Monday, June 02, 2008

மணிப்புறா


பக்கத்து வீட்டு நக்கீரன் வளர்க்கும் புறாக்களைப் பார்க்க எனக்கும் புறா வளர்க்கும் எண்ணம் மெதுவாக வந்து தொற்றிக் கொண்டது. அழகான மரச் சட்டங்களால் நக்கீரன் புறா கூடு அமைத்திருந்தான். புறாக்கள் கூட்டை விட்டு வெளியே வருவதும், பறப்பதும், அவை உலா வருவதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

அம்மாவிடம் நானும் புறா வளர்க்கப் போகிறேன் என்று ஒருநாள் கேட்டு வைத்தேன். கேட்டவுடனேயே அங்கிருந்து மறுப்பு வந்தது. எனது ஆசையை உடனுக்குடன் நிறை வேற்றி வைக்கும் அவர் அன்று மறுத்தது என்னை மிகுந்த சோகத்தில் தள்ளியது. ஆனாலும் நானும் விடாமல் அவரை நச்சரித்துக் கொண்டிருந்தேன். அம்மா அசைந்து கொடுக்கவே இல்லை. ஆனாலும் என் ஆசை மட்டும் போகவே இல்லை.

படித்த வாலிபர்களுக்கு தொழில் வாய்ப்புத் தருவதற்காக விசுவமடுப் பகுதியில் மூன்று ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்வதற்கு அரசாங்கம் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தது. எனது ஊரைச் சேர்ந்த சோமு என்பவருக்கும் அங்கு நிலம் கிடைத்திருந்தது. சோமண்ணனுடன் ஒருநாள் கதைக்கும் போது எனது புறா வளர்க்கும் ஆசையை சொல்லி வைத்தேன்.

ஒரு மாலை நேரம் ஒரு சோடி மணிப்பறாக்களுடன் சோமண்ணை என்னிடம் வந்தார். எனக்காக அவர் விசுவமடுவில் இருந்து அந்த சோடி மணிப்புறாவை கொண்டு வந்திருந்தார். பார்க்க மிகுந்த அழகாக இருந்தது. நக்கீரன் கூட வந்து ஆச்சரியமாகப் பார்த்துப் போனான். பழக்கம் இல்லாததால் அவற்றை கூண்டுக்குள் வளர்க்கும் படியும், இல்லாவிட்டால் பறந்து போய் விடும் என்றும் சோமண்ணை எச்சரித்திருந்ததால் நான் அவற்றுக்கென கம்பிகளால் செய்த ஒரு கூண்டை வாங்கி அதற்குள் அவற்றை வளர்க்கத் தொடங்கினேன்.

ஒருநாள் பாடசாலை முடிந்து வந்து பார்த்தால் கூண்டு திறந்திருந்தது. மணிப்புறாக்கள் அங்கு இல்லை. நான் கூண்டை பூட்டி விட்டுத்தான் பாடசாலை போனேனா? என்ற சந்தேகம் வந்து விட்டது. பூனை பிடித்து தின்றிருக்குமா? என்ற பயமும் ஏற்பட்டது. அழுகையும், பயமும் சேர அப்படியே தரையில் அமர்ந்து விட்டேன்.

எனது தோளில் குளிர்மையான கை தொட, நிமிர்ந்து பார்த்தேன். தேனீருடன் அம்மா நின்றிருந்தார். எனது அருகில் அமர்ந்து, „உயிர்களை வதைக்கிறது, அவற்றை கூண்டுக்குள்ளை அடைக்கிறது எல்லாம் பாவம். புறவைகள் சுதந்திரமானவை அவைகளைக் கூண்டுக்குள்ளை அடைச்சு பறக்க விடமால் செய்ய நாங்கள் யார்? உனக்கிருக்கிற அண்ணன் அக்கா சொந்த பந்தம் அதுகளுக்கும் இருக்கும் தானே. உன்னைப் பிடிச்சு கூண்டுக்குள்ளை போட்டால் உனக்கு எவ்வளவு கஸ்ரமாக இருக்கும். அதுபோலத்தான் அதுகளுக்கும். கூண்டுக்குள்ளை மணிப்புறா வளர்க்கிறது உனக்கு ஆசையாக இருக்கும். ஆனால் அதுகளுக்கு வேதனையாக இருக்கும். நான்தான் அவைகளை பறக்க விட்டனான்.“ எனது தலையைக் கோதிவிட்டு அம்மா எழுந்து போய் விட்டார்.
அந்த நேரத்தில் எனக்கிருந்த சோகத்தில் அதிகமாக நான் யோசிக்கவில்லை. ஆனாலும் உயிர்களிடத்தில் எனது தாய்க்கு இருந்த பிரியம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இன்றுவரை வீட்டில் எந்தக் கூண்டும் இல்லை. சொல்லிக் கொள்ள செல்லப் பிராணிகள் கூட இல்லை