Sunday, June 22, 2008

அம்மன் அருள்

அம்மாவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஆகவே சாமிகள் பேரில் ஆசாமிகள் அருள்வாக்கு சொல்லும் போது அப்படியே நம்பி விடுவார்.

எங்கள் ஊருக்கு அயலில் குசவெட்டி என்ற ஊர் இருக்கிறது. மட் பானைகள் செய்பவர்கள் இங்கு அதிகம். அதற்கேற்ற செம்பாட்டு மண்ணும் அங்கிருக்கிறது. இங்கிருக்கும் ஒருவர் உழைப்பதற்கு சுலபமான வழியாகக் கண்டு பிடித்ததுதான் அம்மன் கோவில்.

இவரது தொழில் மட்பானை செய்வதாக இருந்தாலும் இவருக்கு அடிக்கடி அம்மன் அருள் வருவதால் அந்தத் தொழிலை விட்டுவிட்டு வீட்டோடு கோவில் அமைத்து வெள்ளிக் கிழமைகளில் அருள்வாக்கு சொல்லத் தொடங்கி விட்டார். இதில் ஆச்சரியம் என்ன என்றால் வெள்ளிக்கிழமைகளில் மாலை ஆறு மணிக்கு சரியாக அம்மன் இவரிடம் வந்து விடும். அருள் வந்தவுடன் இவர் யார் மேலே தண்ணீர் தெளிக்கிறாரோ அவரை அல்லது அவரது குடும்பத்தை அழைத்து அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை தானே சொல்லி அதற்கான பரிகாரத்தையும் கூறிவிடுவார். அவர்களது பாதுகாப்புக்கு அம்மன் இருப்பதாகச் சொல்லி வீட்டில் வைப்பதற்கு பாவட்டம் இலைகளையும் கொடுத்து விடுவார். சிலருக்கு நோய் தீர மருந்தாக மண்ணை தண்ணீரில் குழைத்து உருட்டி சிறுசிறு உருண்டைகளாக உட்கொள்ளவும் கொடுத்து விடுவார். அருள்வாக்கு கேட்டவர்களும், நோய்க்கு மருந்து பெற்றவர்களும் பக்தியில் உருகி அம்மனுக்கு என்று காணிக்கைகளை செலுத்தி மகிழ்ச்சி அடைவார்கள்.

அம்மன் அருள் வருபவருக்கு சிறி என்று ஒரு மகன் இருந்தார். ஆள் கொஞ்சம் தண்ணீர் சாமி. பார்த்தார் எங்கள் ஆசாமி, இவரை எப்படிப் பயன் படுத்தலாம் என்று. இறுதியாக வழி ஒன்று கண்டு பிடித்து விட்டார். தனது மகனுக்கு காத்தவராயன் அருள் வந்து விடுகிறது என்று பக்தர்களுக்குச் சொல்லி வைத்து விட்டார். காத்தவராயன் என்ற சிறி மாலையில் கள்ளைக் குடித்து விட்டு வந்து தானும் அருள் வாக்கு என்று புலம்பும். பக்தர் கூட்டமும் அதை நம்பும். காத்தவராயனுக்கு என்று கள்ளும் கொண்டு வந்து பக்தர் கூட்டம் படைத்து தனது பக்தியைக் காட்டி நிற்கும். காத்தவராயனும் அதைக் குடித்துக் குடித்து ஏவறை விட்டபடியே அருள் சொல்லி வந்தவரை ஏய்க்கும்.

இந்த இடத்திற்கு 1962 மாசி மாதம் 21ம் திகதி, எனது தந்தை மரணிப்பதற்கு முதல் நாள் வரவேண்டியிருந்தது. அன்று அம்மன் சொன்ன வாக்குகள் உண்மையாக இருந்ததால் அம்மாவிற்கு சாமி மேல் அதீத நம்பிக்கை வந்து விட்டது. ஆதனால் ஒவ்வொரு வெள்ளியும் அம்மா எங்களையும் அழைத்துக் கொண்டு இந்தக் கோயிலுக்கு வந்து விடுவார்.

எனது காலில் ஒரு தடி ஒன்று குத்தியதால் ஏற்பட்ட காயத்திற்கு அம்மா என்னை இங்கேதான் அழைத்து வந்தார். மருந்தாக பாவட்டம் இலையும் மண் உருண்டையும் தான் கிடைத்தது. பேசாமல் வைத்தியசாலைக்குப் போயிருந்திருக்கலாம். ஆனால் அம்மாவின் அம்மன் மீதான நம்பிக்கை அதைத் தடுத்து விட்டது. காயம் பெருத்ததே தவிர மாறவில்லை. ஆனாலும் அம்மாவின் நம்பிக்கையோ மாறவில்லை.

அன்றும் பூசைக்கு முன்னர் அம்மன் பூசாரியின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தேன். அம்மா வந்திருந்த பக்தர் கூட்டத்துக்குள் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் கவனித்தேன். பக்தர்கள் கூட்டத்துக்குள் இருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களில் பூசாரியின் ஆட்களும் கலந்து இருந்தார்கள். அவர்கள் பக்தர்கள் போல் மற்றவர்களுடன் கலந்திருந்து அவர்கள் பிரச்சினைகளைக் கேட்டு விட்டு வந்து பூசாரியிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தார்கள். திண்ணையில் இருந்த என்னை அவர்கள் கவனிக்கவில்லை. அல்லது சட்டடை செய்யவில்லை. அவர்கள் சிவப்பு நிற சாறி கட்டி வந்தவருக்கு உள்ள பிரச்சினை இது, பச்சை நிற சாறி கட்டி வந்தவருக்கான பிரச்சினை இது என ஒவ்வொன்றாக அருள் வருவதற்கு முன்னர் அம்மன் பூசாரிக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். அன்றைய பூசையில் திண்ணையில் நான் கேட்ட விடயம் சம்பந்தமானவர்களை மட்டும் அம்மன் அழைத்து பரிகாரம் சொல்லிக் கொண்டிருந்தது.

அம்மாவிற்கு இவர்களது தில்லு முல்லுகளை விளக்கும் பக்குவம், வயது எனக்கு அப்போது இருக்கவில்லை. ஆனாலும் எனது காலிற்கான சிகிச்சை வைத்தியசாலையில் தரப்பட்டு அது குணமானதின் பின்னர் அம்மாவில் இவர்கள் பற்றிய அபிப்பிராயம் குறைந்து மறைந்து போனதை என்னால் காண முடிந்தது.

பின் நாளில் அம்மாவுடனான தொலைபேசி உரையாடல்களில் அம்மா முதலில் கேட்பது "எப்பிடி சுகமாயிருக்கிறாயா?" என்று. நான் "ஓம்" என்று பதில் தந்தவுடன் அவரிடம் இருந்து வருவது இதுதான். "எனக்குத் தெரியும் நீ சுகமாய் இருப்பாய் எண்டு. நான்தானே ஒவ்வொரு வெள்ளியும் இஞ்சை இருக்கிற கோயிலுக்குப் போய், என்ரை பிள்ளைகள் நல்லா இருக்கோணும் எண்டு கடவுளை வேண்டி அர்ச்சனை செய்யிறனான். "

அம்மாவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம்.

No comments: