Friday, July 29, 2005

மின்சாரப் பாய்ச்சல்

தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சுங்கான், கந்தசாமி இருவரும் கைது செய்யப்பட்ட நேரமது. சுங்கானின் கடையின் உதவியாட்கள், வானொலி திருத்துவது தொடர்பாக பயிற்சி பெற வந்தவர்கள், நண்பர்கள் என பலர் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப் பட்டார்கள். நெருங்கிப் பழகியவர்களில் சிலர் தொல்லை வேண்டாமென ஊரை விட்டே பறந்துவிட்டார்கள்.

நீண்ட காலமாக சுங்கானின் வானொலி திருத்தும் நிலையம் பூட்டப் பட்டே இருந்தது. கடையை வாடகைக்குக் கொடுத்தவர் வாடகையுமில்லாமல், கடையுமில்லாமல் தலையில் துண்டு போடாத குறையாக அல்லாடிக் கொண்டிருந்தார். பொலிசாரின் புலன் விசாரணைக்கு அவரும் தப்பவில்லை. தனக்கு நடந்த விசாரணை பற்றி அவர் வெளியே சொல்லவுமில்லை. ஆனாலும் புலன் விசாரணையில் அவருக்கு நல்ல கவனிப்பு இருந்ததாக ஊரில் பேசிக் கொண்டார்கள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கடை உரிமையாளர், பதினேழு கிலோ மீற்றர் தூரத்தில் வசித்து வந்த சுங்கானின் தாயை ஒருநாள் ஊருக்குக் கூட்டிக் கொண்டு வந்தார். சுங்கானின் தாயின் மேற்பார்வையில் கடையைத் திறந்து பொருட்களை அகற்றுவது என்று கடையின் உரிமையாளின் ஏற்பாடு. ஆனால் கடையைத் திறக்க உரிமையாளர் உட்பட அனைவருக்கும் பயம். சுங்கான் ஏடாகூடமாக உள்ளே ஏதாவது செய்து வைத்து, கடையைத் திறக்கும் போது ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது. துணிந்து முன்னுக்கு வந்து கடையைத் திறக்க முற்பட்டவர்களை ஏற்கனவே பயந்து போயிருந்தவர்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். நேரம் போனதே தவிர யாருக்கும் கடையைத் திறக்கும் துணிவு வரவில்லை.

இறுதியாக சுங்கானிடம் வானொலி திருத்தும் கடையில் பணியாற்றிய செல்லையா என்பவர் கடையைத் திறக்க முன் வந்தார். இவர் சட்டத்தரணி மூலமாக பொலீசிடம் சரணடைந்து, வெற்றிகரமாக விசாரணைகளை முடிந்து விழுப் புண்கள் இல்லாமல் வெளிவந்தவர். செல்லையா கடையினைத் திறக்கும் போது, ஏதோ ஆண்டவன் தரிசனத்துக்கு ஏங்கும் பக்தர்கள் போல் வெளியே ஆவலாக மக்கள் கூட்டம் அலை மோதியது. ஒருவாறாக கடையைத் திறந்து, அங்கு ஆபத்தில்லை என்றவுடன் பலருக்கு ஆறுதலாக இருந்தது சிலருக்கு ஒன்றுமே ஆகவில்லையே என்று சப் என்றானது.

கடையில் உள்ள பொருட்களெல்லாம் சுங்கானின் தாய் பொறுப்பேற்றதன் பின்னர் கடை அம்மணமாக இருந்தது. இப்பொழுது அந்தக் கடையை வாடகைக்கு எடுக்க சில முதலாளிகள் உள்ளே புகுந்து நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் சுங்கானின் பக்கத்துக் கடையான லக்சுமி பகவான் தேனீர் கடை முதலாளியும் அடங்குவார். அவர் எதற்காக நோட்டம் விட வந்தார் என்றால், அவருக்கு சில மாதங்களாக மின்சார வாடகை அதிகமாக வந்திருந்தது. ஒருவேளை அது சுங்கானின் உபயமாக இருக்குமோ என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அப்பொழுது சுங்கானைக் கேட்க அவர் விரும்பவில்லை. இப்போ தெளிவு படுத்த நோட்டம் விட்டவருக்கு உண்மை வெளிச்சமானது. அவரது கடைக்குப் போகும் மின்சார வயரில் இருந்துதான் சுங்கான் கடைக்கு மின்சாரம் கொடுத்திருந்தார்.

கடைக்குள் இருந்தே லக்சுமி பகவான் முதலாளி சத்தமாகச் சொன்னார்,
"முதலிலை அந்த வயரைப் பிடுங்குங்கோ"

No comments: