Sunday, March 07, 2010

வெகு பொருத்தமாய் சாப்பாடு



இடியப்பத்துக்கும் தேங்காய்ப்பால் சொதிக்கும் நல்ல கொம்பினேஸன். ஆனாலும் எனக்குப் பிடித்தது என்னவோ இடியப்பத்துக்கு எனது அம்மா ஸ்பெசலாக வைக்கும் புளிக் குழம்பு. அந்தப் புளிக் குழம்பு அதிக உறைப்பும் இல்லாமல் சொதி போலவும் அல்லாமல் ஒரு இடைப்பட்ட நிலையில் ரொம்ப ருசியாக இருக்கும். அம்மா அவித்துத் தரும் அரிசிமா இடியப்பமும் அந்தப் புளிக் குழம்பும் இன்று நினைத்தாலும் ருசிக்கும்.

அன்று எனது அக்கா இந்திராணிக்கும் எனக்கும் ஏதோ ஒரு விடயத்தில் சிறு வாக்குவாதம். வாக்குவாதம் முடியும் போது „மூதேவி' என்று என்னைப் பார்த்து திட்டி விட்டு அக்கா, அம்மாவுடன் இணைந்து சமைப்பதற்கு சமையல் அறைக்குள் சென்று விட்டாள் எனக்கு கோபம் உச்சியில் இருந்தது. மூதேவி என்ற வார்த்தை காதுக்குள் வந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

இரவு சாப்பிடும் நேரம். ராஜாண்ணை வேலையால் வந்து குளித்துக் கொண்டிருந்தார். அவர் குளிக்கப் போகிறார் என்றால் அம்மாவும், அக்காவும் பரபரப்பாகி விடுவார்கள். ராஜாண்ணை குளித்து விட்டு வந்து சாமி கும்பிட்டு வரும் போது சாப்பாடு, மேசையில் சூடாக இருக்க வேண்டும். அதுதான் அவர்களது பரபரப்புக்குக் காரணம். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஆதலால் என்னை அவர்களால் குழப்ப முடியவில்லை. இடியப்பமும்,
புளிக் குழம்பும் சுவையாக இருந்தது. ஆனாலும் அக்கா என்னைப் பார்த்துச் சொன்ன மூதேவி என்ற வார்த்தை காதில் உறைப்பாகவே இருந்தது.

நான் ஒருவாறு சாப்பிட்டு முடிந்து எழுந்து போனதின் பிற்பாடு அக்கா, ராஜாண்ணை சாப்பிடுவதற்காக மேசையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். ராஜாண்ணை இப்பொழுது பூசை அறைக்குள் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். எந்நேரமும் சாப்பாட்டு மேசைக்கு வரலாம் என்ற நிலையில் அக்கா அம்மாவை அழைக்கும் குரல் கேட்டது. நான் வேப்ப மரத்துக் காற்று வாங்கிக் கொண்டு சாப்பிட்டது சமிக்க நடை போட்டுக் கொண்டிருந்தேன்.

„கொஞ்சமாகவே இடியப்பம் அவிச்சனீ?' அம்மா அக்காவைக் கேட்பது எனக்குக் கேட்டது.
மெதுவாக சமையல் அறைப் பக்கமாக நடந்தேன்.

„இரண்;டு சுண்டு மாவிலை அவிச்சனான். இருபத்தியேழு இடியப்பம். நான் எண்ணினனான்'

„அப்ப எங்கை? பூனை வந்து திண்டிட்டுப் போட்டுதே? ராஜா சாமி கும்பிட்டுட்டு வரப்போறான்' அம்மாவின் பேச்சில் பரபரப்பு தெரிந்தது.

„பூனை வந்து சாப்பிடேல்லை. உங்கடை செல்லப் பிள்ளைதான் முழுங்கிட்டுப் போட்டுது'

„அவ்வளத்தையுமோ?' அம்மாவின் பேச்சில் ஆச்சரியம் தெரிந்தது.'சரி குழம்பிருக்கே?'

„சட்டிதான் இருக்கு' அக்காவின் குரல் உடைந்திருந்தது.

„என்ன சாப்பாடு இன்னும் செய்யேல்லையோ?' ராஜாண்ணை சாப்பாட்டு மேசை அருகில் இருந்து கேட்டார்.

„கொஞ்சம் பொறு இடியப்பம் அடுப்பிலை இருக்கு' அம்மா சாதுர்யமாகச் சமாளித்தார்.

அம்மாவும் சரி, அக்காவும் சரி சமையலில் புயல் வேகம் காட்டுவார்கள். அது அன்று மிகப் பெரிய சூறாவளியாக சமையல் அறையில் மாறி இருந்தது. அடுத்த ஐந்தவாது நிமிடம் ராஜாண்ணைக்கான சாப்பாடு தயார்.

நான் வேப்பமரத்தடியில் உலாவிக் கொண்டிருந்தேன். அக்கா அந்த இடத்திற்கு வந்தாள். „எல்லாத்தையும் திண்டிட்டு உலாத்திறியோ? சனியன்.. சனியன்' சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ராஜாண்ணைக்கு கேட்கக் கூடாது என்று மெல்லிய குரலில் அவசரமாக என்னைத் திட்டிவிட்டு வீட்டுக்குள் போய் விட்டாள். எ
னக்கு இப்பொழுது மூதேவியுடன் சனியனும் சேர்ந்திருந்தது.

அடுத்ததாக அம்மா வந்தார். „அவளைப் பழி வாங்கிறதெண்டு கொண்
ணனுக்கு சாப்பாடு வைக்காமல் சாப்பிட்டது நல்லா இல்லை' என்று சொல்லி எனது தவறை சிரித்தபடி உணர்த்தினார்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு சாப்பிடும் பொழுது „யார் இன்னும் சாப்பிட வேணும்' என்று கேட்டு விட்டுத்தான் நான் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன்.