Showing posts with label அவனுக்கென்ன தூங்கிவிட்டான். Show all posts
Showing posts with label அவனுக்கென்ன தூங்கிவிட்டான். Show all posts

Friday, January 01, 2010

அவனுக்கென்ன தூங்கிவிட்டான்

எனது தந்தை இறந்த நேரம். அப்பொழுது எனக்கு ஏழு வயது. வீடு எனது தந்தையின் உறவுகளால், மற்றும் துக்கம் விசாரிக்க வந்தவர்களால் நிறைந்திருந்தது. இரவு படுக்கைக்குக் கூட இடம் போதாமல் சிரமமாக இருந்தது. பெண்கள், சிறுவர்கள் என எல்லோரும் எல்லா அறைகளையும் எடுத்துக் கொண் டார்கள். பெரியவர்கள் இளைஞர்கள் எல்லோரும் அறைக்கு வெளியேயே படுக்கையைப் பகிர்ந்து கொண்டார்கள்.

எங்களில் மூத்தவனான ராஜாண்ணை இளைஞனாக இருந் ததால் அவரது படுக்கையும் அறைக்கு வெளியேதான் இருந்தது. அன்று இரவு எல்லோரும் நீண்ட நேரமாக எனது தந்தையின் அருமைகளையும் பெருமைகளையும் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கைக்குப் போனார்கள்.

அறைக்குள் அம்மாவின் அருகே படுத்திருந்தேன். திடீரென ராஜாண்ணை அலறும் சத்தம் கேட்டது. எல்லோரும் எழுந்து அறைக்கு வெளியே வந்தார் கள். அதில் அம்மாதான் முதலில் ஓடி வந்திருந்தார். அவருடன் சேர்ந்து நானும் வந்திருந்தேன். வெளியே படுத்திருந்தவர்கள் படுக்கையில் இருந்த படியே எழுந்து உட்கார்ந்திருந்தார்கள். ராஜாண்ணையின் உடல் வியர்த் திருந்தது. பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தார்.

"பிள்ளை பயந்து போட்டான் போல இருக்கு'"

"இருட்டிலை எதையோ கண்டு பயந்திட்டான்.. உடம்பெல்லாம் வேர்த்திருக்கு...'"

ஒவ்வொருத்தரும் தங்கள் வாயில் வந்ததைச் சொல்லிக் கொண்டார்கள்.

"என்னடா? என்ன? ஏன் கத்தினனீ?" என்று அம்மா, ராஜாண்ணையை மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தார்

"யாரோ என்ரை காலைப் பிடிச்சு இழுத்திச்சினம்" பயத்துடன் ராஜாண்ணையிடம் இருந்து பதில் வந்தது.

"தகப்பன்தான் வந்து இழுத்தாரோ?"

"மூத்த பிள்ளைதானே ஆசையிலை வந்திருப்பார்" நித்திரைக் கலக்கத்திலும் பயத்திலும் இருந்தவர்கள் ஏதாவது ஒன்றைச் சொல்லி அந்தச் சூழலை இன்னும் பயமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

"சரி.. சரி.. நீ உள்ளை வந்து படு" என்று அம்மா ராஜாண்ணையைக் கூட்டிக் கொண்டு அறைக்குள் போனார்.


எனக்கு இன்று கூட அந்தக் காட்சி நினைவில் நிற்கிறது.

"உண்மையிலேயே அப்பர் வந்து காலை இழுத்தவரா? இல்லாட்டில் வெளியே படுக்கப் பயந்து அண்டைக்கு அப்படி ஒரு நாடகம் ஆடி உள்ளே வந்து படுத்தனீயா?" என்று அடுத்தமுறை ராஜாண்ணையைச் சந்திக்கும் போது கேட்க வேண்டும்.