Friday, April 04, 2008

ஏனம்மா?

அண்ணன் தொலைபேசியில் சொன்னார். அம்மாவுக்கு உடம்புக்கு சிறிது இயலாமல் இருப்பதால் வைத்தியசாலையில் அனுமதித்திருப்பதாக. கூடவே வைத்தியசாலை தொலைபேசி இலக்கத்தையும் தந்தார்.

நான் தொலைபேசியில் அழைத்தபோது அம்மாவுடன் அக்கா கூட இருந்தாள். பெரிதாக ஒன்றும் இல்லை கவலைப் படாதே என்று நம்பிக்கை தந்தாள்.

„அம்மா பக்கத்திலேயே இருக்கின்றா? கதைக்கலாமா?“ என்றேன்.

அக்கா „அம்மாவிடம் தொலைபேசியைக் கொடுக்கிறேன“; என்றாள்.

„அம்மா“ என்றேன் எனது அடுத்த வார்த்தைகள் வருமுன் படுக்கையில் இருந்து சுவாசத்துக்காகப் போராடும் என்; தாயிடம் இருந்து கேள்வி வந்தது.

„எப்பிடி இருக்கிறாய்? சுகமாக இருக்கிறாயா?“

சாவின் பிடியில் இருந்தாலும் மகனின் நலம் விசாரிக்கும் தாய்மை அது.

„நீங்கள் எப்பிடி இருக்கிறீங்களம்மா?“

„போக வேண்டிய காலம் வந்திட்டுது எண்டு நினைக்கிறன்.“ அம்மா என்னுடன் கதைக்கும் போது நகைச்சுவை உணர்வு கலந்து கதைப்பார்;. அன்றும் அது இருக்கக் கண்டேன்.

„நான் வந்து உங்களைப் பார்க்கும் வரை நீங்கள் போக மாட்டீங்கள்“ வழக்கம் போல் நானும் நகைச்சுவையாகச் சொன்னேன்.

„சரியான கஸ்ரமாக இருக்குதடா“ ஒரு நாளும் அம்மா இப்படி என்னிடம் சொன்னதில்லை. கேட்ட உடன் மனது கனத்தது. அம்மா மனதளவில் மிகவும் தைரியமானவள். ஆனாலும் அன்று அவரது பேச்சில் அதைக் காணவில்லை.

அக்காவிடம் கேட்டேன். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை யோசிக்காதே என்றாள்.

அடுத்தநாள் வேலை இடத்திற்கு அக்காவிடம் இருந்து தொலைபேசி வந்தது. அது சோகத்தையும் சேர்த்து சுமந்து வந்தது.

அம்மா தனது இறுதிப் பயணத்தை மெதுவாகத் தொடங்கி விட்டார். ஆகவே அவரைத் தொந்தரவு செய்யாமல் மருத்துவத்தை நிறுத்துகிறோம் என வைத்தியர்கள் அறிவித்து விட்டார்களாம்.

நான் இப்பொழுது நியூசிலாந்துக்குப் பயணமாகிறேன். என் வாழ்க்கையில் எல்லாமாக நின்றவள் இல்லாமல் பொன செய்தி கேட்டு இடிந்து போய் போகிறேன். அவளது இறுதிப் பயணத்தில் இளைய மகனாய் நின்று செய்ய வேண்டிய கடமையைச் செய்யப் போகிறேன்.

கடவுள் எல்லா இடமும் இருநது பணி செய்ய முடியாமல் தாயைப் படைத்தான் என்பார்கள். எங்கள் தாய் கடவுளாகவே இருந்து எங்களை பார்த்திருக்கிறாள். அவளை இறுதியாகச் சந்திக்க நாளை நான் நியூசிலாந்துக்குப் போகிறேன். நான் வந்து பார்க்கும் வரை ஏன் காத்திருக்க வில்லை என்று சத்தம் போட்டு கேட்கப் போகிறேன்.