அஜீவனின் குறும்படம் மீதான ஒரு பார்வை
சப்பாத்தை அநாயசமாகக் கழட்டிவிட்டு சோர்வுடன் நடக்கும் கால்களுடன் வீட்டுக்குள் கமரா நுளைகிறது, கூடவே நாங்களும் நுளைவது போன்ற பிரமை.
ஜக்கற்றை கழட்டி கட்டிலில் போடுவது, கடித உறையைக் கிழித்து கிழித்த துண்டைக் கீழே போடுவது போன்ற சிறு சிறு விசயங்களில் கூட நிறைய கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது
ஒரு வார்த்தை பேச வேண்டிய அவசியமே நாயகனுக்கில்லை. கமராவும் ஒளியமைப்பும் அவனுக்காகப் பேசுகின்றன. கதையை நகர்த்த பின்னணியில் குரல்கள் பேசுகின்றன.
லுயிஸை சுவிசிற்கு அனுப்பிவிட்டு, ஒரு கடிதம் மூலமும் , தொலைபேசி அழைப்பின் மூலமும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இதை ஆக்கியவன்.
ஓரு இலட்சம் அனுப்பு என்ற கடித வாசகத்தைப் பார்த்து (கேட்டு) லுயிஸ் பெருமூச்சு விடுவதும், இன்னும் இரண்டு கிழமைக்குள் பணம் அனுப்பு என்று சொல்லி துண்டிக்கப்படும் தொலைபேசியின் பின்னணிச் சத்தமும், இருளையே பார்த்து நிற்கும் லுயிஸின் இலயாமையும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல் லுயிஸிற்கு தொலைபேசி வந்திருப்பதாகச் சொல்ல வருபவரைக் காட்டாது அவரின் நிழலை லுயிஸின் முதுகில் காட்டி மறையவிடுவது தேர்ந்த கலைஞனின் ஒளியமைப்பினூடான கமாராப் பார்வை.
கலாச்சாரம், சினிமா என்ற வெட்டிப் பேச்சுக்களின் பின்னணியில் லுயிஸ் லிப்றில் 10வது மாடிக்குப் போவதும், பின்னணியில் நண்பனின் அறிவுரை ஒலிக்க மீண்டும் லிப்றில் கீழே பயணிப்பதும் நல்ல சேர்க்கை.
யாழ்ப்பாண நிலமைகள், தங்கையின் கடிதம், தொலைபேசியில் ஒலிக்கும் தந்தையின் குரல், வெட்டிப்பேச்சு பேசும் குரல்கள் எல்லாம் மாறிமாறி ஒலிக்கும்போது, லுயிஸ் தனது வலது கைப் பெருவிரலை அசைப்பது சொல்ல வேண்டியதைச் சொல்லி நிற்கின்றது.
முற்பகுதியில் இயற்கையான ஒலியுடனும் பிற்பகுதியில் வாத்திய இசையுடனும் பின்னணி சேர்த்திருப்பது அருமை.
கதையின் நாயகனை விட்டு நாங்கள் அகலாத வண்ணம் எங்களை வைத்திருப்பதற்காக வேறு பாத்திரங்களை காட்டாதது உங்கள் எண்ணமானால், அறிவுரை தரும் நண்பனின் காலைக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாமே.
புலம்பெயர் தமிழ் இளைஞனே உன் தோளில் இத்தனை சுமைகளா?
அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆக்கியவன் அஜீவன்.
முல்லை
Showing posts with label எச்சில்போர்வை. Show all posts
Showing posts with label எச்சில்போர்வை. Show all posts
Saturday, September 27, 2003
Subscribe to:
Comments (Atom)