Friday, April 04, 2008

ஏனம்மா?

அண்ணன் தொலைபேசியில் சொன்னார். அம்மாவுக்கு உடம்புக்கு சிறிது இயலாமல் இருப்பதால் வைத்தியசாலையில் அனுமதித்திருப்பதாக. கூடவே வைத்தியசாலை தொலைபேசி இலக்கத்தையும் தந்தார்.

நான் தொலைபேசியில் அழைத்தபோது அம்மாவுடன் அக்கா கூட இருந்தாள். பெரிதாக ஒன்றும் இல்லை கவலைப் படாதே என்று நம்பிக்கை தந்தாள்.

„அம்மா பக்கத்திலேயே இருக்கின்றா? கதைக்கலாமா?“ என்றேன்.

அக்கா „அம்மாவிடம் தொலைபேசியைக் கொடுக்கிறேன“; என்றாள்.

„அம்மா“ என்றேன் எனது அடுத்த வார்த்தைகள் வருமுன் படுக்கையில் இருந்து சுவாசத்துக்காகப் போராடும் என்; தாயிடம் இருந்து கேள்வி வந்தது.

„எப்பிடி இருக்கிறாய்? சுகமாக இருக்கிறாயா?“

சாவின் பிடியில் இருந்தாலும் மகனின் நலம் விசாரிக்கும் தாய்மை அது.

„நீங்கள் எப்பிடி இருக்கிறீங்களம்மா?“

„போக வேண்டிய காலம் வந்திட்டுது எண்டு நினைக்கிறன்.“ அம்மா என்னுடன் கதைக்கும் போது நகைச்சுவை உணர்வு கலந்து கதைப்பார்;. அன்றும் அது இருக்கக் கண்டேன்.

„நான் வந்து உங்களைப் பார்க்கும் வரை நீங்கள் போக மாட்டீங்கள்“ வழக்கம் போல் நானும் நகைச்சுவையாகச் சொன்னேன்.

„சரியான கஸ்ரமாக இருக்குதடா“ ஒரு நாளும் அம்மா இப்படி என்னிடம் சொன்னதில்லை. கேட்ட உடன் மனது கனத்தது. அம்மா மனதளவில் மிகவும் தைரியமானவள். ஆனாலும் அன்று அவரது பேச்சில் அதைக் காணவில்லை.

அக்காவிடம் கேட்டேன். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை யோசிக்காதே என்றாள்.

அடுத்தநாள் வேலை இடத்திற்கு அக்காவிடம் இருந்து தொலைபேசி வந்தது. அது சோகத்தையும் சேர்த்து சுமந்து வந்தது.

அம்மா தனது இறுதிப் பயணத்தை மெதுவாகத் தொடங்கி விட்டார். ஆகவே அவரைத் தொந்தரவு செய்யாமல் மருத்துவத்தை நிறுத்துகிறோம் என வைத்தியர்கள் அறிவித்து விட்டார்களாம்.

நான் இப்பொழுது நியூசிலாந்துக்குப் பயணமாகிறேன். என் வாழ்க்கையில் எல்லாமாக நின்றவள் இல்லாமல் பொன செய்தி கேட்டு இடிந்து போய் போகிறேன். அவளது இறுதிப் பயணத்தில் இளைய மகனாய் நின்று செய்ய வேண்டிய கடமையைச் செய்யப் போகிறேன்.

கடவுள் எல்லா இடமும் இருநது பணி செய்ய முடியாமல் தாயைப் படைத்தான் என்பார்கள். எங்கள் தாய் கடவுளாகவே இருந்து எங்களை பார்த்திருக்கிறாள். அவளை இறுதியாகச் சந்திக்க நாளை நான் நியூசிலாந்துக்குப் போகிறேன். நான் வந்து பார்க்கும் வரை ஏன் காத்திருக்க வில்லை என்று சத்தம் போட்டு கேட்கப் போகிறேன்.

Monday, March 24, 2008

நான் யார்? நான் யார்? நீ யார்?

எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் படிப்பு, உணவு மறந்து பார்த்த காலம அது. வருடம் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு எம்.ஜி.ஆர். படங்களே வெளிவந்து கொண்டிருந்த பொழுது, எம்.ஆர். ராதாவின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு 1968ம் வருடம் எம்.ஜி.ரின் எட்டுப் படங்கள் வெளியாகி இருந்தன. ஒரு மாதத்திற்கு ஒரு படம் பார்ப்பதற்கே வீட்டில் அனுமதி இருந்தது. அதனால் அடுத்தடுத்து வந்த எம்.ஜி.ஆர். படங்களைப் பார்க்க முடியாது நான் திக்குமுக்காடிப் போனேன்.

குடியிருந்த கோயில் படம் எனது நகரத்தில் திரையிடப் பட்டிருந்தது. ஆனால் பார்ப்பதற்கான நேரம்தான் சரி வர அமையவில்லை. அந்த மாதத்திற்கான படம் ஒன்று ஏற்கனவே பார்த்தாயிற்று. இனி அடுத்த மாதம்தான் படம் பார்க்க முடியும். அதுவரை தியேட்டரில் இருந்து குடியிருந்த கோயில படத்தை எடுக்கமால் இருக்க வேண்டும். இந்த நிலையில் எனக்கிருந்த ஒரே ஒரு ஆறுதல், இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்தான். அதில் ஒலிபரப்பாகும் குடியிருந்த கோயில் திரை விமர்சனம் மற்றும் திரைப்பாடல்களை கேட்டு, படத்தினைப் பற்றிய கற்பனையில் மூழ்கியிருப்பேன்.

அன்று பண்டிதர் பரந்தாமன் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் எனது அண்ணன் ரி.நித்தியகீர்த்தி (ஏ.ரி.நிதி) எழுதி இயக்கிய மரகத நாட்டு மன்னன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். நாடக ஒத்திகை பார்ப்பதற்கு முன்னர் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்தவேளை வானொலியில் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இருந்து நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற ரி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல் ஒலி பரப்பானது. நான் ஓடிப் போய் வானொலியை கொஞ்சம் சத்தமாக வைத்தேன். பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பண்டிதர் பரந்தாமன் தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டிருந்தார். பாடலை இரசிக்கிறார் என எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பாடல் முடிந்ததும் அவரிடம் இருந்து வந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.


„இந்தப் பாடல் சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு. இதை ஒரு பைத்தியக்காரன்தான் பாடுவான். எம்.ஜி.ஆர். படத்தில் இப்படி ஒரு பாடலா?“ என அவரிம் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்து எனது முகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
அதிர்ஸ்டவசமாக அடுத்த மாதமும் எங்கள் ஊரில் குடியிருந்த கோயில் திரைப் படம் காண்பிக்கப் பட்டுக் கொண்டிருந்ததால் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. படம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து "நான் யார்? நான் யார்? நீ யார்? ..." பாடல் எப்பொழுது வரும் என்ற நினைவே எனக்கு அதிகமாக இருந்தது. பாடலும் வந்தது எனக்குப் பரவசமும் கூடவே வந்தது. வாகன விபத்தில் சிக்கிய எம்.ஜி.ஆர். சித்தம் குழம்பி பாடும் பாடலாக நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.

பைத்தியக்காரத்தனமான பாடல்தான். ஒரு பைத்தியக்காரன் பாடுவதாகத்தான் அந்தப் பாடல் இருக்கிறது என ஓடிப்போய் பண்டிதர் பரந்தாமனிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் சொல்லவில்லை.

இந்த சம்பவத்தை நான் எழுதும் போது சமீபத்தில் வெளிவந்த வம்புச் சண்டை என்ற திரைப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் சத்தியராஜ் மனநிலை குன்றியவராக நடித்திருந்தார். படத்தில் அவர் பாடுவதாக இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார்கள். ஆக பைத்தியக்காரத்தனமாகத் தென்பட்டாலும் சில பாடல்கள் நினைவை விட்டு அகலாதவை.

இந்தப் பாடல் சம்பந்தமாக அதை எழுதிய புலமைப் பித்தன் இப்படிச் சொல்கிறார்.
புலவர் படிப்பு படித்துவிட்டு கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் என்னை சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் எழுதுகிற வாய்ப்பு. யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதிய பாடல்தான் -
நான் யார்? நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவர் யார்- யார்? தாய் யார்? மகன் யார்? தெரியார்; தந்தை என்பார் அவர் யார்- யார்? உறவார்? பகை யார்? உண்மையை உணரார்; உனக்கே நீ யாரோ? வருவார்; இருப்பார்; போவார்; நிலையாய் வாழ்வார் யார் யாரோ?
'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!' என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்கிற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி இது. பட்டினத்தான் கேட்டாலும் இதைத்தான் கேட்பான். பட்டினத்தானும் பைத்தியக்காரனும் ஒன்றுதானே...

Monday, March 10, 2008

நாலுறூள்

ங்கில எழுத்துக்களைத் தொடுத்து அழகாக எழுதிப் பழகுவதற்கு நாலுறூள் அப்பியாசப் புத்தகம் அன்றைய காலத்தில் பாடசாலையில் கட்டாயமாக இருந்தது. ஆனால் எப்பொழுதும் வியாபார நிலையங்களில் இதற்குத் தட்டுப்பாடாகவே இருந்து வந்தது.

எனது விற்பனை நிலையத்தில் அந்தக் குறை வராமல் பார்த்துக் கொண்டேன். எனது நிறுவனத்தில் கோடு போடுவதற்கான இயந்திரம் ஒன்று இருந்ததால் இது என்னால் முடிந்தது. ஆனாலும் அது ஒன்றும் இலகுவான வேலையல்ல. நீண்ட நேரங்களை எடுத்து விடும். பொறுமைகளைப் பெரிதாகச் சோதித்து விடும்.

நாலுறூள் அப்பியாசப் புத்தகத்தில் நடுவில் இரு கோடுகள் நீலத்திலும், அதன் மேல் கீழ்ப் பகுதியில் இரு கோடுகள் சிவப்பிலும் இருந்தன. அன்றைய வசதியின் பிரகாரம் இந்தக் கோடுகளைப் போடுவதற்கு நீலக் கோடுகளுக்காக ஒரு தடவையும் சிவப்புக் கோடுகளுக்காக ஒரு தடவையும் என தாள்களை இரண்டு தடவைகள் இயந்திரத்தில் போடவேண்டி வரும். இதில் வேலை அதிகம் என்றாலும், இரு தடவைகள் தாள்களை ஓட விடும் போது மைகள் சிந்தி விட்டால் சேதாரமும் ஏற்படும். இந்தக் காரணங்களால்தான் அப்பியாசப் புத்தகங்கள் தயாரிப்பவர்கள் நாலுறூள் அப்பியாசப் புத்தகத்தைப் பற்றி அதிகம் கவனம் எடுக்கவில்லை.

ஆனாலும் மொத்த வியாபாரத்தைத் தவிர்த்து எனது நகரத்தில் உள்ள பாடசாலைகளுக்குத் தேவையான அளவு மட்டுமே தயாரித்து விற்பது எனத் தீர்மானித்து நாலுறூள் அப்பியாசப் புத்தகத்தை அளவாகத் தயாரித்துக் கொண்டிருந்தோம். அவற்றை வியாபார நிலையத்தில் மட்டுப் படுத்தப் பட்ட வகையிலேயே ஒருவருக்கு ஒன்று, இரண்டு என விற்பனை செய்து கொண்டிருந்தோம். மொத்த வியாபாரம் என்பது நாலுறூள் அப்பியாசப் புத்தகத்தில் இல்லை என விற்பனை நிலையத்தில் எல்லோருக்கும் அறியத் தரப் பட்டிருந்தது.

அன்று நான் விற்பனை நிலையத்தில்தான் இருந்தேன். விற்பனை சூடு பிடித்திருந்தது.

"ஒரு கொப்பிக்கு மேல் தர ஏலாது.. "என தில்லையண்ணா ஒரு சிறுமிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இது வழக்கமாக நாலுறூள் அப்பியாசப் புத்தகம் வாங்குபவர்களுடன் நடக்கும் ஒரு விசயம். அத்தோடு தில்லையண்ணா மிகவும் பக்குவமாகக் கதைத்து வியாபாரம் செய்பவர். எனவே நான் அதில் அக்கறை காட்டவில்லை. அந்தச் சிறுமி சலிப்புடன் செல்வதை அவதானித்து விட்டு எனது வேலையில் கவனம் செலுத்தினேன். மீண்டும் அதே சிறுமி.

தில்லையண்ணா சற்று இறுக்கமாகச் சொன்னார்.
"ஆரெண்டாலும் தரேலாது. ஒராளுக்கு ஒரு கொப்பிதான்."

சிறுமி கோபமாத் திரும்பிச் சென்றாள். அவளுக்காக காத்திருந்த கார் அவளையும் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்றது.

"என்ன தில்லையண்ணா என்ன விசயம்?" பிரச்சினை ஒன்று உருவாகப் போகிறது என்ற அச்சத்துடன் கேட்டேன்.

"நாலுறூள் கொப்பி நூற்றைம்பது வேணுமாம். ஆளுக்கு ஒண்டுதான் தருவம் எண்டு சொன்னனான்." என்றார் தில்லையண்ணன்.

"தம்பி வந்திட்டுப் போனது ஜட்ஜின்ரை மகள். தாய்க்காரி இங்கிலிஸ் ரீச்சரா இருக்கிறா. ஒருவேளை வகுப்பிலை எல்லா பிள்ளைகளுக்கும் சேர்த்து வாங்கிறதுக்கு வந்திருக்கலாம்." என்று அப்புத்துரையண்ணை காதுக்குள் மெதுவாகச் சொன்னார்.

"காருக்குள்ளை ஆர் இருந்தவை? " அச்சத்துடன் கேட்டேன்.

"ஜட்சும் பெண்சாதியும்" சாதாரணமாகச் சொன்னார் தில்லையண்ணா.

"அண்ணை கேட்டது ஆரெண்டு தெரிஞ்சு கொண்டே இல்லை எண்டனீங்கள்?"
சற்று எரிச்சல் எனக்கு ஏறியிருந்தது.

"ஆராயிருந்தால் என்ன தம்பி? ஆளுக்கு ஒரு கொப்பிதான் எண்டால் ஜட்ஜ் என்ன புரொக்றர் என்ன? எல்லாம் ஒண்டுதான். " பேச்சு மாறாத தில்லையண்ணை சொல்லச் சொல்ல எனக்குத் தலையைச் சுற்றியது.

பாடசாலைப் பொருட்களின் விலை இதுதான் என்று நிர்ணயிக்கப்பட்டு, அதன் விலையில் இருந்து ஒரு சதமேனும் கூட்டி விற்றால் பெரும் அபராதம் கட்ட வேண்டும் என்ற இறுக்கமான சட்டம் இருந்த நேரமது. மேலும் விற்பனை நிலையத்தில் ஒரு பொருளை வைத்துக் கொண்டு இல்லை என்பது அதனிலும் மேலான குற்றம். அதுவும் நீதிபதியே வந்து பார்த்துப் போன விடயம். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த போது, மூளை அறிவித்தது. இருக்கிற கொப்பிகளை அப்புறப் படுத்தி விடு என்று.

தில்லையண்ணாவிற்குச் சொன்னால் சரி வராது. போய்யே பேசாத மனிதர் அவர். வியாபாரம் என்றாலும் நேர்மை முக்கியம் அவருக்கு. எனவே அப்புத்துரையண்ணையிடம் சொன்னேன். "இருக்கிற நாலுறூள் கொப்பிகளை எடுத்துக் கொண்டு போய் என்னுடைய காருக்குள் வைத்து விடுங்கள்." என்று. "வீட்டுக்குப் போய் அண்ணனிடம் நடந்த விசயத்தைச் சொல்லி விடு" என்று மகாலிங்கத்திடம் சொன்னேன். அப்பொழுது எனது அண்ணன் எனது நகரத்தில் ஒரு சட்டத்தரணியாக இருந்தார்.

நிலைமை அறிந்து மகாலிங்கம் உடனடியாக வீட்டுக்கு ஓடினான். அப்புத்துரை அண்ணன் நாலுறூள் கொப்பிகளை கார்ட்போர்ட் பெட்டிகளுக்குள் வைத்துக் கட்டி மற்றவர்கள் அறியாமல் வெளியே நின்ற எனது வாகனங்களுக்குள் கொண்டு போய் வைத்துக் கொண்டிருந்தார். கடைசிப் பெட்டியை அவர் கொண்டு போய் வைத்து விட்டு வியாபார நிலையத்துக்குள் நுளையவும் பொலிஸ் ஜீப் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

"யாரடா இங்கே முதலாளி?"

நான் எதிர்பார்த்ததுதான். அப்பொழுது மாணிக்கராஜா என்பவர்தான் எங்கள் நகரத்தில் இரண்டாவது பொலிஸ் அதிகாரியாக இருந்தார். அதிகாரத்தை அதிகமாகவே காட்டுபவர். கொஞ்சமாக அவருடன் வாக்கு வாதம் செய்தால் போதும் பொறுமை காட்டாமல் கை கால்களால் பதில் சொல்லக் கூடியவர். மரியாதையை அவரிடமிருந்து எதிர்பார்ப்பது முட்டாள் தனம். நகரத்து ரவுடிகளை சட்டைக் கொலரில் பிடித்து இழுத்துச் செல்வதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவரது பெயரைக் கேட்டாலே சற்று உதறல் எடுக்கும். அப்படியானவர் எனது விற்பனை நிலையத்துக்கு முன்னால், அதுவும் உதவிக்கு நான்கு சிங்களப் பொலிசாருடன். அவர் சந்திக்க வேண்டிய ஆளாக வேறு நான் இருக்கிறேன்.

பாடசாலை முடிந்து விற்பனை களை கட்டியிருந்த நேரம். மாணிக்கராஜாவின் குரலைக் கேட்டவுடன் மெதுவாக வாடிக்கையாளர்கள் விலகிப் போகத் தொடங்கினார்கள்.

"என்னய்யா விசயம்?" அன்பாக அவரிடம் கேட்டது அப்புத்துரையண்ணன்.

"ஜட்ஜின்ரை மகளுக்கே கொப்பி இல்லை எண்டு சொன்னீங்களாம். என்ன துணிவடா உங்களுக்கு..? "

"இல்லை எண்டு சொல்லேல்லை. ஒண்டு தல்லாம் எண்டுதான் சொன்னனான்." தில்லையண்ணன் தனது நியாயத்தை நிலை நாட்ட வந்தார்.

"பொறுங்கோ அண்ணன்.. நான் கதைக்கிறன்... " அவசரப் பட்டு அவரைத் தடுத்தேன். அவர் வாய் தடுமாறி ஏதாவது சொல்லப் போக உதையை நான் எல்லவோ வாங்க வேண்டி வரும்.

"இஞ்சை பாருங்கோ.. கொப்பி ஒண்டுதான் இருந்தது. அதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். மற்றும்படி வைச்சுக் கொண்டு நாங்கள் இல்லை எண்டு சொல்லேல்லை. "

சிறிது நேர அமைதி.

"எங்கையாவது கொப்பிகளை மாத்திட்டியோ?" சின்னதாக ஒரு நக்கல் அவரிடம் இருந்து வெளி வந்தது.

முன் எச்சரிக்கையாக அவரை விட்டு நாலடி தள்ளியே நின்றேன்.

"அப்பிடி ஒரு அவசியம் எங்களுக்கு இல்லை. ஏனெண்டால் நாங்களே கொப்பி செய்யிறனாங்கள். அவருக்குத் தேவை எண்டால் சொல்லுங்கோ, இண்டைக்குச் செய்து போட்டு நாளைக்கு குடுக்கிறம். "

"அதென்னடா நாளைக்கு.. கடைக்குள்ளை கொப்பி இருந்துதெண்டால்..." சொல்லிக் கொண்டே கடைக்குள் நுளைய முற்பட்டார்.

"ஐயா.. கொப்பி இல்லை ஐயா. " அப்புத்துரை அண்ணன் தைரியமாகச் சொன்னார்.

தில்லையண்ணன் குளப்பமாகப் பார்த்தார். வியாபாரம் மும்மரமாக நடந்து கொண்டிருக்கையில் அப்புத்துரை அண்ணன் எல்லாவற்றையும் அப்புறப் படுத்திய விடயம் தில்லையண்ணனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

உள்ளே நுளைய முற்பட்ட மாணிக்கராஜா சற்றுத் தயக்கம் காட்டினார். இது எனக்கு சாதகமான ஒரு அறிகுறியைத் தந்தது.

"இஞ்சை பாருங்கோ இப்ப வியாபாரம் நடக்கிற நேரம். தேவையில்லாமல் குளப்பத்தை ஏற்படுத்தாதையுங்கோ. கடைக்குள்ளை நுளையிறது எண்டால் அனுமதியோடை வாங்கோ."

சிவந்த அவரது முகம் இன்னும் சூடேறி கொதிப்பது தெரிந்தது. ஏதோ நடக்கிறது என்று அறிந்து வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் வேறு கூடியிருந்தது. எனது வாய் உளறிக் கொட்டியதற்கு இப்பொழுது என்ன நடக்கப் போகிறது என்ற பயம் எனக்குள் இருந்து வியர்வையாக வெளியே கொட்டிக் கொண்டிருந்தது.

ஒரு தடவை தனது பார்வையை சுற்றி நோட்டம் விட்டவர், என்ன காரணமோ தெரியவில்லை. "பொறு வாறன். அரை மணித்தியாலத்துக்குள்ளை வாறன். ஒரு இடமும் போகக் கூடாது. கடையிலையிலேயே நிக்கோணும். இண்டோடை உன்ரை கடைக்கு சீல் வைக்கிறன்" எள்று உறுமி விட்டு ஜீப்பில் ஏறிப் போனார்.

சிறிது நேரத்தில் அண்ணனும், எனது அக்காவின் கணவரும் வந்தார்கள். அக்காவின் கணவரும் ஒரு சட்டத்தரணிதான். அவர் இலண்டனில் சொலிசிற்றேர்ஸ் முடித்து விட்டு ஊருக்கு வந்திருந்தார். இருவரிடமும் விசயத்தைச் சொன்னேன். ஆனால் மாணிக்கராஜாவின் குணாதிசயங்களை மட்டும் அவர்களிடம் மறைத்து விட்டேன். இருவரும் என்னிடம் தகவல்களைப் பெற்றுக் கொண்டு காவல் நிலையத்துக்கு மாணிக்கராஜாவைச் சந்திக்கச் சென்றார்கள்.

அரை மணித்தியாலங்கள் கடந்திருக்கும். மீண்டும் மாணிக்கராஜா கடைக்கு முன்னால் வந்து நின்றார்.

அப்புத்துரையண்ணன் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்.
" தம்பி உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். "

அரை மணித்தியாலத்துக்குள் வருகிறேன் என்று சொல்லிப் போனவர் சொன்னபடி அரை மணித்தியாலத்துக்குள் வந்து நிற்கிறார். போனவர்கள் சொதப்பி விட்டார்களோ இல்லை இவரை அவர்கள் சந்திக்கவே இல்லையோ என்ற குழப்பத்துடன் எழுந்து முன்னுக்குப் போனேன்.

"என்னடா நீ..? இதுக்குப் போய் லோயர்ஸை அனுப்பியிருக்கிறாய். அவங்கள் என்னவோ வியாபாரம் நட்டம். பெயர் கெட்டுப் போச்சுது, மான நட்டம் எண்டு கனக்க கதைக்கிறாங்கள். ஜட்ஜ் சொன்னவர் எண்ட படியால் வந்து கேட்டன். கேக்காட்டில் பிழை எல்லோ? அவர் நாளைக்கு போய்க் விசாரிச்சனியோ எண்டு கேட்டால் என்ன சொல்லுறது? சரி இந்தப் பிரச்சினையை இதோடை விடு. நான் சமாளிக்கிறன். நீயும் ஆக்களைப் பாத்து வியாபாரம் செய்யப் பழகிக் கொள் லோயர்சுக்கும் சொல்லிவிடு, பிரச்சினை எல்லாம் முடிஞ்சுதெண்டு." சொல்லி விட்டு தோளில் தட்டி நட்பு பாராட்டி விட்டுச் சென்றார்.

அடுத்த நாள் காலையிலேயே அப்புத்துரை அண்ணனுக்கு பாடசாலைக்கு 150 நாலுறூள் கொப்பிகளைக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டிய முக்கியமான வேலை ஒன்று இருந்தது.

Sunday, May 13, 2007

வார்த்தை தவறிவிட்டாய்….

அவரை சாந்தன் அண்ணை என்றே அழைப்பேன். ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் அவர் செய்த செயல் ஒன்று ஊரில் பலரை வியக்க வைத்திருந்தது.

சாந்தன் அண்ணை இளமையான காலத்தில் நண்பர்களுடன் கூத்தடித்திருக்கிறார். கும்மாளம் போட்டிருக்கிறார். சுருக்கமாகச் சொல்வதானால், சாதாரண இளைஞனுக்கு உள்ள அத்தனை சுபாவமும் கொண்டிருந்தார். சாந்தன் அண்ணையின் நெருங்கிய நண்பனான பாலா சிங்களப் பகுதி ஒன்றில் அரச உத்தயோகத்தில் இருந்தார். ஒருநாள் ஒரு சிங்களப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தார். அவளை திருமணம் செய்வதாகச் சொல்லியே பாலா ஊருக்கு அழைத்து வந்திருந்தார். ஆனால் நடந்ததோ வேறு. அவளை நண்பர்களுக்கு விருந்து வைத்து விட்டு ஊருக்குத் திருப்பி அனுப்புவதே. அதாவது காரியமானதும் துரத்தி விடுவதே அவரது நோக்கமாக இருந்தது. அன்று தடல் புடலான பார்ட்டி. கருஞ் சாராயம் குடித்து நண்பர்கள் வட்டம் போதை ஏற்றிக் கொண்டிருந்து. சாந்தன் அண்ணையும் அந்த வட்டத்தில் இருந்தார் மதுவுடன் ஐக்கியமாகி இருந்தார். நண்பர்கள் ஒவ்வொருவராக அந்த வீட்டின் மூலையில் இருந்த அறைக்குள் போய் வந்து கொண்டிருந்தனர். அதற்குள்தான் அந்த சிங்களப் பெண் இருந்தாள்.

சாந்தன் அண்ணையின் முறை வந்தது, போதையுடன் அறைக்குள் நுளைந்தார். ஆசையுடன் நுளைந்தவருக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சிங்களப் பெண் இவரது காலைக் கட்டிப் பிடித்துக் கதறத் தொடங்கி விட்டாள். வந்தவர்கள் எல்லோரது காலையும் பிடித்துக் கெஞ்சிப் பார்த்தேன் ஒருவரும் இரங்கவில்லை. நீங்களாவது உதவி செய்யுங்கள் உங்கள் நண்பர் திருமணம் செய்வதாகக் கூட்டி வந்து என்னை சீரழித்து விட்டார். தனக்கு இனி வாழ்வே இல்லை என அழத் தொடங்கி விட்டாள். சாந்தன் அண்ணையின் போதை இறங்கி தனது நண்பன் பாலா செய்த கொடுமை விளங்கியது. அறையை விட்டு வெளியே வந்தார். பாலாவைப் பார்த்து அர்ச்சனை செய்யத் தொடங்கினார். ஆனால் ருசி கண்ட மற்றைய நண்பர்களோ பாலாவின் பக்கமே நின்றார்கள். எதுவுமே தனியாளான தன்னால் முடியாது என்று தெரிந்து கொண்ட சாந்தன் அண்ணை, அந்த அறையின் வாசலை மறைத்த படி நின்று இறுதி அறிவிப்பை அங்கே சொன்னார். இனி யாரும் இவளைத் தொடக் கூடாது. ஏனென்றால் இனி இவள் என்ரை பெண்சாதி. ஓம் நான் இவளைக் கலியாணம் கட்டி இவளுக்கு வாழ்வு குடுக்கப் போறன். நீங்கள் யாருமே சினேகிதன் என்று சொல்லி இனி என்னட்டை வரக் கூடாது.

அதன் பின்னர் ஊரில் உள்ள சிறிய நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு கிடைக்கும் சம்பளத்தில் அவளுடன் சேர்ந்து குடும்பம் நடத்தத் தொடங்கினார். கதைகள் மெல்ல மெல்லக் கசிந்த போது யாருமே சாந்தன் அண்ணையைப் பற்றியோ அந்த சிங்களப் பெண்ணைப் பற்றியோ கேவலமாகக் கதைக்க வில்லை. அவர்களது வாழ்க்கையும் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது, அதுவும் நீண்ட காலத்துக்கு அல்ல. அவர் வேலை செய்த நிறுவனத்தை ஒரு நாள் நட்டம் என்று பூட்டி விட்டார்கள். தெரிந்த தொழில்கள் சில செய்து பார்த்தார். எதுவுமே சரிப்பட்டு வராததால், முகவர் ஒருவரின் உதவியால் சவூதியில் கட்டிட வேலை கிடைத்து இரண்டு வருட ஒப்பந்தத்தில் சவூதிக்குப் பயணமானார்.

எனது நண்பன் ஒருவன் சினிமா தியேட்டர் வைத்திருந்தான். அவனது தியேட்டருக்கு என்றால் நான் இரண்டாவது ஆட்டத்திற்கே சினிமா பார்க்கப் போவதுண்டு. அன்றும் அப்படித்தான் போயிருந்தேன். தியேட்டரில் அதிக மக்களில்லை. இலவச அனுமதி அதுவும் முதல் வகுப்பில், ஆறுதலாக அமர்ந்து படத்தில் லயித்திருந்தேன். சிறிது நேரத்தில் புரிந்து கொண்டேன் எனது இருக்கைக்கு சற்றுத் தள்ளியும் ஒரு சினிமா நடந்து கொண்டிருக்கிறது என்று. இடைவேளை வரை காத்திருந்து விளக்குகள் போட்டதும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தேன். மனது வலித்தது என்பார்களே அதை அன்று உணர்ந்தேன்.

ஒரு பெண்ணின் வாழ்வு சிதையக் கூடாது என்று எவளுக்கு சாந்தன் அண்ணை அன்று வாழ்வு கொடுத்தாரோ அவள் இன்று எங்கள் ஊர் காவல் நிலையத்தில் கடமையாற்றும் ஒரு சிங்களப் பொலிசின் தோளில் சாய்ந்திருந்தாள். இடைவேளைக்கு நண்பன் சோடாவுடன் வந்தான். என்ன இது என்று கேட்டேன். கனகாலம் இது நடக்குது என்று சொன்னான்.

சாந்தன் அண்ணையை நினைத்துப் பார்த்தேன். பாவம் அவர். தான் வாழ்வு கொடுத்தவள் கலங்கக் கூடாது என்றும் தனது மகளும் மகனும் நன்றாக வாழ வேண்டும் என்று சவூதியில் கஸ்ரப் பட்டு வேலை செய்து கொண்டிருப்பார். இவளுக்காக தன்னை வருத்தி தனது வாழ்வை கரைத்துக் கொண்டிருப்பார்.

தியாகங்கள் கூட சிலவேளைகளில சிலருக்கு சரியாகப் புரிவதில்லை.

Wednesday, October 25, 2006

அந்த ஒரு மாதம்

புத்தாம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது எனது பாடசாலையில் புதிதாக இணைந்தவன்தான் வைத்திலிங்கம். பாடசாலையில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்திலேயே அவனது நகரம் இருந்தது. அவன் படிப்பில் சொல்லிக் கொள்ளும் வண்ணம் திறமையானவன் இல்லை. அதனால்தான் எங்கள் பாடசாலைக்கு மாறி வந்திருக்கிறானா என்ற எண்ணம் எனது வகுப்பறையில் பரவலாக இருந்தது.

அவனது நகரத்தில் மகாத்மா தியேட்டர், லக்சுமி தியேட்டர் என இரண்டு சினிமா அரங்கங்கள் இருந்தன. இதில் மகாத்மா தியேட்டரில் தினமும் மாலை நான்கு மணிக்கு ஆங்கிலப் படம் காண்பிப்பார்கள். வைத்திலிங்கம் இந்தப் படங்களைப் பார்த்து விட்டு வந்து வகுப்பறையில் படங்களைப் பற்றி விளாசித் தள்ளுவான். அவனது விலாசக் கதைகளைக் கேட்பதற்காகவே அவனைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அந்தக் கூட்டத்திற்குள் நானும் இருந்தேன். வைத்திலிங்கம் ஆங்கிலப் படத்துக் காட்சிகளை விபரிக்கும் போது அந்தப் படங்களைப் பார்க்கும் ஆவல் என்னை மெதுவாகப் பற்றிக் கொண்டது.

பாடசாலை முடிந்து மாலையில் அவனது நகரத்துக்குப் போவதற்கு வீட்டில் இலகுவாக அனுமதி பெற முடியாது. அடுத்ததாக படம் பார்ப்பதற்கு எனது சட்டைப் பை பணத்தைப் பார்க்க வேண்டும். இந்த இரு பிரச்சினைகளுக்கும் வைத்திலிங்கமே வழி சொல்லித் தந்தான். அவனது நகரத்தில் பிரபல்யமான தனியார் கல்வி நிலையம் ஒன்று இருந்தது. கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தர வகுப்புகளுக்கான பாடங்கள் மாலையில் அங்கே கற்பிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. அந்த நிலையத்தில் மாலையில் படிக்கப் போவதாக சொல்லி தனது நகரத்துக்கு வந்து விடலாம் என்றான். பணத்துக்கு...? அவர்கள் என்ன சும்மாவா சொல்லித் தரப் போகிறார்கள் மாதா மாதம் காசு கொடுக்க வேண்டும்தானே. வீட்டிலே வாங்கிக் கொள் என்று புத்தியை செயலிழக்க வைத்தான்.

அண்ணனிடம் போய் நின்றேன். சிறிய வயதில் எனது தந்தையை இழந்த பின் எனக்குத் தமையனாக, தந்தையாக எல்லாமாக அவரே இருந்தார். சகோதரர்களின் வாழ்க்கை வளத்துக்காக தனது இளமைக் கனவுகளைத் தொலைத்தவர். அவர் முன்னால் கூசாமல் பொய் சொல்லி நின்றேன். மறு பேச்சு பேசவில்லை மாதக் கட்டணத்தையும் தந்து கவனமாகப் படி என்ற அறிவுறுத்தலையும் தந்தார். இவ்வண்ணம் எனது ஆங்கிலப் படங்கள் பார்க்கும் படலம் தொடங்கியது.

ஒரு மாதம்தான் இந்த ஆட்டம் எல்லாம். தன்னலம் கருதாத தமையனிடம் பொய் சொல்லியிருக்கிறேன் என்று மனசாட்சி உறுத்திக் கொண்டிருந்தது. அண்ணனைக் காணும் போது அந்த உணர்வு இன்னும் அதிகமாக இருந்தது. அடுத்த மாதம் நானாகவே அண்ணனிடம் சொன்னேன் அங்கே படிப்பு நல்லாக இல்லை.. நானாகவே படித்துக் கொள்கிறேன் என்று.

முற்றத்துக்கு முன்னால் இருந்த வேப்பமரத்தக்குக் கீழே கதிரையைப் போட்டு விட்டு இரவு பகலாகப் பரீட்சைக்குப் படித்தேன். பரீட்சையின் பெறுபேறும் அசத்தல்தான். எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும்படி சித்தியடைந்திருந்தேன். நான் சித்தியடைந்ததில் அண்ணனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நான் மேலே படிப்பதற்கு எந்தக் கல்லூரி நல்லதென்று தேட ஆரம்பித்து விட்டார்.

ஆனாலும் அந்த ஒரு மாதம் அவரை ஏமாற்றியிருக்கிறேன் என்ற குற்ற உணர்வு என்னை விட்டு அகலவில்லை. இன்று கூட ஆங்கிலப் படங்கள் பார்க்கும் போது அண்ணனுக்குப் பொய் சொன்ன நிகழ்வு வந்து என்னை மெதுவாக குத்தி விட்டுச் செல்லும்.

Saturday, July 22, 2006

பெரியக்கா

வருடத்தில்ஏதாவது ஒரு முழுநிலவு நாளில் நாங்கள் குடும்பமாக மண்டலாய்ப் பிள்ளையார் கோவிலில் இருப்போம்.

ஈச்சை மரங்கள், பாலை மரங்கள் என பலவித பழ மரங்களும் செடிகளும், புதர்களும் மண்டியிருக்கும் காடு. அதன் நடுவே பிள்ளையார் கோவில். மற்றைய கோவில்களைப் போலல்லாது இங்கு பிள்ளையார் மேற்கே பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். கோவிலின் கிழக்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் தங்குவதற்காக மண்டபங்கள் இருக்கின்றன. நாங்கள் அங்கே போனால் கிழக்குப் புறமாக உள்ள மண்டபத்தில்தான் தங்குவோம்.

எனது பாட்டனார் காலத்தில் இருந்தே மண்டலாய்க்குப் போய் ஒரு நாள் தங்கியிருந்து மண்டகப்படி செய்து அன்னதானம் வழங்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இரவில்தான் பூசை நடக்கும். காடுகளில் பகல் முழுக்கத் தேடி எடுத்து வந்த காய்ந்த மரங்களை மண்டபத்துக்கு முன்னால் போட்டு எரித்து, அதில் குளிர் காய்ந்த படியே முழுநிலவில் பூசைச் சோற்றை அம்மா குழைத்துத் தர கைகளில் வாங்கி சாப்பிடும் போது இருக்கும் ருசியே தனி.

எனது தந்தையார் இறந்த பின்னர் எனது பெரியக்கா அந்தப் பணியைத் தொடர்ந்தார். ஒரு முறை நான் எனது நண்பர்கள் இருவரை எங்களுடன் அழைத்துச் சென்றிருந்தேன். பகல் முழுக்கக் கூதுகலம்தான். மரத்தில் ஏறி இளநீர் பறிப்பது, குளத்தில் விழுந்து கும்மாளம் அடிப்பது என எங்கள் பொழுதுகள் போய்க் கொண்டிருந்தன.

வெய்யில் ஆரம்பித்து விட்டால் வெளியே மணலில் கால் வைக்க முடியாது. நாங்கள் குளத்தில் கும்மாளம் அடித்து விட்டு வெளியே வரும் போது சூரியன் உச்சிக்கு வந்து விட்டான். சுடும் மணல்களுக்குள் கால்கள் புதைய, மணலின் சூடு தாளாமல் துள்ளி ஓடி மண்டபத்துக்குள் நுளைந்தோம். அங்கே பெரியவர்கள் மண்டகப்படிக்கான அலுவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக நாங்கள் மண்டலாய்க்குப் போனால் நாங்கள் தங்கும் மண்டபத்தில் எங்களது பெயர்கள் வந்த திகதி போன்றவற்றை விலாவாரியாக கரித்துண்டுகளினால் எழுதி வைப்போம். நண்பர்களுடன் மண்டபத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கும் போது எனக்கு அந்த நினைவு வர, இரவில் மரங்கள் போட்டு நெருப்பெரிக்கும் இடத்தில் இருக்கும் கரித்துண்டுகளைப் பொறுக்கி எடுத்து வந்து எல்லோரது பெயர்களையும் பெரிதாக எழுதி வைத்தேன். நண்பர்களும் தங்கள் பங்குக்குக்கு தங்களுக்குத் தெரிந்தவர்களது பெயர்களை எழுதி வைத்தார்கள்.

மதியம் ஈச்சம் பழங்கள் பாலைப் பழங்களைச் சேகரித்து விட்டு மண்டபத்துக்கு களைத்துப் போய் வந்தோம். பெரியவர்கள் மண்டகப்படிக்கான வேலைகளில் இன்னமும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வெளியே வெய்யிலில் சுற்றிவிட்டு வந்ததால் மண்டபத்தினுள்ளே இருட்டு மாதிரியிருந்தது. நான் சுவரில் எழுதி வைத்த பெயர்களுக்குக்குக் கீழே பளிச்சென்று பெரிய எழுத்தில் ஏதோ தெரிந்தது. எழுந்து நின்று வாசித்தேன்.

„போக்கற்றுப் போறவங்களே எதுக்கடா சுவரிலை எழுதுறீங்கள்?“ என அந்த வாசகம் கோபமாகவும் ஏளனமாகவும் கேட்டது. இதை வாசித்த எனது நண்பர்களுக்கு குற்ற உணர்வு வந்து விட்டது. அவர்கள் என்னைக் கடிந்து கொண்டார்கள். யார் அதை எழுதியதென்பதை ஒருவரும் எனக்குச் சொல்லவில்லை. கோபத்தில் ஒரு மூலையில் ஒதுங்கிக் கொண்டேன். அப்படியே சீமெந்து நிலத்தில் உறங்கிப் போனேன். குளிர்ந்த கரங்கள் என்னைத் தட்டி எழுப்பியது. கையில் தேனீருடன் பெரியக்கா.
„தேத்தண்ணியைக் குடி மேனை. „ பெரியக்கா என்னை வாஞ்சையுடன் அழைக்கும் போது மேனை என்றுதான் விழிப்பார். தேனீரை வாங்கிக் கொண்டேன். மெதுவாகச் சொன்னார்.

„நாங்கள் இஞ்சை வாறதுக்கு முதல், ஆக்களை அனுப்பி வெள்ளை அடிப்பிச்சனாங்கள். நீ இப்ப அதிலை கரியாலை எழுதிப் போட்டாய். இதைப் பாத்திட்டு இனி வாறவையளும் எழுதுவினம். அதுக்குத்தான் அப்படி எழுதினனான். சரி இப்ப என்ன இன்னுமொருக்கால் வெள்ளையடிச்சால் போச்சு... நீ போய் உன்ரை பெடியங்களோடை விளையாடு. போ..“ என்று அன்பாகச் சொல்லிவிட்டுப் போனா.

ஞாயிறு இரவு படுக்கைக்குப் போகத் தாமதமாகி விட்டது. மறக்காமல் நாலு மணிக்கு அலாரம் வைத்து விட்டுப் படுத்தேன். அலாரம் அடித்தது. இருட்டில் தடவி அலாரத்தை நிறுத்தினேன். விடாமல் மணியடித்தது. லைற்றைப் போட்டு விட்டுப் பார்த்தேன் நேரம் மூன்று மணியைக் காட்டியது. நாலுக்குத்தானே அலாரம் வைத்தேன். நித்திரை மயக்கத்தில் மீண்டும் அலாரத்தை நிறுத்த முனைந்த போதுதான் விளங்கியது. அடித்துக் கொண்டிருப்பது தொலைபேசி மணி என்று. இந்த நேரத்தில் யார்? இப்படியான நேரத்தில் வரும் செய்தி நல்லதாக இருக்காதே. பயத்துடன் தொலைபேசியை எடுத்தேன்

"ஹலோ" "நான் மதி"

"என்ன இந்த நேரத்திலை"

"உங்கடை பெரியக்கா செத்துப் போனா"

"என்ன..?"

"ஹார்ட் அற்றாக்............... நான் மற்றையவையளுக்கும் தகவல் சொல்லோணும்."

"ஓகே..."

அப்படியே படுக்கையில் விழித்திருந்தேன். அலாரத்தை முற்றாக நிறுத்தி விட்டேன். இனி நித்திரை இல்லைத்தானே.

பெரியக்கா...., சுவருக்கு இன்னொருக்கால் வெள்ளை அடிச்சால் போச்சு. ஆனால் மனசுக்கு...?

Saturday, July 15, 2006

கிருஸ்ணர் கோவில் பூசை

பத்மநாபன் ஏழாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவரை எனது பள்ளித் தோழனாக இருந்தான். எனது வீட்டுக்கு அருகில்தான் அவனது குடும்பம் வாடகைக்கு குடியிருந்தது. அவனை வீட்டில் முகுந்தன் என்றே அழைப்பார்கள். எங்கள் மத்தியிலும் அவன் முகுந்தனாகவே இருந்தான். ஊரில் உள்ள ஒரு கிருஸ்ணர் கோயிலின் பூசாரியாராக அவனது தந்தையிருந்தார். ஆதலால் அவனது வீட்டில் எல்லோருக்கும் கிருஸ்ணரது நாமங்கள் சூட்டப்பட்டிருந்தன.

முகுந்தனிடம் எந்த ஒரு விடயத்தையும் நுணுக்கமாக ஆராயும் திறன் இருந்ததை நான் அவதானித்தேன். உதாரணத்திற்கு ஒன்று, தில்லானா மோகனாம்பாள் வெளிவந்த நேரமது. அந்தப் படத்தைப் பார்த்து விட்டு அதில் வரும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற பாடலில் வரும், புண்பட்ட சேதியைக் கேட்டவுடன் இந்தப் பெண் பட்ட பாட்டை யார் அறிவார்? என்ற வரிகளைச் சொல்லி "இதில் பிழையிருக்கு ஏனென்றால் நாயகன் புண் பட்டதை நாயகி நேரடியாகவே காண்கிறாள் அப்படியிருக்க எப்படி புண் பட்ட சேதியைக் கேட்டதென்று பாடமுடியும்? புண் பட்டதைப் பார்த்தவுடன் என்றெல்லோ பாடியிருக்க வேண்டும்" என்று வாதாடத் தொடங்கி விட்டான். யோசித்துப் பார்த்தால் எனக்கும் அது சரியாகவே பட்டது. முகுந்தனது ஆழ்ந்து கவனிக்கும் அந்த விடயங்கள் எனக்கு நிறையப் பிடித்திருந்தது. இதன் பின்னர் திரைப் படங்களைப் பார்க்கும் போது நானும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

ஒரு வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வரும்போது முகுந்தன் சொன்னான். "இன்று இரவு கிருஸ்ணர் கோவிலில் விசேட பூசை ஒன்று இருக்குது.. சாமி வடக்கு வீதிக்கு வந்தவுடன் பிரத்தியேகமாக ஒரு நாடகம் மாதிரி நடித்துக் காட்டுவினம். போய்ப் பார். மிக நல்லா இருக்கும்" என்றான். அவன் வாக்கு தப்பாது என எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு கோவிலுக்குப் போய் அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் மெதுவாகத் துளிர்த்தது. "நீ போய்ப் பார்த்து விட்டு திங்கட்கிழமை அதைப் பற்றி எனக்குச் சொல்ல வேண்டும்" என்று அன்புக் கட்டளையையும் தந்து விட்டுப் போனான்.

முகுந்தன் சொன்னதை அம்மாவிற்குச் சொல்ல, "சரி வா" என்று கோயிலுக்குக் கூட்டிப் போனார். கிருஸ்ணரும் வடக்கு வீதிக்கு வந்து விட்டார். சாமியை நிறுத்தி விட்டு ஐயர் பூசையை ஆரம்பித்தார். விசேசம் ஏதாவது நிகழ்கிறதா என சுற்று முற்றும் பார்த்தேன். தீப்பந்தங்களும், அந்த வெளிச்சத்தில் தெரிந்த பக்தர்களும்தான் பரமாத்மாவைச் சுற்றி இருந்தனவே தவிர விசேசங்கள் எதுவும் நிகழ்வதாய்த் தெரியவில்லை. ஐயர் பூசையை முடித்துவிட்டு பக்தர்களைப் பார்த்தார். அது அவரது அனுமதி போலும். திடீரென ஒரு இளைஞர் கூட்டம் என்னை நோக்கிப் பாய்ந்தது. தீப்பந்த வெளிச்சத்தில் சுற்றியிருந்தவர்கள் சிரிப்பது தெரிந்தது. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என நினைத்துக் கொண்டேன். ஓடு.. ஓடு.. என்று மூளை அறிவித்துக் கொண்டிருந்தது. ஓடத் தொடங்கினேன். அந்த வெள்ளை மணலில் ஓடுவது சிரமமாக இருந்தாலும் ஏன் ஓடுகிறேன் என்று தெரியாமல், எங்கே ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று அறியாமல் ஓடிக் கொண்டிருந்தேன். என்னைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் வேட்டி கட்டியிருந்ததால் என்னளவுக்கு அவர்களால் ஓட முடியவில்லை. இருட்டு வேறு எனக்கு உதவியது. நாச்சிமார்களுக்குக் கட்டப் பட்டிருந்த கோயிலுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டேன்.

எவ்வளவு நேரம் அங்கே இருந்தேன் என்று தெரியவில்லை. என் பெயர் சொல்லி அம்மா கூப்பிடுவதைக் கேட்டு வெளியில் வந்தேன். "நீ கேட்டுத்தானே இந்தப் பூசைக்கு வந்தனான். இந்தக் கோயிலைச் சுத்தி எல்லா இடமும் உன்னைத் தேடி எனக்கு அலுத்துப் போச்சு... " என்று அம்மாவிடம் நிறையத் திட்டு வாங்கினேன்.

வீட்டுக்குத் திரும்பி வரும் போது அம்மாவிடம் கேட்டேன் "எதுக்கு என்னை அவையள் கலைச்சவையள்..?"

அம்மா சிரித்துக் கொண்டே சொன்னா "இந்தப் பூசையில் வடக்கு வீதிக்கு சாமி வந்தாப் போலை பாஞ்சாலிக்கு கண்ணன் ஆடை கொடுத்த நிகழ்வை நடத்திக் காட்டுவினம். இதை பொம்பிளைகளைக் கொண்டு செய்யிறது நல்லதில்லை எண்டு சின்னப் பிள்ளைகள் ஆரின்ரையாவது உடுப்பை கழட்டி சாமிக்கு முன்னாலை வைச்சிடுவினம். அவரும் அழத் தொடங்க, அதிலை இருக்கிற சனங்களும் கண்ணா.. கண்ணா எண்டு கூப்பிட ஐயர் அந்த உடுப்பை திருப்பிக் குடுப்பார். இண்டைக்கு உன்னட்டை இருந்து உடுப்பைக் கழட்டி சாமிக்குக் குடுக்கறதுக்குத்தான் பாத்திருக்கிறாங்கள். நீதானே ஓடிட்டாய்.. "

"உடுப்பெண்டு... "

"எல்லாத்தையும்தான்... அம்மணமாத்தான் நிக்கோணும்... அப்பத்தானே.. உடுப்பைத்தா... எண்டு கதறி அழ முடியும்.. நிகழ்ச்சியும் தத்ரூபமாயிருக்கும்... "

திங்கட்கிழமை பாடசாலைக்குப் போகும் போது முகுந்தன் இணைந்து கொண்டான்.
"கோயிலிலை நல்லா ஓடினாயாம். அப்பா சொன்னார். "முகுந்தன் என்னைப் பார்க்காமலே சொன்னான்.

"ஓடாமல் இருந்திருந்தால் எல்லாத்தையும் கழட்டிப் போட்டு உரிஞ்சுவிட்டு நிண்டான் எண்டு உன்ரை கொப்பர் சொல்லியிருப்பார்" என்றேன் எரிச்சலுடன்.

"ஏண்டா கோவிக்கிறாய்.. ஒரு நிகழ்ச்சிதானே... நானும் ஒருக்கால் மாட்டுப் பட்டிருக்கிறன். வரவர இந்தப் பூசைக்கு சின்னாக்கள் வாறது இல்லை எண்டு அப்பா வீட்டிலை கதைச்சவர்... அதுதான் உன்னை அனுப்பிப் பாத்தன்.. கிருஸ்ணர் கோயிலிலை நாமம்தானே பூசுவினம்.. நான் பூசினால் என்ன இதுக்குப் போய் கோவிக்கிறாய்... "எண்டான்.
அவனது பேச்சு வல்லமை எனது கோபத்தைத் தடுத்தது.

அடுத்த வருசம் கிருஸ்ணர் கோவிலுக்கு புது ஐயர் வந்ததால் முகுந்தனின் தந்தைக்கு அந்த வேலை போயிற்று. அவர்களும் எங்கள் கிராமத்தை விட்டுப் போக வேண்டியதாயிற்று. போகும் போது முகுந்தன் "அந்தப் பூசையை மனசிலை வைச்சிருக்கிறீயோ? "என்று கேட்டான்.

"மனசிலை வைச்சிருப்பன். ஆனால் உன்னைக் கோவிக்க மாட்டேன் "என்றேன்

முகுந்தனைக் கண்டு நாற்பது வருடங்களாயிற்று நினைவு மட்டும் மறையவில்லை.

Sunday, May 28, 2006

ஐம்பது சதம்

பாடசாலை செல்வதென்றால் பத்மநாதனும் நானும் சேர்ந்துதான் செல்வோம். எனது பால்ய நண்பன் அவன். எனது வீட்டுக்கு அருகில் அவனது வீடு இல்லாததால் பாடசாலை முடிய மாலையில் அவனுடன் இணைந்து விளையாட முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்குள் இருந்ததுண்டு.

ஆரம்பப் பள்ளியில் பத்மநாதனும் நானும் ஐந்தாம் வகுப்புவரைதான் இணைந்து படித்தோம். அவனது தாயார் மனநிலை பாதிப்புக்குள்ளாகி இருந்ததால் அவன் தனது தந்தையாருடன்தான் தங்கியிருந்தான். அவனது தந்தையார் இராமலிங்கம்தான் சமையல் துவையல் எல்லாம். இத்தனைக்கும் அவர் பெரிய உத்தியோகமென்றில்லை. எங்களது பாடசாலைக்கு அருகில் இருந்த தம்பையா சுருட்டுக்கொட்டிலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

சுருட்டுச் சுத்தும் இடம் அப்பொழுது தென்னை ஓலையில் வேயப்பட்டிருக்கும் கொட்டிலில்தான் இருந்தது. அதனால் அந்த வேலைத் தளம் சுருட்டுக் கொட்டில் என்று அழைக்கப்பட்டதில் பெரிய விசேசமில்லை. எல்லோரும் தரையில் அமர்ந்துதான் சுருட்டுச் சுத்துவார்கள். அவர்கள் எவ்வளவு சுருட்டு சுத்துவார்களோ அவ்வளவு கூலி கிடைக்கும். சுருட்டுக்கள் தம்பையா சுருட்டு என்ற பெயருடன் தென் இலங்கைக்குப் போகும். மாலை ஆறுமணிவரை இத்தொழில் நடைபெறும். ஊர்க்கதைகள், அரசியல், சினிமா என்று கதைத்த படியே அவர்களது வேலை நடக்கும். காலையில் ஒருவர் அன்றைய தமிழ் நாளிதழ்களை உரக்கப் படிப்பார். அதை கேட்ட வண்ணம் அமைதியாக வேலை செய்வார்கள். பத்திரிகையைப் படிப்பவர் அதில் உள்ள விளம்பரங்களையும் சேர்த்துப் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்ன விளம்பரத்தைக் காணவில்லை என்ற கேள்வி வரும். பத்திரிகைகள் வாசித்து முடித்தபின் அதில் வந்த விடயங்களை ஒரு அலசு அலசுவார்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.

எங்கள் பாடசாலையில் சரஸ்வதி பூசை வெகு விமர்சையாக நடக்கும். ஒவ்வொரு மாணவரும் இந்தப் பூசைக்கு பணம் தர வேண்டும். ஆண்டு ஒன்று முதல் ஐந்துவரை ஐம்பது சதங்கள் கொடுக்க வேண்டும். அதற்கு மேலுள்ள வகுப்புகளுக்கு ஒரு ரூபா கொடுக்க வேண்டும். ஐம்பது சதம் என்பது அன்றைய காலத்தில் அதிகம்தான். கொடுக்காவிட்டால் ஆசிரியரிடம் பூசை வாங்க வேண்டும். நல்ல பிள்ளையாக அம்மாவிடம் வாங்கிக் கொடுத்து விட்டேன். பத்மநாதன் மட்டும் கொடுக்கவில்லை. முத்துக்குமார் வாத்தியார் பல தடவைகள் அவனுக்கு நினைவு படுத்த்தியும் அவன் ஐம்பது சதத்தைக் கொடுக்கவில்லை. இனி அடிதான் விழும் என்று முத்துக்குமார் வாத்தியார் எச்சரித்த பின்னர் பத்மநாதனிடம் "வீணாக அடிவாங்கப் போகிறாய், காசைக் கொடுத்துவிடு" என்று சொன்னேன். அவன் பதில் பேசாமல் இருந்தான். அவனது தந்தை காசு தர மறுத்துவிட்டாரா என்று கேட்டேன். அவன் தனது சட்டைப் பையில் இருந்து ஐம்பது சதத்தை எத்துக் காட்டினான். இந்தக் காசைக் குடுக்காமல் விட்டாலும் சரஸ்வதிப் பூசைக்கு அவல், கடலை, கற்கண்டு எல்லாம் தரத்தானே வேண்டும் என்பது அவனது வாதமாக இருந்தது. பாடசாலைக்கு முன்னால் இருந்த ஆறுமுகமண்ணையின் கடையில் பபிள்கம் வாங்கிச் சாப்பிடுவோம் என ஆசை காட்டினான். அன்று முதல் ஏறக்குறைய ஒரு கிழமைக்கு பாடசாலை முடிய பபிள்கத்தை அசை போட்ட வண்ணம் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.

ஒருநாள் பாடசாலை முடிய ஆறுமுகமண்ணையின் கடையில் பபிள்கத்தை வாங்கி அதைச் சுற்றியிருக்கும் ஈயத்தை உரித்துக் கொண்டிருக்கும் போது குப்பென்று சுருட்டு வாசனை. நிமிர்ந்து பார்த்தால் கடை வாசலில் முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டிய வண்ணம் இராமலிங்கத்தார். மனதுக்குள் ஒரு பயம் தானாக வந்து அமர்ந்து கொண்டது.

"காசு தரயில்லையெண்டு முத்துக்குமார் வாத்தியார் சொன்னார். நான் தந்த ஐம்பது சதத்தை என்ன செய்தாய்?"

பத்மநாதனைப் பார்த்து இராமலிங்கத்தார் கேட்டார். தயங்காமல் அவனிடமிருந்து பதில் வந்தது
"துலைஞ்சு போட்டுது"

அப்ப இதுக்கெங்காலை காசு.? பொய் சொல்லுறியா? பதில்தர பத்மநாதனுக்கு அவகாசமிருக்கவில்லை. பின்புறம் கட்டியபடி இருந்த அவரது கைகள் முன்னுக்கு வந்தன. அதில் ஒரு கையில் வாடாத பூவரசம் தடி. எப்படி கடையில் இருந்து வெளியே பாய்ந்தேனோ தெரியாது.

இராமலிங்கத்தார் ஒரு கையில் பத்மநாதனைப் பிடித்திருந்தார். அவன் தகப்பனைச் சுத்திக் கொண்டிருந்தான். இராமலிங்கத்தார் கையில் இருந்த பூவரசம் தடி சுழன்று கொண்டிருந்தது. பாசாலை முடிந்து வெளியில் வந்தவர்களுக்கு இலவசமாக அவலக் காட்சி ஒன்று காணக் கிடைத்தது. ஒருவாறாக தகப்பனது பிடியில் இருந்து விடுபட்டு பபிள்கம் வாங்கிச் சாப்பிட்டதை பத்மநாதன் ஒத்துக் கொண்டான்.

"இவனும் சாப்பிட்டவன்" என்று பத்மநாதன் என்னைக் காட்டி துணைக்கு அழைத்தான். இராமலிங்கத்தார் நிமிர்ந்து பார்த்தார். பயம் பிடித்துக் கொண்டது. அவரது கையில் இருந்த பூவரசம் தடி சிதிலமாகக் காட்சி தந்தது. எனது கையில் இருந்த பபிள்கத்தை பத்மநாதன் நின்ற திசையை நோக்கி எறிந்து விட்டு ஓடத் தொடங்கினேன். பயம் விரட்ட பபிள்கம் சப்பி பலூன் போல் ஊதி விளையாடியதெல்லாம் என்னைச் சேர்ந்து துரத்த.... வீட்டு வாசலுக்கு வந்துதான் திரும்பிப் பார்த்தேன்.

அடுத்தநாள் பாடசாலைக்குப் போனபோது இது பற்றி பத்மநாதன் என்னிடம் பேசவில்லை. முத்துக்குமார் வாத்தியார் நடந்து போன விடயத்திற்கு வருந்தியது தெரிந்தது. அதன் பின்னர் பத்மநாதனிடம் அவர் காசு கேட்கவேயில்லை. பத்மநாதனின் எண்ணப்படியே அந்த வருடம் சரஸ்வதி பூசைக்கு காசு கொடுக்காமலேயே கடலை, அவல், கற்கண்டு எல்லாம் அவனுக்குக் கிடைத்தன

Sunday, November 13, 2005

வாலி வதம்

அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது வகுப்பாசிரியரின் பெயர் சுப்பிரமணியம். அவர் அந்த வருடம்தான் எங்கள் பாடசாலைக்குப் புதிதாக படிப்பிப்பதற்கு மாற்றாலாகி வந்திருந்தார். தமிழ், கணிதம், ஓவியம் மூன்று பாடங்களை அவர் எங்களுக்கு படிப்பித்துக் கொண்டிருந்தார். மூன்றும் எனக்கு விருப்பமான பாடங்கள். நன்றாகவே செய்து கொண்டிருந்தேன். அதிலும் கணிதத்தில் நான் முன்னிலையில் நின்றேன். எனது உறவினர் ஒருவர் அவரை பரமேஸ் அக்கா என்றே அழைப்பேன். பாடசாலை முடிந்த பின்னர் நேரமும் - தூரமும், நேரமும-வேலையும் போன்ற கணக்குகளை எப்படிச் செய்ய வேண்டும் என்று விளக்கமகாகச் சொல்லித் தருவார். அதை அப்படியே பாடசாலையிலும் காட்டியதால் அதிகப் புள்ளிகள் எனக்கு கிடைத்துக் கொண்டிருந்தன. ஆனாலும் சுப்பிரமணிய மாஸ்ரரின் மதிப்பு மட்டும் எனக்கு ஏனோ கிடைக்கவில்லை.

வருட இறுதியில் பர்Pட்சையின் பெறுபேறு தரும் நாளில் பாடசாலையில் ஆசிரியர்கள் மாணவர்களது கலை நிகழ்ச்சி நடைபெறும். கலைநிகழ்ச்சியில் அப்போது தமிழ் புத்தகத்தில் இருந்த வாலி வதம் என்ற நாடகத்தைப் போடப் போவதாக சுப்பிரமணிய மாஸ்ரர் வகுப்பில் சொன்னார். இலக்குவனாக நடிப்பதற்கு என்னைத் தெரிவு செய்தார். மாட்டேன் என்று சொல்ல வார்த்தை வரவில்லை. சொல்லியிருந்தால் அவரது கையில் உள்ள பிரம்பு பேசியிருக்கும். தலையாட்டுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. வாலியாக துரைலிங்கமும், சுக்கிரீவனாக கனகசுந்தரமும் இராமனாக ஆனந்தனும் என்னுடன் சேர்ந்து நடிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

கலைநிகழ்ச்சக்கான நாள் வந்தது. சுப்பிரமணிய மாஸ்ரரே ஒப்பனையையும் செய்து விட்டார். மேடைக்கு நானும் ஆனந்தனும் போக வேண்டிய நேரம் வந்தது. சுப்பிரமணிய மாஸ்ரர் பார்வையால் ஆணையிட்டார். மேடைக்கு வந்து நின்று பார்த்தபோது மண்டபத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் என கூட்டம் நிறைந்திருந்தது. அதிலும் முதல் வரிசையில் ஆசிரியர் கூட்டம் அமர்ந்திருந்ததைப் பார்த்த போது தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.
வாலியும் சுக்கிரீவனும் மேடையின் ஒரு மூலையில் நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நானும் இராமனும் மறு மூலையில் நிற்கிறோம். இப்பொழுது இராமன் வாலியை நோக்கி அம்பு எய்ய வேண்டும். பூவரசம் தடியில் வளைத்துக் கட்டிய வில்லை எடுத்து ஆனந்தன் வாலியை நோக்கி அம்பை விட்டான். ஒன்று, இரண்டு, மூன்று... எந்த அம்பும் வாலியை நோக்கிப் போகவேயில்லை. மண்டபத்தில் இருந்து சிரிப்பொலி. கடைக்கண்ணால் பார்த்தேன் சுப்ரமணிய மாஸ்ரர் மேடைக்குள் இருந்து துள்ளிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஒரு கட்டத்தில் திசை மாறிப் போன அம்பை துரைலிங்கம் ஓடிப்போய் பிடித்துத் தனது மார்புடன் வைத்துக் கொண்டு கீழே விழுந்து விட்டான். இந்தக் கட்டத்தில்தான் நாடகத்தில் உரையாடல் தொடங்குகிறது. கீழே விழுந்திருந்தபடி வாலி கேள்விகள் கேட்கத் தொடங்கினான். அவனது கேள்விகளுக்கு இராமர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இராமர் சார்பாக இலக்குவன் பேச வேண்டும். ஆனால் அவன் அமைதியாக இருந்தான். அவனது நாக்கு மேலண்ணத்தில் ஒட்டி வெகு நேரமான விடயம் யாருக்கும் தெரியாது. ஆனந்தன் எனது கையைச் சுரண்டினான். படுத்திருந்த துரைலிங்கம் காலால் தட்டிப் பார்த்தான். உள்ளிருந்த சுப்ரமணிய மாஸ்ரர் மெலிதான குரலில் வசனத்தின் முதலடியைச் சொல்லிப் பார்த்தார். இலக்குவன் அசையவேயில்லை. அதிசயம் ஏதும் நடந்து திரை மூடாதா என நினைத்தபடி குனிந்த படியே நின்றான். அவன் நினைத்தபடி அதிசயம் நடந்தது. அசரீரியாக குரல் ஒன்று ஒலித்தது. இலக்குவன் பேச வேண்டிய வசனத்தை மேடையின் உள்ளேயிருந்து நாகநாதன் சொல்லிக் கொண்டிருந்தான். இலக்குவன் குனிந்தபடியே நின்றான். நாடகம் ஒருவாறு முடிந்து திரை மூடிய போதுதான் திரை சரியாக மூடுகிறதா என இலக்குவன் நிமிர்ந்து பார்த்தான்.

பாடசாலை பரீட்சையின் பெறுபேறு அறிக்கையை அம்மாவிடம் தந்து விட்டு நின்றேன். பெறுபேறைப் பார்த்ததும் அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. எனது கால்களின் பின்புறம் விண் விண் என்று வலித்துக் கொண்டிருந்தது. அணிலுக்கு இராமன் போட்டது மூன்று கோடுகள் . சுப்பிரமணிய மாஸ்ரர் பிரம்பால் எனக்குப் போட்டது ஆறு கோடுகள். எனது வலியைச் சொல்லி அம்மாவின் மகிழ்ச்சியைக் கெடுக்க நான் விரும்பவில்லை.

நகரத்தில் இருக்கும் பெரிய பாடசாலையில் அடுத்த வருடம் சேர்ந்துவிட வேண்டும். அதற்கான பரீட்சை எடுக்க வேண்டும். என மனதில் நினைத்துக் கொண்டேன். ஊரில் உள்ள பாடசாலையில் படிப்பித்துக் கொண்டிருந்தாலும் பின்னாளில் ஏனோ சுப்ரமணிய மாஸ்ரரை நான் சந்திக்கக் கிட்டவில்லை.

Friday, July 29, 2005

மின்சாரப் பாய்ச்சல்

தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சுங்கான், கந்தசாமி இருவரும் கைது செய்யப்பட்ட நேரமது. சுங்கானின் கடையின் உதவியாட்கள், வானொலி திருத்துவது தொடர்பாக பயிற்சி பெற வந்தவர்கள், நண்பர்கள் என பலர் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப் பட்டார்கள். நெருங்கிப் பழகியவர்களில் சிலர் தொல்லை வேண்டாமென ஊரை விட்டே பறந்துவிட்டார்கள்.

நீண்ட காலமாக சுங்கானின் வானொலி திருத்தும் நிலையம் பூட்டப் பட்டே இருந்தது. கடையை வாடகைக்குக் கொடுத்தவர் வாடகையுமில்லாமல், கடையுமில்லாமல் தலையில் துண்டு போடாத குறையாக அல்லாடிக் கொண்டிருந்தார். பொலிசாரின் புலன் விசாரணைக்கு அவரும் தப்பவில்லை. தனக்கு நடந்த விசாரணை பற்றி அவர் வெளியே சொல்லவுமில்லை. ஆனாலும் புலன் விசாரணையில் அவருக்கு நல்ல கவனிப்பு இருந்ததாக ஊரில் பேசிக் கொண்டார்கள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கடை உரிமையாளர், பதினேழு கிலோ மீற்றர் தூரத்தில் வசித்து வந்த சுங்கானின் தாயை ஒருநாள் ஊருக்குக் கூட்டிக் கொண்டு வந்தார். சுங்கானின் தாயின் மேற்பார்வையில் கடையைத் திறந்து பொருட்களை அகற்றுவது என்று கடையின் உரிமையாளின் ஏற்பாடு. ஆனால் கடையைத் திறக்க உரிமையாளர் உட்பட அனைவருக்கும் பயம். சுங்கான் ஏடாகூடமாக உள்ளே ஏதாவது செய்து வைத்து, கடையைத் திறக்கும் போது ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது. துணிந்து முன்னுக்கு வந்து கடையைத் திறக்க முற்பட்டவர்களை ஏற்கனவே பயந்து போயிருந்தவர்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். நேரம் போனதே தவிர யாருக்கும் கடையைத் திறக்கும் துணிவு வரவில்லை.

இறுதியாக சுங்கானிடம் வானொலி திருத்தும் கடையில் பணியாற்றிய செல்லையா என்பவர் கடையைத் திறக்க முன் வந்தார். இவர் சட்டத்தரணி மூலமாக பொலீசிடம் சரணடைந்து, வெற்றிகரமாக விசாரணைகளை முடிந்து விழுப் புண்கள் இல்லாமல் வெளிவந்தவர். செல்லையா கடையினைத் திறக்கும் போது, ஏதோ ஆண்டவன் தரிசனத்துக்கு ஏங்கும் பக்தர்கள் போல் வெளியே ஆவலாக மக்கள் கூட்டம் அலை மோதியது. ஒருவாறாக கடையைத் திறந்து, அங்கு ஆபத்தில்லை என்றவுடன் பலருக்கு ஆறுதலாக இருந்தது சிலருக்கு ஒன்றுமே ஆகவில்லையே என்று சப் என்றானது.

கடையில் உள்ள பொருட்களெல்லாம் சுங்கானின் தாய் பொறுப்பேற்றதன் பின்னர் கடை அம்மணமாக இருந்தது. இப்பொழுது அந்தக் கடையை வாடகைக்கு எடுக்க சில முதலாளிகள் உள்ளே புகுந்து நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் சுங்கானின் பக்கத்துக் கடையான லக்சுமி பகவான் தேனீர் கடை முதலாளியும் அடங்குவார். அவர் எதற்காக நோட்டம் விட வந்தார் என்றால், அவருக்கு சில மாதங்களாக மின்சார வாடகை அதிகமாக வந்திருந்தது. ஒருவேளை அது சுங்கானின் உபயமாக இருக்குமோ என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அப்பொழுது சுங்கானைக் கேட்க அவர் விரும்பவில்லை. இப்போ தெளிவு படுத்த நோட்டம் விட்டவருக்கு உண்மை வெளிச்சமானது. அவரது கடைக்குப் போகும் மின்சார வயரில் இருந்துதான் சுங்கான் கடைக்கு மின்சாரம் கொடுத்திருந்தார்.

கடைக்குள் இருந்தே லக்சுமி பகவான் முதலாளி சத்தமாகச் சொன்னார்,
"முதலிலை அந்த வயரைப் பிடுங்குங்கோ"

Saturday, July 09, 2005

கறுப்புக் கொடி



22.05.1972 அன்று சிங்கள அரசு, சிறிலங்கா என்ற நாமம் சூட்டி தன்னை குடியரசு நாடாக அறிவித்த நாள். நகரமே அன்று அமைதியாக இருந்தது. தமிழ் மக்களின் பகுதிகளில் கடைகள் எல்லாமே பூட்டப் பட்டு அமைதியாக இருந்தன. தமிழ்மக்கள் தங்கள் எதிர்ப்பை இந்த வகையில் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

கறுத்தக் கொடி ஒன்று நகரத்தின் கடையொன்றின் ஓட்டின் முகப்பில் இருந்து கடற்கரைக் காற்றின் துணையுடன் அட்டகாசமாகக் ஆடிக் கொண்டிருந்தது. இந்தக் கொடியின் ஆட்டம் பவனி வந்து கொண்டிருந்த பொலீஸின் கண்களில் பட்டுவிட்டது. பவனி வந்த அத்தனை பொலீஸாரும் சிங்களவர்கள். அப்பொழுதெல்லாம் அப்படித்தான், தமிழ்ப் பகுதிகளில் சிங்களவரே பொலீஸ் துறையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். ஒரு சில இடங்களில் விதிவிலக்கு இருந்திருக்கலாம்.

கொடியை இலக்கு வைத்து பொலீஸ் ஜீப் நகரத்தின் அந்தக் கடையை நோக்கி வந்து கொண்டிருந்தது. சுங்கான் தனது வானொலி திருத்தும் நிலையத்தைப் பூட்டிவிட்டு, அதற்கு முன்னால் கதிரையைப் போட்டு அதில் இருந்தபடி சிலருடன் உரையாடிக் கொண்டிருந்தார். போலீஸைக் கண்டதும் சுற்றியிருந்த கூட்டம் மெதுவாக நகர்ந்து அருகில் இருந்த வீரவாகு கிட்டங்கியின் தகரத் தடுப்புக்குள் மறைந்து கொண்டது. சுங்கான் மட்டும் கையில் இருந்த புத்தகத்தை விரித்து வைத்தபடி தன்னை நோக்கி வரும் பொலீஸ் ஜீப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். வேகமாக வந்து கிறீச்சிட்டு நின்ற ஜீபபில் இருந்த பொலீஸ் படு வேகமாக இறங்கியது. ஆனால் சுங்கானிடம் எந்த விதப் பதட்டமும் இல்லை. ஒருகாலை வெளியிலும் மறு காலை ஜீப்பின் உள்ளேயுமாக வைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் கோபமாக சுங்கானைப் பார்த்தார். சுங்கான் ஏற்றி வைத்த கறுப்புக் கொடி மட்டும் படபடத்துக் கொண்டிருந்ததே தவிர சுங்கானிடம் எவ்விதமான அசைவும் இருக்கவில்லை. பொலிஸார் சுற்றி நிற்க நடுவில் கதிரையில் சுங்கான் அமைதியாக இருந்தார். ஜீப்பில் இருந்த வண்ணம் இன்ஸ்பெக்டர் அதட்டலாகக் கேட்டார்,

"ஆரு கொடி ஏத்தினது?"

"நான்தான்"
சுங்கானின் பதிலில் அமைதியிருந்தது. அமைதியான அவரின் பதில் இன்ஸ்பெக்டருக்கு கண்டிப்பாக ஒரு தயக்கத்தைத் தந்திருக்கும். ஆனாலும் அவரிடமிருந்து உடனடியாகக் கட்டளை வந்தது.

"ஓட்டிலை ஏறி கொடியை உடனை இறக்கு"

"இறக்கிறதுக்காக நான் கறுப்புக் கொடியை ஏத்தேல்லை எதிர்ப்புக் காட்டத்தான் ஏற்றியிருக்கிறன்" சுங்கான் எதுவித பயமுமில்லாமல் பதில் தந்தார்.
சுங்கானின் பதிலின் வேகத்துக்கேற்ப ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் இறங்கி நின்றார். ஒரு விபரீதம் நிகழப் போகும் வாய்ப்பு அங்கே உருவாகியிருந்தது தெரிந்தது. வீரவாகு கிட்டங்கியின் தகரத் தடுப்புக்களின் துவாரங்களுக்குள் பயந்த பல கண்கள் என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்தன. இன்ஸ்பெக்டர் என்ன நினைத்தாரோ தெரியாது ஒரு பொலீஸைக் கூப்பிட்டு ஓட்டில் ஏறி அந்தக் கொடியை இறக்கும் படி பணித்தார். அருகில் இருந்த குளாயைப் பிடித்து அந்த பொலிஸ் ஏற முற்பட்ட போது சுங்கானிடமிருந்து அமைதியாகப் பதில் வந்தது, "ஏறி கொடியைப் பிடிச்சு உனக்கேதாவது ஆச்சுதெண்டால் இன்ஸ்பெக்டர்தான் பொறுப்பு.. நானில்லை." ஏற முற்பட்டவன் இன்ஸ்பெக்டரைத் திரும்பிப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் கண்களும் சுங்கானின் கண்களும் நேரடியாக சந்தித்துக் கொண்டன. சுங்கான் வில்லங்கம் பிடித்த ஆள் என்று அவர்களுக்கும் தெரியும். ஒரு வேளை மின்சாரத்தைக் கொடியில் இணைத்திருக்கலாம் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்திருக்கும். சிறிது நேரம் அங்கு அமைதியாக இருந்தது. என்ன நினைத்தாரோ இன்ஸ்பெக்டர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு எதுவுமே சொல்லாமல் ஜீப்பில் ஏறிப் போய்விட்டார். ஜீப் மறைந்ததும் கதிரையைத் தூக்கிக் கொண்டு சுங்கானும் வீரவாகு கிட்டங்கியின் தகர மறைப்புக்குள் வந்துவிட்டார். கூடியிருந்தவர்கள் கேட்டார்கள்,
"உண்மையிலை கொடிக்கு கரண்ட் குடுத்திருக்கிறீயோ? "

"ஏறித் தொட்டிருந்தால் தெரிஞ்சிருக்கும்... கரண்டுமில்லை மண்ணுமில்லை எண்டு... பயந்திட்டாங்கள்.. "

ஒன்றுமே இல்லா இடத்திலையும் தனது பயத்தை வெளிக்காட்டாமல் மற்றவர்களைப் பயப்படுத்துவதற்குத் திறமை வேண்டும். அதை அன்று நான் சுங்கானிடம் கண்டேன்.

Saturday, July 02, 2005

கழிப்பறை நெருப்பு

எழுபதுகளின் ஆரம்பம் சிறுசிறு கடைகளாக இருந்த எங்கள் நகரத்தில் ஒரு பெரிய கட்டிடம் பல கடைகளை உள்ளடக்கி பெரிதாக எழுந்து நின்றது. அந்தக் கட்டிடத்திற்குச் சொந்தக்காரரான வீரபாகு முதலாளி நகரத்தின் பெரிய புள்ளி. பல பழைய கடைகள் வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் அழகையும் தரத்தையும் பார்த்து புழுங்கிக் கொண்டன. அந்தளவுக்கு நவீன உத்திகளுடன் அது கட்டப்பட்டிருந்தது.

அப்பொழுதெல்லாம் நகரத்தின் பொதுக் கழிப்பறைகளை நகரசபை ஊழியர்கள் வந்து காலையில் சுத்தம் செய்து விட்டுப் போய் விடுவார்கள். காலையில் நகரம் களை கட்டத் தொடங்கிய பிற்பாடு அந்தக் கழிப்பறைகள் பக்கம் போக முடியாது. அந்தளவுக்கு பாவனையாளர்கள் அதை அழகு படுத்தி வைப்பார்கள். தவறிப் போய் உள்ளே நுளைந்தால் நாலு நாள் உபவாசம் கண்டிப்பாக இருக்க வேண்டும். சாப்பிடும் போது நினைவு வந்து குமட்டி விடும்.

வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் பின் பகுதியிலும் கழிப்பறைகள் இருந்தன. நவீன முறையில் கட்டப்பட்ட அவை எப்போழுதும் பளீச் என்று இருக்கும். அந்தக் கட்டிடத்தில் உள்ள கடை உரிமையாளர்களை மட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்த வேறு சில கடை உரிமையாளர்களையும் அதைப் பாவிக்க அவர் அனுமதி தந்திருந்தார்.

வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் அருகே ஒரு வானொலி திருத்தும் கடை இருந்தது. அதன் உரிமையாளர் பத்மநாதன். அவருக்கு சுங்கான் என்ற பட்டப் பெயர் இருந்ததால் பலருக்கு அவர் பெயர் தெரியாமல் போயிற்று. நன்கு பரிச்சயமானவர்கள் அவரை சுங்கான் என்றே கூப்பிடுவார்கள். அவரது கடைக்குப் பக்கத்தில் ஒரு மருந்துக் கடை. அதன் உரிமையாளர் பெயர் கந்தசாமி. இருவருமே எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனாலும் அவர்கள் இருவரது கடைகளும் பிரபல்யமானவை. வீரபாகு முதலாளியுடன் இருவரும் இறுக்கமான நட்பை பேணிவந்ததால் வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் கழிப்பறை சலுகை இந்த இருவருக்கும் இருந்தது.

குலசேகரம் என்பவர் நகரத்தில் சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தார். ஆள் கொஞ்சம் வில்லங்கமான பேர்வழி. அடிதடி அத்தனையும் அத்துப்படி. இவர் யாரையும் கேட்காமல வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் கழிப்பறைகளைப் பயன் படுத்தத் தொடங்கிவிட்டார். என்னை யார் கேட்பது என்ற ஒரு துணிச்சல். இவரது இந்த நடவடிக்கை சுங்கானுக்குப் பிடிக்கவில்லை. ஏதாவது செய்து இவரை அந்தப் பக்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எங்களுடன் கதைக்கும் போது சுங்கான் சொன்னார். அது ஒருநாள் நடந்தேறியது.

வழமைபோல் குலசேகரம் காலையில் வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் கழிப்பறைக்குச் சென்றிருக்கின்றார். கழிப்பறையின் வெளியே ஆறுதலாக சுங்கான் பல்லுத் துலக்கிக் கொண்டிருந்திருக்கிறார். உள்ளே போன குலசேகரம் அலறிப் புடைத்துக் கொண்டு வெளியே ஓடத் தொடங்கி விட்டார். வெளியே நின்றிருந்த சுங்கான் என்ன ஏது என்று விசாரித்திருக்கிறார். "நெருப்படா.. கக்கூசுக்குள்ளை நெருப்படா." சொல்லிக் கொண்டு ஓடிய குலசேகரம் பின்னர் அந்தப் பக்கம் வரவேயில்லை. கழிப்பறைக்குள் இவர் வரும் நேரம் பார்த்து சுங்கான் பொசுபரசைத் தூவி வைத்தது எங்களைப் போன்ற சிலருக்கே தெரிந்திருந்தது.

சுங்கான் என்ற பத்மநாதன் கொடிகாமம் பத்மநாதன் என்பதும் மருந்துக் கடை உரிமையாளர் கந்தசாமி, சிறிசபாரத்தினத்தின் தமையனார் என்பதும் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. இவர்கள் இருவரும் தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்று இலங்கை புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட போது இவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த வீரபாகு முதலாளியும் கைது செய்யப்பட்டது தனிக்கதை.

Sunday, December 05, 2004

பெயரைச் சொல்லவா?

மார்க் மாஸ்ரர் எங்காவது செல்ல நேரிட்டால் தனது அறைத் திறப்பை சிவபாதம் கடையில் கொடுத்து விட்டுச் செல்வார். மாலையில் நான் ஓவியம் பயிலச் செல்லும் முன் சிவபாதம் கடைக்கு ஒரு தடவை சென்று விட்டுத்தான் மார்க் மாஸ்ரரின் அறைக்குப் போவேன். திறப்பு சிவபாதம் கடையில் இருந்தால் மார்க் மாஸ்ரர் எத்தனை மணிக்கு தனது அறைக்கு வருவார் என்ற தகவலும் அங்கிருக்கும்.

மார்க் மாஸ்ரரிடம், ஓவியம் சம்பந்தமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஆசையாகச் சொல்லித் தருவார். எத்தனையோ நுட்பங்களைக் காட்டியும் தருவார். எல்லாவற்றுக்கு மேலாக நான் college of fine arts இல் பயில வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். இந்த வேளையில்தான் எனது பாடசாலையில் பயிலும் சகமாணவனான சேகரும் ஓவியம் பயில விருப்பம் தெரிவித்ததால் மார்க் மாஸ்ரரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவனையும் என்னுடன் சேர்ந்து வந்து தன்னிடம் ஓவியம் பயில ஒப்புதல் தந்தார். சிலவேளைகளில் எனக்கு நேரம் போதாதிருந்தால் சேகரே சிவபாதம் கடைக்குப் போய் மார்க் மாஸ்ரரின் அறைத் திறப்பை வாங்கி வருவான்.

ஓருநாள் என்று மில்லாதவாறு மார்க் மாஸ்ரரின் முகத்தில் சந்தோசத்தைக் காணமுடியவில்லை. சந்தேகமோ, சலிப்போ அவரது முகத்தில் நிறைந்திருந்தது. நானும் சேகரும் வரைதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். மார்க் மாஸ்ரர் சிவபாதத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார். திடீரென மார்க் மாஸ்ரர் என்னைக் கூப்பிட்டார்.

"இதிலையிருந்த ரண்டு புத்தகத்தைக் காணயில்லை. எடுத்தனீரோ?"

எடுத்தனீரோ என்ற வார்த்தைகள் எனக்கு அறவே பிடிக்கவில்லை.
"நானெடுக்கேல்லை.. நானெடுக்கிறதெண்டால் உங்களிட்டை சொல்லிப் போட்டுத்தானே கொண்டு போவன்..."

"அப்ப.. இதிலையிருந்த ரண்டு புத்தகமும் எங்கை? "

"எனக்குத் தெரியாது.."

"உமக்குத் தெரியோணும்.. நீர்தான் இதுக்குப் பொறுப்பு... நானில்லையெண்டால் சிவபாதத்திட்டை போய் திறப்பு வாங்கி வந்து ரூமை கவனிக்கிறது நீர்தானே..? நீர்தான் இதுக்குப் பதில் சொல்லோணும்."

நான் சேகரைப் பார்த்தேன். எந்தவித குழப்பமுமில்லாமல் படத்தைக் கீறிக் கொண்டிருந்தான்.

"அந்தப் புத்தகங்கள் சுலபமாகக் கிடைக்காது.. நான் கனபேரிட்டை சொல்லித்தான் அதை வாங்கி வைச்சிருந்தனான்.. எப்பிடியோ அந்தப் புத்தகங்கள் இஞ்சை திரும்பி வரவேணும்.."

மார்க் மாஸ்ரர் சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்குள் நான் சிறுமையாகப் போனது போன்ற உணர்வு. எனது தன்மானத்தை தட்டிவிட்டது போன்ற பிரமை. அன்று பயின்று முடிந்து புறப்படும் போது ஏதோ ஒப்புக்குத்தான் சொன்னேன்.

"போட்டு வாறன்."

"அடுத்த முறை வரக்கை புத்தகங்களையும் கொண்டு வாரும் "
மார்க் மாஸ்ரர் சொல்வது காதில் கேட்டது.

அதன் பின்னர் நான் அந்தப் பக்கம் செல்லவேயில்லை. ஒன்று அந்தப் புத்தகங்களை யார் எடுத்தது அது இப்போ எங்கே இருக்கிறது என்பது பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. மற்றது என்னை சந்தேகித்ததுää என்னிடம் அதைப்பற்றி அவர் கேட்டதுää கேட்டமுறை எனக்குப் பிடிக்கவில்லை.

நீண்ட நாட்களின் பின்னர் நகரத்தில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பின்புறமாக இருந்து ஒரு கை எனது தோளில் விழுந்தது. முன்னால் நின்ற நண்பர்களின் கண்களில் மரியாதை தெரிந்தது. அவசரமாகத் திரும்பிப் பார்த்தேன். மார்க் மாஸ்ரர். வார்த்தைகள் வர மறுத்தன. அவரே எனக்காவும் பேசினார் போல் இருந்தது.

"எப்பிடி இருக்கிறீர்..? அந்தப் பக்கம் பிறகு ஆளையே காணேல்லை..."

நண்பர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள்.

"வாரும் பஸ் ஸ்ரான்ட்டுக்குத்தான் போறன். அதுமட்டும் கதைச்சுக் கொண்டு போவம். அலுவல் ஒண்டு இருந்ததாலைதான் பள்ளிக் கூடத்துக்கு வந்தனான்.. இப்ப நான் இங்கை படிப்பிக்கிறேல்லை.. மாறி அங்கை போட்டன்.."

"தெரியும்..."

"தெரிஞ்சு கொண்டும் என்னை வழியனுப்ப நீர் வரேல்லை? ம்.. கோவம் எல்லாருக்கும் வாறதுதான்.. ஆனால் இந்த வயசிலை உமக்கு இவ்வளவு கோவம் கூடாது... நான் அப்பிடித்தான் கேக்கவேணும்.. சேகரை எனக்குத் தெரியாது.. நீர்தான் கூட்டிக்கொண்டு வந்து விட்டனீர்.. நீர்தானே அதுக்குப் பொறுப்பு.. அதுசரி அந்தப் புத்தகங்கள் எங்கேயிருக்குது எண்டாவது தெரியுமே?"

குனிந்து பார்த்தபடியே தலையசைத்து "தெரியாது" என்று பதில் சொன்னேன்.

"மோகன் ஆர்ட்ஸ் கடையிலை இருக்குது. சேகர்தான் கொண்டே குடுத்தது. சேகரும் அவனும் நல்ல சிநேகிதம்.. அங்கை புத்தகங்கள் இருந்ததை சிவபாதம் பாத்திட்டு வந்து என்னட்டை சொன்னாப் போலைதான் எனக்கு புத்தகங்கள் காணாமல் போன விசயமே தெரியும். வீணா ஏன் படிக்கிறவனை குழப்புவான் எண்டிட்டுதான் உம்மட்டை உரிமையோடை கேட்டன். அவனும் திருப்பிக் கொண்டுவந்து புத்தகங்களை வைப்பான் எண்டு பாத்தன். நீர் கோவிச்சுக் கொண்டு போனதுதான் மிச்சம்."

எனக்கு எதுவுமே பேச முடியவில்லை.

"புதுவீடு கட்டியிருக்கிறன். குடிபோகக்கை ஓரு அறைக்கு உம்முடைய பெயின்றிங் இருக்கோணும் என்று ஆசைப்பட்டன்.. நீர் வரவேயில்லை........... கதையோடை கதையா எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்.."

"வாழ்த்துக்கள் மாஸ்ரர் "

"அவனுக்கு என்ன பெயர் தெரியுமோ?"
கேட்டுவிட்டு வாஞ்சையுடன் என்னைப் பார்த்தார். நானும் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன்.
"அவனுக்கு உம்முடைய பெயரைத்தான் வைச்சிருக்கிறேன். " சொல்லிவிட்டு புறப்படத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு யன்னலூடாக கையசைத்தார்.

Sunday, November 14, 2004

செக்கென்ன? சிவலிங்கமென்ன?

அவருக்கு சிவப்பு வர்ணம் என்றால் அறவே பிடிக்காது. ஆனாலும் அவர் தீட்டிய அந்த நவீன ஓவியத்தில் சிவப்பே நிரம்பியிருந்தது. இதைப்பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன். அமைதியாக அவரிடமிருந்து பதில் வந்தது.

"இது சிவனின் உருத்திர தாண்டவம். கோபத்தையும், பார்க்கும் போது பயத்தினையும் கொடுப்பதற்கு இந்த வர்ணம்தான் சிறந்தது. போதாதற்கு சிவனின் நடனத்தை ஒரு சுடலையில் நடப்பதாக வரைந்திருக்கின்றேன். பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே இங்கே சிகப்புத்தான் சிறந்தது. ஆனாலும் எனக்கு சிகப்பு பிடிக்காது."
அமைதியாக ஆனாலும் விளக்கமாக அவரிடமிருந்து பதில் வந்தது. ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.

பார்க்கும் போது முட்ட வரும் காளை மாதிரியிருக்கும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அந்தக் காளைக்குள் ஏ.மார்க் என்ற எழுத்துக்கள் இருக்கும். A,M என்ற எழுத்துக்களின் மேற்பகுதி குத்தவரும் கொம்புகளாகவும் A யின் கீழ்ப்பகுதி இரண்டும் முன்னம் கால்களாகவும் இருக்கும். இறுதியாக வரும் K காளையின் வாலாகவும் பின்னங் கால்களாகவும் இடையில் வரும் AR இனை கச்சிதமாக அதன் உடலாகவும் அமைந்து இருக்கும். இத்தனையும் அடக்கி அற்புதமாக மரத்தில் காளை ஓவியத்திற்குள் தனது பெயரை செதுக்கியிருந்தார். அதுவே அவரின் இலச்சினையாகவும் இருந்தது. தான் வரையும் ஓவியத்தில் அந்த முத்திரையையும் அப்போ அவர் பதித்து வந்தார். தனது புத்தகங்களின் முதற்பக்கத்திலும் இந்த காளை முத்திரையை பதித்திருப்பார்.

எனது நகரில் உள்ள பிரபல்யமான பாடசாலையில்தான் அவர் ஓவிய ஆசிரியராக இருந்தார். அந்தப் பாடசாலையின் மாணவர் விடுதிக்கும் அவரே பொறுப்பாளராகவும் இருந்தார். அந்த விடுதியில் விசாலமான அறையொன்றில் மாலையில் ஆறிலிருந்து பத்துவரை அவரிடம் ஓவியம் பயில எனக்கு வாய்ப்புக் கிட்டியது. நிறைய புத்தகங்கள் வைத்திருப்பார். வாசிக்கத் தருவார். அதில் உள்ள படங்களை வரைய பயிற்சியும் தருவார். மரங்களையும், மாடுகளையும், மனிதர்களையும் அப்படியே கீறுவதில் அர்த்தமில்லை அவற்றில் நவீனங்களைப் புகுத்தி பார்ப்பவர்களுக்குப் பலவற்றைச் சொல்லவைக்கும் சித்திரங்களை வரைய வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.

அப்பொழுது தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஏற்பட்டிருந்த நேரம். அந்த கிளர்ச்சி இளைஞர்கள் கன்னத்தில் கிருதாவும் குறும் தாடியும் வைத்திருந்தார்கள். அது அந்த நேரத்து நாகரிகமாகவும் இருந்தது. தென்னிலங்கைக்கும் வடஇலங்கைக்கும் சம்பந்தமில்லாத போராட்டமது. ஆனாலும் முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டமிருக்கும். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் விடுதியில் சனி, ஞாயிறுகளில் மாணவர்கள் தங்குவதில்லை. அதனால் மார்க் மாஸ்ரரும் வார விடுமுறைக்காக தனது ஊருக்குப் போய்விடுவார்.

ஒரு சனிக்கிழமை காலை, நகரம் களை கட்டியிருந்த நேரம், நகரத்தின் மத்தியில் இருந்த பஸ் நிலையத்தில் தனது ஊருக்குப் போவதற்காக மார்க் மாஸ்ரர் காத்திருந்தார், கூடவே நானும் அவருடன் நின்றிருந்தேன். அப்பொழுது ஜீப் வண்டியொன்று பஸ் நிலையத்துக்குள் வந்து சினிமா பாணியில் கிறீச்சிட்டு நின்றது. அதன் முற்பக்கத்தில் இருந்து காவல்துறை அதிகாரி இறங்கினான். இறங்கியவன் சுற்று முற்றுப் பார்த்தான். அவனுக்குத் தன் பெருமையை யாருக்காவது காட்டவேண்டும் அல்லது யாரையேனும் பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணமிருந்திருக்க வேண்டும். சிறிது நேர நோட்டத்துக்குப் பின் எங்கள் இருவரையும் நோக்கி வந்தான். எனக்கு அவனைப் பார்க்கப் பயமாக இருந்தது. பயப்படாதையும் என்று மார்க் மாஸ்ரர் எனக்கு ஜாடை காட்டினார். நேராக வந்தவன் மார்க் மாஸ்ரரை நெருங்கி நின்றான். அப்பொழுது மார்க் மாஸ்ரர் கன்னத்தில் நீளமாகக் கிருதா வைத்திருந்தார். அதைக் காட்டி என்ன என்று கேட்டான். மார்க் மாஸ்ரர் சிரிப்பால் பதில் சொன்னார். காவலதிகாரி அலட்சியமாக அவரைப் பார்த்தான். விபரீதமொன்று நிகழ வாய்ப்பிருப்பதாக மனது அச்சப்பட்டது.

காவலதிகாரி ஜீப்பிற்குப் சென்று திரும்பி வந்தான். அவனது கையில் இப்பொழுது குறடு ஒன்று இருந்தது. மார்க் மாஸ்ரரின் நாடியைப் பிடித்து ஒரு பக்கமாகத் திருப்பினான். குறட்டையெடுத்து மார்க் மாஸ்ரரின் கன்னத்து கிருதா மயிர்களைப் பற்றி இழுக்கத் தொடங்கினான். மார்க் மாஸ்ரர் எதுவித சலனங்களையும் காட்டாது பேசாமல் இருந்தார். ஒரு மயிரை இழுத்துப் பிடுங்கும் போதே எவ்வளவு வேதனையிருக்கும்.

அந்த மிருகம் எதுவுமே செய்யாத அந்த அமைதியான மனிதனை வேதனைப் படுத்தி இன்பம் கண்டு கொண்டிருந்தது. எனக்கு ஆச்சி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்தான் நினைவில் வந்தன.
நக்கிற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கமென்ன?

"சேர்.. அவர் ஒரு மாஸ்ரர்" என்னையறியாமல் வார்த்தைகள் வந்தன. சிறிது நேரம் எங்கள் இருவரையும் அந்தக் காவலதிகாரி பார்த்தான். பிறகு பேசாமல் போய்விட்டான்.

பஸ் வந்தது. ஒன்றுக்கும் யோசியாதையும் சொல்லிவிட்டு மார்க் மாஸ்ரர் பஸ்ஸில் ஏறினார்.

ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.

Wednesday, September 22, 2004

காதலிக்காதே கவலைப்படாதே

அவரை அங்கை ரீச்சரென்றே அழைப்போம். அவரின் முழுப்பெயர் அங்கையற்கண்ணி. அங்கையற்கண்ணி என்ற பெயர் நீண்டு போனதால் அங்கை.

அங்கை - அழகான பெயர். அவ கூடத்தான் அழகு. யாரிடமும் தேவையில்லாமல் பேசமாட்டா. தானுண்டு தன் வேலையுண்டு என்பது அவரின் சுபாவம்.

அங்கை ரீச்சர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியையல்ல. தனிப்பட்ட முறையில் நடனம் பயிற்றுவித்த ஒரு ஆசிரியை. எங்கள் ஊரில் இருந்து 22 மைல் தள்ளிப் போய்தான் நடன வகுப்பெடுத்து வருவார். நடன ஆசிரியை என்பதால் அவரின் நடையிலும் ஒரு நளினமிருக்கும். அழகு ஒன்று நளினமாக நடந்து வந்தால் இளசுகளுக்கு எப்படியிருக்கும்? அவர் போகும் போதும் வரும் போதும் எங்கள் வீதிகளில் நிறைய சைக்கிள்கள் மெதுவாக ஓடும். ஒரு பக்கம் போன சைக்கிள் தேவையில்லாமல் மறுபக்கம் திரும்பி வரும்.

அங்கை ரீச்சரின் தம்பி சுதன் என்னுடன் தான் படித்தான். சுதன்தான் அங்கை ரீச்சரை பஸ் நிலையம் வரை கூட்டிக்கொண்டு போய் விடுவான். மாலையில் பஸ் நிலையத்தில் காத்திருந்து கூட்டிக் கொண்டு வீடு போவான். சுதனுடன் நானும் பல தடவைகள் அங்கை ரீச்சருக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்திருக்கிறேன். அங்கை ரீச்சர் என்னை அன்பாக தம்பி என்றே அழைப்பார். மாலையில் வரும்போது சுதனுக்கு மட்டுமல்ல எனக்கும் ஏதாவது இனிப்புகள் வாங்கி வந்து தருவார்.

அங்கை ரீச்சருக்கு ஒரு காதல் இருந்தது. அநேகமாக எல்லோருக்கும் அந்த விடயம் தெரியும். அவரின் பக்கத்து வீட்டிலிருந்த கார்த்திகேயண்ணைதான் ரீச்சரின் காதலன். அவரும் நிறைய அன்பானவர். மின்சார வாரியத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். ரீச்சரின் பக்கத்து வீட்டுக்காரனாக இருந்தாலும் அவர்களது காதல் மிகவும் கண்ணியமாகவே இருந்தது. அவர்களுக்கு இடையில் காதல் இருந்ததாக ஊரில் பேசிக்கொள்வார்கள். ஆனால் அவர்களது காதலை யாராவது கேலி செய்தோ கேவலமாகவோ கதைத்ததாக இல்லை. வீதிகளில் அவர்கள் இருவரும் சந்திக்க நேர்ந்தாலும் வெறும் பார்வையுடன் விலகிச் செல்வார்கள். இத்தனைக்கும் இதுவே நான் பார்த்த முதல் கண்ணியமான காதல்.

ஓருநாள் நான் ரீச்சரைப் பார்த்தபோது அவரின்; முகத்தில் மகிழ்ச்சி மறைந்திருந்தது. ஏன் என்று நான் கேட்கவில்லை. கேட்கும் எண்ணமும் எனக்கிருக்கவில்லை. முகத்தில் மட்டும்தான் அவரது மகிழ்ச்சி மறைந்து போயிருந்தது. செயல்களில் எதுவித மாற்றமும் இருந்ததில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை நடன வகுப்புக்குச் சென்று வருவார் திரும்பி வரும்போது எனக்கும் சுதனுக்கும் ஏதாவது இனிப்பு வாங்கிவருவார். ஆனாலும் அவரது முகம் களையிழந்து இருந்தது தெரிந்தது.

ஒருநாள் இரவு அங்கை ரீச்சரின் வீட்டுப் பக்கமாக துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஊரெல்லாம் அல்லோலகல்லோலப் பட்டது. கொஞ்ச நேரத்தில் எல்லாமே அமைதியாகிவிட்டது. அன்று என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. சின்னப் பையன் என்று எனக்கு யாரும் எதையும் சொல்லவில்லை. எப்படியாயினும் விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது.

அடுத்தநாளே விடயத்தை அறிந்து கொண்டேன். விடயம் இதுதான். கதைக்கு ஒரு வில்லன் வேண்டுமல்லவா. அதுவும் காதல் கதைக்கு வில்லன் இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இல்லாது போய்விடும். அங்கை ரீச்சரின் தாய்வழி உறவினனே வில்லனாக வந்தான். அதுவும் அங்கை ரீச்சரை விட அவருக்கு பதினான்கு வயது அதிகம்.

அங்கை ரீச்சரின் தாய்க்கும் தனது உறவினனை மணம் முடித்துக் கொடுப்பதிலேயே ஆர்வமிருந்தது. சினிமா காதல் மாதிரி இவர்கள் காதலும் முக்கோணக் காதலானதால் காதலனுக்கும் வில்லனுக்கும் இடையில் மோதல் ஆரம்பமானது. அதன் இறுதிக் கட்டமே கார்த்திகேயண்ணையின் துப்பாக்கி விளையாட்டு.

கார்த்திகேயண்ணையிடம் முயல் வேட்டைக்குக் கொண்டு செல்லும் துப்பாக்கி இருந்தது. முயல் வேட்டைத் துப்பாக்கி என்றால், சுடும் போது சன்னங்கள் சிதறிப் பாயும். அதில் ஒன்றாவது முயலில் படும் சாத்தியக் கூறு இருக்கும். இந்தத் துப்பாக்கியை வைத்துத்தான் கார்த்திகேயண்ணை விளையாட்டுக் காட்டினார். ஆளைப் பார்த்துச் சுடாமல் பயம் காட்டுவதற்காக வானத்தைப் பார்த்து சுட்டிருக்கின்றார். விளைவு சத்தம் கேட்டு ஊரெல்லாம் திரண்டு விட்டது.

கதையில் பயங்கர ஆயுதங்களை வில்லன்தான் வைத்திருப்பான். கதாநாயகன் வெறும் கையுடன் சென்று சண்டை செய்து எதிரியை வென்று காதலியை மீட்டு வருவான். ஆனால் நிலமை இங்கு வேறுவிதமாக இருந்தது. கதாநாயகன் கையில் ஆயுதமிருந்தது. இது ஊராருக்கு கார்த்திகேயண்ணையை வில்லனாக மாற்றிக் காட்டியது. ஆகவே முடிவு மங்களமாக இல்லாமல் அமங்களமாக இருந்தது. ஊராரின் ஆதரவு அங்கை ரீச்சரின் தாய்வழி உறவினருக்கே கிடைத்தது. பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இரவோடு இரவாக அங்கை ரீச்சருக்கு அவரது தாய் வழி உறவினர் தாலி கட்டி காதல் கதையை முடித்து வைத்தார்.

எனக்கு அங்கை ரீச்சரை நினைக்க அழுகையே வந்து விடும் போலிருந்தது. கார்த்திகேயண்ணையும் பாவம். இந்த விடயத்திற்குப் பிறகு ஊரில் யாருடனும் அவர் கதைத்ததை நான் காணவில்லை. அழகான அவரின் முகத்தில் தாடி வளர்ந்து கொண்டேயிருந்தது. அந்த அவரது அழகு முகத்தை பின்னாட்களில் முழுமையாக நான் பார்க்கவேயில்லை. அங்கை ரீச்சர் கூட நீண்ட நாட்களாக நடன வகுப்பு எடுக்கப் போகவில்லை. எனது சிறுபராயத்தில் உள்ள விளையாட்டுக்கள் படிப்புக்களுடன் இவர்களது விடயம் பல காலம் மறந்தே போயிற்று.

கொஞ்ச வருடங்களின் பின்னர் அங்கை ரீச்சரை மறுபடி நான் பார்த்தேன். ஆளே முழுவதுமாக மாறியிருந்தார். நடையின் நளினங்கள் இருக்கவில்லை. முகத்தில்; சிரிப்பு சிறிதளவேனும் இல்லை. கண்களின் கீழே புதிதாக வளையங்கள் விழுந்திருந்தன. கன்னத்தில் குழிகள் இருந்தன. கண்கள் குழிக்குள் இருந்தன.

"புருசன் பயங்கரக் குடிகாரன். பாவம் இரண்டு பெட்டைகளைப் பெத்துப் போட்டு உழைக்கப் போறாள். புருசன் சுகமா வீட்டிலையிருந்து குடிச்சுக் கொண்டிருக்கிறான். எப்பிடியிருந்த பெட்டை இப்பிடிப் போனாள். மனுசன் அடிக்கிறவன் போலை" என்று ஊரில் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.

இப்போ எல்லாம் அங்கை ரீச்சரைக் கூட்டிக் கொண்டு போவதற்கு சுதன் வருவதில்லை. தனியாக வந்து தனியாகவே அவர் போய்க் கொண்டிருந்தார். ஒருநாள் பஸ் தரிப்பிடத்தில் நான் நின்ற போது அங்கை ரீச்சர் நடன வகுப்பு எடுத்து முடித்து விட்டு வந்து பஸ்ஸால் இறங்கினார். தூரத்தில் நின்று பார்த்தால் ரீச்சரை அடையாளம் காண முடியாது. அந்தளவுக்கு அவரில் மாற்றம் இருந்தது. காலம் எப்படியெல்லாம் மனிதர்களைப் புரட்டிப் போடுகிறது. மனது கனமானது.

"தம்பி எப்பிடியிருக்கிறாய்..? உனக்கு ஒண்டும் வாங்கிட்டு வரேல்லையடா"
இதைச் சொல்லும்போது அவரின் கண்களில் ஏதோ மின்னுவது தெரிந்தது. வாகனங்களின் வெளிச்சம் கண்ணில் நிறைந்திருந்த கண்ணீரில் பட்டு தெறிப்பதைப் புரிந்து கொண்டேன்.

அந்த வயதில் நிலமைகளை சமாளிக்கும் பக்குவம் எனக்குத் தெரியாது. பேசாமல் நின்றேன்.

"படி.. நல்லா படி.. "எனது தோளில் தட்டிச் சொல்லிவிட்டுச் சென்றார்

அடுத்தநாள் காலையில் செய்தி கிடைத்தது அங்கைரீச்சர் விசம் குடித்து இறந்து போனார் என்று.

"அம்மா இனியும் என்னாலை ஏலாது" என்று சொன்னதுதான் அங்கைரீச்சர் சொன்ன கடைசி வார்த்தைகள் என அறிந்தேன். தாய்க்குக் கட்டுப்பட்ட அந்த உயிர் தாயின் மடிலிலேயே பிரிந்தது.

கார்த்திகேயண்ணையை நான் இங்கு வரும் போது கண்டிருக்கிறேன். அந்த அழகு முகத்தை மறைத்த தாடி நரைத்திருந்தது. இப்போ அவர் உயிருடன் இருந்தால் அவருக்கு ஒரு எழுபது வயதாவது இருக்கும்.

ஊருக்குப் போனால் கார்த்திகேயண்ணையைத் தேடிச் சென்று கதைக்க வேண்டும். அவரது வைராக்கியத்தைப் பற்றிக் கேட்க வேண்டும். காதலித்தவள் கிடைக்கவில்லை என்பதற்காக கல்யாணமே இல்லாமல் வாழ்ந்து என்ன கண்டீர்கள் எனக் கேட்க வேண்டும். ஊருடன் பகைத்தால் வேருடன் கெடும் என்பது உண்மையா எனவும் கேட்க வேண்டும்.

Sunday, September 12, 2004

காதலிக்காதே கவலைப்படாதே

அவரை நாங்கள் கணேந்திரமாமா என்றே அழைப்போம். அவர் எந்த வழியில் எங்களுக்கு மாமாவானார் என்பது எனக்குத் தெரியாது. எல்லோரும் கணேந்திரமாமா என்றே அழைப்பார்கள் ஆகவே சிறுவர்களாகிய நாங்களும் அப்படித்தான் சொல்லிக் கொள்வோம். ஆள் கொஞ்சம் திடகாத்திரமான பேர்வளி. கராத்தே யூடோ எல்லாம் தெரிந்து வைத்திருந்தார். அவரைக் கண்டால் ஒரு பயம் அதனோடு கூடி ஒரு மரியாதையும்; இருந்தது. அவரோடு உரையாடுவதென்றாலும் சிறிது தள்ளி நின்றுதான் உரையாடிக்கொள்வார்கள். எல்லாம் ஒரு முன் எச்சரிக்கைதான். ஆனாலும் அவரிடம் ஒரு கெட்டபழக்கம் இருந்தது. அது - எப்போதும் அவர் மப்பும் மந்தாரமுமாகத்தானிருப்பார். அவரிடமிருந்து விலகி நின்று உரையாடுவதற்கு இதுவும் ஒரு காரணம்தான்.

கணேந்திரமாமாவின் மகன் கஜேந்திரன் என்னுடன்தான் படித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் வகுப்பறையில் கஜேந்திரன் தனது தந்தையின் வீர விளையாட்டுக்களைப் பற்றி விளாசிக் கொண்டிருந்தான். முதல் நாள் பெரிய இடத்துப் பெண் படம் பார்த்துவிட்டு அதில் எம்.ஜி.ஆரும் அசோகனும் இரண்டு கைகளில் கம்புகளை வைத்துச் சுழன்று சுழன்று சிலம்பாடியதைக் கண்டு பிரமித்துப் போயிருந்த எனக்கு கஜேந்திரன் தனது தகப்பனைப் பற்றி பெருமையாகச் சொன்னது பிடிக்கவில்லை.

"இதென்ன கராட்டியும் யூடோவும்? இரண்டு கைகளில் கம்புகளை எடுத்துச் சுழட்டினால் கராட்டியும் யூடோவும் பறந்து போடும் "
என்று என் எரிச்சலை வெளிப்படுத்தினேன். கஜேந்திரனின் முகம் கறுத்துவிட்டது. உள்ளுக்குள்ளே எரிகிறான் என்பது அப்படியே தெரிந்தது. இனித் தனது தந்தையைப் பற்றி புளுக மாட்டான் எனத் தெரிந்தது. அந்த வகையில் எனக்கு நிறைந்த திருப்தியாக இருந்தது.

அடுத்தநாள் நானும், மதுரநாயகமும், தேவதாசும் பாடசாலை முடிந்து வந்து கொண்டிருந்தோம். யாரோ என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது. திரும்பிப் பார்த்தால் கணேந்திரமாமா. அவரது வீட்டு வாசலில் இருந்து எங்களை வரும்படி கைகளால் சைகை செய்தார். மூவரும் அவரை நெருங்கினோம். என்னை நெருங்கிய கணேந்திரமாமா எனது கையில் இருந்த புத்தகத்தைப் பக்குவமாக வாங்கி பக்கத்தில் உள்ள கல்லின் மேல் வைத்தார். அவரின் செய்கை புதுமையாக இருந்தது. போதாதற்கு அவரிடமிருந்து வீசிய கெடிய வாசனை ஆள் மப்பில்தானிருக்கிறார் என்பதை உணர்த்தியது. வேலியில் சொருகியிருந்த இரண்டு கம்புகளை எடுத்து எனது இரு கைகளிலும் திணித்தார்.

"எங்கை கம்பை சுழட்டு பாப்பம் "

வார்த்தைகள் அவரது வாயில் இருந்து வந்து விழுந்தபோதுதான் எனக்கு விபரீதம் விளங்கியது. அவர் நின்ற தோரணையும் வார்த்தைகள் வந்து விழுந்த விதமும் மதுரநாயகத்துக்கும் தேவதாசுக்கும் அச்சமூட்டியது அப்படியே தெரிந்தது. இல்லாவிட்டால் ஐந்தடி பின்னால் போய் அவர்கள் நின்றிருக்க மாட்டார்கள். கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தால் ஓடிவிடுவார்கள் என்று தெரிந்தது. மூவரும் சேர்ந்து ஓடினால் நான்தான் முன்னுக்கு வருவேன். ஆனால் அன்று என்னால் அது முடியாது இருந்தது. எனது இரண்டு கைகளிலும் என்னைவிட பெரிய கம்புகள் இருந்தன. அதைவிட எனது காற்சட்டையை சேர்ட்டுடன் சேர்த்து கணேந்திரமாமா இறுகப் பிடித்திருந்தார். அவரின் வாயில் இருந்து அடிக்கடி வந்த வார்த்தைகள், எங்கை கம்பை சுழட்டு பாப்பம்.

எங்களுக்குள் மதுரநாயகம் கொஞ்சம் துணிச்சலானவன். மெதுவாக எனது காற்சட்டையைப் பிடித்திருக்கும் கையை விடுவிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான் கூடவே கணேந்திரமாமாவையும் தாஜா பண்ணிக் கொண்டிருந்தான்.

"இவன் கம்பை சுழட்டிக் காட்டோணுடம் இவனுக்கு நான் கராட்டி என்னெண்டு காட்டவேணும். "
கணேந்திரமாமாவின் வார்த்தைகள் மட்டுமல்ல முகத்தைப் பார்க்கவே பயமாயிருந்தது. கண்களை உருட்டி பல்லை நெருமிக் கொண்டிருந்தார். கணேந்திரமாமா காற்சட்டையுடன் பிடித்திருந்த அவரது முரட்டுக்கை எனது வயிற்றுப் பகுதியை உறுத்தியது. திடீரென எனது முகத்தை நோக்கி வந்த கணேந்திரமாமாவின் மற்றைய கையை மதுரநாயகம் பாய்ந்து பிடித்தான். அவனுக்கு அதைத் தடுக்கப் போதிய பலமில்லை. எனது இடது கன்னத்தில் கணேந்திரமாமாவின் கை மோதியது. காற்று ஊதாமலே சிறிய பலூன் போன்று எனது கன்னம் வீங்கிப் போனது. பொறி கலங்கியது என்பார்களே அது எப்படி என்று எனக்கு அப்பொழுது நன்றாக விளங்கியது. அவரது குத்தின் வேகத்தை மதுரநாயகம் தடுத்தும் நிலை இது என்றால் தடைகள் இன்றி குத்து விழுந்திருந்தால் அந்தச் சின்ன முகம் சிதைந்திருக்கும். என்ன நினைத்தாரோ எனது கைகளில் இருந்த கம்புகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள்ளே போய்விட்டார். தேவதாஸ் கல்லில் இருந்த எனது புத்தகங்களை எடுத்துக் கொண்டான். மதுரநாயகம் என்னை அணைத்தபடி வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டான்.

அன்று மாலை கணேந்திரமாமா வீட்டின் வாசலில் ஊர்ப் பெரிசுகள் சில திரண்டு நின்று,
"வாடா வெளியிலை. சின்னப்பெடியனிட்டை வீரம் காட்டுறீயோ? இப்ப வந்து காட்டுடா !
என்று கெட்ட வார்த்தைகள் சேர்த்து கத்திக் கொண்டிருந்தார்கள். கணேந்திரமாமா வெளியே வரவேயில்லை. அன்று மட்டுமல்ல சில நாட்களாக அவர் வெளியே வரவில்லை. அடுத்தநாள் கணேந்திரமாமா வீட்டிலிருந்து எனக்கு பலவகையான இனிப்பகள் வந்து சோந்தன. எது எப்படியோ அதற்குப் பிறகு சண்டைப் படங்கள் பார்ப்பதில் எனக்கு அவ்வளவாக நாட்டமில்லை. அப்படி பார்க்க நேரிட்டாலும் அதில் வரும் சண்டைக் காட்சிகளைப் பற்றி யாரிடமும் நான் பேசிக் கொள்வதில்லை.

Monday, August 23, 2004

உயரே பறக்கும் காற்றாடி

மார்கழியில் மழை மேகம் வருகிறதோ இல்லையோ வானத்தில் ஆங்காங்கே பட்டங்கள் முளைத்திருக்கும். தைப்பொங்கல் வரை இது நீடிக்கும். பொங்கல் முடிந்தால் பாடசாலையும் ஆரம்பமாகிவிடும். பட்டம் விடுவதும் முடிந்துவிடும்.

மார்கழி விடுமுறையென்றால் நிறையவே மகிழ்ச்சியாக இருக்கும். ஆளாளுக்குத் தங்கள் பட்டங்களையும் நூல்களையும் தூக்கிக்கொண்டு மரங்கள் இல்லாத காணிகள், திடல்கள் தேடிப் பறப்போம்.

எங்கள் ஊரில் பட்டம் ஏற்றும் போட்டி பொங்கலன்று மாலை வெகு சிறப்பாக நடக்கும். கொக்கு, வெளவால், பிராந்து, மணிக்கூடு, வெளிச்சவீடு, வட்டம், படலம் என்று பலவிதமான பட்டங்களைப் போட்டிக்குப் பறக்கவிடுவார்கள். தனியாகவும் குழுவாகவும் போட்டியில் பங்கு பெறுவார்கள். இந்தப் போட்டியைப் பார்க்க அடிக்கடி பெற்றோருடன் போயிருக்கிறேன். ஆனாலும் இந்தப் போட்டியில் விடும் பட்டங்களிலும் பார்க்க எனது வீட்டுக்கு முன்னாலிருக்கும் காணியில் பீற்றர் ஆறடி உயரத்தில் பறக்க விடும் படலத்தையே எனக்கு நிறையப் பிடிக்கும்.

பீற்றர் அந்த வருடத்துக்கான தனது பட்டத்தை நத்தார் அன்று பறக்க விடுவான். கமுக மரத்தின் சிலாகையை எடுத்து அதை பெருவிரல் தடிப்பில் அழுத்தமாக சீவி வில்லுப் போல் வளைத்து அதில் பனை மரத்து மட்டையில் எடுத்த நாரைக் கட்டி விடுவான். பட்டத்தை ஏற்றிவிட்டால் போதும் மேலேயிருந்து அந்தப் பட்டம் ஆட, பட்டத்தின் மேற்பகுதியில் கட்டியிருக்கும் நார் காற்றுடன் மோதித் தரும் இசையிருக்கிறதே அது நீண்ட தூரத்திற்குக் கேட்கும். கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கும். நத்தாரன்றும் புதுவருடத்தன்றும் அவனது பட்டத்திற்கு லைற் வேறு பூட்டிக் கலக்குவான். இதுக்காக பற்றறிகள், விட்டுவிட்டு எரியும் பல்ப்புகள் எல்லாம் நிறையவே வைத்திருப்பான். நட்சத்திரங்கள் நிறைந்த இரவில்; நாதம் தந்து விட்டு விட்டு எரிந்து கொண்டு மேலே ஆடிக் கொண்டிருக்கும் அந்தப் பட்டத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனாலும் அந்தப் பட்டத்தை நாங்கள் யாரும் தொட அனுமதி கிடையாது. பட்டம் மேலே போனாலும் அதன் நூலைக் கூடத் தொட விடமாட்டர்கள். பீற்றரை விட அவனது தம்பி துரைதான் மோசம். பட்டத்திற்குக் கிட்டவே விடமாட்டான்.

பீற்றர் பெரிய பட்டமாக விட்டாலும் துரை சின்ன வெளவால் பட்டத்தைத்தான் பறக்க விடுவான். பட்டத்தை தொட துரை மறுப்பதால், அவனை விட நீண்ட தூரத்திற்கு ஒரு வெளவால் பட்டமொன்றை நானும் பறக்க விட வேண்டுமென நினைத்துக் கொண்டேன். இதற்காகவே பிரத்தியேகமாக தேவன் எனக்கு ஒரு வெளவால் பட்டமொன்றை செய்து தந்தான். பட்டம் இருந்தும் பட்டத்தை பறக்க விட நூல் தேவைப் பட்டது. தையலுக்கு அம்மா வைத்திருந்தை நூலை ஒருவாறு கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டேன்.

எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள காணியில் பட்டத்தைப் பறக்க விட்டேன். தேவன் கட்டித் தந்த அந்த அழகான பட்டம் ஆடி அசைந்து மேலே பறக்கத் தொடங்கியது. அம்மாவிடம் வாங்கி வந்த அந்த ஐநூறு மீற்றர் நீள நூலை விட்டுக் கொண்டிருந்தேன். துரை ஒருவித எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். என்னுடன் சேர்ந்து நின்று கொண்டிருந்த தேவதாசுக்கும், தேவனுக்கும் கொள்ளை சந்தோசம். ஒரு கட்டத்திற்கு மேல் பட்டம் மேலே போகவில்லை ஆனாலும் நேராகத் தொலை தூரம் போய்க் கொண்டிருந்தது. இபபோழுது மிகச் சிறிதாகப் பட்டம் தெரிந்தது. கீழே நூல் கட்டை சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. நான் நூலை இன்னும் விட்டுக் கொண்டிருந்தேன். இவ்வளவு நூலை விட்டு இதுவரை யாரும் அந்தக் காணியில் பட்டம் விடாததால் அன்று எனக்கு பெருமையாக இருந்தது. துரையின் முகம் இன்னும் கறுத்திருந்தது. அவனைப் பார்க்க எனக்கு சந்தோசம் பொத்துக் கொண்டு வந்தது. நான் இன்னும் நூலை விட்டுக் கொண்டிருந்தேன். பட்டம் இன்னும் சிறிதாக கண்ணுக்கு ஒரு புள்ளியாகத் தெரிந்தது. ஒரு கட்டத்தில் கையில் நூல் இருப்பது தெரியவில்லை. கீழே பார்த்தால் சுற்றிச் சுழன்ற நூல் கட்டை அமைதியாக நிலத்தில் இருந்தது. பட்டத்தைப் பார்த்தேன் அது தன்பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. கட்டையின் முடிவில் நூல் கட்டியிருக்காது என்பது அப்போது எனக்குத் தெரியாமல் போனது. நான் விட்ட நூல் காற்றில் மேல் எழும்பி கைக்கு எட்டாத தூரத்தில் பட்டத்துடன் பறந்து போனது. அதுவரை பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த துரை தனது வெளவால் பட்டத்தைப் பறக்க விடத் தொடங்கினான். அவனது முகம் பிரகாசமாக இருந்தது.

Tuesday, August 17, 2004

அண்ணன் காட்டிய வழியம்மா

வருடா வருடம் சரஸ்வதி பூசை முடிய அம்மன் கோவிலில் இருந்து அம்பாள் புறப்பட்டு வீதி வலம் வருவார். எங்கள் ஊரில் அது பெரிய விழாவாகவே நடைபெறும். அந்த விழாவை மானம்பூ என்றே அழைப்பார்கள். எனக்குப் படிப்பு, செல்வம், வீரம் எல்லாம் வரவேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் வருடம் தவறாமல் என்னை அங்கு கூட்டிச் செல்வார்கள். அங்கு போனதால் இப்பொழுது கல்வி, செல்வம், வீரம் எல்லாம் நிறைந்து வாழ்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு.

ஓரு மானம்பூ அன்று எனது அண்ணன் என்னை மானம்பூவிற்கு அழைத்துச் செல்வதாக எனது அம்மாவிடம் கேட்டுக் கொண்டார். எனது அம்மாவும் அந்தமுறை என்னை அவருடன் அனுப்பி வைத்தார்.

இயற்கையிலேயே இருட்டைக் கண்டால் எனது அண்ணனுக்குப் பயம். அதுவும் இருட்டில் ஒரு பொருள் அசைவதாக உணர்ந்தால் போதும் ஆளும் பயந்து கூட நிற்பவரையும் பயப்பட வைத்துவிடுவார்.

கூட்ட நெரிசலில் நான் தொலைந்து விடாமல் இருப்பதற்காக அண்ணனின் கையை விடாமல் பிடித்திருக்கும்படி அம்மா சொல்லியிருந்தா. அதுபோல் நான் அவரின் கையை இறுகப் பற்றியபடி வீட்டிலிருந்து புறப்பட்டேன். பிரதான வீதிக்கு நாங்கள் வந்ததும் என்னை அழைத்துக் கொண்டு என் அண்ணன் பஸ் தரிப்பிடத்துக்குச் சென்றார். எனக்கு அது புதிராக இருந்தது. கோவில் கூப்பிடும் தூரத்தில் இருக்கையில் எதுக்கு பஸ்? கேட்கவேண்டும் போலிருந்தது. கேட்கவில்லை.

பஸ் வந்தது ஏறிக்கொண்டோம். கோவிலையும் தாண்டி பஸ் போனது. நான் அண்ணனின் முகத்தைப் பார்த்தேன். பேசாமல் இருக்கும்படி சாடை காட்டினார். பஸ்ஸிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் ஏதும் பேசவில்லை. சிறிது நேரத்தின் பின் ஒரு தரிப்பிடத்தில் பஸ் நின்ற போது இறங்கச் சொன்னார். இறங்கிக் கொண்டோம். நேராக ஒரு சினிமா தியேட்டருக்கு அழைத்துப் போனார். அப்பொழுதுதான் சொன்னார். நாங்கள் கோவிலுக்குப் போகவில்லை சினிமா பார்க்க வந்திருக்கிறோமென்று. வீட்டுக்குப் போய் யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி இனிப்பும் வாங்கித் தந்தார்.

சினிமாவில் காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப் பொண்ணு மணவிழா என்று பாட்டு வந்தபோது மானம்பூ திருவிழாவும் வீதிகள் தோறும் வழங்கப்படும் அவல், கற்கண்டு எல்லாம் நினைவில் வந்தது. நடிகர்கள் யார் யாரென்று அப்போ தெரியாது. ஓடினார்கள், பாடினார்கள், ஓவர்கோட் போட்டபடி கடற்கரை வெய்யிலில் நின்றார்கள,; சண்டை போட்டார்கள், சிரித்தார்கள், அழுதார்கள் இதையெல்லாவற்றையும் அண்ணன் வாங்கித் தந்த இனிப்பை ருசித்தபடி பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒருவாறு படம் முடிந்தது. வெளியில் வந்தோம். சினிமா பார்க்க வந்தவர்கள் சிதறிப் போய் விட்டார்கள். எனது அண்ணன் மட்டும் பரபரப்பாக இருந்தார். அருகில் இருந்த தேனீர் கடையில் ஏதோ விசாரித்தார் பிறகு எனக்குச் சொன்னார் பஸ் எல்லாம் போய்விட்டது நடந்துதான் வீட்டுக்குப் போக வேண்டுமென்று. முதலாவது எங்கள் வீடு மூன்று மைல்கள் தூரத்திலிருந்தது. இரண்டாவது இந்த நேரம் மானம்ப10 முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் போயிருப்பார்கள். மூன்றாவது எனது அண்ணருக்கு இருட்டைக் கண்டால் பயம். நாங்கள் போக வேண்டிய பாதையின் இரு புறமும் பயிர் செய்யும் நிலங்களே இருந்தன. எங்கும் இருட்டு.

வேறு வழியில்லாததால் நடக்க ஆரம்பித்தோம். நான் அண்ணனின் கையைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் பார்த்தால் எனது கையைப் பிடித்தபடி எனது அண்ணன் நடந்து கொண்டிருந்தார். பயம் இல்லாமலிருப்பதற்காக ஏதேதோ சொல்லிக் கொண்டு வந்தார்.

அது மழைக் காலமாக இருந்தபடியால் வீதியின் இருபுறமும் உள்ள நிலத்தில் தண்ணீர் நிறைந்திருந்தது. ஒரு கட்டத்தில் தவளைகள் சத்தம் கேட்கத் தொடங்கியது. அந்தச் சத்தத்திற்குப் பயந்து போன அண்ணன் என்னையும் இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். அவரது வேகத்துக்கு நான் ஓடமுடியாமலிருந்ததினால் என் கையை விட்டுவிட்டு என்னை ஓடி வரும்படிச் சொல்லிவிட்டு அவர் முன்னுக்கு ஓடத் தொடங்கிவிட்டார். அவருடன் ஓட என்னால் முடியவில்லை. என்னை விட்டுவிட்டு வீட்டுக்குப் போகவும் அவரால் முடியாது. திரும்பி வந்து எனக்கு அடிக்காத குறையாக என்னை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். அந்த மழைக் காலத்திலும் வியர்வை ஒழுக ஒழுக ஒருவாறு வீடு வந்து சேர்ந்தோம்.

வாசலில் அம்மா பார்த்துக் கொண்டிருந்தா. மானம்பூ முடிய அப்படியே கோவிலுக்குப் போய் சாமி இறக்கி உள்ளே போகும் வரை இருந்து விட்டு வருவதாக அம்மாவிற்கு அண்ணன் சொன்னார்.

அண்ணனுடன் அன்று என்ன படம் பார்த்தேன் என்று நான் சொல்லத்தானே வேண்டும்.
தாய் சொல்லைத் தட்டாதே

Sunday, August 08, 2004

பள்ளிக்கூடம் போகலாம்

ஒன்பதாவது வகுப்பு.
இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு.

அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள்.
இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்பாக இருந்தது 12வது படித்துக் கொண்டிருந்த மாணவர் தலைவன் ரவி. இன்று அவன் நாட்டில் ஒரு சட்டத்தரணியாக இருக்கிறான். விஞ்ஞானம் படித்த சட்டத்தரணி.

ரவியின் தம்பி சபா எனது வகுப்பில்தான் படித்துக் கொண்டிருந்தான். ஆதலால் இந்த பிரியாவிடை விடயம் எங்களது வகுப்பிலும் தடல் புடலாகப் பேசப்பட்டது.

பிரியாவிடை நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்கு முன்னால் அதிபர் தங்கராஜா மாஸ்ரரிடமிருந்து நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவர்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை. இதில் முன்ணணியில் செயற்பட்டு வந்த ரவி, சபா இருவருக்கும் தன்மானப் பிரச்சினை.

பாடசாலை பிரியாவிடை செய்வதால் மாணவர்கள் தனியாக பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தத் தேவையில்லை என்பது அதிபரின் வாதம். மாணவர்களிடம் நிதி வசூலித்த பின்னால் நிறுத்த முடியாது என்பது மாணவர் தலைவரது கருத்து. இவர்களுக்கு நடுவில் பாவம் மாணவர்களாகிய நாங்கள்.

பிரியாவிடை நிகழ்ச்சியை மாணவர்கள்தான் நடத்த வேண்டும் என்பதில் ரவி பிடிவாதமாக இருந்தான். அவனுக்குப் பின்னால் சில ஆசிரியர்களும் இருந்தார்கள் என சாடைமாடையாக சிலர் பேசிக் கொண்டார்கள்.
அதிபர் தங்கராஜா மாஸ்ரரோ அமைதியாக இருந்தார்.

மாணவர்களிடம் வசூலித்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென அதிபரிடமிருந்து இறுதி அறிவிப்பு வந்தது. எனக்கு மனதுக்குள் சந்தோசம். பிரியாவிடைக்கு அம்மாவிடமிருந்து பணம் வாங்கியாயிற்று. பணம் திருப்பித் தரப்பட்டால் அதை எனது வேறு தேவைக்குப் பயன் படுத்தலாமென கணக்குப் போட்டுக் கொண்டேன். நிகழ்ச்சி நிறுத்தப் பட்ட விசயம் அம்மாவுக்கு எங்கே தெரியப் போகிறது?

கணக்குகள் எப்பொழுதும் சரிவராது. நான் போட்ட கணக்கும் தப்பாகப் போயிற்று.

ஒருநாள் மாணவர் தலைவரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. அதிபர் தங்கராஜா மாஸ்ரர் எங்களது நிகழ்ச்சியை மறுப்பதால் கச்சேரியிலுள்ள கல்வித் திணைக்களத்தில் இது விடயமாக முறைப்பாடு செய்ய உள்ளோம் ஆகவே நாளை காலை எட்டு மணிக்கு விஞ்ஞான வகுப்பு மாணவர்கள் பாடசாலை முன்னால் கூடவும். போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் போக்குவரத்துக்கான செலவாக ஒரு ரூபா கொண்டு வரவும்.

அநேகமான மாணவர்கள் ரவியின் பின்னால் நின்றார்கள். போதாதற்கு சபா எனது வகுப்பிலிருந்து எல்லோருக்கும் உரு ஏத்திக் கொண்டிருந்தான். ஆகவே இவர்களது பேச்சுக்கு எடுபடுவது தவிர வேறு மார்க்கம் எனக்கிருக்கவில்லை.
முதலில் அம்மா இந்த விடயத்துக்கு ஒத்துவரவில்லை. ஆனாலும் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் பங்கு கொள்வதை அறிந்த பின்னரே ஒரு ரூபா தந்தா, அதுவும் மனமேயில்லாமல்.

கச்சேரிக்கான பயணம் பாட்டுக்கள் துள்ளளுடன் மகிழ்வாக இருந்தது. கச்சேரி வாசலில் எங்கள் வண்டிகள் மறிக்கப்பட்டன. வாசலிலேயே நாங்கள் கொண்டு போன புகார் வாங்கப் பட்டது. உடனடியாக எல்லோரும் பாடசாலை திரும்ப வேண்டும் என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டோம். தங்கராஜா மாஸ்ரருக்கு கச்சேரியிலும் அதிக செல்வாக்கு இருந்தது பின்னர்தான் தெரியவந்தது. எது எப்படியோ எனது முதல் போராட்டம் மூன்று ரூபாக்கள் நட்டத்துடன் தோற்றுப் போனது.

அடுத்தநாள் வகுப்பறை கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது.
நேற்று பாடசாலைக்கு வரரத மாணவர்கள் அதற்கான காரணத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இருந்து எழுத்து மூலமாகப் பெற்று அதிபரிடம் சமர்ப்பித்து அதன் பின்னரே வகுப்பறைக்கு வரவும்.

பாண்டிய மன்னனின் பிரம்படியை விட தங்கராஜா மாஸ்ரரின் பிரம்படி எப்படியிருக்குமென்று அந்த சிவனுக்கே தெரியும். நெருப்பில் சுட்டு நுனி கறுத்திருந்த பிரம்பு நினைவில் வந்து கலக்கியது. எல்லோரையும்விட அதிகமாகக் கலங்கிப் போயிருந்தது ரவியும், சபாவும்தான்.

எல்லோரும் ரவியின் வீட்டில் கூடினோம். தனது மகனால்தான் இவ்வளவும் என்பதை அறிந்து ரவியின் தந்தை எங்களுக்கு உதவ வந்தார். அவர் தங்கராஜா மாஸ்ரரை அவரது இல்லத்தில் சந்தித்து எங்களுக்காக கதைத்துப் பார்த்தார். பாடசாலைக்கு வரமுடியாமற் போனதற்கான காரணத்தை எழுத்து மூலமாக ஒவ்வொரு மாணவரும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் தங்கராஜா மாஸ்ரர் உறுதியாக இருந்தார். சரி ஏதாவது ஒரு காரணத்தை எழுதி கொண்டுபொய்க் கொடுங்கள். பிரச்சினை வராது என்று ரவியின் தந்தை உறுதி தந்தார்.

இது விசயமாக வீட்டில் கேட்டால் அங்கேயும் பூசை நடக்குமென்பதால் நாங்களே கடிதங்களைத் தயாரித்துக் கொண்டோம். எனது அம்மம்மா காலமாகிவிட்டா என்று எனக்கான காரணத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிக் கொண்டேன்.

அடுத்தநாள் கடிதங்களுடன் மண்டபத்தில் கூடினோம். மண்டபதின் ஒரு வாசலினூடகத்தான் அதிபரின் அறைக்குச் செல்ல வேண்டும். நான்கு நான்கு பேராக உள்ளே அழைத்தார்கள். துணிவுள்ளவர்கள் (இல்லையென்றாலும் இருப்பதாகக் காட்டிக் கொண்டு) முன்னுக்குப் போனார்கள். உள்ளே போனவர்கள் பிறிதொரு வாசலினூடக அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தார்கள். எனது முறை வந்தது உள்ளே போனேன். என்னுடன் சங்கர், முகுந்தன், நடராஜா ஆகியோரும் உள்ளே வந்தார்கள்.

முறிந்து சிதறிய பிரம்புத் துகள்கள் நிலத்தில் இருந்து பயமுறுத்தின. தங்கராஜா மாஸ்ரரைப் பார்க்கும் துணிவில்லை. முகத்தை எவ்வளவு பாவமாக வைத்திருக்க முடியுமோ அப்படி வைத்திருந்தேன். கிளாக்கர் வந்து எங்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டார்.

என்ன எழுதியிருக்கு? சிங்கம் கர்ஜித்தது. நாலு பேருக்கும் அம்மம்மா செத்துப் போச்சாம் கிளாக்கர் ஏளனமாகச் சொல்லி விட்டு கடிதங்களை மேசையில் வைத்தார்.

பாPட்சையில்தான் பார்த்து எழுதுவார்கள் என்று சொல்வார்கள். கடிதத்தில் உள்ள காரணத்தையும் பார்த்து எழுதியதை அன்றுதான் பார்த்தேன்.

தங்கராஜா மாஸ்ரர் கிளாக்கரை நோக்கி கண் அசைத்தார். சுவரைப் பார்த்தபடி நால்வரும் நிறுத்தப் பட்டோம். குனிந்து கால் பெருவிரலை கைகளினால் பிடிக்கும் வண்ணம் பணிக்கப் பட்டோம்.

நாலுபேருக்கும் ஒரே அம்மம்மாவா? வௌ;வேறையா?
தங்கராஜா மாஸ்ரர் கேட்பது கேட்டது அதுக்குப் பிறகு எதுவுமே நினைவில்லை. சுளீர், சுளீர் என்று பிற்பக்கத்தில் பிரம்பின் இரண்டு இழுவைகள். தண்ணீரில் இருந்து வெளியில் போட்ட மீன் கூட என்னளவுக்குத் துள்ளியிருக்காது.

வகுப்பறைக்கு வந்தால் எனக்கு நாலு, எனக்கு மூன்று , எனக்கு இரண்டு என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். பேசும் நிலையில் நானில்லை. மூன்று ரூபா கொடுத்து இரண்டு சுளீர் வாங்கிய கெட்டித்தனத்தைப் பற்றி பேச என்னயிருக்கிறது?

Sunday, August 01, 2004

பாட்டுப் பாடவா?

தங்கராஜா மாஸ்ரர் என்றால் அப்போது எல்லோருக்கும் ஒரு பயம் கலந்த மதிப்பு இருந்தது.

பிரபல்யமான பாடசாலையின் அதிபராக இருந்தும்கூட நாலுமுழ வேட்டியுடனும் சால்வையுடனும்தான் வலம் வருவார். ஆனாலும் எனக்குப் பிடிக்காத ஒன்று அவரது கையில் எப்போதும் இருந்தது. அது... நீண்ட பிரம்பு. நெருப்பில் சுட்டு அதன் நுனி கறுத்திருக்கும். எப்பொழுதும் பளபளத்துக் கொண்டேயிருக்கும் அது என்னைப் பயமுறுத்திக் கொண்டேயிருக்கும். மாணவர்களுடன் அதிகமாக அவர் பேசி நான் பார்த்ததில்லை. தலை குனிந்து, மூக்கில் சரிந்திருக்கும் மூக்குக் கண்ணாடியின் மேலாக நெற்றியைச் சுருக்கி அவர் பார்க்கும் பார்வை ஒன்றே போதுமே அச்சம் என்ன என்பதை உணர்த்தும்.

நான் அப்போது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது வகுப்பாசிரியர் சாம்பசிவம் அவர்கள்தான் சங்கீத ஆசிரியராகவும் இருந்தார். இவர் சீர்காழி கோவிந்தராஜனுடன் சங்கீதம் பயின்றவர். சீர்காழியின் நண்பரும் கூட.

அதிபரது அறைக்குப் பக்கத்தில் உள்ள அறையில் மைக் பொருத்தியிருக்கும். பாடசாலை தொடங்கும் போதும் முடியும் போதும் ஐந்து நிமிடம் முன்பாக, சாம்பசிவம் ஆசிரியரால் தெரிவு செய்து அனுப்பப்படும் மாணவன் அந்த மைக் முன்னால் நின்று தேவாரம் பாடவேண்டும்.

வகுப்பறைகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கியில் தேவாரத்தை பயபக்தி(?)யுடன் மாணவர்கள் எழுந்து நின்று கேட்டு இறுதியாக அரகரமகாதேவா சொல்லுவார்கள்.

அன்று தேவாரம் பாடவேண்டியவனாக நான் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். தங்கராஜா மாஸ்ரரின் அறையைத் தாண்டிச் செல்ல எனக்குப் பயமாக இருந்தது. அப்படித் தாண்டிப் போனாலும் தேவாரத்தை மறக்காமல் இசையுடன் பாடுவேனா என்ற அச்சமும் சேர்ந்திருந்தது. திருட்டு விழி என்பார்களே அதனிலும் மோசமாக நான் விழித்துக் கொண்டிருந்தேன்.

இன்னும் பத்து நிமிடங்களில் பாடசாலை முடியப் போகிறது. பாடசாலை முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக மைக்குக்கு முன்னால் நிற்க வேண்டும்.

சாம்பசிவம் மாஸ்ரர் என்னைப் பார்த்தார்.
நீ இப்ப போகலாம் என்பது போல் அவரது பார்வை சொன்னது. நான் தலையைக் குனிந்து கொண்டென். வெளிறிய என் விழி, நான் தலைகுனிந்த விதம் நிலமையை அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

"என்ன தேவாரம் பாடமில்லையே..? உனக்கு ஒரு கிழமை முன்னமே சொல்லிட்டன்.. இப்ப முழுசிக் கொண்டு நிக்கிறாய்... உன்னை...
சங்கர்.. நீ போ.."

எனக்குப் பக்கத்தில் இருந்த சங்கருக்கு ஆணை போனது. அவன் சாம்பசிவம் மாஸ்ரரின் அன்பைப் பெற்ற மாணவன். நல்ல இசையுடன் பாடக்கூடியவன்.
குருவின் ஆணைபெற்ற சிஸ்யன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் பாய்ந்து போனான்.

இப்போது ஒலி பெருக்கியில் சங்கரின் குரல்.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் பாடல் ஒலித்தது. என்ன வேகமாக ஓடிப்போய்ப் பாடியதால் பாடலை விட மூச்சுச் சத்தம்தான் பெரிதாகக் கேட்டது.

அடுத்து திருப்புகழ்.
உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்.. அதுவும் முடிந்தது. இப்போது வரவேண்டியது நமப்பார்வதிபதேயே. அதுக்கு நாங்கள் கோரஸாக அரகரமகாதேவா சொல்ல வேண்டும்.

ஆனால் ஒலிபெருக்கியில் ஒலித்ததோ "அடிக்காதீங்க மாஸ்ரர்.. அடிக்காதீங்க மாஸ்ரர்.. அடிக்காதீங்க மாஸ்ரர்.. "என்ற அவலக் குரல். இதுக்குப் போய் யாராவது அரகரமகாதேவா சொல்லுவார்களா.?

சாம்பசிவம் மாஸ்ரரின் முகத்தில் வியர்வை முத்துக்கள். சால்வையெடுத்து துடைத்துக் கொண்டு என்னைப் பார்த்தார். தங்கராஜா மாஸ்ரரின் பார்வையை விட மோசமான பார்வை அது.

அவலக் குரல் ஓய்ந்து இப்போது அதட்டலான குரல் ஒலிபெருக்கியில் ஒலித்தது. "சாம்பசிவம் ஆசிரியர் உடனடியாக எனது அறைக்கு வரவும் "

மௌனமாக மேசையில் இருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு சாம்பசிவம் மாஸ்ரர் வகுப்பறையை விட்டு வெளியேறினார்.

ஓலிபெருக்கியில் சங்கீதக் குரலில் அன்று தேவாரம், திருப்புகழ் பாடி நமப்பார்பதிபதே சொல்லி முடித்தார் சங்கீத பூசணம் சாம்பசிவம் மாஸ்ரர்.

அடுத்தநாள் காலை வகுப்பறையில் ஆசிரியரின் முன்னால் நான்.

"சங்கர் சேட்டைக் கழட்டிக் காட்டு"

சங்கர் வெறும் முதுகைக் காட்டினான். முதுகின் நடுவில் இல்லாமல் வலது பக்கமாக மேலிருந்து இடது பக்கம் கீழ் நோக்கியவாறு இரண்டு பெரிய தளும்புகள். தங்கராஜா மாஸ்ரரின் பிரம்பின் கோலங்கள்.

"பார்.. உன்னாலை எனக்கு அர்ச்சனை.. அவனுக்கு பிரசாதம்.,.."
வார்த்தைகளால் சாம்பசிவம் மாஸ்ரர் எனக்கு அபிசேகம் செய்து கொண்டிருந்தார்.

"உனக்கென்ன தேவாரம் பாடமில்லையே? "

"இல்லை.... சேர் எனக்குத் தெரியும் "

"அப்ப பாடு பாப்பம் "
சாம்பசிவம் மாஸ்ரர் கையில் இப்போ பிரம்பு.

கண்ணை மூடிக்கொண்டு நவரோசு ராகத்தில் பாடத் தொடங்கினேன்

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில் பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூழை தவித்தருளாய்
அலைந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானாத்துறை அம்மானே


"அப்ப ஏன் நேற்றுப் பாடயில்லை?"

நேற்று இரவிரவாகத்தான் பாடமாக்கினேன் என்பதை அவருக்கு எப்படிச் சொல்வேன்?
ஆதலால் வழமைபோல் தலையைக் குனிந்து கொண்டேன்