Saturday, July 15, 2006

கிருஸ்ணர் கோவில் பூசை

பத்மநாபன் ஏழாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவரை எனது பள்ளித் தோழனாக இருந்தான். எனது வீட்டுக்கு அருகில்தான் அவனது குடும்பம் வாடகைக்கு குடியிருந்தது. அவனை வீட்டில் முகுந்தன் என்றே அழைப்பார்கள். எங்கள் மத்தியிலும் அவன் முகுந்தனாகவே இருந்தான். ஊரில் உள்ள ஒரு கிருஸ்ணர் கோயிலின் பூசாரியாராக அவனது தந்தையிருந்தார். ஆதலால் அவனது வீட்டில் எல்லோருக்கும் கிருஸ்ணரது நாமங்கள் சூட்டப்பட்டிருந்தன.

முகுந்தனிடம் எந்த ஒரு விடயத்தையும் நுணுக்கமாக ஆராயும் திறன் இருந்ததை நான் அவதானித்தேன். உதாரணத்திற்கு ஒன்று, தில்லானா மோகனாம்பாள் வெளிவந்த நேரமது. அந்தப் படத்தைப் பார்த்து விட்டு அதில் வரும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற பாடலில் வரும், புண்பட்ட சேதியைக் கேட்டவுடன் இந்தப் பெண் பட்ட பாட்டை யார் அறிவார்? என்ற வரிகளைச் சொல்லி "இதில் பிழையிருக்கு ஏனென்றால் நாயகன் புண் பட்டதை நாயகி நேரடியாகவே காண்கிறாள் அப்படியிருக்க எப்படி புண் பட்ட சேதியைக் கேட்டதென்று பாடமுடியும்? புண் பட்டதைப் பார்த்தவுடன் என்றெல்லோ பாடியிருக்க வேண்டும்" என்று வாதாடத் தொடங்கி விட்டான். யோசித்துப் பார்த்தால் எனக்கும் அது சரியாகவே பட்டது. முகுந்தனது ஆழ்ந்து கவனிக்கும் அந்த விடயங்கள் எனக்கு நிறையப் பிடித்திருந்தது. இதன் பின்னர் திரைப் படங்களைப் பார்க்கும் போது நானும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

ஒரு வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வரும்போது முகுந்தன் சொன்னான். "இன்று இரவு கிருஸ்ணர் கோவிலில் விசேட பூசை ஒன்று இருக்குது.. சாமி வடக்கு வீதிக்கு வந்தவுடன் பிரத்தியேகமாக ஒரு நாடகம் மாதிரி நடித்துக் காட்டுவினம். போய்ப் பார். மிக நல்லா இருக்கும்" என்றான். அவன் வாக்கு தப்பாது என எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு கோவிலுக்குப் போய் அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் மெதுவாகத் துளிர்த்தது. "நீ போய்ப் பார்த்து விட்டு திங்கட்கிழமை அதைப் பற்றி எனக்குச் சொல்ல வேண்டும்" என்று அன்புக் கட்டளையையும் தந்து விட்டுப் போனான்.

முகுந்தன் சொன்னதை அம்மாவிற்குச் சொல்ல, "சரி வா" என்று கோயிலுக்குக் கூட்டிப் போனார். கிருஸ்ணரும் வடக்கு வீதிக்கு வந்து விட்டார். சாமியை நிறுத்தி விட்டு ஐயர் பூசையை ஆரம்பித்தார். விசேசம் ஏதாவது நிகழ்கிறதா என சுற்று முற்றும் பார்த்தேன். தீப்பந்தங்களும், அந்த வெளிச்சத்தில் தெரிந்த பக்தர்களும்தான் பரமாத்மாவைச் சுற்றி இருந்தனவே தவிர விசேசங்கள் எதுவும் நிகழ்வதாய்த் தெரியவில்லை. ஐயர் பூசையை முடித்துவிட்டு பக்தர்களைப் பார்த்தார். அது அவரது அனுமதி போலும். திடீரென ஒரு இளைஞர் கூட்டம் என்னை நோக்கிப் பாய்ந்தது. தீப்பந்த வெளிச்சத்தில் சுற்றியிருந்தவர்கள் சிரிப்பது தெரிந்தது. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என நினைத்துக் கொண்டேன். ஓடு.. ஓடு.. என்று மூளை அறிவித்துக் கொண்டிருந்தது. ஓடத் தொடங்கினேன். அந்த வெள்ளை மணலில் ஓடுவது சிரமமாக இருந்தாலும் ஏன் ஓடுகிறேன் என்று தெரியாமல், எங்கே ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று அறியாமல் ஓடிக் கொண்டிருந்தேன். என்னைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் வேட்டி கட்டியிருந்ததால் என்னளவுக்கு அவர்களால் ஓட முடியவில்லை. இருட்டு வேறு எனக்கு உதவியது. நாச்சிமார்களுக்குக் கட்டப் பட்டிருந்த கோயிலுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டேன்.

எவ்வளவு நேரம் அங்கே இருந்தேன் என்று தெரியவில்லை. என் பெயர் சொல்லி அம்மா கூப்பிடுவதைக் கேட்டு வெளியில் வந்தேன். "நீ கேட்டுத்தானே இந்தப் பூசைக்கு வந்தனான். இந்தக் கோயிலைச் சுத்தி எல்லா இடமும் உன்னைத் தேடி எனக்கு அலுத்துப் போச்சு... " என்று அம்மாவிடம் நிறையத் திட்டு வாங்கினேன்.

வீட்டுக்குத் திரும்பி வரும் போது அம்மாவிடம் கேட்டேன் "எதுக்கு என்னை அவையள் கலைச்சவையள்..?"

அம்மா சிரித்துக் கொண்டே சொன்னா "இந்தப் பூசையில் வடக்கு வீதிக்கு சாமி வந்தாப் போலை பாஞ்சாலிக்கு கண்ணன் ஆடை கொடுத்த நிகழ்வை நடத்திக் காட்டுவினம். இதை பொம்பிளைகளைக் கொண்டு செய்யிறது நல்லதில்லை எண்டு சின்னப் பிள்ளைகள் ஆரின்ரையாவது உடுப்பை கழட்டி சாமிக்கு முன்னாலை வைச்சிடுவினம். அவரும் அழத் தொடங்க, அதிலை இருக்கிற சனங்களும் கண்ணா.. கண்ணா எண்டு கூப்பிட ஐயர் அந்த உடுப்பை திருப்பிக் குடுப்பார். இண்டைக்கு உன்னட்டை இருந்து உடுப்பைக் கழட்டி சாமிக்குக் குடுக்கறதுக்குத்தான் பாத்திருக்கிறாங்கள். நீதானே ஓடிட்டாய்.. "

"உடுப்பெண்டு... "

"எல்லாத்தையும்தான்... அம்மணமாத்தான் நிக்கோணும்... அப்பத்தானே.. உடுப்பைத்தா... எண்டு கதறி அழ முடியும்.. நிகழ்ச்சியும் தத்ரூபமாயிருக்கும்... "

திங்கட்கிழமை பாடசாலைக்குப் போகும் போது முகுந்தன் இணைந்து கொண்டான்.
"கோயிலிலை நல்லா ஓடினாயாம். அப்பா சொன்னார். "முகுந்தன் என்னைப் பார்க்காமலே சொன்னான்.

"ஓடாமல் இருந்திருந்தால் எல்லாத்தையும் கழட்டிப் போட்டு உரிஞ்சுவிட்டு நிண்டான் எண்டு உன்ரை கொப்பர் சொல்லியிருப்பார்" என்றேன் எரிச்சலுடன்.

"ஏண்டா கோவிக்கிறாய்.. ஒரு நிகழ்ச்சிதானே... நானும் ஒருக்கால் மாட்டுப் பட்டிருக்கிறன். வரவர இந்தப் பூசைக்கு சின்னாக்கள் வாறது இல்லை எண்டு அப்பா வீட்டிலை கதைச்சவர்... அதுதான் உன்னை அனுப்பிப் பாத்தன்.. கிருஸ்ணர் கோயிலிலை நாமம்தானே பூசுவினம்.. நான் பூசினால் என்ன இதுக்குப் போய் கோவிக்கிறாய்... "எண்டான்.
அவனது பேச்சு வல்லமை எனது கோபத்தைத் தடுத்தது.

அடுத்த வருசம் கிருஸ்ணர் கோவிலுக்கு புது ஐயர் வந்ததால் முகுந்தனின் தந்தைக்கு அந்த வேலை போயிற்று. அவர்களும் எங்கள் கிராமத்தை விட்டுப் போக வேண்டியதாயிற்று. போகும் போது முகுந்தன் "அந்தப் பூசையை மனசிலை வைச்சிருக்கிறீயோ? "என்று கேட்டான்.

"மனசிலை வைச்சிருப்பன். ஆனால் உன்னைக் கோவிக்க மாட்டேன் "என்றேன்

முகுந்தனைக் கண்டு நாற்பது வருடங்களாயிற்று நினைவு மட்டும் மறையவில்லை.