Saturday, July 26, 2008

கடவுளின் கனி

கருணை என்கின்ற பொழுது கடவுளையும் முந்தி மனதில் நிற்பவள் தாய்தான். தாயைப் பற்றி நினைக்கும் போதே உள்ளம் குழந்தைத் தனத்துக்குத் தானாக வந்து போகிறது.

எனது அம்மாவுக்கு மரங்கள் வளர்ப்பதில் அலாதிப் பிரியம். மணிக்கணக்கில் அல்ல வேண்டுமானால் நாள் முழுவதும் அவற்றை பராமரிப்பதில் நேரத்தை செலவிடுவார். மரங்களின் வளர்ச்சியில் குதூகலிப்பார். அவை பூக்கும் போது பூரித்துப் போவார். அவை காய்த்து கனி தரும் போது களிப்பெய்துவார்.


ஒரு தடவை வீட்டின் மதிற் சுவர் ஓரமாக எனது அம்மா ஒரு கொய்யா மரத்தை நட்டு வைத்தார். அவர் நட்டு வைத்த இடம் பூச் செடிகளுக்காக ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த இடம்.

"பூச்செடிகளின் மத்தியில் இது எதற்கு?" என்று கேட்டேன்.

"அவை பூக்க மட்டும்தான் செய்யும் இது காய்க்கவும் செய்யும்" என்று அவரிடம் இருந்து பதில் வந்தது.

அம்மாவின் செயற்பாடுகள் எதுவானாலும் அதற்கு வீட்டில் மறு பேச்சுக் கிடையாது. ஆகவே கொய்யா மரத்திற்கு வளர வாய்ப்பு இலகுவாகக் கிட்டியது. அம்மாவின் பராமரிப்பில் கொய்யாவுக்கு அதிக மகிழ்ச்சி போலும். வேகமாக வளர்ந்து மதிலை விட உயரமாக நின்றது. வெகு விரைவிலேயே இரண்டு கனிகளை வெளிக் காட்டியது. கொய்யாக் கனிகளைக் காட்டி எனது அம்மா பெருமைப் பட்டுக் கொள்வார். உண்மையிலேயே அவரின் பெருமையில் அர்த்தம் இருந்தது. கனிகள் ஏறக்குறைய ஒரு தேங்காயின் அளவுக்குப் பெருத்து மஞ்சளும், பச்சையும் கலந்து அழகான நிறச் சேர்க்கையுடன் இருந்தன. கொய்யா மரத்தைக் கடந்து செல்லும் போது பழத்தின் வாசனை பறித்துச் சாப்பிடு என்று சொல்லும்.

அம்மாவிடம் சொன்னேன், "அணில் கொறிக்கப் போகுது. இல்லை என்றால் பறவைகள் கொத்தப் போகின்றன" என்று.

"எதுவுமே நடக்காது" என்று உறுதியாகச் சொன்னார்.

"நானாவது சாப்பிடுகிறேன்" என்றேன்.

"பொறு, பழம் இன்னும் பெருக்க வாய்ப்பிருக்கு. உனக்குக் கிடைக்கும். ஆனால் முதல் பழம் கடவுளுக்கு. இரண்டாவதுதான் உனக்கு" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.


ஒருநாள் காலை எனது அம்மா என்னை அவசரமாக அழைத்தார். ஓடிப் போய்ப் பார்த்தால் கொய்யா மரத்தடியில் சோகமாக நின்றார். அவரது சோகத்தைக் கண்டதும் எனது கண்கள் உயர்ந்து நின்ற கொய்யா மரத்தைப் பார்த்தன. அது தனது ஒரு கனியை தொலைத்திருந்தது. மதிலுக்கு மேலால் வளர்ந்திருந்ததால் வீதியால் போகிறவர் யாரோ பறித்து விட்டார்கள் என்பது தெளிவாயிற்று. கடவுளுக்கு நேர்ந்ததை களவாணி கொண்டு போய் விட்டான்.

எனது அம்மா எவ்வளவு கவலை அடைந்திருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது.

"இனியும் பார்த்துக் கொண்டிராமல் அடுத்ததை பறிச்சு கடவுளுக்குக் குடுங்கோ" என்று சொல்லி விட்டு நான் போய் விட்டேன்.

அன்று மாலை வீடு திரும்பிய போது மேசையில் தட்டில் கொய்யாக் கனி வெட்டி வைக்கப் பட்டிருந்தது.

"கடவுளுக்குக் குடுக்கேல்லையா?" என்றேன்

"பேச்சு மாறக் கூடாது. இரண்டாவது கனி உனக்குத்தானே" என்று அம்மாவிடம் இருந்து புன்னகையுடன் பதில் வந்தது.

கடந்த04.04.2008 இல் எனது தாயார் மரணம் அடைந்த செய்தி வர துயரத்துடன் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள நியூசிலாந்து சென்றிருந்தேன். எல்லாம் முடிந்து நியூசிலாந்தில் எனது சகோதரியின் வீட்டுத் தோட்டத்தில் காலைச் சூரியனை மலைகளின் உச்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அக்காவின் மகன் ஜனகன் சொன்னான் "இதில் இருக்கும் மரங்கள் அத்தனையும் அம்மம்மாதான் வளர்த்தார். அந்த அப்பிள் மரமும் அவர் வளர்த்ததுதான்"

வேலி ஓரமாக பூச் செடிகளுக்கு மத்தியில் இருந்த அப்பிள் மரத்தை நெருங்கிப் பார்த்தேன். மரம் ஒன்றும் உயரமாக வளரவில்லை. ஆனால் சிவந்த காய்கள் அதில் அழகாக இருந்தன. அம்மாவின் பிரியத்தில் அவை கனி தந்திருக்க வேண்டும் என்று மனது சொன்னது. அன்று கொய்யா. இன்று அப்பிள்.

எனது அம்மாவுக்கு மரங்கள் வளர்ப்பதில் அலாதிப் பிரியம்.

Saturday, July 19, 2008

சொல்லவேயில்லை


திருக்கேதீஸ்வரத்தில் பாலாவியில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தேன். கூடவே எனது பால்ய நண்பன் தணிகாசலமும் சேர்ந்திருந்தான். வல்லிபுரக் கோவில் குளத்தில் - அதைக் குளம் என்று தான் சொல்வது வழக்கம். உண்மையில் அது ஒரு குட்டை. மழைக்காலத்தில் அதில் தேங்கி நிற்கும் தண்ணீர்தான் எங்களது நீச்சல் தடாகம். இங்குதான் தென்னை ஒல்லி இரண்டினை இளக்கயிற்றால் கட்டி அதன் மேல் படுத்திருந்து நீச்சல் பழகியிருந்தேன். நீச்சல் என்பதை முறையாக யாருமே எனக்குக் கற்றுத் தரவில்லை. நானும் தணிகாசலமும் ஒல்லிகளைக் கட்டிக் கொண்டு நீரில் தாளாமல் இருப்பதற்காக கைகளையும் கால்களையும் வேகமாக அடித்து ஓரளவு நேரம் தண்ணீரில் மூழ்காமல் இருக்கக் கற்றுக் கொண்டோம் என்பதே சரியாக இருக்கும்.

இந்த நீச்சலையே அன்று நானும் தணிகாசலமும் பாலாவியில் அடித்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குச் சற்றுத் தள்ளி எனது அம்மாவும் பாலாவியில் குளித்துக் கொண்டிருந்தார் எனது நீச்சலை அவர் அடிக்கடி பார்ப்பது தெரிந்தது. இத்தனைக்கும் நாங்கள் அதிக ஆழமான இடத்தில் நீச்சல் அடிக்கவில்லை. நெஞ்சளவு தண்ணீரிலேயே நின்று வித்தை காட்டிக் கொண்டிருந்தோம்.

பாலாவியில் சீமெந்தினால் செய்யப் பட்ட பெரிய பெரிய குழாய்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. அவை தண்ணீர் மட்டத்தோடு காட்சி தந்தன. எங்களது நீச்சல் மகிமையைக் கண்ட ஒரு பெரிசு குளித்து விட்டுப் போகும் போது, "தம்பிமாரே அந்தக் குழாய்கள் இருக்கிற பக்கம் போயிடாதையுங்கோ அது ஆழமான பகுதி. அதுவும் அந்தக் குழாய்க்குள்ளை போனீங்களோ அவ்வளவுதான்" என்று எச்சரித்து விட்டுப் போனது. அந்தப் பக்கமே போவதில்லை என்ற தீர்மானத்தை உடனே நிறைவேற்றினோம்.

நாங்கள் கவனமாகத்தான் இருந்தோம் ஆனால் எனது அம்மா அந்தக் குழாய்களை நோக்கி நகர்வது தெரிந்தது. எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. பாதி நீந்தியும் தண்ணீருக்குள் நடந்தும் அம்மாவை நெருங்கினேன். அம்மா மகிழ்ச்சியாக தண்ணீருக்குள் நின்றார். ஊரில் மழை பெய்தால் மழையில் நனைவதும் அதில் குளிப்பதும் அம்மாவிற்கு மகிழ்ச்சியான விடயம். ஆகவே பாலாவியில் அவர் மகிழ்ச்சியாக நின்றதில் அதிசயம் இல்லை. நான் அம்மாவிடம் சொன்னேன் "அந்தக் குழாய் இருக்கிற பக்கம் போகாதையுங்கோ ஆழமாம்." அம்மா எனது பேச்சை அசட்டை செய்வது தெரிந்தது. மழையில் குளிப்பது போல் இல்லை பாலாவி ஆற்றில் குளிப்பது என்று மீண்டும் எச்சரித்தேன். அம்மாவுக்கு நீச்சல் தெரியாது ஏதாவது விபரீதம் நடந்தால் கரைக்கு இழுத்து வர எங்களுக்கும் சரிவர நீச்சல் தெரியாது. ஆனாலும் அம்மா மெதுவாக தண்ணீரில் நகர்ந்து கொண்டிருந்தார். "அம்மா" என்று கூப்பிட்டேன். "உனக்குப் பயம் என்றால் நில். எனக்குப் பயம் இல்லை" என்று அம்மாவிடம் இருந்து பதில் வந்தது. இப்பொழுது அம்மா என்னை விட்டு சற்று தண்ணீருக்குள் முன்னுக்குப் போய்விட்டார். அவர் இருக்கும் இடத்திற்குப் போக தண்ணீரில் தாண்டு விடுவேனோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனாலும் மெதுவாக அம்மாவை நோக்கி நகர்ந்தேன். நான் அம்மாவை நெருங்கிய போது அம்மா தண்ணீரில் இருந்து மேலே வந்தார். அழகாக வட்டம் அடித்து நீந்தத் தொடங்கி விட்டார். "வா ஏலுமெண்டால் வந்து பிடி" என்று சொல்லியவாறு அழகாக நீந்திக் கொண்டிருந்தார்.

எனது அம்மாவுக்கு இவ்வளவு அழகாக நீந்தத் தெரியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தண்ணீரில் நீச்சல் என்ற பெயரில் தத்தளிக்கும் எனது நீச்சலை நினைக்கும் போது எனக்கு வெட்கமாக இருந்தது. அம்மாவின் நீச்சலை இரசித்த படி தணிகாசலம் இருக்கும் இடத்தை நீந்தாமல் நடந்து வந்து சேர்ந்தேன்.

"உன்ரை அம்மா வடிவா நீந்துறா. அவவுக்கு நீச்சல் தெரியும் எண்டு நீ எனக்கு சொல்லவேயில்லை" என்று தணிகாசலம் கேட்டான்.
அம்மா எனக்கும் சொல்லவேயில்லை என்ற விடயத்தை நான் அவனுக்குச் சொல்லவேயில்லை.