Showing posts with label ஏட்டில் எழுதி வைத்தேன். Show all posts
Showing posts with label ஏட்டில் எழுதி வைத்தேன். Show all posts

Sunday, June 06, 2010

ஏட்டில் எழுதி வைத்தேன்

ராஜேஸ்வரி, மன்னார் விடத்தல் தீவைச் சேர்ந்தவள். எங்கள் ஊரில் இருந்த பெண்கள் கல்லூரியில் க.பொ.த. சாதாரணதரம் படித்துக் கொண்டிருந்தாள். முதலில் அவள் கல்லூரியில் இருந்த விடுதியில் தங்கி இருந்தே படித்துக் கொண்டிருந்தாள். பின்னர் எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் இருந்த தனது நண்பியின் வீட்டில் தங்கி இருந்து படித்தாள். அவள் விடுதியில் இருந்த போது யாருடைய கண்களிலும் தட்டுப்பட வாய்ப்பில்லை. அங்கிருந்து வெளியே வந்து தனது நண்பியின் வீட்டில் இருந்த போதுதான் பல இளைய கண்கள் அவளைக் கண்டு அவள் மேல் விருப்பம் கொண்டன.

அவள் மேல் காதல் கொண்டவர்களில் எனது பள்ளித் தோழன் மகேந்திரனும் அடக்கம். அவனின் நிறத்துக்கு ஏற்ப அவனை வெள்ளை என்றே அழைத்துக் கொள்வோம். வெள்ளை பருமனானவன். திடகாத்திரமானவன். சப்இன்ஸ்பெக்ரர் பரீட்சைக்குப் போய் வந்தவன். அதனால்தானோ என்னவோ எப்பொழுதும் நிமிர்ந்த நடை. ஆனால் கனிவாகப் பேசவோ, ஒரு பெண்ணை அணுகித் தனது காதலை வெளிப்படுத்தும் ஆற்றலோ இல்லாதவன். ஆனாலும் ராஜேஸ்வரியின் மேல் இருக்கும் காதலைப் பற்றி நாள் முழுதும் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பான். அவள் தங்கி இருந்த வீடும் அவனது வீடும் பக்கம் பக்கமாகவே இருந்தன. இதனால் அவளது தரிசனம் அவனுக்குப் பஞ்சம் இன்றிக் கிடைத்துக் கொண்டிருந்தது.

என்னதான் பலசாலியாக இருந்தாலும் ராஜேஸ்வரியிடம் தனது காதலை வெளிப் படுத்த முடியாத கோழையாக அவன் இருந்தான். ஒருநாள் என்னைத் துணைக்கு அழைத்தான். போனேன். அவன் கேட்டுக் கொண்டதன்படி அவனுடன் அவள் கல்லூரிக்குச் செல்லும் வீதியில் நின்றேன். அவளும் புத்தகங்களைச் சுமந்தபடி தனது நண்பியுடன் கதைத்தபடி வந்தாள். இவன் பதட்டமானான். „வாறாள்.. வாறாள்...' என்று அறிவித்துக் கொண்டிருந்தான். அவளும் வந்து எங்களைக் கடந்து சென்றாள். கடந்து செல்லும் போது ஒரு தடவை ஏறெடுத்துப் பார்த்தாள். அந்த ஒரு பார்வையே வெள்ளைக்கு அப்போழுது போதுமானதாக இருந்தது.

„பாத்தியே மச்சான் பாக்கிறாள். கதைக்கப் பயமா இருக்கு தனிய வந்தால் கதைக்கலாம். எப்பவும் ஒரு சிண்ணோடை வாறாள்..' வெள்ளை தனது ஆதங்கத்தைச் சொன்னான்.

அவள் தனியாக வந்தாலும் அவளோடு கதைக்கும் தைரியம் வெள்ளைக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். நாளடைவில் வெள்ளையுடன் வீதியில் அவளுக்காகக் காத்திருப்பது எனக்கு ஒரு வேலையாகப் போயிற்று. ஆனாலும் பள்ளித் தோழனுக்காக அந்த வேலையை ஏற்றுக் கொண்டேன்.

நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன. வெள்ளைக்கு தனது காதலை ராஜேஸ்வரியிடம் சொல்லும் தைரியம் இன்னும் வந்த பாடில்லை. நானும் பல தடவைகள் அவனிடம் சொல்லிப் பார்த்து விட்டேன். ஏனோ அவளிடம் கதைக்க அவன் தயக்கம் காட்டினான். என்னாலும் அவனுக்காக அவளிடம் கதைக்க முடியாத நிலை. ராஜேஸ்வரி பாடசாலை செல்லும் பொழுதும் வரும்பொழுதும், சிவனே என அவனுடன் கூட வீதியில் நின்று கொண்டிருப்பேன். அவளும் பார்த்து மெதுவாக ஒரு புன்னகை சிந்தி விட்டுப் போவாள்.

க.பொ.த. பரீட்சையும் முடிந்து விட்டது. வருட இறுதி விடுமுறை வந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் பாடசாலை மாணவிகளின் கையில் பாடப் புத்தகங்கள் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஓட்டோகிராப் புத்தகம் இருக்கும். தங்கள் நண்பிகள், ஆசிரியர்கள், தெரிந்தவர்கள் என எல்லோரிடமும் கெயெழுத்து வாங்கிக் கொள்வார்கள். இதை பின்னாட்களில் எடுத்துப் பார்த்து தங்கள் இளமையான காலங்களையோ அன்றி அன்று அவர்களுக்கிருந்த நட்புகளைப் பற்றியோ நினைத்துப் பார்க்க அவர்களில் எத்தனை பேருக்கு வாய்ப்பு இருக்கிறதோ தெரியாது. ஆனாலும் க.பொ.த.சாதாரண பரீட்சை முடிந்தவுடன் ஒட்டு மொத்தமாக எல்லா மாணவிகளும் இந்தக் கையெழுத்து வேட்டையில் இறங்கி இருப்பார்கள்.

அன்றும் வழமை போல் வெள்ளை, ராஜேஸ்வரிக்காகக் காத்திருந்தான். நான் அவனுக்குத் துணையாக அவன் பக்கத்தில் நின்றிருந்தேன். ராஜேஸ்வரியும் வந்தாள். இன்று அவள் தனியாகத்தான் வந்தாள். அவள் தனியாக வருவதைக் கண்டு நான் வெள்ளையை உசார்ப் படுத்தினேன். „இப்பொழுது கதைக்காவிட்டால், இன்று உன் காதலைச் சொல்லாவிட்டால் இனி சந்தர்ப்பமே இல்லை. விடுமுறைக்கு ஊருக்குப் போகும் அவள் திரும்ப வர வாய்ப்பே இல்லை' என வெள்ளைக்கு நிலமையை விளங்கப் படுத்திச் சொன்னேன். வெள்ளையின் முகத்தில் தைரிய ரேகை ஓடுவது தெளிவாகத் தெரிந்தது. வழமையாக நாங்கள் நிற்கும் வீதியின் மறு ஓரத்தில்தான் அவள் வருவதும் போவதும் நடைமுறையாக இருந்தது. ஆனால் அது அன்று மாறி இருந்தது. நாங்கள் நிற்கும் பக்கமாகவே அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். நெருங்கி வந்தவளிடம் வழமைபோல் கதைக்கும் தைரியம் இன்றி மார்கழியிலும் வேர்த்துப் போய் வெள்ளை நின்றான். எங்களைக் கடந்து செல்லும் அவள் வழமை மீறி எங்கள் அருகில் நின்றாள். நின்றவளை ஏறெடுத்துப் பார்க்கும் தைரியம் கூட வெள்ளைக்கு அப்பொழுது இருக்கவில்லை.

நின்றவள் நிமிர்ந்து பார்த்தாள். அண்ணலோ மண் நோக்கி நின்றான். தனது புத்தகங்களின் மத்தியில் இருந்த ஓட்டோகிராப் புத்தகத்தை எடுத்து நீட்டினாள். „இதிலை எழுதி கையெழுத்து வையுங்கோ' என்னால் நம்ப முடியவில்லை. வெள்ளையின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அவள் கை ஓட்டோகிராப் புத்தகத்தை நீட்டிய வண்ணம் இருந்தது. வெள்ளையின் கை ஓட்டோகிராப் புத்தகத்தை வாங்கிக் கொள்ள நீண்டது. உடனடியாக அவள் தனது கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். வெள்ளையும் தனது கையை திரும்ப எடுத்தக் கொண்டான். இப்பொழுது அவள் மீண்டும் ஓட்டோகிராப் புத்தகத்தை நீட்டினாள். வெள்ளை அதை வாங்கிக் கொள்ள எத்தனிக்க அவள் மீண்டும் தனது கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். அவள் கையை நீட்டுவதும் வெள்ளை ஓட்டோகிராப் புத்தகத்தை எடுத்துக் கொள்ள முயல்வதுமாக சில நிமிடங்கள் ஒரு விளையாட்டு ஒன்று அங்கே நடந்து கொண்டிருந்தது. நான் அதை இரசித்துப் பார்த்தக் கொண்டிருந்தேன்.

இந்த விளையாட்டால் ராஜேஸ்வரியின் முகம் முற்றாக மாறி இருந்தது. அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். இப்பொழுது அவள் என்னை நோக்கி நீட்டிய கையில் ஓட்டோகிராப் புத்தகம். 'இதிலை எழுதி கையெழுத்து வையுங்கோ' என்னைப் பார்த்து நேரடியாகவே சொன்னாள். என்னை அறியாமல் ஓட்டோகிராப் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன்.

'நீங்கள் மட்டும்தான் எழுதிக் கையெழுத்து வைக்கோணும். வேறை ஆரும் எழுதக் கூடாது' ராஜேஸ்வரி தனது குரலால் உத்தரவு போட்டாள்.

நான் வெள்ளையைப் பார்த்தேன். அவன் வேறு திசை பார்த்துக் கொண்டிருந்தான். நான் எழுதித் தருவதை வாங்கிச் செல்வதற்காக ராஜேஸ்வரி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன செய்வது என்று தெரியாத ஒரு நிலை இருந்த போதும் ராஜேஸ்வரி கேட்டதற்கு இணங்க மனதில் வந்ததை எழுதிக் கையெழுத்து இட்டு அவளிடம் நீட்டினேன். „நன்றி' சொன்னாள். அடுத்த வாரம் தனது ஊருக்குப் போவதாகச் சொன்னாள். வழமை போல் பார்த்தாள். மெதுவாகப் புன்னகைத்தாள். போய்விட்டாள். ஆக அவள் இவ்வளவு காலம் பார்த்ததும் சிரித்ததும் என்னைப் பார்த்துத்தானா? எனக்கு வெள்ளையை நேராகப் பார்த்துக் கொள்ள முடியாத நிலை. அவன் எவ்வளவு தூரம் அவளைக் காதலித்தான் என்பது எனக்குத் தெரியும். நான் சிந்தித்தக் கொண்டிருந்தேன். „வாறன் மச்சான" வெள்ளையின் குரல் என்னை மீட்டு வந்தது. நிமிர்ந்து பார்த்த போது வெள்ளையும், ராஜேஸ்வரியும் எதிர் எதிரான பாதையில் போய்க் கொண்டிருந்தார்கள்.