Showing posts with label அன்பால் விளைந்த பழியம்மா. Show all posts
Showing posts with label அன்பால் விளைந்த பழியம்மா. Show all posts

Thursday, January 07, 2010

அன்பால் விளைந்த பழியம்மா

கபொத உயர்தரம் படித்துக் கொண்டிருந்த நேரமது.

மாலைவேளைகளில் சந்தியில் நிற்கும் பெரியகுட்டி, சின்னக்குட்டி, பாலு ஆகியோரின் பழக்கம் எனக்கு மெதுவாக ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களுடைய வீடுகளும் சந்திக்கு அருகிலேயே அமைந்திருந்தது. ஏறக்குறைய எனது வயதுதான் அவர்களுக்கும். அவர்கள் என்னோடு சேர்ந்து படிக்காவிட்டாலும் ஏதோ ஒரு ஈர்ப்பு என்னை அவர்களுடன் பழக வைத்தது. சந்தியில் நிற்பவர்கள் காவாலிகள் என்ற கருத்து இருந்த நேரம். ஆகவே அவர்களுடனான எனது பழக்கம் பட்டும் படாமலுமே இருந்தது. பாடசாலை மாணவிகளைக் கிண்டலடிப்பதும், ரசிப்பதுவுமே அந்த நேரத்தில் அவர்களது மாலை வேளையின் முக்கிய கடமையாக இருந்தது.
ஒருநாள் எனது மூத்த அண்ணன் ராஜாண்ணை யாழ்ப்பாணம் போவதற்கு பஸ்ஸிற்காக சந்தியில் காத்து நின்றார். யாழ்ப்பாணத்தில் கணக்காளராக வேலை செய்து கொண்டிருந்த சிவஞானசுந்தரம் என்பவரும் பஸ்ஸிற்காக அங்கே காத்துக் கொண்டு நின்றார். அவர் எனது அண்ணனை அணுகி,
"நீ மூர்த்தியற்றை மகன்தானே?" என்று கேட்டிருக்கின்றார்.
அண்ணனும் "ஓம்" என்று பதிலளித்திருக்கிறார். அடுத்து சிவஞானசுந்தரத்தாரின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் எனது அண்ணனை நிச்சயம் புரட்டிப் போட்டிருக்கும்.

"மூர்த்தியர் எவ்வளவு கௌரவமான மனுசன். அவரின்ரை பேரை ஏன் கெடுக்கிறாய்? சந்தியி லை நின்று போறவாற பெட்டைகளோடை சேட்டை விட்டுக் கொண்டு... சீ.. என்ன மானம் கெட்ட செயல்.."

அண்ணனுக்குப் புரிந்திருக்கும். அர்ச்சனை எந்த சாமிக்கு விழ வேண்டும் என்று. யாழ்ப்பாணப் பயணத்தை விட்டு விட்டு வேகமாக வீட்டிற்குத் திரும்பி என்னைத் தேடியிருக்கின்றார். நல்லவேளை அப்பொழுது நான் வீட்டில் இல்லை. பின்னர் அக்கா சொல்லித்தான் எனக்கு அந்த விசயம் தெரியும். போக வேண்டிய பஸ்ஸைத் தவற விட்டு அடுத்த பஸ்ஸில் யாழ்ப்பாணம் சென்று மாலை திரும்பிய ராஜாண்ணையின் கண்ணில் அன்று படாமல் நான் ஒளித்துக் கொண்டேன்.

உச்சி வெய்யில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் எனும் கோயிலை கோபம் மூடுது
காற்றடித்தால் மேகம் கலைந்து ஓடுது
நேரம் போனால் கோபம் மாறி மனது மாறுது

என்று ஒரு பாடல் இருக்கின்றது. ராஜாண்ணையின் மனதும் அதுபோலத்தான் என எனக்குத் தெரியும். அடுத்தநாள் காலையில் என்னைக் கூப்பிட்டு சந்தியில் நிற்காதே படிக்கிற வேலையைப் பார் என அறிவுரை தந்தார்.

ஆனாலும் எனக்கு ஒரு உறுத்தல். சிவஞானசுந்தரத்தாரின் மகள்களை நான் ஏறெடுத்தே பார்த்ததில்லை. இத்தனைக்கும் அவர்களை அழகிகள் என்று பெரிதாகச் சொல்லிக் கொள்ள அவர்களிடம் எதுவுமே இல்லை. எதுக்காக என்னைப் போட்டுக் கொடுத்தார்கள்? நீண்ட காலமாகியும் இந்த ஒரு கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை.