்து கொண்டு தில்லையண்ணனை அவரது கடையைப் பார்த்துக் கொள்ளும் படி அனுப்பி வைத்தேன்.

போன தில்லையண்ணன் வர சற்று நேரம் எடுத்தது. வந்ததும் விடயத்தைக் கேட்டேன். "நேற்று ஒருத்தர் வந்து ரத்தினத்திட்டை மருந்து வாங்கி இருக்கிறார். டொக்டர் எழுதிக் குடுத்த மருந்துச் சீட்டு விளங்காத படியால் இது என்னத்துக்கு எண்டு ரத்தினம் கேட்டிருக்கிறான். மருந்து வாங்க வந்தவர் கண்ணுக்கு எண்டு சொல்ல ரத்தினத்துக்கு புண்ணுக்கு எண்டு கேட்டிருக்கு. புண்ணுக்கு பூசிற மருந்தைக் குடுத்திருக்கிறான். வீட்டை போய் போட்டுப் பாத்தாப் போலைதான் வில்லங்கம் தெரிஞ்சிருக்கு." அதுதான் காலமை வெள்ளன வந்து சாமி ஆடியிருக்கிறான். நல்ல வேளை ரத்தினம் பொலிசுக்கு போய் பிறகு தர்மரத்தினம் தலையிட்டு பிரச்சினை முடிஞ்சுது. எவ்வளவு ஆபத்தன முறையில் வியாபாரம் நடந்திருக்கிறது

நான் 2002இல் நாட்டுக்குப் போன பொழுது எனது ஊருக்குப் போக சந்தர்ப்பம் சரி வர அமையவில்லை. ஆயினும் நான் வந்திருப்பதை அறிந்து நான் இருக்கும் இடத்தில் வந்து சந்தித்தவர்களிடம் அந்த இரண்டு மருந்துக் கடைகளைப் பற்றிக் கேட்டேன். அந்த இரண்டு கடைகளும் இன்னமும் இருப்பதாகச் சொன்னார்கள்.