Friday, June 20, 2008

குறும்பு


புலவர்கள் குறும்புகள் என்ற ஒரு புத்தகத்தை முன்பு ஒரு தடவை வாசித்து இருக்கிறேன். இன்று எனது நினைவுக்கு வந்த ஒரு புலவரின் குறும்பு இதோ.


ஒரு புலவன் நோயின் தாக்கத்தினால் படுக்கையில் விழுந்து மரணத்திற்கான நாழிகையை எண்ணிக் கொண்டிருக்கிறான். அந்தப் புலவனால் உணவையோ நீரையோ உட் கொள்ள முடியாத நிலை. அவனது பேத்தி அவன் அருகில் இருந்து அந்தப் புலவனுக்கான பணிவிடைகள் செய்து கொண்டிருக்கிறாள். அவள் ஒரு துணியை பாலினில் தோய்த்து அந்தப் புலவனின் வாயில் ஒவ்வொரு துளிகளாக விட்டுக் கொண்டிருக்கிறாள். பால் வாய்க்குள் விழுந்ததும் புலவனின் முகம் மாறிவிடுகிறது. இதை அவதானித்த அவனது பேத்தி, "தாத்தா பால் கசக்கிறதா? " எனக் கேட்டாள்.

புலவனிடம் இருந்து பதில் உடனேயே வந்தது "பாலும் கசக்கவில்லை துணியும் கசக்கவில்லை"

பேத்தி அப்பொழுதுதான் துணியைப் பார்த்தாள் அது அழுக்காக இருந்தது. மரணத்தின் இறுதி நேரத்தில் கூட குறும்பு அந்தப் புலவனை விட்டுப் போகவில்லை.


சமீபத்தில் மறைந்த எனது தாயார் தனது இறுதி நேரத்தினை நெருங்கிக் கொண்டு இருக்கும் போது எனது அக்காதான் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அக்காவுக்கு சிறிய இடைவேளை தேவைப்பட்ட பொழுது எனது அண்ணனின் மகள் காயத்திரியை அம்மாவைக் கவனித்துக் கொள்ளும்படி சொல்லிச் சென்று விட்டாள்.

அம்மா ஒரு தேனீர் பிரியை. அவருக்கு ஏதாவது குடிக்க வேண்டும் போல் இருந்திருக்கிறது. இதை அவதானித்த காயத்திரி "அப்பம்மா tea போட்டுத் தரட்டா" என்று கேட்டிருக்கிறாள்.




அம்மாவிடம் இருந்து உடனடியாகப் பதில் வந்தது "நீயோ? tea போடப் போறியோ..? ஐயையோ எனக்கு வேண்டாம்"

உயிர் விட்டுப் போகும் வேளையில் கூட சிலரை குறும்புகள் விட்டுப் போகாது

No comments: