Sunday, April 25, 2010

செலவு பத்தணா



பெரியம்மாவின் மகளான லலியக்காவின் திருமணத்துக்கு ராஜாண்ணை தன்னிடம் சேமிப்பில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்து விட்டார். இப்பொழுது கையிருப்பு அவரிடம் இல்லை. ஆனாலும் அவரது வியாபாரம் ஏதோ ஓடிக் கொண்டிருந்தது.

ராஜாண்ணை, ஒருநாள் ஏதோ நினைத்து விட்டு, வீட்டின் பின் பகுதியில் ஒரு கோழிப் பண்ணை போட்டால் என்ன என்று கேட்டார். அவர் கேட்டார் என்றால், அது உடனே அமுலாக்கப் பட்டு விடும். கோழிப் பண்ணையும் அவர் விருப்பப் படியே ஏற்பாடானது. எனது அறிவுக்கு ஏற்றபடி கோழிக் கூடுகளை இரண்டு அடுக்குகளில் தயார் படுத்தி, கீழ், மேல் தட்டுகளில் உமி பரப்பி கோழிகளை, அம்மாவும், அக்காவும், நானுமாக சேர்ந்து குடியேற்றினோம்.

கோழிகள் வளர்ந்து முட்டைகள் போட்டு, கோழிப் பண்ணை ஓகோ என்று போய்க் கொண்டிருந்தது. எனக்குத்தான் அதிகளவு அவற்றைப் பராமரிக்க முடியாமல் போயிற்று. காரணம் எனது வயது அப்படி. படிப்பு முடிந்தால் நண்பர்களுடன் ஊர் சுற்ற வேண்டும் என்ற நினைப்பு. பிறகு எப்படி பண்ணையைப் பராமரிக்க, அம்மா, அக்காவிற்கு உதவி செய்ய நேரம் இருக்கிறது? இதனால் அவர்கள் இருவருக்கும் வீட்டு வேலைகளோடு இந்த வேலையும் சேர்ந்து கொண்டது. ஆனாலும் இருவரும் ஏதும் சொல்லவில்லை.

க.பொ
.த. பரீட்சையில் நான் சித்தி அடைந்த போது வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ராஜாண்ணை ஒரு படி மேலே போய் கோழிகளுக்கு குளுக்கோஸ் கலந்து தண்ணீர் கொடுத்தார். எனது மேற்படிப்பு ஆரம்பமாகத் தொடங்கிய போது, கோழிப் பண்ணையை அம்மாவும், அக்காவும் பார்த்துக் கொள்வது சிரமமானது என ராஜாண்ணை கணக்குப் போட்டுக் கொண்டார். அப்பொழுது வியாபாரத்தில் அவர் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து விட்டதால், கோழிப் பண்ணையை கைவிட்டு விடலாம் என்ற நிலைக்கு வந்தார்.

பண்ணையில் இருந்த கோழிகளை அப்படியே வாங்கிக் கொள்வதாக காளை என்கிற கதிர்காமலிங்கம் முன்வந்தார். கொள்வனவுக்கான பணத்தை தவணை முறையில் தருவதாக அவர் சொல்லி, கோழிகளை அட்டைப் பெட்டிகளில் வைத்து அள்ளிக் கொண்டு போனார். அம்மா கேட்டார், 'கோழிகளைக் கொண்டு போறான். காசு தருவானா?' என்று. அம்மாவின் சந்தேகம் எனக்கும் இருந்தது. ஆனாலும் பண்ணையைக் கைவிடுவது நல்லது என்ற எண்ணமே அப்பொழுது எங்களுக்குள் மேலோங்கி இருந்ததால் பணத்தைப் பின்னாடி வாங்கிக் கொள்ளலாம் என்ற சிறிய நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையும் பின்னாளில் பொய்த்துப் போனது. தவணை முறையில் பணம் தருவதாகச் சொன்ன கதிர்காமலிங்கம் பணத்துக்கு தவணை சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர பணம் வந்த பாடில்லை. ஊரில் சொன்னார்கள் „காளை வீட்டிலை இப்ப ஒவ்வொரு நாளும் கோழிக் கறி' என்று. அம்மாவிடம் இந்த விசயத்தைச் சொன்னேன். அம்மா சிரித்துக் கொண்டே சொன்னார், 'கோழிப் பண்ணையால் நட்டம் என்று எழுதி வை'

Sunday, April 18, 2010

இது காதலினால்தான்

அவள் என் வாழ்வின் பதின்மத்தில் சந்தித்துக் கொண்டவள். என் உள்ளத்தில் புகுந்து காதல் என்னும் கதவை முதல் முதலாகத் திறந்து மலர் தூவிச் சென்றவள். அவள் பெயர் மேரி (அவள் வாழ்வின் நலம் கருதி, அவளது பெயரை இங்கே சிறியதாக்கி இருக்கிறேன்)

அவள் கிறிஸ்தவம். நான் இந்து. நாங்கள் இருவரும் மதங்களைப் பார்க்கவில்லை. ஆனால் அவள் பகுதியில் இருந்து அதைப் பார்த்தார்கள். அதுவும் அவள் சமயம் சார்ந்த பகுதியில் தாங்கள்தான் எல்லாம் என்றவர்களால் அது பார்க்கப் பட்டது. எனது நண்பர்களாக தேவதாஸ், தேவன், ரஞ்சன், றோய், யூலியன், பொன்ராசா எனப் பலர் கிறிஸ்தவர்களாக இருந்தும், இந்த விடயத்தில் அவர்கள் யாவரும் என்னை விட்டுத் தூரவே நின்று கொண்டார்கள். போர்க்களத்தில் தனித்து விடப்பட்ட அபிமன்யுவாக, காதல் களத்தில் நான் போராட வேண்டியதாக இருந்தது. போரில் அபிமன்யுவுக்கு ஏற்பட்ட முடிவே என் காதலுக்கும் ஏற்பட்டது.

அப்பொழுது பாடசாலை செல்வதற்கு முன்னால், காலையில் வீதியில் நண்பர்களாக ஒன்று கூடிக் கதைத்து விட்டே செல்வோம். அவ்வாறான பொழுதிலேயே, என்னைக் கடந்து போன காரில் இருந்து என்னை யாரோ பார்ப்பது போன்ற பிரமை. யார் என்று அறியுமுன் கார் போய் விட்டது. அடுத்தடுத்த நாட்களும் இது போன்ற நிகழ்வு. நண்பர்களிடம் விசயத்தைச் சொன்னேன். காத்திருந்து பார்த்தோம். அவர்கள்தான் அடையாளம் சொன்னார்கள். குடும்பமாக தலவாக்கொல்லை என்ற இடத்தில் வசித்தவர்கள் இப்பொழுது ஊருக்கு வந்திருக்கிறார்கள், அவள் பெயர் மேரி என்று.

தொடர்ந்து அவளது பார்வை எனக்கு காலையில் கிடைத்துக் கொண்டிருந்தது. அவள் வீடு ஒரு குச்சு ஒழுங்கைக்குள் இருந்தது. ஆதலால் அவள் தனது வீட்டில் இருந்து நடந்து வந்து இராசக்கோன் வீட்டின் உள்ளே நிற்பாள். வாடகைக்கார் வந்ததும் ஏறிப் போவாள். அவள் என்னைப் பார்க்கிறாள், சிரிக்கிறாள் என்ற விடயம் மெதுவாக ஊருக்குள் வெளியே வர, அவளுக்கான பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாகிப் போனது. இதில் அதிகம் தீவிரமாக நின்றவர், தேவதாஸின் அண்ணனான கிறிஸ்தோபர். என்னைக் கண்டால் அவருக்கு ஆகாது. அவருடன் மல்லுக் கட்ட எனக்கு வயது போதாது. ஆகவே அடக்கி வாசிக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். தாயுடன் தேவலாயத்துக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் போகும் போதும், காலயில் பாடசாலைக்குப் போகும் போதும் விழிகளாலும், புன்முறுவல்களாலும் மட்டும் பேசிக் கொண்டோம்.

க.பொ.த. பரீட்சை முடிவு வந்த அன்று மதியம் பாடசாலையில் பரீட்சை முடிவைப் பார்த்து விட்டு அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். நான் மதிய இடைவேளைக்கு கல்லூரியில் இருந்து வந்து கொண்டிருந்தேன். அன்றுதான் அவளுடன் கதைக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. பரீட்சை முடிவைச் சொன்னாள். தொடர்ந்து படிக்க வாய்ப்பு இருக்குமா எனத் தெரியவில்லை என்றாள். ஏதேதோ கதைத்தோம். தூரத்தில் அவளது சிறிய தகப்பன் வேதநாயகம் வந்து கொண்டிருந்தார். மேரி படபடக்கத் தொடங்கினாள். „போ' என்று வழியனுப்பி விட்டு சைக்கிளில் ஏறி, திரும்பி வந்த வழியே போனேன்.

அவள் எதிர்பார்த்ததே நடந்தது. அவள் தொடர்ந்து படிக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இப்பொழுது தேவலாயத்துக்கு அவள் வந்தால்தான் பர்க்க முடியும் என்ற நிலை ஆகிப் போனது. சுற்றிவர தாய், சகோதர சகோதரிகள் உறவுகள் எனப் பலருக்கு நடுவில் ஞாயிறுகளில் சந்திரனாக அவள் வருவாள். அவள் என்னைப் பாக்கிறாளா? சிரிக்கிறாளா? என்று நோட்டம் விட்டுக் கொண்டே அவள் கூட வருபவர்கள் வருவார்கள். ஆனாலும் என்னைக் கண்டவுடன் அவள் முகம் மலர்ந்திருக்கும். ஒரே ஒரு பார்வை மட்டும் வீசி விட்டு போய் விடுவாள்.

ஒருநாள் கிறிஸ்தோபருடன் எனக்கு நேருக்கு நேர் மோத வேண்டியதாகப் போயிற்று. அவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எனது புதிய நண்பர்கள் இருவர் என்னுடன் நின்று கொண்டிருந்தார்கள். இன்று கிறிஸ்தோபரைக் கேட்டு விடுவது என அவரை வழி மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டேன். என்னுடைய புதிய நண்பர்களைப் பார்த்து கிறிஸ்தோபர் கொஞ்சம் பயம் கொண்டிருந்தது எனக்கு விளங்கியது. அவரும் சாதுரியமாக எனது பேச்சுக்குப் பதில் சொல்லிக் கொண்டே மோட்டார் சைக்கிளை எனது வீட்டுப் பக்கம் திருப்பிக் கொண்டு போய் விட்டார். போனவர் எனது மூத்தவர் ராஜாண்ணைக்கு என்னைப் பற்றி போட்டுக் கொடுத்து விட்டார். விளைவு பெரிய தண்டனையாகப் போய் விட்டது.

„நீ இஞ்சை இருந்து படிச்சது போதும். கொழும்புக்குப் போ. அங்கையிருந்து படி.' என்று சொல்லி, பெட்டி படுக்கைகளைக் கட்டி என்னைக் கொழும்புக்கு போகச் சொல்லி விட்டார். என்னால் மறு பேச்சுப் பேசவோ, எனது பக்க நியாயங்களைச் சொல்லவோ முடியாத நிலை. கொழும்புக்குப் பயணமானேன்.

அங்கே படித்துக் கொண்டிருக்கும் போது, ஊரில் இருந்து தேவனின் கடிதம் வந்தது. மேரிக்கும் அவளது முறைப் பையனுக்கும் கலியாணம் முடிந்து விட்டது. அவள் அவளது கணவனுடன் அவனது ஊருக்குப் போய் விட்டாள் என்று. கடித்ததைப் படித்து விட்டு மடித்து வைத்தேன் கூடவே மேரியின் காதலின் பக்கத்தையும் மூடி வைத்தேன்.

சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து எனது வியாபார நிலையத்தில் இருந்தேன். ஏதோ ஒரு காந்த அலை என்னை ஊடுருவுவதை அறிந்து நிமிர்ந்து பார்த்தேன் அதே பார்வை வீச்சுடன் மேரி நின்றிருந்தாள். ஒரு கணம் நான் என்னை மறந்திருந்தேன். சுதாகரித்துக் கொண்டு மீண்டும் பார்த்தேன் அவள் பக்கத்தில் அவள் கணவன். அவனை முதன் முதலாக அன்றுதான் சந்திக்கிறேன். வியாபார நிலையத்தில் தில்லையண்ணனும், அப்புத்துரையண்ணனும் ´பிசி ` ஆக இருந்தார்கள். எனவே மேரியையும் அவள் கணவனையும் கவனிக்க வேண்டியது எனது வேலையாகப் போயிற்று. இருக்கையை விட்டு எழுந்து போய் அவர்களை எதிர் கொண்டேன். அவள் கணவன்தான் கதைத்தான். பிள்ளையின் „பீடிங் பொற்றிலுக்கு நிப்பிள் கிடைக்குமா?' எனக் கேட்டான். அது எங்களிடம் இருக்கவில்லை. „இல்லை' என்றேன். ஏமாற்றத்துடன் இருவரும் போனார்கள். வீதியில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் மேரியை பின்னுக்கு இருத்தி அவன் கணவன் அதை ஓட்டிச் சென்றான்.

அன்று அவள் நினைவு மீண்டும் வந்தது. உனது கணவனை எனக்குக் கொண்டு வந்து காட்டுவதற்கும், உனக்கு பிள்ளை இருக்கிறது என்றும் சொல்வதற்கு வந்தாயா? வளமாகத்தான் இருக்கிறேன் என்னை நினைத்து கவலைப் படாதே என்று சொல்ல வந்தாயா? இல்லை நான் எப்படி இருக்கிறேன் என்று அறிய வந்தாயா? கேள்விகளுடன் அன்றைய பொழுது போய் விட்டது, கூடவே அவளது நினைப்பும்.

மீண்டும் இப்பொழுது அவள் வந்தாள். அதே பார்வை அதே புன்னகையுடன், "நலமாக இருக்கிறாயா?" எனக் கேட்டு புன்முறுவல் பூத்தாள். திடுக்கிட்டுப் போனேன். விழித்துப் பார்த்தால் நேரம் அதிகாலை ஒரு மணி. என் கனவில்தான் அவள் வந்திருந்தாள். அதுவும் முப்பத்தியொரு வருடங்களுக்குப் பிறகு. ஏன்? என்னையே கேட்கிறேன். இவ்வளவு காலமும் என்னுள் நீ உறங்கி இருந்தாயா? அல்லது உனக்கு ஏதேனும் தொல்லைகளா? மனது அடித்துக் கொள்கிறது.

Saturday, April 03, 2010

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

அம்மாவிடம் ஒரு சிங்கர் தையல் மெசின் இருந்தது. சிறுவர்களாக நாங்கள் இருந்த போது, அம்மா அதில் தைத்துத் தந்த உடைகளைத்தான் நாங்கள் அணிந்து கொண்டோம். ஏன் எனது மகனுக்கும், மகளுக்கும் கூட அம்மா அதில் உடைகள் தைத்துத் தந்திருக்கின்றார். நான் நினைக்கிறேன் அந்தத் தையல் மெசினை எனது தந்தை அம்மாவிற்கு பரிசளித்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அம்மா ஏன் அந்த தையல் மெசினை துடைத்து எண்ணை விட்டு ஒரு குழந்தை போல் பராமரித்து நீண்ட காலமாக தன்னுடன் வைத்திருக்க வேண்டும்.

அன்றைய காலங்களில் பொங்கல், தீபாவளி நேரங்களில் அந்த மெசினுக்கு ஓவர்டைம். எங்கள் எல்லோரையும் நித்திரைக்கு அனுப்பி விட்டு அம்மா உடைகளைத் தைக்க ஆரம்பித்துவிடுவார். தையல்மெசின் போடும் அந்த சத்தத்தைத் தாலாட்டாக ஏற்றுக் கொண்டு, புது உடைகளைப் பற்றிய கனவுகளுடன் நாங்களும் நல்ல பிள்ளைகளாக நித்திரை ஆகிவிடுவோம். காலையில் நித்திரையால் எழுந்து பார்த்தால் அழகான வடிவமைப்போடு உடைகள் தயாராக இருக்கும். அம்மா தனது காலை உணவை தயாரிக்கும் பணியில் இருப்பார். எங்களுக்கு வயிறும், மனதும் நிறைய அவர் செய்த பணிகள் இன்னும் ஏராளம்.

எனது தந்தை மறைந்த காலகட்டம். பொருளாதாரத்தில் குடும்பம் தள்ளாடிய நேரம். தீபாவளி வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. சுற்றம் சூழலில் தீபாவளி உடைகளைப் பற்றிய பேச்சு. நாங்களோ சிறுவர்கள். பிள்ளைகளுக்கு இந்தமுறை ஏதும் உடைகளை வாங்கிக் தைத்துக் கொள்ள வசதி இல்லையே என்று அம்மா மனதுக்குள் கவலைப் பட்டிருப்பார். நாங்கள் சிறுவர்களாக இருந்தாலும் இந்த விடயத்தில் அம்மாவுக்கு சிரமம் ஏதும் தரவே இல்லை.

அடுத்த நாள் தீபாவளி. அமளிதுமளி ஏதும் எங்கள் வீட்டில் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம் எனக்கு படிக்கும் நேரம். படித்துக் கொண்டிருந்த எனது கண்ணில் தட்டுப் பட்டது மேசையில் சீலாண்ணன் படித்து விட்டு வைத்திருந்த பேசும் படம். அக்கம் பக்கம் பார்த்து விட்டு பாடப் புத்தகத்தை மேசையில் வைத்து விட்டு பேசும் படத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

'நல்லா படிக்கிறாய் போலை'
அம்மாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு பேசும் படத்தை மேசையில் போட்டேன். போட்ட வேகத்தில் விரிந்த பக்கத்தில் கையை உயர்த்திய போஸ்ஸில் எம்.ஜி.ஆர். படம். அம்மா பேசும் படத்தை எடுத்து அந்தப் பக்கத்தை உற்றுப் பார்த்து விட்டு, என்னைப் பார்த்து "பாடப் புத்தகத்தைப் படி" என்று சொல்லி விட்டு பேசும் படத்தையும் எடுத்துக் கொண்டு போய் விட்டார்.

அன்று அம்மா தனது வேலைகளை முடித்து விட்டு தையல் மெசினை எடுத்து துடைத்துக் கொண்டிருந்தார். முன்னர் தைத்து விட்டு மிஞ்சி இருந்த துணிகளை எடுத்து ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார். நான் நித்திரைக்குப் போய் விட்டேன். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால், தையல் மெசினுக்குப் பக்கத்தில் இரண்டு உடைகள் மடித்து வைக்கப் பட்டிருந்தன. ஒன்று பல வர்ணங்களில் அழகிய பெண்களுக்கான உடை. அக்கா, '"இது எனக்கு அம்மா தைத்தது'" என அதை எடுத்துக் கொண்டார். மற்றது வெள்ளை சேர்ட். அதில் கொலருக்குக் கீழே பச்சை நிறத்தில் ஒரு போர்டர். அந்த போர்டரில் அழகான இரண்டு தெறிகள். எங்கேயோ அந்த சேர்டை பார்த்த ஞாபகம். தையல் மெசினுக்கு அருகில் இருந்த பேசும் படத்தை எடுத்துப் புரட்டினேன். கையை மேலே தூக்கிய வண்ணம் எம்.ஜி.ஆர். அதே சேர்ட்டைத்தான் போட்டிருந்தார். கையில் இருந்த சேர்ட்டையும், படத்தில் இருந்த சேர்ட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அச்சு அசலாகவே இருந்தது.

குளித்துவிட்டு வந்து சேர்ட்டைப் போட்டுப் பார்த்தேன். அழகாகப் பொருந்தி இருந்தது. அக்காவைப் பார்ததேன் வண்ண மயமாக சட்டையில் ஜொலித்தக் கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டு திருமாவும், குட்டியும் அக்காவைப் பார்த்து சொல்லிக் கொண்டார்கள், "நாங்களும் உன்ரை கொம்மாவைக் கொண்டு இப்பிடி ஒண்டு தைக்கோணும். இந்த உடுப்போடை உன்னைப் பார்க்க பஞ்சவர்ணக் கிளி மாதிரி இருக்கு" என்று.

"எம்.ஜி.ஆர். மாதிரி சேர்ட் போட்டிருக்கிறான்" என்று எனது நண்பர் வட்டத்தில் நான் அன்று ஒரு கதாநாயகன். எனது வாழ்நாளில் நான் அதிகம் பாவித்தது அந்த ஒரு சேர்ட்தான் என்று நினைக்கிறேன். பின்னாளில்; எங்கள் ஊர் சென்றல் தியேட்டரில் பணத்தோட்டம் காண்பித்த போது நண்பர்களுடன் போய்ப் பார்த்தேன்.

'"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே..................'" என்று எம்.ஜி.ஆர். கையைக் காற்றில் வீசிப் பாடிக் கொண்டிருந்தார். அதில் அவர் போட்டிருந்த சேர்ட் போலவே நானும் சேர்ட் போட்டுக் கொண்டு அந்தப் பாடலை ரசித்துக் கொண்டிருந்தேன்.

எஞ்சி இருந்த துண்டுத் துணிகளில் மற்றவர் மெச்சும்படி அன்றைய நிலையை வெற்றிகரமாகக் கையாண்ட எனது தாயை நினைத்துக் கொள்கிறேன். அம்மா என்ற அந்த அற்புதக் கலைஞியை எண்ணிப் பார்த்து வியக்கிறேன்.