Sunday, November 13, 2005

வாலி வதம்

அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது வகுப்பாசிரியரின் பெயர் சுப்பிரமணியம். அவர் அந்த வருடம்தான் எங்கள் பாடசாலைக்குப் புதிதாக படிப்பிப்பதற்கு மாற்றாலாகி வந்திருந்தார். தமிழ், கணிதம், ஓவியம் மூன்று பாடங்களை அவர் எங்களுக்கு படிப்பித்துக் கொண்டிருந்தார். மூன்றும் எனக்கு விருப்பமான பாடங்கள். நன்றாகவே செய்து கொண்டிருந்தேன். அதிலும் கணிதத்தில் நான் முன்னிலையில் நின்றேன். எனது உறவினர் ஒருவர் அவரை பரமேஸ் அக்கா என்றே அழைப்பேன். பாடசாலை முடிந்த பின்னர் நேரமும் - தூரமும், நேரமும-வேலையும் போன்ற கணக்குகளை எப்படிச் செய்ய வேண்டும் என்று விளக்கமகாகச் சொல்லித் தருவார். அதை அப்படியே பாடசாலையிலும் காட்டியதால் அதிகப் புள்ளிகள் எனக்கு கிடைத்துக் கொண்டிருந்தன. ஆனாலும் சுப்பிரமணிய மாஸ்ரரின் மதிப்பு மட்டும் எனக்கு ஏனோ கிடைக்கவில்லை.

வருட இறுதியில் பர்Pட்சையின் பெறுபேறு தரும் நாளில் பாடசாலையில் ஆசிரியர்கள் மாணவர்களது கலை நிகழ்ச்சி நடைபெறும். கலைநிகழ்ச்சியில் அப்போது தமிழ் புத்தகத்தில் இருந்த வாலி வதம் என்ற நாடகத்தைப் போடப் போவதாக சுப்பிரமணிய மாஸ்ரர் வகுப்பில் சொன்னார். இலக்குவனாக நடிப்பதற்கு என்னைத் தெரிவு செய்தார். மாட்டேன் என்று சொல்ல வார்த்தை வரவில்லை. சொல்லியிருந்தால் அவரது கையில் உள்ள பிரம்பு பேசியிருக்கும். தலையாட்டுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. வாலியாக துரைலிங்கமும், சுக்கிரீவனாக கனகசுந்தரமும் இராமனாக ஆனந்தனும் என்னுடன் சேர்ந்து நடிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

கலைநிகழ்ச்சக்கான நாள் வந்தது. சுப்பிரமணிய மாஸ்ரரே ஒப்பனையையும் செய்து விட்டார். மேடைக்கு நானும் ஆனந்தனும் போக வேண்டிய நேரம் வந்தது. சுப்பிரமணிய மாஸ்ரர் பார்வையால் ஆணையிட்டார். மேடைக்கு வந்து நின்று பார்த்தபோது மண்டபத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் என கூட்டம் நிறைந்திருந்தது. அதிலும் முதல் வரிசையில் ஆசிரியர் கூட்டம் அமர்ந்திருந்ததைப் பார்த்த போது தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.
வாலியும் சுக்கிரீவனும் மேடையின் ஒரு மூலையில் நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நானும் இராமனும் மறு மூலையில் நிற்கிறோம். இப்பொழுது இராமன் வாலியை நோக்கி அம்பு எய்ய வேண்டும். பூவரசம் தடியில் வளைத்துக் கட்டிய வில்லை எடுத்து ஆனந்தன் வாலியை நோக்கி அம்பை விட்டான். ஒன்று, இரண்டு, மூன்று... எந்த அம்பும் வாலியை நோக்கிப் போகவேயில்லை. மண்டபத்தில் இருந்து சிரிப்பொலி. கடைக்கண்ணால் பார்த்தேன் சுப்ரமணிய மாஸ்ரர் மேடைக்குள் இருந்து துள்ளிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஒரு கட்டத்தில் திசை மாறிப் போன அம்பை துரைலிங்கம் ஓடிப்போய் பிடித்துத் தனது மார்புடன் வைத்துக் கொண்டு கீழே விழுந்து விட்டான். இந்தக் கட்டத்தில்தான் நாடகத்தில் உரையாடல் தொடங்குகிறது. கீழே விழுந்திருந்தபடி வாலி கேள்விகள் கேட்கத் தொடங்கினான். அவனது கேள்விகளுக்கு இராமர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இராமர் சார்பாக இலக்குவன் பேச வேண்டும். ஆனால் அவன் அமைதியாக இருந்தான். அவனது நாக்கு மேலண்ணத்தில் ஒட்டி வெகு நேரமான விடயம் யாருக்கும் தெரியாது. ஆனந்தன் எனது கையைச் சுரண்டினான். படுத்திருந்த துரைலிங்கம் காலால் தட்டிப் பார்த்தான். உள்ளிருந்த சுப்ரமணிய மாஸ்ரர் மெலிதான குரலில் வசனத்தின் முதலடியைச் சொல்லிப் பார்த்தார். இலக்குவன் அசையவேயில்லை. அதிசயம் ஏதும் நடந்து திரை மூடாதா என நினைத்தபடி குனிந்த படியே நின்றான். அவன் நினைத்தபடி அதிசயம் நடந்தது. அசரீரியாக குரல் ஒன்று ஒலித்தது. இலக்குவன் பேச வேண்டிய வசனத்தை மேடையின் உள்ளேயிருந்து நாகநாதன் சொல்லிக் கொண்டிருந்தான். இலக்குவன் குனிந்தபடியே நின்றான். நாடகம் ஒருவாறு முடிந்து திரை மூடிய போதுதான் திரை சரியாக மூடுகிறதா என இலக்குவன் நிமிர்ந்து பார்த்தான்.

பாடசாலை பரீட்சையின் பெறுபேறு அறிக்கையை அம்மாவிடம் தந்து விட்டு நின்றேன். பெறுபேறைப் பார்த்ததும் அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. எனது கால்களின் பின்புறம் விண் விண் என்று வலித்துக் கொண்டிருந்தது. அணிலுக்கு இராமன் போட்டது மூன்று கோடுகள் . சுப்பிரமணிய மாஸ்ரர் பிரம்பால் எனக்குப் போட்டது ஆறு கோடுகள். எனது வலியைச் சொல்லி அம்மாவின் மகிழ்ச்சியைக் கெடுக்க நான் விரும்பவில்லை.

நகரத்தில் இருக்கும் பெரிய பாடசாலையில் அடுத்த வருடம் சேர்ந்துவிட வேண்டும். அதற்கான பரீட்சை எடுக்க வேண்டும். என மனதில் நினைத்துக் கொண்டேன். ஊரில் உள்ள பாடசாலையில் படிப்பித்துக் கொண்டிருந்தாலும் பின்னாளில் ஏனோ சுப்ரமணிய மாஸ்ரரை நான் சந்திக்கக் கிட்டவில்லை.